மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது.

2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது.

இதேவேளை மூன்று ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைந்துள்ளது.

இதன்போது 193 நாடுகளில் 168 நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது. ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கத்தால் முடியாது. முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது.” -என்றார்.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசு சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தவகையில் 2021 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பர் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பாடசாலை திறப்புகளை பலவந்தமாக பெற பொலிஸார் முயற்சி: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பாடசாலை திறப்புகளை பெறுவதற்கு அரசியல்வாதிகள் முயன்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகே உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் அதிபர்களுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

200-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்களை பொலிஸார் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளமை அபாயகரமான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாருக்கு பொறுப்பாகவுள்ள பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸார் மூலம் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

காலி முகத்திடலுக்கு எம்மை அழைத்துச் சென்று ஆப்பு வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆரச்சி கூறியுள்ளார். இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு இரண்டு வருடங்களாக கல்வியை வழங்குவதில் தோல்வி கண்டுள்ள அரசாங்கத்திற்கு நீங்கள் வழங்கும் தண்டனை என்னவென அவரிடம் நான் கேட்கின்றேன் என ஜோசப் ஸ்டாலின் வினவினார்.

இந்தியா சலுகைக் காலம் வழங்க வேண்டும்: சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் பதிவு

இலங்கை இன்னும் 5 வருடங்களின் பின்னர் கடனை செலுத்துவதற்கு இந்தியாவினால் சலுகைக் காலம் வழங்கப்பட வேண்டும் என இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வௌிவிவகார கொள்கையை புதுப்பிப்பதற்கான தருணம் உதயமாகியுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வௌியுறவு செயலாளர் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்து, இந்திய இலங்கை வௌியுறவுத் தொடர்பை பாதிப்படையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வௌியுறவு செயலாளரின் விஜயத்தின் பின்னர் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியது.

இவ்வாறான பின்புலத்திலேயே, தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

பயணத்தடை மேலும் நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  , பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று  முற்பகல், இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி  மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன  தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களிலுள்ள மேற்படி வயதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும், இம்மாதம் 21ஆம் திகதி முதல், பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாகத் தடுப்பூசி ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையன்று, மேலும் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றும் கோரப்பட்டிருந்த தடுப்பூசிகள் தொடர்ந்த கிடைத்துக்கொண்டு இருக்கின்றன என்றும், கொவிட் தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி  எடுத்துரைத்தார்.

கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் பின்பற்றிய வீட்டுத் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டமானது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளது என, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய   கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போது அறிவித்தார்.

Posted in Uncategorized

வெளிநாடு செல்ல வேண்டாம் என சுற்றறிக்கை

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் டிசெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அனைத்து தரப்பினரும் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக ஜனாதிபதியின் செயலாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான (2022) அரசாங்க வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

அன்றிலிருந்து வரவு செலவுத்திட்ட விவாதம் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் ஒன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு கோரிக்கை

இலங்கையில்  ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை குறித்த கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையை ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் பண்டாரகம, ரைகம பகுதியில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிப்பு

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களிலும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறல் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான நடவடிக்கைகள் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாசாரம் தொடர்பான குழுவின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது சிறுவர், முதியோர் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வோரின் பாதுகாப்பு தொடர்பில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இலங்கை தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கை, மெக்ஸிகோ மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல்கள் மற்றும் காணாமல்போனோர் விவகாரம் உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்காகத் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் விபரித்தார்.
அதுமாத்திரமன்றி மத்திய ஆபிரிக்கக்குடியரசு, கொலம்பியா, மாலி மற்றும் காம்பியா ஆகிய நாடுகளில் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துவெளியிட்ட அவர், ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து பெலாரஸில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன’ என்றும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களையும் தமது அலுவலகம் பல்வேறு நாடுகளுக்கும் தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகவும் அவர் இதன்போது எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொவிட் வைரஸின் தோற்றத்தை ஆராய புதிய குழுவைநியமித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

கொவிட் வைரஸின் தோற்றத்தை தீர்மானிக்க தமக்கு கிடைத்துள்ள “கடைசி வாய்ப்பு” இது என்று உலக சுகாதார ஸ்தாபனம்புதன்கிழமை (14) தெரிவித்தது.

இதற்காக கொவிட் தொற்று தொடர்பான முதலாவது தொற்றாளரின் தகவல்களை வழங்குமாறு சீனாவை உலக சுகாதார ஸ்தாபனம்வலியுறுத்தியுள்ளது.

கொவிட் வைரஸின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான புதிய அறிவியல் ஆலோசனைக் குழுவின் 26 உறுப்பினர்களை உலக சுகாதாரஸ்தாபனம் புதன்கிழமை பெயரிட்டது.

இந்த குழுவில் வுகானில் நடந்த கூட்டு விசாரணையில் பங்கேற்ற மரியன் கூப்மன்ஸ், தியா ஃபிஷர், ஹங் நுயென் மற்றும் சீன விலங்குசுகாதார நிபுணர் யாங் யுங்குய் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதன் போது பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ், கொவிட் வைரஸ்தோற்றம் தொடர்பான முதல் நாட்களின் மூல தரவு பற்றாக்குறையால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வக தணிக்கைக்குஅழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப குழுவின் அதிகாரியான மரியா வான் கெர்கோவ், வைரஸ்விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதை அறிய இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுகூறினார்.

இதனிடையே ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சீனாவின் தூதுவர் சென் சூ, ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூட்டு ஆய்வின் முடிவுகள்“மிகவும் தெளிவாக உள்ளன” என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான முதல் நபர் மத்திய சீன நகரமான வுஹானில் டிசம்பர் 2019 இல் பதிவாகியது.

சீனாவின் ஆய்வகங்களில் ஒன்றிலிருந்து வைரஸ் கசிந்தது என்று கோட்பாடுகளை சீனா மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது. மேலும் ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க சீனா மறுத்து வருகின்றது.