காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயிலன் அப்புத்துரை தெரிவு

காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவின் மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டார்.

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (10) காலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

தவிசாளராக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஜயதர்மா கேதீஸ்வரன் உயிரிழந்ததை அடுத்து, அவரது பதவிக்கான வெற்றிடத்திற்கு குறித்த தெரிவு இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆ. விஜயராசாவின் பெயரும் சுயேட்சை குழு சார்பில் மயிலன் அப்புத்துரையின் பெயரும் முன்மொழியப்பட்டன.

உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதனையடுத்து, மயிலன் அப்புத்துரைக்கு ஆதரவாக 5 வாக்குகளும் ஆ. விஜயராசாவுக்கு ஆதரவாக 3 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்த நிலையில் காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக மயிலன் அப்புத்துரை தெரிவு செய்யப்பட்டார்.

Posted in Uncategorized

பாட்டலிக்கு எதிராக சீ.ஐ.டி சென்றார் மஹிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நனோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக  சம்பிக்க ரணவக்க எம்.பி, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த முறைப்பாட்டை பதிவு செய்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரு லீற்றர் உரம்  டொலர் என்றும் ஒரு லீற்றருக்கு 20 டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மஹிந்தானந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சம்பிக்க தெரிவித்ததாக மஹிந்தானந்த சுட்டிக்காட்டினார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் முதலில் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நாங்கள் இந்தியாவில் இருந்து திரவ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்யவில்லை. நாங்கள் கொண்டு வருவது யூரியா நைட்ரஜன் உரம் என்றார்.

எங்களுக்கு யூரியா நனோ உரம் கொண்டு வர முடியாது என்று தெரிவித்த அவர், இந்த ஊழலுடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் அதற்கெதிராகவே முறைப்பாடளித்துள்ளேன் என்றும் இதைத்ததான் எப்போதும் செய்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

சம்பளப் பிரச்சினையை தீர்க்க இணக்கம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை மூன்று தவணைகளில் வழங்காமல், ஒரே தடவையில் தீர்ப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள், இன்று (10) தெரிவித்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்த முரண்பாடுகளை ஒரே தடவையில் தீர்த்து வைப்போம் என, தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

எங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான 160 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்த அவர், பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இருவரும் அரசாங்கத்தின் முடிவை எமக்கு தெரிவித்தனர் என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் இதே கருத்துக்களைத் தெரிவித்ததுடன், எங்கள் முக்கிய கோரிக்கையை நாங்கள் வென்றுள்ளோம். எமது போராட்டம் ஒரு மகத்தான வெற்றியாக மதிப்பிடப்பட்டது என்றார்.

மற்ற கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் போராட்டத்தை தொடரப்போவதாக இரு தொழிற்சங்க தலைவர்களும் தெரிவித்தனர்.

பென்டோரா விசாரணையின் முன்னேற்றம் பற்றி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

பென்டோரா பத்திரங்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆரம்பித்துள்ள விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுக்கல்- வாங்கல்கள் தொடர்பிலும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு  ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவிப்பு, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர அவர்களால், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதியன்று, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டப்ளிய.கே.டி.விஜேரத்னவினால் 2021.11.08ஆம் திகதியன்று அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்குகளின் தகவல்கள் அடங்கிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வறிக்கைகள் தற்போது கிடைத்தவண்ணம் காணப்படுவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்   தெரிவித்தார்.

விசாரணைகள் முடிவடையாதுள்ளமையால், கோரப்பட்டுள்ள அறிக்கைகள் மற்றும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கின் 3 மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நீதவான் நீதிமன்றத்தால் பொலிஸில் முறைப்பாடு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (09) அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதியற்ற வகையில் செயற்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் குறித்த நடத்தை காரணமாக நீதிமன்றத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சர்ச்சைக்குரிய சேதன உரத் தொகை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கு அதன் உள்நாட்டு முகவர் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் வங்கியிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடை உத்தரவு இம்மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குங்கள் – பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன்

அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். விவசாயிகளுக்கு நிவாரணத்தை அல்லது நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளது ளிரச்சினைகள் குறித்து இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரவந அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவர்களுக்கு நிவாரணத்தை அல்லது நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் முதலே நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக மிகவும் சீரற்ற காலநிலையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.

இவ்வாறான ஒரு நிலைமையில் அரசாங்கத்தின் சேதன பசளை அறிவிப்பு அவர்களை இன்னும் படு குழியில் தள்ளிவிட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய விவசாயத்திற்கு தேவையான பசளைகள் கிருமிநாசினிகள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியதுடன். அவற்றுக்கான பெரும் தட்டுப்பாடும் நிலவியது.

தட்டுப்பாடு காரணமாக பசளைகளின் விலைகளும் கிருமிநாசினிகளின் விலைகளும் என்றுமே இல்லாதவாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டது. ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள். இதன் காரணமாக விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடக்க முடியாமல் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

ஒரு சில விவசாயிகள் கொரேனாவில் பெரும் பாதிப்பை சந்தித்ததுடன். விவசாயத்தை முன்னெடுக்க போதிய அளவு பணம் இல்லாததன் காரணமாக தங்களுடைய தங்க நகைகள் வாகனங்கள் வீடுகள் போன்றவற்றை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் கடந்த சில வாரங்களாக சீரற்ற மிகவும் மோசமான காலநிலை நிலவுவதன் காரணமாக விவசாயிகளின் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து 75 வீதத்திற்கும் அதிகமான பயிர்களை அழித்துவிட்டது.

இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் அது கட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

எனவே இவர்களின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தின் மூலமாக சரியான தகவல்களை பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை அல்லது நட்ட ஈட்டை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து நிறுத்த வேண்டும்- Manfred Nowak

இலங்கை அரசாங்கத்தினால் அனுமதிக்கப்படுவதாக கூறப்படும் சித்திரவதைகள் நிரூபிக்கப்பட்டால், ஸ்கொட்லாந்து காவல்துறை, இலங்கையின் காவல்துறையினருக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என ஐ. நாவின் முன்னாள் மனித உாிமை சிறப்பு அறிக்கையாளா் பேராசிாியா் Manfred Nowak தெரிவித்துள்ளதாக ‘The Sunday Post’ தொிவித்துள்ளது.

மேலும் குறித்த செய்தியில்,இலங்கையிலிருந்து ஸ்கொட்லாந்திற்கு தப்பிவந்த அகதிகள் இலங்கை காவல்துறையினரின் ஈவிரக்கமற்ற தன்மை குறித்து தெரிவித்துள்ள விடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அகதிகள் தெரிவித்தது உண்மை என்பது உறுதியானால் இலங்கை காவல்துறையினருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் வழங்கும் பயிற்சியை ஸ்கொட்லாந்து நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலை – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையினை நீக்கி வர்த்தமானியை வெளியிட்டமை மக்களின் இயல்பு வாழ்வில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தவுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் கட்டுப்பாட்டு விலை நீக்கம் போன்ற விடயங்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்கனவே வருமானங்களை இழந்து அரசாங்க நிவாரணங்கள் எதுவும் இன்றி மிகவும் வறுமையில் அன்றாட வாழ்வை போராட்டத்தின் மத்தியில் கொண்டு செல்லும் போது அடிப்படை உணவுப் பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிலையை உள்ளாகியுள்ளது.

தொடர்ந்தும் அன்றாடம் காச்சிகள் தொழில்களை இழந்து வருமானம் இன்றி குடும்பங்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் பொருட்கள் விலை உயர்ந்து செல்லுமாயின் நாட்டில் கொடிய வறுமை மாத்திரமல்ல பஞ்சம் பசி பட்டினி கொள்ளை களவு தற்கொலை வன் செயல் என்பன அதிகரிக்கவே வாய்ப்புக்கள் உள்ளன அத்துடன் நாட்டின் இயல்பு நிலையும் கேள்விக்குள்ளாகி அவசர நிலை உருவாகும்.

கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுவதால் மொத்த வியாபாரிகளும் சில்லறை வர்த்தகர்களும் பகல் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனால் குறிக்கப்பட்ட தரப்புக்கள் பணம் சம்பாதிக்கவும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் மக்களின் இயல்பு வாழ்வு அவல நிலைக்கு தள்ளப்படவும் வழி வகுக்கும் . ஆகவே அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலை நீக்கம் தொடர்பாக அரசாங்கம் மீள் பரிசீலணை செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்