கோட்டாபயவின் அறிவிப்பு வேடிக்கையானது – கலாநிதி தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக  தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் செயற்பாடுகள், மற்றும் அதனுடன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறினார், ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாத ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது கேள்விக்கு உட்படுத்தும் கருத்துக்களாகும்.

தேசிய ரீதியில் அனைத்தையும் கையாள்வதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது யார்? எவர்? என்று தெரியாத புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவேன் எனக் கூறுவது யதார்த்தத்திற்கு அப்பால் பட்ட காரணியாகும்” என அவர் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ் விஜயம்

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்ய உள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.

​​இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அதேபோல் இலங்கையின் வெளியுறவு செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

சிங்களவர்களாக மாற்றப்பட்ட தமிழர்கள் – பகிரங்கமாக வெளிவந்த பின்னணி

முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை இராணுவக் குழு, காணாமலாக்கப்பட்ட இளம் சிறுவர் சிறுமிகளை மலேசியா, மாலைத்தீவு மற்றும் இந்தியாவுக்கு அடிமை வேலை மற்றும் பாலியல் அடிமைகளாக அனுப்பியது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இறப்பு சான்றிதழை தனது முதல் மருந்தாக கொடுக்க விரும்புவதாக அங்கஜன் கூறுகிறார். இதை நிரூபிக்க விரும்பினால், அவர் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் உயிருடன் இருக்கும் போது எடுத்த படத்தையும், இறக்கும் போது எடுத்த படத்தையும், இறந்த பின் எடுத்த படத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 1688 ஆவது நாளாக உறவுகளைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம், அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுவதாகவும், மேலும் சிலர் பிக்குகளாகவும், சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மேலும் ஒற்றுமை என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல. ஒருங்கிணைந்த கொள்கையுடன் இணைவது தான் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கஜனின் முதல் மருந்தை நாம் எதிர்க்கிறோம். இன்று 1688ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான எமது போராட்டம் தொடர்கிறது.

இரண்டு முக்கியமான செய்திகளை நாம் தமிழர்களுக்கு எடுத்து இயம்ப விரும்புகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் தமிழர்களிடமிருந்து, குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை விரும்புகிறோம். யூதர்கள் பெரும்பாலானோர் தம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் கூட, தம் குறிக்கோளில் ஒன்றிணைந்தனர். இதன் விளைவாக தான் இன்று இஸ்ரேல் என்று ஒரு நாடு உள்ளது.

அதேபோல் பின்வரும் தீர்மானத்துடன் நாம் இலக்கை அடைய வேண்டும்.

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐ.நா கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை, தமிழருக்கான அரசியல் தீர்வு – ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட – மீள பெறப்பட முடியாத தமிழர் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடயவியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல்.

அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கவும். ஏனென்றால் நாம் இன்னும் 74 வருடங்கள் ஏமாறக்கூடாது, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தர்களாக நாம் பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட கொள்கைகளை யாரும் மீறக்கூடாது.

போரில் பாதிக்கப்பட்ட நாங்கள் இத் தீர்மானத்தை தயாரிக்க விரும்புகிறோம். இதில் தமிழ் அரசியல்வாதி மற்றும் சிவில் குடிமக்கள், குழுக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவிற்கு வாக்குறுதி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

சிறிலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐரோப்பிய ஒன்றியக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவிற்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ் – ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவை சிறிலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டுடன் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வரவேற்றார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – சிறிலங்கா ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிறிலங்காவின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் , ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும், நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் நன்மைகளையும் வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், சிறிலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்தது. இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் – சிறிலங்கா கூட்டு ஆணைக்குழு செயன்முறை மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மூன்றாம் சுழற்சி மீளாய்வு செயன்முறை (2020, 2021) தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு பங்கேற்றது.

இந்த சந்திப்புககளில் 30 க்கும் மேற்பட்ட வரிசை முகவர்களைக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தூதுக்குழுவானது, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சிறில்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும்.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஏனைய சிரேஷ்ட பங்கேற்பாளர்களையும் இந்தத் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயந்த் கொலம்பகே   மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

பால்மாவின் புதிய விலையை அறிவித்தது இறக்குமதியாளர் சங்கம்!

பால்மா ஒரு கிலோ பக்கட்டின் விலையினை 200 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஒருகிலோ பக்கட்டின் புதிய விலை 1145 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என்றும் அந்த சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பால் மாவை இறக்குமதி செய்வதற்கு உள்ளூர் வங்கிகள் டொலர்களை வழங்காததால், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷுக்கு பால் மா இருப்புக்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தீர்வில்லாமல் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கக் கூடாது  – வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும்  சிவில் அமைப்புக்கள் 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான திடீர் கைதுககள் நிறுத்தப்படவேண்டும், என்பதுடன் அச்சட்டம் இல்லாமலாக்கப்படவேண்டும்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு, மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் எடுக்கும் பட்சத்திலேயே ஜ.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும்  சிவில் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில்   வெள்ளிக்கிழமை (01)  நடத்தினர். இச்சந்திப்பிலேயே இக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த  திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்,

கடந்த கால யுத்தம் நடைபெற்ற போது சம்பூர் மக்கள் 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து பத்து வருட காலமாக முகாம் வாழ்க்கையை வாழ்ந்து மீண்டும் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் அரச உடைமையாக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படாமல் இருக்கின்றது. அதிலும் 818 ஏக்கர் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டும் மீட்டுத் தரப்படவில்லை. 215 ஏக்கர் வயல் காணியில் கடற்படையினரால் முகாமிடப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் 520 ஏக்கர் காணி அனல் மின் நிலையத்திற்கென்று அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் நீக்கப்பட்டும் மக்களால் அக்காணிகளால் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றது. சம்பூர் மக்களிள் ஜீவனோபாயத் தொழில் விவசாயமாகவே இருக்கின்றது. இருந்தும் முழுமையாக விவசாயத்தில் ஈடபட முடியாமல் இருக்கின்றது. இது இங்கு மாத்திரமல்ல அம்பாறை வரை இப்பிரச்சனை இருக்கின்றது.

அத்துடன் மக்களின் உறுதி விவசாயக் காணிகளினுள் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லைகல் இடப்படுகின்றது. இதனால் விவசாயிகளில் தொழில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

யுத்தம் முடிவுற்ற பின்னர் சமாதானம் சமாதானம் என்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் எமது மக்களுக்கு அது உள்ளதா என்பது கேள்விக்குறியே. எமது கால்நடைகளுக்கான காணிகள், வாழ்வாதாரக் காணிகள் வழக்கப்பட்ட பாடில்லை. இப்போதும் வனவள அதிகாரிகள் எல்லைகள் இடுவதும், வேலியிடுவதுமாகவே இருக்கின்றனர். மக்கள் அன்றாடம் செய்யும் தொழிலைச் செயவதற்கே சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது.

ஆனால் யுத்த காலத்தில் எமது மக்கள் பாதுகாத்து வந்த மணல், மலை, குளங்கள் அனைத்தையும் யாராரோ எல்லாம் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமைகளே இங்கு தொடர்ந்து இருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, கையகப்படுத்தப்படும் எமது காணிகளுக்குரிய தீர்வு. மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் எடுக்கும் பட்சத்திலேயே ஜ.எஸ்.பி வரிச்சலுகையினை வழங்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எமது உறவுகள் செயற்பட்டு வருகின்றார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலிலும் எமக்கான நீதியைக் கேட்கின்றோம். அதைவிட எமது நிலங்கள் தொடர்பான பிரச்சனை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது. எமது உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்டு இல்லாத நிலையில் எமது காணிகளையும் பறிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இருப்பதற்குச் சொந்த நிலமில்லாமல் அனைத்து உறவுகளையும் இழந்து அவதியுறுகின்றோம்.

பல ஏக்கர் காணிகள் வைத்திருந்த நாங்கள் இன்று அரசாங்கத்தின் ஒரு ஏக்கர் திட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்து எங்கள் காணிகளை அபகரிக்கின்றது. எமது உறவுகள் இல்லை என்றால் மிகுதிக் காணி யாருக்கு? ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகை தொடர்பில் தீர்மானிப்பதாக இருந்தால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடயம், அரசியற் கைதிகள் விடயம், காணி விடயம் என்பனவற்றையும் கருத்திக் கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் சிங்கள மக்களின் திட்டமிட்ட அத்துமீறல் காலம் காலமாக அதிகரித்துக் கொண்டு வருவதும்இ நாங்கள் பல தரப்பட்டவர்களிடம் இது தொடர்பில் முறையிட்டும் எதுவுமே சரிவரவில்லை. சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளின் மேய்ச்சற்தரை ஆளுநரின் திட்டமிட்ட செயற்பாட்டினால் பறிபோகின்ற நிலைமையிலேயே இருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியற் கைதிகள் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு தற்போதைய ஆட்சி வந்ததும் இன்னும் பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான எவ்வித நீதிவிசாரணைகளும் இடம்பெறாமல் இருக்கின்றது.

எனவே நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீள வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பின் போது, மீளக்குடியமர்ந்தவர்கள் சார்பில் சம்பூரைச் சேர்ந்த காளிதாசன் குகதாசன், கிழக்கு மகளிர் அமைப்பின் உப தலைவி  குணரெத்தினம் அந்தோனிமேரி, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை கால்நடை வளர்ப்போர் கமநல அமைப்பின் தலைவர் குழந்தைவேல் பொன்னுத்துரை, மகன் காணாமல் போன பட்டித்திடலைச் சேர்ந்த சின்னத்தம்பி சரஸ்வதி , கிளிவெட்டி குமாரபுரம் படுகொலையில் தாயை இழந்த  கந்தப்போடி பிரபாராணி, மூதூர் அம்மன் நகரைச் சேர்ந்த பிரபு ஜனனி , இடம்பெயர்ந்து வாழும் புல்லுமலையைச் சேர்ந்த எஸ்.திலகவதி, கிளிவெட்டி குமாரபுரம் அரசரெட்ணம் நடராசா, மட்டக்களப்பு வவுணதீவு மகேந்திரன் அனுஜன் ஆகியோர் தங்களது பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
Posted in Uncategorized

சிறிலங்கா அரசின் பழிவாங்கும் செயற்பாடு – கூட்டாக வெளியான கடும் கண்டனம்

மாணவர் அமைப்புக்களின் தலைவர்கள், தொழிற்சங்கத்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறைசார் நிபுணர்கள் மற்றும் நாட்டில் நடைமுறையிலுள்ள கல்விசார் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக 09 அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, முன்னரங்க செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கையின் பிரசாரம், சித்திரவதைகளுக்கு எதிரான பூகோள அமைப்பு ஆகிய 9 அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையிலேயே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள், கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமை, அமைதிவழியிலான ஒன்றுகூடல்கள் ஆகியவற்றுக்கு தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், அடக்குமுறைகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகளின் பணிகளுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலித்தகவல்கள் ஆகியவற்றையே ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலாக வழங்கியிருக்கின்றது.

கல்வி உரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொண்ட மற்றும் ஆதரவை வழங்கிய மேலும் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதற்கான அச்சுறுத்தலையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் கல்வி உரிமைக்காகப் போராடும் செயற்பாட்டாளர்கள் மீதான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைகள் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்று வலியுறுத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர்களின் உடலியல் மற்றும் உளவியல் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தைக் கோருவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பொது வெளியில் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வது உள்ளடங்கலாக அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தல் ஆகியவற்றுக்கான சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்படவேண்டுமென 9 அமைப்புக்களின் அந்தக் கூட்டறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சரத்வீரசேகர போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நிலை- உலப்பனே சுமங்கல தேரர்

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் உலப்பனே சுமங்கல தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத் வீரசேகரபோன்ற முட்டாள்தனமான அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் காரணமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர்  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களைக் கொண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை அச்சுறுத்துகின்றனர். இந்த நாட்டின் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் இந்த நாட்டை நிர்வகிக்க போதாதா? இவர்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை அடக்குவதற்கு புதிய சட்டத்தை இவர்கள் வேண்டுமென்கின்றனர். இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயல்கின்றனர்.

சீனி மோசடி, வெள்ளைப்பூண்டு மோசடி மாபியாக்களுக்கு எதிராக இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? மாபியாக்காரர்களின் அருகில் சென்று மண்டியிட்டு, ஊடக நிறுவனங்களுக்குள் ஒழிந்துகொண்டு, கீழ்த்தரமான ஊடகப் பிரசாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள். இந்த விடயங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை இன்று விசாரணைக்கு அழைக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டால் சட்டத்தை மீறி இவர்கள் அடக்குகின்றனர். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சரத் வீரசேகர  போன்ற முட்டாள் அமைச்சர்களின் செயற்பாடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்குளி இராணுவ முகாமின் அதிகாரிக்கு விளக்கமறியல்

மட்டக்குளி இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக செயற்படும் லெப்டினன் கேர்னல் சமந்த திலக்கரத்ன உள்ளிட்ட சந்கேநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனீ அபேவிக்ரம நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.

தொட்டலங்க – எல்ல விளையாட்டு கழக தலைவராக செயற்பட்ட அகில சம்பத் ரத்னசிறி எனப்படும் 3 பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் ஒரு பெண்ணை தவிர்ந்த ஏனைய அனைவரும் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளாக செயற்படுபவர்கள் என்பதால், சிறைச்சாலையில் அவர்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு

உத்தரவிடுமாறு கோரி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்
மன்றில் இ கோரிக்கை விடுத்தனர்.

சந்தேகநபர்கள், புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும் மாறாக நன்றாக திட்டமிட்டு, பொதுமகனொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதால், வரப்பிரசாதங்களை வழங்குமாறு
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதற்கு தம்மால் முடியாதென மேலதிக நீதவான் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

பூஜித், ஹேமசிறியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

போதிய சாட்சியங்கள் இருந்த போதும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கடமைகளை அலட்சியம் செய்தமை மற்றும் கொலை செய்தமை தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கைகளை கையளித்துள்ளது.

மேற்படி வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (01) அழைக்கப்பட்டது. இதன்போது, அவ்விருவரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் போது குற்றப்பத்திரிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
மனுதாரர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், ஒவ்வொருவருக்கும் எதிராக 864 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார்.

எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிராக 855 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், முறைப்பாட்டின் சாட்சியாளர்களாக 1,215 நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர் என்றார்.

திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் எழுத்துப்பூர்வமாக பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்து தொடர பிரதம நீதியரசர் ஒப்புதல் அளித்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized