அனர்த்தங்களால் 17 மாவட்டங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களால் 17 மாவட்டங்களில் 150 பிர​தேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், 65, 704 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 640 ​பேர் பதிப்படைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான 34 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

அதேநேரம், அனர்த்தங்களில் சிக்கி 26 பேர் மரணமாகியுள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துமுள்ளனர் அத்துடன், 49 வீடுகள் முழுமையாகவும் 1,574 வீடுகள் பகுதியளவிலும் ​சேதமடைந்துள்ளன.

நாட்டில் நிலவும் சீரற்ற காநிலையால் ஏற்பட்ட வெள்ளம், கொஞ்சம், கொஞ்சமாக வடிந்துகொண்டிருக்கின்றது. கடந்த நாள்களில் நிரம்பி வழிந்த குளங்கள், நீர்த்தேக்கங்களில் 90 சதவீதமானவற்றின் வான் கதவுகள் மீளவும் மூடப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனினும், சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவோம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் என்ற தலைப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும்.

இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும்.

இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எனவே ஆயர்மன்றமானது தமது முடிவை பரிசீலனைசெய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளருக்கு அழைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு  அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு 4ம் மாடியிலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு நீண்டநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

சோமாலியா தரத்திலான வரவு செலவுத்திட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சோமாலியா தரத்திலான வரவு செலவுத்திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

நாட்டு மக்கள் முற்போக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்பார்த்தனர். எனினும் கிடைத்தது வெற்று பாத்திரம். மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தை மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் கிடைத்தது புஷ்வாணம்.

வரவு செலவுத்திட்டத்தில் எந்த வியூகங்களும் இல்லை. வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்க எந்த திட்டங்களும் இல்லை. வாழ்க்கை செலவு, பணவீக்கத்தை குறைக்கும் வேலைத்திட்டங்கள் இல்லை.

மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இல்லை. விவசாயிகளை முன்னேற்றும் எந்த முறைகளும் இல்லை. வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் இல்லை. சுருக்கமாக கூறுவதென்றால் இது சோமாலிய தரத்திலான வரவு செலவுத்திட்டம். ம

க்களை ஏமாற்றிய வரவு செலவுத்திட்டம். குறுகிய, மத்திய, நீண்டகால வேலைத்திட்டங்கள் இல்லாத வெற்று ஆவணம். அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு எவ்விதமாக சம்பள அதிகரிக்கும் வழங்கவில்லை. இது மக்களை மறந்து விட்டு, தமது சகாக்களின் தேவைக்கு அமைய உருவாக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

வயிற்று பசியை அறியாத அரசாங்கம்! – கேள்வியெழுப்பும் ஐக்கிய தேசியக்கட்சி

சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மோசமான பெருந்தொற்று நிலைமை நீடித்து வரும் நிலையில் சுகாதாரத்திற்காக கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடவும் இந்த ஆண்டில் 6 பில்லியன் ரூபா குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் வயிற்றுப் பசியை அறியாத அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை ஏமாற்றும் ஓர் வரவு செலவுத் திட்டம் என தெரிவித்துள்ளார்.

அரிசி, சீனி என நாட்டில் முக்கியமான உணவுப் பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருவதாகவும் மக்கள் சாப்பிட முடியாதுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்த அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மதிநுட்பம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் பயிற்சி பெற்ற எவரும் பங்குபற்றவில்லை – ரணில்

ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் பங்குபற்றவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும்.

சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும்.

தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாளை 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவினால் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம், நாளை (12) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை மறுதினம் (13) ஆரம்பமாகவுள்ளது.

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக கடமையேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

நவம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை முதல் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை, 07 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

நவம்பர் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளதோடு சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை 16 நாட்கள் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாத காலப்பகுதியில் பாராளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், முற்பகல் 9.30 முதல் முற்பகல் 10 மணி வரை 30 நிமிடங்கள் ஐந்து வாய்மொழிமூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மற்றும் குழுநிலை விவாதம் ஆகியன முற்பகல் 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு அமைச்சரை விடைபெறும் நிமித்தம் சந்திப்பு

வெளிச்செல்லும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று  வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை பெறும் நிமித்தம் சந்தித்தார்.

உறுதியான வரலாற்று மரபின் மீது கட்டியெழுப்பப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை நினைவுகூர்ந்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் வெளிச்செல்லும் தூதுவரின் உறுதியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், கடினமான காலங்களில் ஜப்பான் இலங்கையின் உண்மையான  நண்பராக இருந்ததாகக் குறிப்பிட்டதுடன், கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களை சமாளிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவை வழங்குவதில் தூதுவர் சுகியாமாவின் அர்ப்பணிப்பு முயற்சிகளைப் பாராட்டினார். ஜப்பானிய அபிவிருத்தி உதவியின் கீழ் இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பாக விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், வீதி அபிவிருத்தி போன்ற துறைகளில் ஜப்பானின் பங்களிப்பை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார். ஜப்பானிய உதவி எப்போதும் நாட்டின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்ததுடன், அவை ஒருபோதும் முன்நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டதாக அமையவில்லை எனக் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கையின் அடிப்படை  யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதிலும் இலங்கை மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் நிலவும் பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதிலுமான ஆக்கபூர்வமான ஈடுபாடுகளுக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார். தூதுவர் சுகியாமா இலங்கையில் பதவி வகித்த காலத்தில் அவரது செயலூக்கமான வகிபாகத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

தூதுவர் சுகியாமா தனது உத்தியோகபூர்வ ஆணையை உயர் திருப்திகரமானதாக வழங்குவதற்காக நிபந்தனையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற அணுகலை வழங்கியமைக்காக, இலங்கையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், வெளிநாட்டு அமைச்சருக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு, இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், தற்போதுள்ள விரிவான இலங்கை – ஜப்பான் பங்காளித்துவத்தை மேலும்  உயர்த்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமாக அமையும் என தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜப்பான் வெளிநாட்டு அமைச்சில் உயர் பதவியை ஏற்கவுள்ள தூதுவர் சுகியாமாவுக்கு பேராசிரியர் பீரிஸ்  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தூதுவர் சுகியாமா 2018 நவம்பர் முதல் மூன்று வருடங்கள் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராகப்  பணியாற்றியுள்ளார்.

Posted in Uncategorized

பைடனின் சிறப்பு செய்தியுடன் இலங்கை விரையும் அமெரிக்க உயரதிகாரி

அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எனினும் அவர் முதலில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடனிடமிருந்து ஒரு சிறப்பு செய்தியை கொண்டு வர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ அதிகாரியாக மக்களின் கழுத்தைப்பிடித்து ஆட்சி செய்ய முடியும் என்ற கருத்திற்கு வன்மையான கண்டனம்!

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து சேதனப்பசளையைப் பயப்படுத்தி விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும் என்று கோட்பாய ராஜபக்ஸ தெரிவித்திருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இத்தகைய சிந்தனைகள் தமிழ்த் தேசிய இனத்திற்கான தீர்வினைப் பெற்றுத்தரும் ஜனநாயகப் பாதையில் இருந்து சிங்களப் பேரினவாதம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதையும் எடுத்துக்காட்டுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி இ.சிறீஞானேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவ ஆட்சி தொடர்பில் கோட்டாபய கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் தான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்ற எதிர்பார்த்தே மக்கள் தனக்கு வாக்களித்தாகவும், ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களைக் கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் தான் அப்படி இல்லை என்றும் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான மனநிலை ஒருபோதும் தமிழ்த் தேசத்தின் மக்களுக்குத் தீர்வைக்கொண்டு வரப்போவதில்லை என்பதுடன் சிங்கள தேசத்து மக்களையும் இராணுவக் காட்டாட்சிக்குள் கொண்டுவரும் மனநிலையையே பிரதிபலிப்பதாக உணர முடிகின்றது.

பொருளாதார பிரச்சனைகளைக் கடுமையாக எதிர்கொண்டுள்ள மக்கள் தற்போதைய அரசின் மீது நெருக்கடியை ஏற்படுத்தத் துணிவர் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச முன்னெச்சரிக்கையாக இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அதனை நியாயப்படுத்துவதற்காக தான் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரக்கூடியவர் என்று தெரிந்தே மக்கள் தனக்கு வாக்களித்தனர் என்பதைச் சொல்வதன் ஊடாக மக்கள இராணுவ ஆட்சிக்குத் தயாராக இருப்பதான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இவ்வாறான மனநிலை தமிழ் மக்களின் வாழ்வியலைக் கடுமையாக குழப்பப்போவதுடன் அவர்களை அச்சப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் அவர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.