தமிழர்களுக்கு கிடைக்குமா தனி ஈழம்? தென்னிலங்கையில் ஆதரவுக் குரல்

தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் என்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன.

இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும், திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் – தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும்.

பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும். அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

அத்தோடு, தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்.

அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் காலம் ஆரம்பமானது.

இந்த நிலையில் இன்றைய தினம் குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த 09ஆம் திகதி அவர் இறைபாதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஆளுநர் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார் பகிரங்க குற்றச்சாட்டு

கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத்  பல்லினத்திற்கான ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்தின் ஆளுநராகவே செயற்படுகின்றார்.

அவர் பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்றனவற்றில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காரமுனை காணிப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அவர் மூன்று விடயங்களை செய்து கொண்டிருக்கின்றார். ஒன்று, பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்களில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார். இரண்டாவது, தமிழ் பேசும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த உயர் நிர்வாகங்களில் சிங்களவரை நியமிக்கின்றார். மூன்றாவது, ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்காக தங்கள் அடிவருடிகளை இங்கு அனுப்பி அந்தச் சபைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.இவற்றையே அவர் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.

நாங்கள் விழிப்பாக இல்லாது விட்டால் எங்கள் வீட்டுக் கதவுகளும் குடியேறுவதற்கு தட்டப்படும் நிலையே உருவாகும். விழிப்புடன், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் நாங்கள் எங்கள் உரிமையைப் பாதுகாக்க முடியும்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எமது மண்ணைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் கஸ்டப்படுகின்றோம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல நாங்கள் எங்களுக்குள் பிளவு பட்டால் கூத்தாடிகள் கூரையைப் பிரித்துக் கொண்டு இங்கு குடியேறுவதற்கு வருவார்கள். எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வட மேல் மாகாண ஆளுநர் கட்சி தலைமையிலிருந்து நீக்கம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொல்லுரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் ராஜா கொல்லுரேவை, கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் வடமேல் மாகாண அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாதம் சம்பளத்தை இடைநிறுத்தப் போவதாக ராஜா கொலுரே கூறியதுடன் அது சமூகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதி மக்களை துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார்

விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்பு காட்டியுள்ளார். கி.மு 31ல் பிறந்து, உலகை அளந்த, எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச தான் பதவிக்கு வரவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கூற்று பற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

கொவிட் முதல் அலையின் போது, முதன் முறையாக நாட்டு மக்களை விளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அன்று உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறிய பிரதான விடயம் ஒன்று இருந்தது. அது என்ன?

செமன் மீன் டின், பருப்பு, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பேன். அவற்றை கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவேன், என்று தனது உரையில் ஜனாதிபதி கூறினார்.

இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வேறு விடயம். அவரது வர்த்தமானி விலைகளில் சந்தையில் பொருட்களை தேடியலைந்து மக்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

சீனிக்கு ரூ. 49-75 என்ற மிகப்பெரிய வரி குறைப்பை இந்த ஜனாதிபதி செய்தார். வரி குறைந்தது. இதனால், சுமார் ரூ.1,595 கோடி வருமானத்தை திறைசேரி இழந்தது. ஆகா, அப்படியானால் இந்த பெரும் தொகை, பாமர மக்களுக்கு விலைக் குறைப்பாக கிடைக்கும். அதாவது சீனி அரசாங்கம் சொல்லும் குறைந்த விலையில் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். கடைசியில், இந்த ரூ.1,595 கோடி திறைசேரிக்கும் போகவில்லை. மக்களுக்கும் கிடைக்கவில்லை. எங்கே போனது? யாருக்கு கிடைத்தது? இதுபற்றி ஜனாதிபதி இதுவரை பதில் கூறவில்லை.

இதற்கிடையில் ஜனாதிபதி அரிசி, உணவு தானிய மொத்த வியாபார புறக்கோட்டை கடைவீதிக்கும் போய் அங்கே கடைகளில் சற்று நேரம் கணக்கு பிள்ளை வேலையும் பார்த்தார். பொருட்களை தேடி கண்டு பிடிக்கிறேன் என தனது இராணுவ அதிகாரி ஒருவரையும் நியமித்தார். அவரும் ஆலைகளை பிடிப்பேன், களஞ்சிய சாலைகளை உடைப்பேன், திறப்பேன் என்றார். ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

கடைசியில், அரிசி விலைகள் தொடர்பில், ஜனாதிபதியின் வர்த்தமானிகளை தூக்கி கடாசி விட்டு பாரிய ஆலை அதிபர்கள்தான் விலைகளை தீர்மானித்து அறிவித்தார்கள். இப்போது அந்த இராணுவ அதிகாரியும் காணாமல் போய் விட்டார்.

சந்தை பொருளாதார நாட்டில், பொருட்களின் விலைகளை, “தேவை-விநியோகம்” (Demand & Supply) ஆகியவைதான் தீர்மானிக்க முடியும். இரண்டும் சமபலத்தில் இருக்க வேண்டும். தேவை கூடி, விநியோகம் குறைந்தால் விலை கூடும். தேவை குறைந்து, விநியோகம் கூடினால் விலை குறையும்.

இந்த பொருளாதார அறிவு என்னிடம் உண்டு. எங்களிடம் உண்டு. இவர்களிடம் இல்லை. ஆகவே, இந்த இராணுவ அதிகாரிகள் தடாலடியாக விலைகளை தீர்மானிக்க முடியாது. அரசாங்கம், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அவதானித்து, வரி குறைப்பு, வரி விதிப்பு என்ற நிர்வாகத்தை மட்டுமே செய்ய வேண்டும்.

இராணுவ, சுங்க, வரி அரசாங்க அதிகாரிகளை கொண்டு வர்த்தக சமூகத்தை மிரட்டி காரியமாற்ற முடியாது. மிரட்டினால், “போதுமடா சாமி” அல்லது “போதுமடா ஆமி” என்று கூறிவிட்டு வர்த்தக சமூகம் கடைகளை மூடி விட்டு வீடுகளில் இருப்பார்கள். “வேறு வழியில்லை. சும்மா முரண்பட வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள்”, என என் நண்பர்களுக்கு நான் சொன்னேன்.

இந்த ராஜபக்ச அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை. பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள், அடித்து கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது. தெரியாத வேலையை செய்ய போய் இப்போது இவர்கள் மூக்குடைந்து போய் இருக்கின்றனர். இன்று, வாழ்க்கை செலவு விலைவாசி விஷயம் கைமீறி போனவுடன் ஜனாதிபதி விலைவாசியை தீர்மானிக்க நான் இந்த பதவிக்கு வரவில்லை என மாற்றி போடுகிறார். ஆகவே இடுக்கண் வருங்கால் நகுக!

Posted in Uncategorized

டயஸ்போரா சிறிலங்கா அரசிடம் சோரம் போகக் கூடாது – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தும் புலம்பெயர் அமைப்புக்கள் இடையே உடைவினை ஏற்படுத்த கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வியூகமே டயஸ்போராவை சந்திக்கும் நாடகம் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சி குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் தேசியத்திற்கு எதிராக தன்னுடைய அரசாங்கத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் ஐனாதிபதிக்கு டயஸ்போராவிலும் குறிக்கப்பட்ட அமைப்புக்களை பிரித்து தன்னுடன் இணைக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது காரணம் அமெரிக்க ஐரோப்பிய மேற்குலகத்தின் ஆதரவைப் வலுப்படுத்த டயஸ்போராவின் ஆதரவு அவசியமாகவுள்ளது அதனால் சோரம் போகக் கூடிய அமைப்புக்களை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் இதற்கு ஒரு போதும் புலம்பெயர் அமைப்புக்கள் சோரம் போகக் கூடாது.

தமிழ மக்களை வைத்து அரசியல் செய்யும் இலங்கை அரசாங்கம் தாயகத்தில் தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பையும் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசிற்கு எடுத்தலும் முடிவில்லாத தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது இவ்வாறான சூழ்நிலையில் ராஐபக்ச அரசாங்கத்தில் பலருக்கு சர்வதேச ரீதியான தடைகள் குற்றச் சாட்டுக்கள் உள்ள நிலையில் அவர்கள் மேற்குலக நாடுகளுக்கு செல்லும் போது டயஸ்போராவின் எதிர்ப்பு பெரும் பின்னடைவாக உள்ளது அதனை தடுக்க டயஸ்போராவை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமாகி உள்ளது அத்துடன் ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் விடையதானங்களில் புலம் பெயர் அமைப்புக்களின் உட்பிரவேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக தொடர்கிறது அதற்கு மருந்து கட்ட டயஸ்போராவை தமது பக்கம் பேச வைக்க வேண்டும்.

ஆகவே இவை எல்லாவற்றுக்குமான முன்நகர்வு தான் டயஸ்போராவை கட்டியணைக்க துடிக்கும் ராஐதந்திரம். எனவே எச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காது புலம் பெயர் அமைப்புக்கள் கோட்டாபய அரசாங்கத்துக்கு சோரம் போகக் கூடாது.

தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்போதைய பலமான சக்தி டயஸ்போரா என்பதை இவ் அமைப்புக்கள் மறந்துவிடக்கூடாது ஒற்றுமையாக பலமான கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசும் பலத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து பேணுங்கள் .

ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்டிய காலக்கெடுவையும் வழங்கியது.

48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும் 51 ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அத்தோடு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகதிற்கு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்தது.

மேலும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் 2.8 மில்லியன் டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க, இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு என ஜெனிவாவை தளமாக கொண்ட ஒரு புதிய விசேட இலங்கைப் பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது – ரெலோவின் தலைவர் செல்வம்

மக்களுக்காக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதை கண்டிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன்   தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதியிலும் ஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

தனது புலனாய்வாளர்களை வைத்து மக்களுக்காக குரல்கொடுத்தும் தம்மாலான பணிகளை செய்துவரும் ஊடகத்துறையினரை உள ரீதியாக தாக்கத்திற்குள்ளாக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ள அரசாங்கம் அதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவை பயன்படுத்துக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந. கபிலநாத் ஊடகப்பணிக்கு அப்பால் தமிழ் மக்களின் தொல்லியல் தொடர்பான தேடல்கொண்ட ஒருவராகவும், மக்களின் வறுமையை போக்கவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருபவராகவே அறியப்பட்டவர்.

இவ்வாறு சமூக சிந்தனை கொண்ட ஊடகத்துறை சார்ந்தவர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நடந்த ஊடகத்துறையினர் மீதானதும், ஊடக நிறுவனங்கள் மீதானதுமான தாக்குல்கள் மற்றும் அநீதிகளுக்கு இதுவரை பொறுப்பு கூற முடியாத அரசு ஊடகத்துறையினரை மௌனிக்க செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

எனவே அரசாங்கம் தமது இயலாமையின் உச்சமாக ஊடகத்துறையினர் மீதும் தனது அழுத்தத்தினை பிரயோகிப்பதானது ஜனநாயகத்தின் மீதான சந்தேகத்தினை எழுப்புகின்றது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்த்தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து சமல் ராஜபக்சவிற்கு கடிதம்

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப்பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அவர்களின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ” போகஸ்வெல” என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும் பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச்சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபரினால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல்க் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும், இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும், இது அமையும் என்பதால் இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன்,செயல்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கிறோம்.

இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதாகவும் இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவு இலங்கையை பாதிக்கும் – சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பு

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜதந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
மேலும், இலங்கை அரசாங்கமும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் சானக்க பண்டார தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த சானக்க பண்டார,
“தெற்காசியாவில் மத அடிப்படைவாதம் அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்தோம்.
நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதுடன், ஆப்கானிஸ்தானில் பெரும் போரட்டம் நடைபெற்றதுடன் ஜனநாயக நிலைமை இல்லாமல் போயுள்ளது.
அங்கு தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதாவது, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி 3 நாட்கள் எனும் சிறிய காலப் பகுதிக்குள் தலிபான் அமைப்பு புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டனர்.
இந்த கைப்பற்றுதலைத் தொடர்ந்து, தெற்காசிய அரசியல் வலயத்தினுள் தீவிரவாத அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை காணமுடிகிறது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்றும் எமக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்காசியாவில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதம் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசு மத அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதால் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் மத ரீதியாக ஜனநாயகத் தன்மையை இழக்க நேரிடும். ஆகவே, தெற்காசியாவில் அங்கம் வகிக்கும் நாடென்ற ரீதியிலும் எமது அயல் நாடான பாகிஸ்தான், எமது தெற்காசிய வலயத்தில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாகிஸ்தானுக்கு விசேட பொறுப்பு காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும் ஆராய வேண்டுமென்பது அவசியமாகும்.
ஆகவே, சமாதானத்தை விரும்பும் தெற்காசிய மக்கள் கூட்டமொன்று எமக்கு தேவை. அடிப்படை வாதத்தை ஒழித்துக்கட்டி, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதனை ஏற்படுத்துவதற்கு சகல நாடுகளிலும், வலய மட்டத்திலுமாக பொதுவான பொறுப்பு இருக்க வேண்டும். சமாதானத்துடனான ஆசியாவை உருவாக்க வேண்டும். அது போலவே, முழு உலகுக்கும் சமாதானம் கிடைக்க வேண்டும்.
ஒரு நாடு, ஒரு சட்டம் என கூறும் எமது ஜனாதிபதிக்கு இந்த நாட்டை கொடுத்திருப்பது, எந்தவொருஅடிப்படைவாதமும் இந்நாட்டில் தலைதூக்காமல் இருப்பதற்காகும்.
இந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மீண்டுமொரு யுத்தத்தை அல்ல. சமாதானத்தை ஆகும். இந்நாட்டில் காணப்படும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் ஊடாக அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னிற்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும். மேலும், இலங்கை அரசாங்கமும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தெற்காசியாவில் அமைதியையும், ஒற்றுமையைும் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் முன்னின்று செயற்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
ஆகவே, எதிர்கால சந்தயினருக்கு அடிப்படைவாத அடக்க முறை நிலைமைகளை கொடுத்துவிட்டுச் செல்லாமல், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழும் நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்” என்றார்.