விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது : அற்புத விளக்கும் எம்மிடமில்லை என்கிறது அரசாங்கம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடமில்லை.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரசியல் நோக்கிற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.  அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடம் இருந்தால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதுவுமில்லை. இரண்டு வருட காலம் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு முதல் செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் ஏனைய பிரச்சினைகளுக்கும் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

டொலர் பிரச்சினையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்த அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த நாட்களில் பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி தட்டுப்பாடு ஏற்படாது.

மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அதனை மக்கள் புரிந்துக் கொள்வார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Posted in Uncategorized

நாட்டில் நேர்மையான அமைச்சரவை இருக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

ஒரு நாட்டின் தலைவர் எவ்வளவு தூய்மையானவராக இருந்தாலும், நேர்மையானவராக இருந்தாலும், ஒரு வெற்றிகரமான தலைவராக இருந்தாலும் சரி, முதலில், நாட்டில் நேர்மையான அமைச்சரவை இருக்க வேண்டும் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க தன்னுடைய ஆட்சி காலத்தில், ஒரு நேர்மையான அமைச்சரவையைக் கொண்டிருந்ததால், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் ஓர் உண்மையான ஜனரஞ்சக தலைவராக, அவர் மாற முடிந்தது என்றும், மைத்திரி கூறினார்.

சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினம், இன்று (10) கட்சி தலைமையகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுத்தினார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகிலுள்ள இராணுவத்தினர் யுத்தத்துக்கு மாத்திரமன்றி, தேசத்தைக் கட்டியெழுப்பவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். எமது நாட்டின் முப்படையினர், தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற சுகாதாரத் தரப்பினரின் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, கொவிட் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, இன்றைய தினம் (10) அநுராதபுரம் – சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவமானது, 1949ஆம் ஆண்டு 17ஆம் இலக்க இராணுவச் சட்டத்துக்கிணங்க ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காகப் பெரும் பங்கு வகித்த இராணுவம், காலாட்படை, ஆதரவு மற்றும் சேவை என, 25 ரெஜிமென்ட்களை உள்ளடக்கியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், சாலியபுர கஜபா ரெஜிமென்ட் முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிவகுப்பு மைதானத்தைத் திறந்து வைத்து, இராணுவத்தினரிடம் கையளித்தார். அதன் பின்னர், அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, “முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்” என்று கூறினார்.

மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அதற்காக, அனைத்து அதிகாரிகளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இராணுவதினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் காணப்படும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதோடு, ரெஜிமென்ட் தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடம் மற்றும் விளையாட்டரங்கு போன்றவற்றைத் திறந்து வைத்தல், அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுதல் போன்றனவும், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டன. கஜபா ரெஜிமென்ட்டின் பொறியியல் படைப்பிரிவினரால் பழுதுபார்க்கப்பட்ட கனிஷ்ட மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரிகளின் வீடுகள், பயன்பாட்டுக்கு இணைக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் போன்றவற்றையும், ஜனாதிபதி பார்வையிட்டார்.

கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று பரிசளிக்கப்பட்டது.

விருந்தினர்களுக்கான குறிப்பேட்டில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அவர்கள், கஜபா ரெஜிமென்ட்டில் மேற்கொண்ட விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில் செடியொன்றை நாட்டினார்.

பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம் – பா.உ. இராகிருஷ்ணன்

மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்படும் என பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக அம்சம். எனவே, தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். ஆதரவையும் வழங்குவோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராகிருஷ்ணன்கூறினார்.

நுவரெலியா, தலவாக்கலையில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனாலும் அவ்வாறு இல்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். எம்மை பொறுத்தமட்டில் சர்வதேச அழுத்தத்தாலேயே தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இந்த அரசாங்கம் பல கபளிகரமான விடயங்களை செய்துவருகிறது முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது உதாரனமாக எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்ற பொருட்களுக்கு தட்டுபாட்டை ஏற்படுத்தி சந்தையில் அதனை இல்லாது போல் செய்து அந்த நிருவனங்களின் ஊடாக குறித்த பொருட்களை அதிக விலைக்கு விற்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது.

மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர விலையஅதிகரிப்பை பற்றி சிந்திப்பதில்லை சில பொருட்களுக்கு கட்டுபாட்டு விலை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது

இன்று அரிசிக்கு கட்பாட்டு விலை கிடையாது, எரிவாயிக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது. பால்மாவுக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது, அரசாங்கம் அவர்களுக்கு கீழ் செயற்படுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் இன்று அனைத்து பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அனைத்து பொருட்களையும் இந்த அரசாங்கம் கொண்டுவர நினைத்தாலும் அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை டொலர் இல்லாவிட்டால் மீண்டும் பால்மா, கேஸ், சீமெந்து ஆகிய விலைகள் அதிகரிக்கும், வாழ்க்கை செலவு இனி குறையாது இதற்கு கடவுளை நம்பவும் முடியாது அன்று ஐந்து ரூபாவுக்கு ஒரு ராத்தல் பானை கொள்வனவு செய்த காலத்தை மீண்டும் திரும்பி பார்க்க முடியாது.

நாட்டில் உரத்திற்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் தேயிலைக்கு கூட போதுமான உரம் கிடைப்பதில்லை இவ்வாறு சென்றால் தேயிலைதுறையும் விழ்ச்சியடையும் பெருந்தோட்ட நிருவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் வாசுதேவ நானயகாரவும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறார் அவ்வாறு இறங்கினால் நாங்களும் அவருக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்குவோம் மாகாணசபை தேர்தல் பலய முறையில் நடாத்தப்பட வேண்டமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை மற்றும் 13வது திருத்தத்தை வழுபடுத்தவும் இந்த மாகாணசபை தேர்தல் முக்கியமானதாகும். இதில் இந்தியாவின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும் என குறிப்பிட்டார்.

அதேவேளை, முன்னரெல்லாம் வரவு – செலவுத் திட்டம்வரும்போதுதான் பொருட்களின் விலை மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு என்றார்.

சினிமோவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலப்பகுதியில் பாணுக்கு வரிசையில் நின்ற நாட்டுமக்கள் இன்று 40வருட த்திற்கு பிறகு இன்று பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார் திருகுமார் நடேசன்!

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், திருகுமார் நடேசன் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை 10 மணிக்கு பிரசன்னமான திருக்குமார் நடேசன், 1:30 வரை வாக்குமூலம் வழங்கியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தான் சாட்சியமளிப்பதற்கு தயாராகி வராமையினால், ஆவணங்களை கொண்டு வரவில்லை எனவும், ஆவணங்களை கொண்டு வர வேறொரு தினத்தை பெற்றுத்தருமாறும் அவர் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

இதையடுத்து, பண்டோரா பேப்பர்ஸ் சர்ச்சையுடன் தொடர்புடைய ஆவணங்களுடன், எதிர்வரும் 15ஆம் திகதி இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும்- மக்கள் காங்கிரஸ்

பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்து நடத்த வேண்டும் என மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி,  சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட்,  சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு, தேர்தல்கள் சீர்திருத்தம்  தொடர்பாக மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பிரேரணையை முன்வைத்தனர்.

அதில் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத்தேர்தல் விடயங்களில் கட்சியின் நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியதுடன், விரிவான நீண்ட நேர கருத்தாடல்களையும் மேற்கொண்டனர்.

மேலும், பொதுத்தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் விகிதாசார முறைப்படி தற்போது நடைமுறையில் உள்ளவாறு நடத்த வேண்டும் என்ற வாதங்களும் மக்கள் காங்கிரஸ் கட்சியினரால் அங்கு முன்வைக்கப்பட்டது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் ஆரம்பகாலத்தில் இருந்த விகிதாசார முறைப்படியான தேர்தல் முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்றும்  இப்பொழுது இருக்கின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறை நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை பெண்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, விசேடமாக புலம்பெயர்ந்தவர்களினுடைய வாக்குரிமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதில் முக்கியமாக  வடக்கு  மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டு, புத்தளம் உள்ளிட்ட இதர மாவட்டங்களிலே வாழ்ந்துவரும், அதாவது இன்னும் தமது சொந்த ஊரிலே குடியேறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும் விஷேட சலுகை அடிப்படையில், அவர்கள் தங்கியிருக்கும் மாவட்டங்களிலுள்ள முகாம்களில் இருந்தே, அவர்கள் விரும்பிய தமது சொந்த மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்த திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அமெரிக்கா செல்ல அனுமதி!

நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.

மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

நவம்பர் முதல் அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளை ஆரம்பம்?

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் நேற்று (08) தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாளின் தரத்தை எந்த விதத்திலும் மாற்றி அமைப்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாணவர்களுக்கு பாடத்தை உள்ளடக்கி பரீட்சைக்கு தயாராவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பாடசாலை நாட்காட்டியில் வருடத்திற்கு 210 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட்ட போதிலும், 2020 ஆம் ஆண்டில் 65 நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த முடிந்தது. 2021 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்திலுள்ள மாணவர்களுக்காக 5 நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாகாண மட்டத்தில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

முகாம்களில் இருந்து கனடாவுக்கு தப்பி ஓட்டிய இலங்கை அகதிகள்!

இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.

மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம்.

மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளனா். ஆனால், தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக காவல்துறை சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி இருக்கிறது.

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.