ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் கொழும்பு பேராயருக்கு கடிதம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், தமது கையெழுத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு:  குற்றப்பத்திரத்தை தமிழில் வழங்குமாறு கோரிக்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நௌபர் மௌலவி, ராஜித் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று உத்தரவிட்டது.

தமித் தொடவத்த, அமில ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பலத்த பாதுகாப்புடன் பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தை தமிழ் மொழியில் வழங்குமாறு பிரதிவாதிகள் இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், அதனை தயார் செய்வதற்காக கால அவகாசம் அவசியம் என்பதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் 10 பேர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை.

அதற்கமைய, தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை முன்வைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

வல்வெட்டித்துறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மாவீரர் நாளை அனுஷ்டிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் பொலிஸார் மூலமும் படையினர் மூலமும் நீதிமன்றங்களை அணுகி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றது என்றார்.

இந்தச் சூழலில் பின்னணியிலேயே, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூற முற்படுகின்றார் எனக் கூறி, தங்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள் எனவும் சில நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து இருக்கின்றன எனவும்,அவர் தெரிவித்தார்.

“மாவீரர் நினைவு தினங்கள் இடம்பெறும் துயிலுமில்லங்கள், தற்போது இராணுவ முற்றுகைக்குள் காணப்படுகின்றன. தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரிடம் கேட்டிருக்கின்றோம்.

“அந்த அனுமதி கிடைத்தவுடன், சுகாதாரத் துறையின் அனுமதியுடன், நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை இந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

“குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் இதில் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்.

“தடை செய்யப்பட்ட பொருள்களை வைக்காமல், மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்” என்றார்.

படகு விபத்து – கிண்ணியாவில்  பதற்ற நிலைமை

படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று(23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில்  பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழமை போன்று மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் உள்ளடங்கலாக  பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நேரத்தில்  குறித்த படகு பாதையில்  17 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 23 பேர்   பயணித்துள்ளதுடன் நீரில் மூழ்கிய  சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் .

இப்பகுதியில் பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால்  கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த படகில் பயணித்த மேலும் 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  3 பேர் தீவிரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும்  பொலிஸார் ,கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது  கிண்ணியா பிரதேசத்தை   சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாக பதிவாகியுள்ளது.

குறித்த படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில்  பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு  கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம்  அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த  ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக   நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இருந்த போதிலும் கிண்ணியா மக்களின் நீண்டநாள் கனவாக காணப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பாலம் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Posted in Uncategorized

29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்?

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச அதிகாரிகளைப் புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.

அரச அதிகாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் முன்வைக்கப்பட்ட எழுத்து மூல கோரிக்கைக்கு இது வரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் எங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் நாடு தழுவி ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Posted in Uncategorized

சட்டத்தை மீறாது நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு – ரெலோவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்

சட்டம் ஒழுங்கை மீறாத வகையில் நினைவேந்துவதற்கு மக்கள் அச்சப்படத்தேவையில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான   தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் பிரதிநிதிகளான எமக்கு எதிராக பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ் வழக்குகளில் மதகுருக்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் பொலிசார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அச்சுவேலி பொலிசாரினால் எனக்கும் உப தவிசாளருக்கும் எதிராகவும் வழக்கு இல (AR 1577/21) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ் வழக்கில், குற்றவியல் சட்டக்கோவை 106 இன் கீழும் பயங்கரவாதத் தடைச்சட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் மீறுகின்றோம். தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை நினைவு கூறவுள்ளோம் எனவும் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன.

இதனை சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, திருக்குமரன், மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரனிகள் குழாம் மறுத்திருந்ததுடன் அரசியலமைப்பின் பிரகாரமாக நினைவேந்தல் உரிமையினை மறுக்கக் கூடாது எனவும் மன்றில் கேட்டுக்கொண்டது. அதேவேளை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் இவ்விடயத்தினை அணுகமுடியாது எனவும் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய கௌரவ நீதிமன்றம், குற்றவியல் சட்டக்கோவையின் மேற்படி சரத்தின் பிரகாரம் குற்றம் இழைக்கப்பட்டதற்கான வலுவான சாட்சியங்கள் இணைக்கப்படவில்லை என்றும் அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவு கூர்வதற்கான உரிமையினை மறுக்க முடியாது என்றும் ஏற்கனவே வலுவில் உள்ள சட்ட ஏற்பாடுகளையும் வர்த்தமானி அறிவித்தல்களையும் சகலரும் கடைப்பிடிக்கவேண்டியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தினை மீறினால் பொலிசார் கைது செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்ற நியாயாதிக்கத்தின் கீழ் நினைவேந்துவது தடைசெய்யப்படவில்லை.

எனவே சட்டத்தை மீறாத வகையில் நாம் நினைவேந்தலைச் செய்ய முடியும். எமது மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மீறிவிட வேண்டும் என்று செயற்படுபவர்கள் நினைவு கூறும் சுதந்திரத்தினைக் கூட அடக்கியாள வேண்டும் எனச் செயற்படுகின்றனர். அவற்றுக்கு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்- சார்ள்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள புலம் பெயர் தமிழர்களினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை போன்ற சிறிய நாட்டில் வருமானத்தை மீறிய மிகவும் பெரிய தொகையை, ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் பாதுகாப்புக்காக ஒதுக்குகின்றது. இதுவே இலங்கை தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகுவதற்கு முக்கிய காரணமாகும்.

இதேவேளை அரச சேவையாளர்கள் நாட்டிற்கு சுமை  என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையாக படைத் தரப்பே சுமையாகும்.

ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சி செய்வதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்புக்கும் இராணுவத்தின் வாக்கு வங்கிக்காகவும்தான் நிதி ஒதுக்கீடு செய்கின்றார்கள்.

மேலும், அரச சேவையாளர்களில் நிபுணத்துவம் கொண்டவர்களை தவிர்த்து ஓய்வுநிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சின் செயலாளர்களாகவும் பணிப்பாளர்களாகவும் நியமித்து, நிபுணத்துவ அரச சேவையாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றமையினால், இன்று பல அமைச்சுக்களில் இருந்து நிபுணர்கள் பலர் தாமாக பதவி விலகியுள்ளார்கள்.

இதேவேளை நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு தடுக்கின்றது.

குறிப்பாக உலக பரப்பிலுள்ள இலங்கை தமிழர்கள், சொந்த மண்ணின் மீது மிகவும் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வந்தால், அவர்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் அவர்களின் முதலீடுகள் தடுக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலாப்பிரயாணிகளாக அதிகளவு நாட்டுக்கு வருகை தருகின்றவர்கள் புலம்பெயர் தமிழர்களாவர். பொருளாதார ரீதியாக பலமாகவுள்ள அவர்களினால்தான் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வெளிநாட்டு அமைச்சின். கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன

சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வெளிநாட்டு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

அவ் விடயம் குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவில் செயற்படுத்தப்படுகின்ற மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (ஈ-டாஸ்) ஏற்பட்டுள்ள சீர்குலைவின் காரணமாக, கடந்த வாரத்தில் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, சேவைகளை வழங்குவதில் நீண்ட காலத் தாமதம் ஏற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் உள்ள கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டு ள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வெளிநாட்டு அமைச்சு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தப் பிரச்னைகளை சீர் செய்யும் முகமாக அமைச்சின் தொழில்நுட்பக் குழு செயற்பட்டு வருகின்றது. எனவே இந்த சூழ்நிலையில்,  திங்கட்கிழமை (22.11.2021) முதல் தினசரி வருகை தரும் 150 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் சேவைகளை வழங்க முடியும்.

இந்தப் பிரச்னைகள் சீர் செய்யப்பட்டவுடன் சான்றிதழ்கள் / ஆவணங்களின் சான்றளிப்புக்கான சாதாரண சேவைகள் வழங்கப்படும். கணினிப் பராமரிப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்காக 011- 2338812 அல்லது dgcons@mfa.gov.lk மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் 01ம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி

கொவிட் தடுப்புசிகளின் இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ள, விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் எல்லை, கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்டது, ஆனால் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான குழுவினருக்கு மட்டுமே அந்நாட்டினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களத்தின் கொள்கை – ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் 

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடையுத்தரவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

தடைசெய்யப்பட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் யுத்த காலத்தில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மரணித்தமை சம்மந்தாகவும், மற்றும் இயக்க உறுப்பினர்கள் மரணித்தமை சம்மந்தமாக மாவீரர் நினைவேந்தல் நடத்த இருப்பதாகவும் 2021.11.21ம் திகதி தொடக்கம் 201.11.27ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடாத்துவதாகவும், வருகின்ற 26ம் திகதி ஞாபகார்த்த தினம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும், குறித்த திகதியையொட்டி முதியோர் சிறுவர் இல்லங்களுக்குச் சென்று இந்தப் பெயரை வைத்து உதவி செய்ய உள்ளதாகத் தகவல்கள் உள்ளதாகவும், அவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையாலும் இந்த நிகழ்வைத் தடுக்கும் முகமான தடையுத்தரவு பிறப்பிக்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாரினால் மன்றுக்கு விடுக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நியாயாதிக்கத்துக்குள் உட்பட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரதேசத்தில் வசிக்கும் நான் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஐவருக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தின் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களிடம் நியாயத்தை நாம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். தங்கள் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசுக்கெதிராகப் போராடி எத்தனையோ அழிப்புகளை மேற்கொண்டார்கள் ஆனால் அவர்கள் இன்று தியாகிகள் என்ற பெயரில் நினைவேந்தல்கள் நடத்த முடியும். ஆனால் தமிழ் மக்களின் அடக்குமுறைக்கு எதிராக நீதியான முறையில் போராடிய எமது உறவுகளை நாம் நினைவு கூர முடியாது.

மாவீரர் தினமென்பது 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் பின்னர் அனுஷ்டிக்கப்படுகின்ற விடயம் அல்ல போராட்ட ஆரம்ப காலத்தில் 1989களில் இருந்தே உயிர்நீத்த உறவுகளை, பிள்ளைகளை எண்ணி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற விடயம். இதற்கான தடை என்பது தமிழ் மக்களுக்கு எதிரான தடையாகவே பார்க்கப்படும்.

தன் இனத்தைச் சேர்ந்த போராளிகள் தியாகிகள், தமிழினத்தைச் சேர்ந்த போராளிகள் தீவிரவாதிகள் இதுவே சிங்களப் பெரும்பான்மையின் கொள்கை. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு அடிக்கடி மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இதனை எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எமது மக்களின் இவ்வாற விடயங்களைத் தட்டிக் கேட்பதற்கு அரசோடு ஒட்டிக்கொண்டு அபிவிருத்தி அரிச்சுவடி பேசும் அரசியல்வாதிகளுக்கு வக்கில்லை. வெறுமனே கட்டிடங்களும், வீதிகளும் எமது உணர்வுகளைத் தீர்மானதித்து விடும் என்று நினைத்து விட்டார்கள். இதற்கெல்லாம் எமது மக்களே காரணம். நாம் எமது நிலைமைகளில் இருந்து விலகியமையே இவற்றுக்குக் காரணம்.

எமது நாட்டில் மாத்திரம் விசித்திரமான கொரோனா தொற்று இருக்கின்றது. அமைச்சர்கள் பெருமளவான மக்களைத் திரட்டி நடாத்தும் நிகழ்வுகளில் எவ்வித பரவலும் ஏற்படாது. அதற்கு பொலிஸார் பாதுகாப்பும் வழங்குவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்டவர்கள் சேர்ந்து நடத்தும் நினைவேந்தல்களின் போது மாத்திரம் கொரோனா பரவும். கொரோனா தொடக்கம் மக்களின் வாழ்வாதாரம் வரை இந்த அரசாங்கம் அனைத்திலும் அரசியலைக் கலந்து நாட்டை நாசமாக்குகின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized