நாடாளுமன்றில் ரணிலுடன் மோதிய தினேஸ்

பிரதமரிடம் கேள்வி கேட்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சபையில் தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் கடந்த ஒருமாத காலமாக நடைபெறவில்லை. ஏன் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றது.

இது நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகுமென்றார். இதற்கு சபைமுதல்வர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்,

பிரதமரிடம் கேள்வி கேட்கும் சம்ரதாய நிகழ்வை நாங்கள் நிறுத்தவில்லை. கொவிட்-19 காரணமாக நாடாளுமன்ற அமர்வு நடைபெறாததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது.

அதேபோன்று பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

அதனைதொடர்ந்து எழுந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நாடாளுமன்றம் வரமுடியாத நிலை ஏற்பட்டால் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமருக்கு பதிலாக சபை முதல்வருக்கு பதிலளிக்கலாம்.

அத்துடன் அரசாங்கத்தில் திறமையான புதிய உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினால், அது அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

அதனால் அரசாங்கம் தங்களுக்குள் இருப்பவர்களுக்கு பதவிகளை பகிந்தளித்து செயற்பட்டால் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சியாகவும் இருக்கும் என்பதுடன் கேள்வி கேட்பதை ஒத்திவைக்கவேண்டிய தேவையும் இருக்காதென்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் அனுபவத்துடன் தெரிவித்த கருத்தை மதிக்கின்றேன். ஆனால் அவர் அன்று இவ்வாறு செயற்பட்டிருந்தால் வீட்டுக்கு சென்றிருக்க மாட்டார். என்றாலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உறுப்பினர்களுக்கு அதிகாரங்களை பிரித்து, அதிகமானவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கி இருக்கின்றனரென்றார்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க எம்பி தெரிவிக்கையில், நான் வீட்டுக்கு சென்றமை தொடர்பில் கவலையடையவில்லை. என்றாலும் தற்போது இருப்பவர்கள் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில்தான் கவலையாக இருக்கின்றது என்றார்.

சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையை வழங்கத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றிய குழு

சிறிலங்காவிற்கு கிடைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய சிரேஷ்ட அதிகாரிகள் குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட குறித்த குழு 2021 செப்டெம்பர் 27ஆம் திகதி சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, 10 நாட்கள் தங்கியிருந்த இந்தக்குழு, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

எதிர்கக்ட்சி, சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புக்களை முன்னெத்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களின் பிரதான அதிகாரிகளுடனும் இந்தக் குழு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சட்டவிதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு குழு கவனம் செலுத்தியிருந்தது.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தில் சிறிலங்காவை மீள உள்வாங்கிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.

தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்டவரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.

நாட்டில் உள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடின்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்த சந்திப்புக்களின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடிபற்றியும் ஆரயப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்கா அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய தளபதியின் மகளா ஜொகானி? வெளிவந்த பின்னணி

இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின்  மகளே சிறிலங்காவின் பிரபல பாடகி ஜொகானி என்பது முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின்  அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறிலங்காவின் பிரபல பாடகிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு (“மனிகே மகே கித்தே” எனும் பாடல் மூலம் சர்வதேச இசை அரங்கில் தனது பெயரைப் பொறித்துள்ள நிலையில்) வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அவரது தந்தையாருடன் தான் பணியாற்றிய தருணங்கள், போர்க்கள அனுபவங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பதிவில், “சிறப்புப் படைகளின் தளபதியாக, 2006 இல் உங்கள் தந்தை கேர்ணல் பிரசன்ன டி சில்வா மாவிலாறை விடுவிக்க என்னை வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு வரவழைத்தார்.

அங்கு சென்ற நான், 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி அன்று, ஒரு வாரத்திற்குள், காலாட்படை, பீரங்கி, கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் விமானப்படை உதவியுடன், மாவிலாற்றை கைப்பற்றுமாறு சிறப்புப் படைகளுக்கு (1SF / 2SF / 3SF) உத்தரவிட்டேன். இந்த சிறப்பு தாக்குதலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மாவிலாற்றின் முக்கிய மதகுகளை இராணுவம் மீட்டது.

இதனால், “மனிதாபிமான காரணிகளை” போரின் கருவிகளாக பயன்படுத்தக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கற்பிக்கப்பட்டது.

மாவிலாக்குப் பின், கேர்ணல் பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி மற்றும் வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டளையிட என்னை அழைத்தார்.

அவர் இறுதிப் போரில் 55 ஆவது மற்றும் 59 ஆவது பிரிவுகளின் தளபதியாக இருந்ததுடன், போர்க்களத்தில் சாதுர்யமாக இருந்தார். உங்கள் தந்தையின் திறமையான மற்றும் கூட்டு அபிலாஷைகளின் மூலமும், வீரம் மற்றும் தலைமைத்துவத்தின் மூலமும் கடந்த காலத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றிகள் போல, இன்று சர்வதேச அரங்கில் நீங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு பெரும் புகழை தேடி தந்துள்ளீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இறுதிப் போரில் – போர்க்களத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் கேர்ணல் பிரசன்ன டி சில்வாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதை சரத் பொன்சேகாவின் இந்தப் பதிவு வெளிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

அவசர அமைச்சரவைக் கூட்டம் – அழைப்பு ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று  வியாழக்கிழமை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் – சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்!

பண்டோரா பேப்பர்ஸில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உலகின் பெரும்புள்ளிகள் பலரின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கும் தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற பொதுவான கருத்து தற்போது சமூகத்தின் மத்தியில் வியாபித்துள்ளது என்றும் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பெரும்பாலானோர் உத்தரவிட்டுள்ளனர் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தாம் எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் திருக்குமார் நடேசன் தனது கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையிலான விசாரணைக் குழாமொன்றினூடாக இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு தனது மனைவியின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதற்கான பின்னணியை உருவாக்கித் தருமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

Posted in Uncategorized

மாகாண பயணத் தடை – தனியார் பஸ்கள் சுற்றிவளைப்பு

பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து புதன்கிழமை (6) இரவு 10 மணி அளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது குறித்த இரு வேறு பஸ் வண்டிகளிலும் சுமார் 100 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன் சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு மீண்டும் குறித்த பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் பல நுழை வாயில்களில் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவ்வாறு கட்டுப் பாடுகளை மீறி பயணம் செய்பவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி அம்பாறை மாவட்டத்தில் இருந்து இரவு வேளைகளில் குளிருட்டப்பட்ட பல தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

Posted in Uncategorized

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் அரச சேவையின் ஏனைய துறைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அனைத்து அரசாங்கங்களுக்கும் உரிய பொறுப்பாகும் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் அல்ல. 1994 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டது அதன் பின்னர் இடம்பெற்ற அரச சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பெரேரா சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவையின் சம்பளம் தொடர்பான சிக்கலை புறந்தள்ளி அரச சேவையின் முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைக்கும் ஏனைய அரச சேவைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள முரண்பாடு தொடர்ந்து 24 வருடங்களாக நிலவியதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

தேர்தல் குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் – ஜனக பண்டார தென்னகோன்

மாகாணசபை தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை, வாய்மூல  விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹான பண்டார இது குறித்து கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நடத்தப்படும் என்றால் புதிய முறையில் நடக்குமா அல்லது பழைய முறைமையில் நடத்தப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என கூறினார்.

கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (பதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலமே இவ்வாறு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதே இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized