மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும், உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இரசாயன பசளையை நிறுத்தி சேதன பசளை மூலம் இலங்கையில் உற்பத்தியை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் குறித்த முயற்சி முழுமையாக தோல்வியடைந்து விவசாயிகள் தற்போது வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சேதன பசளையும் இல்லை.

விவசாயிகள் நெல் விதைக்கும் ஆரம்ப கால பகுதியில் பசளை இல்லாமல் எவ்வாறு விதைப்பது என்று உள்ளனர். விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் உள்ள விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு பசளை வழங்காத நிலையில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கு பசளையை கொடுத்து உள்ளூர் உற்பத்தி யை ஊக்குவித்து நாட்டு மக்களுக்கு அரிசி வழங்க முயற்சி எடுப்பதா? அல்லது பசளையை நிறுத்தி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதா? என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

தற்போது அரசாங்கம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அல்லது அவர்கள் தங்களுடைய சொந்த இலாபத்திற்காக அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு பசளையை வழங்கி இருந்தால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை.

எனவே அரசாங்கம் உடனடியாக விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது. யுத்தத்திற்கு பிற்பாடு இந்திய இழுவைப்படகுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் வட கடல் பகுதிக்குள் அவர்களின் மீன்பிடி ஆதிக்கம் காணப்படுகின்றது.

இந்தியாவின் இலுவைப்படகுகளினால் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுகின்ற காரணத்தினால் இலங்கை அரசாங்கம் காத்திரமான ஒரு செயல்பாட்டை முன்னெடுப்பது இல்லை.

கடந்த அரசாங்கத்தில் இருந்த போது எங்களுடைய தொடர்ச்சியான அழுத்தங்களால் பல இந்திய படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதோடு கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது மன்னார், முல்லைத்தீவு மீனவர்கள் பாதிக்கும் அளவிற்கு இந்திய இழுவைப்படகுகள் வந்து செல்கிறது.

கடற்றொழில் அமைச்சரும், அரசாங்கமும் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.

இதற்கு பிரதானமான காரணம் இந்தியாவிற்கு பயந்து அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடமும் நான் நேரடியாக தெரிவித்துள்ளேன்.

அரசாங்கத்திடமும் பல முறை பாராளுமன்றத்தில் கதைத்துள்ளேன். ஆனால் இவ் விடயத்தில் கடற்றொழில் அமைச்சும் அரசாங்கமும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

அண்மைக்காலமாக மிக மோசமாக இந்திய இழுவைப்படகுகள் வந்து வட கடலில் இருக்கின்ற எமது மீனவர்களின் வலைகளையும், படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதனால் எமது மீனவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் கடல் தொழில் அமைச்சு மௌனமாக இருப்பதை விட கடல் தொழில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.

வட மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக இருந்தும் கூட வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் அவர் மௌனமாக இருப்பதை விட சிங்களவர் ஒருவர் கடற்றொழில் அமைச்சராக இருந்தால் எமது அழுத்தத்தின் காரணமாக ஓர் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கடற்றொழில் அமைச்சின் தற்துணிவு இல்லாத நிலையே வட பகுதி மீனவர்கள் இந்திய இழுவைப் படகு மூலம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் மற்றும் பொருட்களின் விலை ஏற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு முறைகள் உள்ளன- ஜி.எல். பீரிஸ்

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இணங்கியதைத் தொடர்ந்து, அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கையானது இந்த வருட இறுதிக்குள் எமக்கு கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.

அனைத்து தேர்தல்களையும் ஒரே முறையின் கீழ் நடத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் நாம் ஆலோசித்து வருகிறோம்.

இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன.

ஒன்று கலப்புமுறையில் தேர்தலை நடத்தவேண்டும். இல்லையெனில், 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் இல்லாது செய்யப்பட்ட தேர்தல் முறைமையை மாகாணசபைத் தேர்தலுக்கு மட்டும் மீளப் பயன்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

அப்படியாயின் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருகிறோம்.

நிரூபமா ராஜபக்ஷவையும் விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை!

பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டோரா பேப்பரஸ் வெளியிட்ட தகவலுக்கு அமைய, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள பிரபலங்களின் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் இவரது கணவரின் பெயரும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் பல இரகசிய நிறுவனங்கள் மூலம் செய்த பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களும் பண்டோரா பேப்பரஸ் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதற்கிணங்க, 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி திருக்குமார் நடேசனின் சொத்துக்களின் பெறுமதி 160 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எந்த வொரு அரசியல்வாதிகளும் எமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் அறிவிப்பு!

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள்  அறிவித்துள்ளனர்.

முனை கடற்தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.

அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள்  என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாடு மூடப்படுவதற்கு முன்பு, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர் சீனாவை நாடுவதாக இந்தியா கவலை

இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து  புலம்பெயர் தமிழர்கள்  சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக ஹிந்து செய்திப்பத்திரிகை செய்தி ​வெளியிட்டுள்ளது.

இலண்டனில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றில் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லையென்று புலம்பெயர் தமிழர்கள் கூறியதாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்தன.

வட இலங்கையில் சீனர்கள் தம் பிரசன்னத்தை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி ஆபத்தாக இருக்கும் என்பதையே மாநாட்டின் மூலம் அறிய முடிந்தது.

இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சீனா இலங்கையில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்தது.  இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதென்று இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்ததாக ஹிந்து பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

வட இலங்கையில் சீனர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி இருப்பதற்கு அவர்கள் இத்தகைய முயற்சிகளை   வரவேற்பார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர்களுக்கு உதவுவதைத்தவிர வேறு வழியில்லை.

சீன அறிவுஜீவிகளை தமது கருத்துக்களுக்கு சாதகமாக கவர்ந்திழுக்கும் வகையில் இலங்கை புலம்பெயர் தமிழர்கள் உலகலாவிய தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும்  நம்பப்படுகிறது.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு கபிலன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து இன்று (10.10.21)மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது. என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பொறுப்பேற்பார்!

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை ஜீவன் தியாகராஜா வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. இதற்கேதுவாக ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜீவன் தியாகராஜா, புதன்கிழமை முதல் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைகுமாறு இலங்கைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகளில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், இலங்கையை வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கொழும்பில் அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்துள்ளார்.
இதன்போது, நீண்டகால ஒத்துழைப்பு செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு செயற்பாடுகள் குறித்தும், சட்ட ஒழுங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் குறித்தும் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்துவது குறித்தும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் சில காரணிகளை முன்வைத்துள்ளார்.
மேலும் நாட்டின் அபிவிருத்தி விடயங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களுடன் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும், அதேபோல் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்த்தில் திருத்தங்களை முன்னெடுக்கப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக பொலிஸ் சடங்களில் புதிய நடைமுறை சீர்திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக வெளியாகும் செய்தியைக் கேட்டு பேரதிர்ச்சி அடைகிறோம். இதுதொடர்பில் உண்மை நிலை பற்றி நாம் அறியாத போதும் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களை கேட்டுள்ளது.
இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைகிறது.
அனைத்து விதமான கெடுதிகளிலிருந்தும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். குறித்த செய்தி தொடர்பிலான உண்மை நிலை பற்றி நாம் அறியாத போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளவேண்டும்.
இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களை காட்டிக்கொண்டு, மக்களை பிழையான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய, இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் எதிரிகளால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அமைப்புகளே ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஏனைய இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளாகும்.
இவ்வாறான தீவிரவாத அமைப்புகள் விடயத்தில் விழிப்புடன் செயற்படுமாறு சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
இதன் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பது ஆராயப்பட வேண்டியதுடன் இவ்வமைப்புகள், இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் என்பதே உலக வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.
எனினும், கடந்த 2019.04.21ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்னும் பலர் காயங்களுக்குள்ளாகியதோடு நம் நாட்டின் நிம்மதியும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதை நாம் அனைவரும் நன்கறிவோம்.
அத்துடன் எமது சமூகம் இந்நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து வந்துள்ளது. நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அளவிலா பங்களிப்பை நம் மூதாதையர்கள் வரலாறு நெடுகிலும் செய்துவந்துள்ளனர்.
அவ்வாறே நம் நாட்டுக்கு பிரயோசனமான வெளிநாட்டு உறவைக் கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.
சுதந்திரத்தைப் பெற்று ஜனநாயகக் குடியரசாக நம் தாய்நாடு மாறியதிலிருந்து நம் தலைவர்கள் மதங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவும் காத்திரமான முயற்சிகளை செய்துள்ளனர்.
என்றாலும் முஸ்லிம் பெயர்தாங்கிய சிலரால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான இத்தாக்குதலை தொடர்ந்து, முஸ்லிம்களுக்கெதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சில தீய சக்திகளால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு, முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பும் சந்தேகமும் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டு வருவதோடு, எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்குச் செய்த பாரிய பங்களிப்புக்கள் மறக்கடிக்கப்படும் நிலை உருவாகி வருவது கவலைக்குரிய விடயமாகும்.
சிலர் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தீவிரமாக செயற்படுவது வருந்தத்தக்கதாகும். இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் தூண்டப்படாமல், கட்டுப்பாடுடன் செயற்படுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.