அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – மனோ கணேசன்

விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும் பொகவந்தலாவையில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுத்தன. அந்நாடுகள் பொருளாதாரத்தை முகாமை செய்யவில்லையா? அப்படியானால் எமது நாட்டு அரசுக்கு மட்டும் ஏன் தடுமாற்றம்?

தேசிய உற்பத்தியில் புரட்சி செய்யபோவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மஞ்சளுக்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் தற்போது மஞ்சள் இருக்கின்றதா? பாசி பயறு, உளுந்து உள்ளிட்ட பொருட்களும் இல்லை. அரசு தோல்வி கண்டுள்ளது.

விவசாய அமைச்சரின் மட்டுமல்ல இராஜாங்க அமைச்சரின் கொடும்பாவியையும் எரிக்க வேண்டும் என்கின்றனர். இவ்விருவரின் மட்டுமல்ல ஒட்டு மொத்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு அனுப்பவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்?

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்துகொள்வார்களாயின் விரும்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனத் தெரிவித்துள்ள பணிப்பாளர் நாயகம், பல விழாக்கள், விருந்துபசாரகள் மற்றும் திருமண வைபவங்களிலேயே கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் இவ்வாறு நாளுக்கு நாள் பொறுப்பற்ற முறையின் கீழ், செயற்படுவார்களாயின் பொது வைபவங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, நேற்றுமுன்தினம் 617ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை நேற்றுமுன்தினம் (06) அதிகரித்துள்ளது. அன்றையதினம் 20 பேர் மரணித்துள்ளனர். அதில், 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 பட்ஜெட் வெள்ளி சமர்ப்பிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) சமர்பிக்கப்படவுள்ளது.

பெசில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு- செலவுத்திட்டம் இதுவாகும்.

இயன்றவரை வினைத்திறனுடன் காணி வளங்களை பயன்படுத்துதல், இயன்றவர்களையும் விரும்பாதவர்களையும் வெல்வது, உற்பத்திப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் இந்த வரவு -செலவுத் திட்டம் கவனம் செலுத்துமென அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுச் செய்யப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது வரவு- செலவுத்திட்டம் இதுவென்பதுடன், நாட்டின் 76 ஆவது வரவு- செலவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன என்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தை வீடு நெருங்கி வருகிறது – ரவூப் ஹக்கீம்

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருங்கி வருகின்றது என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் என்ன பொருளாதார கொள்கையினை அரசாங்கம் கடைபிடித்தாலும் அவர்களின் அண்மைக்கால நகர்வுகள் நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வினை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கைமீறிவிட்டது என்றும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(07) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பின் தலைவர் ஹாதீக் இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வை, சம்மாந்துறை  ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எஸ்.ரி.ஆர். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – நாட்டில் இன்று விவசாயிகள், ஆசிரியர்கள், மின்சார சபை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கள்  என தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பொருட்களின் விலைகளில் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் கிடையாது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானியும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஏனெனில் அரசாங்கத்தினால் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

எனவே, அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களும் தோல்வியடைந்து, பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் காணப்படுகின்ற இந்த  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற காலம் நெருக்கி வருகின்றது. என்றார்.

’இராணுவ ஆட்சி செய்ய என்னால் முடியும்’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி இல்லை என்றார்.

அப்படி நாட்டை ஆள விரும்பவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​தனது மனைவியுடன் சாதாரண ஹோட்டலில் தங்கியதாகவும் மனைவியின் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்குவதற்கு தான் பணம் செலுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தன்னுடன் 7 பேர் மட்டுமே பயணம் செய்தாகவும் முந்தைய ஜனாதிபதிகள் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்ததாக சிலர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த அவர், தான் அப்படிச் செய்யவில்லை என்றும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

கட்டாய தடுப்பூசி – நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பெரு நிறுவனங்களின் ஊழியா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த நாட்டு அரசின் உத்தரவை முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டோா் பணியாற்றும் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளில், வரும் ஜனவரி 4 ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியா்கள் வாராந்திர கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 5 ஆவது வட்ட மேல்முறையிட்டு நிதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Posted in Uncategorized

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

பொது இடங்களுக்கு செல்லும்போது பொது மக்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்து, இலங்கை கூடுதலான கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த வேலைத் திட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கனடாவில் பொது இடங்களில் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையினை வைத்திருப்பது கட்டாயம் என்று உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அதிகரிக்கும் போராட்டங்கள் – அடிப்டை காரணத்தை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன

மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இல்லாத காரணத்தினாலேயே நாட்டில் போராட்டங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன   தெரிவித்தார்.

பத்தேகமவில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காலி மாவட்ட தேர்தல் அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள், விவசாயிகள், பிற கட்சிகள் மத்தியில் போராட்டங்கள் அலை வீசுகின்றன. இதற்கு மக்கள் பிரதிநிதிகளே காரணம். அவர்கள் மக்களிடம் செல்வதில்லை. மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு பேசுவதில்லை. ஒவ்வொரு கட்சியையும் விமர்சித்து வருகின்றனர்.

நாட்டில் பொருட்களின் விலை மேலும் உயர்ந்தால் மோசமான நிலை ஏற்படும்.பொருட்களின் விலை உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிந்தோம் ஆனால் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

எமது கட்சியின் எதிர்காலத்தை மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தி செய்து வருகிறோம், இந்த நாட்டில் எந்தக் கட்சியாலும் தனித்துச் செல்ல முடியாது, தனித்து ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.

நவம்பர் 20ம் திகதி: போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக சிறப்பிப்போம்-வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை

வரும் நவம்பர் 20ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக நினைவு கூர்ந்து மன்றாடுகின்ற நாளாக சிறப்பிப்போம் என வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள

Posted in Uncategorized

இலங்கையில் சீனாவின் இராணுவத் தளம்

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அபிவிருத்திகள்” என்ற தலைப்பில், பென்டகன், நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக தொலைவில் தமது இராணுவ பலத்தை நிலைநிறுத்த சீனா முயல்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இலங்கை உட்பட 13 நாடுகளில் இராணுவ தளங்கள் அல்லது இராணுவத் தளவாட வசதிகளை நிறுவுவது குறித்து சீனா பரிசீலித்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூர், பாகிஸ்தான், மியன்மார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாய்லாந்து ஆகியவை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படைகளின் வலிமையை அதிகரிக்க இந்த வசதிகளை நிறுவ பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.