சீன உரக் கப்பலை அனுமதிக்க வேண்டாம் – துறைமுக அதிகாரசபை அதிரடி உத்தரவு

சீனாவிலிருந்து நாட்டிற்கு வரும் கப்பலில் தீங்கு ஏற்படுத்த கூடிய சேதன பசளை உரம் உள்ளடங்கப்பட்டுள்ளது.ஆகவே அக்கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் உட்பிரவேசிப்பதை தடுக்க துறைமுக சேவையாளர்களுக்கும்,உரிய தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
20ஆயிரம் மெற்றிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள்,தொற்றுநீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
கப்பலில் உள்ளடங்கியுள்ள சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி,தனிமைப்படுத்தல்சேவை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து வருகை தரும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரிப்பதற்கு இதுவரையில் அனுமதி கோரப்படவில்லை,அத்துடன் வருகை தருவதாகவும் குறித்த நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுமில்லை.
இந்த கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு துறைமுக சேவையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
பெரும்போகத்திற்கு தேவையான சேதன பசளையை சீன நாட்டின் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.அதற்கமைய சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு முன்னர் அந்த உரங்களின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சேதன பசளை மாதிரி உரத்தில் இலங்கையின் மண் வளத்திற்கும்,காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியிருப்பது இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆகையால்பெற்றுக் கொள்ளப்பட்ட உர மாதிரிகளை சீன நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பவும்,குறித்த நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்வதை தடை செய்யவும் விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்தது.

இளைஞர்கள் மீது தாக்குதல் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு இனவெறி பிம்பத்தை கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் இருவரை தாக்கும் காணொளி வௌியாகி இருந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒரவரையும் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரையும் போக்குவரத்து பொலிஸ் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கும் காட்சி கைப்பேசியால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு ஏறாவூர் களப்பு வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற இடத்தில் கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அளவீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாடாவையும் இழுத்துக் கொண்டு குறித்த மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட போதும் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுனர் செலுத்தியுள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரி குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை கண்டு பிடித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த குறித்த இருவரையும் பொலிஸ் அதிகாரி தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை சிறை கூரையின் மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து சிறைச்சாலை கூரையின் மீதேறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள் அடித்து துன்புறுத்தப்படுகின்றமை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் நாட்டின் தலைமை கண்திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தமது தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளுடன் கலந்துரையாடியதாகவும், ஆனால் அவர்கள் கூரையிலிருந்து கீழே இறங்க மறுத்துவிட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட பல கைதிகள் சிறைக் கூண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல கைதிகள் இன்னும் சிறைச்சாலையின் கூரையில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்!

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அதன் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.

பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் பிரதிநிதிகள் நேற்றைய தினம் (22) பிற்பகல் பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

அமெரிக்க நிறுவனங்களுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்களை தயவு செய்து திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக வேண்டும்- புதிய அமெரிக்க தூதுவர்

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக விளங்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின்முன் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இலங்கை இந்து சமுத்திரத்தின் இதயத்தில் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. உலகளாவிய கடற்பாதைகள் மற்றும் வர்த்தக வழித்தடங்களிற்கான வழிகளை கொண்டுள்ள இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்கு மிகவும் முக்கியமானவை.

இது அமெரிக்கா சிவில் சமூகம் தனியார் துறையினர் பொதுமக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவினை ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திநிற்கின்றது.

எனது நியமனம் உறுதி செய்யப்பட்டால் பேண்தகு சூழல் மற்றும் தொழிலாளர் தாரதங்களைகருத்தில் கொள்ளும்,வெளிப்படைத் தன்மை. சர்வதேச சட்டத்திற்கான மதிப்பு நல்லாட்சி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்ட உட்கட்டமைப்பு முதலீடு ஆகியவற்றிற்காக அயராது பாடுபடுவேன்.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற அமெரிக்க நிறுவனங்களிற்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும், வலுக்கட்டாயமாக கடன் வழங்குதல் இரகசியமான ஒப்பந்தங்களிற்கு மாற்றீடுகளை வழங்குவதற்கு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வங்கி போன்றவற்றின் மூலம் எங்களிடம் உள்ள சாதனங்களை பயன்படுத்துவோம்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சில மாதங்களிற்கு முன்னர் எம்விபேர்ள் என்ற கப்பல் மூழ்கியமை அதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட மிகமோசமான பாரிய கடல்சார் அழிவு ஆகியன தராதரங்களை பேணவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மனிதாபிமான உதவி அவசர சூழ்நிலைகளில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான திறன் மற்றும் அதன் சுற்றுசூழல் கண்காணிப்பு சாதனங்கள் இலங்கை இந்த துன்பியல் சம்பவத்தினை எதிர்கொள்ள உதவின. இலங்கை போன்ற நாடுகளின் மக்களிற்கு நாங்கள் எவ்வாறு சாதகமான உறுதியான சகாவாக விளங்கமுடியும் என்பதற்கு இது அடையாளமாக உள்ளது.

இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு. நினைத்துப்பார்க்க முடியாத வன்முறைகள் மற்றும் மத இனரீதியான பிளவுகளை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தத்தின் துயரத்திலிருந்து மீண்ட நாடு இலங்கை.

எனது நியமனம் உறுதியானால் ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் மற்றும் வலுவான சிவில் சமூகத்திற்கு ஆதரவாக தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் குரல்கொடுக்கும் அர்ப்பணிப்புடன் நான் உள்ளேன். அவை ஜனநாயகத்திற்கு அவசியமானவை மற்றும் எங்கள் வெளிவிவகார அணுகுமுறையின் மையமாக உள்ளன.

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் வலுவான பங்காளிகளாக விளங்கவேண்டும்,இதனால் அனைத்து இலங்கையர்களிற்கும் அமைதி பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் கிடைக்கும்.

இரு தரப்பு உறவுகளிற்கு மிகவும் பெறுமதியான பங்களிப்பை வழங்கும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் விளங்கவேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தம் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும்; எச்சரிக்கின்றார் சுரேஷ்

தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதுடன் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்குவதாக அமையும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்   வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“நாட்டில் தற்போது அமுலிலுள்ள குற்றவியல் நடைமுறை தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 08.10.2021 அன்று அரசால் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் பிரகாரம், ஒருவர் கைது செய்யப்பட்டால் நாற்பத்தெட்டு மணிநேரம் வரையில் அவரை நீதிவான் நீதிமன்றத்திலோ அல்லது மேல்நீதிமன்றத்திலோ ஆஜர்படுத்தாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் வழிவகை செய்கின்றது.ஒரு சந்தேக நபரை நாற்பத்தெட்டு மணிநேரம் காவலில் வைத்திருப்பது என்பது அவரை சித்திரவதை செய்யவும், தமது விருப்பத்திற்கேற்ற வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவும் இந்த கால அவகாசங்கள் உதவும் என்றே நாம் நம்புகின்றோம்.

பொலிஸார் தமது தேவை கருதியோ அல்லது வேறு சில அரசியல்வாதியின் தேவை கருதியோ அல்லது தனிப்பட்ட முறையில் தமது நண்பர்களுக்கு உதவும் வகையிலோ இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவழிவகை செய்கிறது. எனவே, இந்தக் குற்றவியல் நடைமுறைக் கோவை திருத்தங்கள் என்பது ஒட்டுமொத்தமான இலங்கை மக்களுக்கும் பாதகமாகவே அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இவற்றுக்கு அப்பால் அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய சிறிய பெரிய அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்கும் அவர்களது குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக முற்போக்கு, சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் அவர்களது ஜனநாயக செயற்பாடுகளை முடக்குவதற்கும்கூட இந்தத் திருத்தங்கள் பாவிக்கப்படலாம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: அம்னெஸ்டி இன்டர்நேஷனல்

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு குறிப்பாக, சிறுபான்மை இனங்களை வெளிப்படையாக இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஓர் உச்சகட்டத்தை இலங்கை அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழுமையான விவரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

“வீடுகளை எரிப்பது முதல் உடல்களை எரிப்பது வரை இலங்கையில் சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், இனப்பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவை, 2013 முதல் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வினை அடைந்துள்ளது,” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பாகுபாடு, தண்டனைகளின்றி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களிலிருந்து பரிணமித்தது எனலாம். இந்த பாகுபாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க கொள்கைகளான கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களை கட்டாயமாகத் தகனம் செய்தல் மற்றும் நிகாப் (முகத்திரை), மதரசாக்கள் (மத ரீதியிலான பள்ளிகள்) ஆகியவற்றை தடை செய்யும் தற்போதைய முன்மொழிவுகளும் அடங்கும்’ என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

“இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்நிலைமை கூர்மையடைந்துள்ளது எனலாம். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அதிகார தரப்பின் மறைமுக அங்கீகாரத்துடன் அடிக்கடி பல்வேறு ஆபத்தான அளவுகளில் நிகழ்ந்துள்ளன.

அத்துடன், முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே விரோதமாகக் காணப்படும் தற்போதைய அரசாங்கத்தின் சொல்லாட்சி மற்றும் கொள்கைகளும் சேர்ந்துகொண்டுள்ளன” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் கைல் வார்ட் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கை நிறுத்தி, முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதுடன், குற்றவாளிகளை பொறுப்பாக்குவதும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும், துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வரவும் வேண்டும்,” எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் விரோதம்

“தாக்குதல் நடத்தியோர் மற்றும் வெறுப்புப் பேச்சுக்குப் பொறுப்பானவர்கள் தங்கள் செயல்களுக்குரிய தண்டனை இன்றி அனுபவிக்கும் சலுகை மூலமாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 2013 முதல் பல்வேறு படித்திறன்களில் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த அதிகரித்த விரோதமானது – இஸ்லாமிய மதம் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, முஸ்லிம்களின் நுகர்வுக்கு அனுமதிக்கப்பட்ட உணவைக் குறிக்கும் ‘ஹலால்’ சான்றிதழை முடிவுக்கு கொண்டுவர சிங்கள பௌத்த தேசியவாத குழுக்கள் வெற்றிகரமாக முயன்றபோது தொடங்கியது. குறித்த ‘ஹலால்’ சான்றிதழுக்கு எதிரான பிரசாரமானது பல பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வணிகங்கள் மீது தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பாக காணப்பட்ட அசட்டை, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தண்டனையின்றி வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கான ஒரு சமிக்ஞையை வழங்கியது.

அடுத்த ஆண்டு, தெற்கு கடலோர நகரான அளுத்கமவில் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதக் குழு பேரணி நடத்திய பின்னர், முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் தொடங்கியது. இங்கும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டனையை அனுபவிக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.

சிறுபான்மையினருக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த ஒரு புதிய அரசாங்கம் 2015 இல் இருந்தபோதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. தேர்தலுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டில் தென்னிலங்கை நகரமான ஜிந்தோட்டவில் முஸ்லிம் விரோத வன்முறை வெடித்தது. அதே நேரத்தில் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள திகன மற்றும் அம்பாறை ஆகிய நகரங்களில் இதேபோன்ற வன்முறை 2018 இல் நடைபெற்றது. குற்றவாளிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் போலீசாரும் ஆயுதப்படையினரும் போதிய பாதுகாப்பை வழங்கவில்லை அல்லது வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.”

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின் அதிகரிப்பு

“இஸ்லாமிய அரசால் (ஐ.எஸ்) உரிமை கோரப்பட்ட உள்ளூர் இஸ்லாமியக் குழுவால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் மீதான விரோதம் கணிசமாக அதிகரித்தது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி அன்று, இலங்கையின் வடமேற்கு மாகாணத்திலுள்ள பல நகரங்களில் முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் காலத்தில், முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.

சமூக வலைதளங்களில் ‘வெறுப்பு பேச்சு’ பதிவுகள் மற்றும் முஸ்லிம் விரோதப் போக்குகள் காணப்பட்டன. தாக்குதல்களுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை தன்னிச்சையாக கைது செய்ய அதிகாரிகள் அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்தினர்.

பதவியேற்றதிலிருந்து, தற்போதைய அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப – முஸ்லிம் மக்களை குறிவைத்து பலிகடா ஆக்கி வருகிறது.

கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான கட்டாய தகன கொள்கையில் இது தெளிவாகத் தெரிந்தது. இறந்தோர் உடல்களை எரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ள நிலையில், கொரோனா காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதால் தொற்று மேலும் பரவும் என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகள் இல்லாத போதும், கட்டாயமாக உடல்கள் எரியூட்டப்பட்டன.”

முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட அரசாங்கக் கொள்கைகள்

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்புக்கு முன்னால் சர்வதேச அழுத்தம் அதிகரித்து, அரசாங்கம் அடிபணிந்த பிறகு, கட்டாய தகன கொள்கை மாற்றப்பட்டாலும், நிகாப் தடை மற்றும் மதரசா மீதான தடை உள்ளிட்ட பாரபட்சமான சட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். இவை நடந்தால் இலங்கையின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட, மதத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் சுதந்திரம் மீறப்படுவதோடு, சர்வதேச மனித உரிமை சட்டமும் மீறப்படும்.”

“முஸ்லிம்களை குறி வைப்பதற்காக, பயங்கரவாதத் தடை சட்டம் (PTA) உட்பட, தற்போதுள்ள சட்டங்களை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர், இது சந்தேக நபர்களை 90 நாட்கள் வரை குற்றச்சாட்டின்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க அனுமதிக்கிறது. மேலும் இன மற்றும் மதவெறுப்பு பரவுவதைத் தடைசெய்யும் சட்டமான ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டம்’ தவறாகப் பயன்படுத்தப்படுவது, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும்.”

“15 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் 16 மே 2020 அன்று கைது செய்யப்பட்ட கவிஞர் மற்றும் ஆசிரியர் அஹ்னாஃப் ஜசீம் உட்பட தனிநபர்களை குறிவைத்து இந்த சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பல வழக்குகளை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.”

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கட்டாய தகனங்கள் முதல் நிகாப் மற்றும் மதரஸாக்கள் வரை, இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பட்டமான பாரபட்சமான கொள்கை நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறது. தற்போது முன்மொழிவுகளாகவுள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமூகம் கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்றும் கைல் வார்ட் கூறியுள்ளார்.

என்ன சொல்கிறது இலங்கை?

அம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்த அறிக்கை தொடர்பில், இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரவிணவிடம் பிபிசி தமிழ் கருத்து கேட்டபோது ,”அரசாங்கம் அனைத்து சமூகங்களையும் ஒரே விதமாகவே பார்க்கிறது,” என்று கூறினார்.

“ஏனைய சமூகங்களுக்கு வழங்கும் அதே தகுதியை, முஸ்லிம் சமூகத்துக்கும் அரசாங்கம் வழங்குகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

நன்றி- பிபிசி தமிழ்

Posted in Uncategorized

இலங்கைக்கும் பஹ்ரைனுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள்!

இலங்கை மற்றும் பஹ்ரைனுக்கு இடையேயான அரசியல் ஆலோசனைகளின் முதலாவது அமர்வு ஒக்டோபர் 21 மெய்நிகர் தளத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், அரசியல் ஆலோசனைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2009 இல் கைச்சாத்திடப்பட்டது.

தற்போதுள்ள உறவுகளை ஒத்துழைப்புக்கான புதிய வழிகளில் மேலும் மேம்படுத்துவது குறித்து பிரதிநிதிகள் ஆலோசித்தனர். இச்சந்திப்பில் வர்த்தகம், முதலீடு, மனிதவளம், கல்வி, கலாச்சாரம், சுற்றுலா, சுகாதாரம், விவசாயம், திறன் அபிவிருத்தி மற்றும் பரஸ்பர நலனுக்கான தொழிற்பயிற்சி உள்ளிட்ட பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

மேலும், புதிய இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இத்தகைய ஒத்துழைப்பை முறைப்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவும் இந்த சந்திப்பின் போது முன்மொழியப்பட்டது.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்புக்கள் மற்றும் பஹ்ரைனில் உள்ள இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் மற்றும் இலவச தடுப்பூசி குறித்த அர்ப்பணிப்பு குறித்து பஹ்ரைன் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர். வெளிநாட்டிலுள்ள இலங்கையகளுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் வசதிகளை வழங்கிய பஹ்ரைன் அரசாங்கத்துக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களைத் தெரிவித்த பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, திறமையான மற்றும் அரைத் திறன் கொண்ட இலங்கையர்களுக்கான பஹ்ரைனில் உள்ள தொழில் வாய்ப்புக்களை ஆராய்வதற்கு இலங்கை தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியதுடன், பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சின் துணைச் செயலாளர் (அரசியல் விவகாரங்கள்) கலாநிதி. ஷேக் அப்துல்லா பின் அஹமத் அலி கலீபா பஹ்ரைன் தரப்பினருக்குத் தலைமை தாங்கினார்.

புது டில்லியில் வதியும் இலங்கைக்கான பஹ்ரைன் இராச்சியத்தின் தூதுவர் மாண்புமிகு அப்துல்ரஹ்மான் முகமது அல்-கவுத், ஆபிரிக்க ஆசிய விவகாரங்கள் திணைக்களத் தலைவர் மாண்புமிகு தூதுவர் பாத்திமா அப்துல்லா அல்-டான், ஆபிரிக்க ஆசிய விவகாரங்கள் திணைக்களத் தலைவர் ஃபஹத் முஹமத் அல்-ஃபைஹானி, ஆபிரிக்க ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் முதல் செயலாளர் மற்றும் பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் பஹ்ரைன் பிரதிநிதிகளில் அடங்கியதுடன், வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளில் உள்ளடங்கினர்.

இலங்கை மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றுக்கு இடையேயான அரசியல் ஆலோசனையின் இரண்டாவது அமர்வு 2022 இல் இலங்கையின் கொழும்பில் நடைபெறும்.

Posted in Uncategorized

அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் திங்கள் முதல் ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஏனைய தொடர்பான அதிகரிகளுக்கான வழிகாட்டலிலேயே குறித்த விடயத்தை பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவு தேவை – கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாக, வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினூடாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளும் வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளும் கடந்துள்ள போதிலும், இதுவரை தேர்தல் பற்றிய தெளிவற்ற, குழப்பகரமான கருத்துகளை பல்வேறு அமைச்சர்களும் நாளாந்தம் தெரிவித்து வருவதாக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக மீள பெறப்பட்டுள்ளதாகவும், தேர்தல் திருத்தங்களை பொறுத்தவரை தேவைப்படும் மாற்றங்களை அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த முனைவதற்கு மாகாண சபையை ஒழிப்பது அல்லது அதிகாரம் எதுவுமற்ற ஒன்றாக மாற்றுவது தவிர, வேறு எந்த உருப்படியான காரணங்களையும் காண முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்தியாவின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியப்படுவதன் காரணமாகவும் இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தவே அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்று ஓரிரு அமைச்சர்கள் கூறி வருவதாகவும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குழப்பகரமான நிலைப்பாட்டிற்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைத்து, மாகாண சபை தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.