இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சு

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மூவரடங்கிய குழுவுக்குமிடையே விசேட சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Tubagus Feridhanusetyawan மற்றும் புதிதாக நியமனம் பெற்றுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Sarwat Jahan ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்குனர்களின் மாநாடு என்பன தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதுடன் இது தொடர்பில் அவரது கருத்துக்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் சாகல ரத்நாயக்க இந்தக் குழுவிடம் உறுதியளித்தார்.

பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்

Posted in Uncategorized | Tagged

உண்மையான அரகலய இனிமேல்தான் ஆரம்பம் – ஹிருணிகா

உண்மையான அரகலய இனிமேல்தான் ஆரம்பமாகவுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

உண்மையான அரகலய இனிமேல் தான் ஆரம்பமாகவுள்ளது தற்போதைய ஜனாதிபதியை கலைப்பதற்காக அது முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரகலய அமைப்புமுறை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும்ராஜபக்சாக்களை துரத்துவதற்காகவும் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை அரகலய வீடுகளில் ஆரம்பிக்கும் பெற்றோர்கள் அதனை ஆரம்பிப்பார்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிக்க முடியாததன் காரணமாக அவர்கள் இதனை ஆரம்பிப்பார்கள் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

 

பிள்ளைகள் பட்டினி கிடப்பதை தாங்கிக்கொள்ள முடியாததன் காரணமாக அவர்கள் அரகலயவை ஆரம்பிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு ஏதோ ஒரு வழியில் தீர்வை காண்பதற்காக பெற்றோர்கள் அணிதிரள்வார்கள் பெற்றோர்கள் எதிர்கொண்டுள்ள கடும் நெருக்கடியுடன் இந்த அரசியல் தலைவர்கள் விளையாட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் புதிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகும் இந்த வருட இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் முடிவிற்கு வரும் தேர்தலை அறிவிப்பதை தவிர ஜனாதிபதிக்கு வேறுவழியில்லை எனவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புக்குள்ளாகும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் – கல்முனை மாநகர சபையில் தீர்மானம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை, சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்புக்குள்ளாக்க முனையும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டித்தும், தடுத்து நிறுத்துமாறு கோரியும் கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஆலய பிரதேசத்தை புனித பிரதேசமாக சட்டப்படி பிரகடனப்படுத்துமாறும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களுக்கான மாதாந்தக் கூட்டம் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில், சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திலேயே ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளைக் கோரும் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகர சபை பெரும்பான்மை முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தும் அவர்களதும் ஏகோபித்த ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

சபை அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் தீர்மானம் தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“கிழக்கிலங்கையில் மிகவும் தொன்மை வாய்ந்த பிரசித்திபெற்ற புராதன இந்து ஆலயமாக திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயம் திகழ்ந்து வருகின்றது.

உலகில் பிரசித்தி பெற்ற, இந்துக்களின் திருத்தலமான கோணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொல்பொருள் என்ற போர்வையில் அங்கு விசமத்தனமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், ஆலயத்தின் புனிதத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்புகளும் மேலோங்கி நிற்கின்றன.

இதன் ஓர் அங்கமாகவே திட்டமிட்டு தொல்பொருள் என்ற போர்வையில் ஆலய புணருத்தாரண கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நாடு சுதந்திரமடைந்த போது ஆலயம் அமைந்துள்ள திருத்தலம் 18 ஏக்கர் ஒரு றூட் பரப்பளவைக்கொண்டதாக இருந்ததென வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மாறி, மாறி வந்த இந்த நாட்டின் அரசுகள் இப்புனித பிரதேசத்தை அபகரிப்பதிலும், ஆக்கிமிப்பதிலும் அக்கறைகாட்டி வந்துள்ளதால் இன்றைய மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சியிலிருந்த அரசின் பலம் பொருந்திய அமைச்சர் ஒருவர் சட்ட விரோதமாக, வாழ்வாதார உதவி என்ற போர்வையில் தென்னிலங்கை சிங்களவர்களுக்கு 22 கடைகளை அமைக்க வழிவகுத்தார்.

இத்தொகை இன்று பல்கிப்பெருகி, எமது ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு சவாலாகவும் அமைந்துள்ளது.

எனவே, கோணேஸ்வரர் ஆலய பூமியில் இடம்பெறும் பேரினவாத, பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஆலயப் பிரதேசம் சட்டபூர்வமாக புனிதப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இதற்கு நமது குரல் ஒன்றுபட்டதாக ஓங்கி ஒலிக்க வேண்டும்” என்றார்.

உறுப்பினர்களான சந்திர சேகரம் இராஜன், எம். குபேரன் ஆகியோர் பிரேரணையை வழிமொழிந்து சபையில் உரையாற்றியதுடன், பிரேரணைதொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.

கட்டுநாயக்க சென்ற ரஞ்சன் அதிகாரிகளால் வெளியேற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலும் அந்த நீதிமன்றங்களால் விமானப் பயணத் தடை விதிக்கப்பட்டதால், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பிலும் அவற்றைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய, ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு வருகை தந்த போது அவரை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்க கட்டுநாயக்கவில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்

Posted in Uncategorized | Tagged

குருந்தூர் மலை விகாரை கட்டுமானம் தடுக்கப்படின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்

குருந்தூர் மலையானது இந்து கோவில் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குருந்தூர் மலையானது பௌத்த விகாரை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆதலால் புத்த சாசனத்தின் அடையாளங்களை அழிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் மெதகொட தம்மானந்த தேரர் தெரிவித்தார். பெபிலியான சுனேத்ரா தேவி மஹா பிரிவெனா விகாரையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு சில அரசியல்வாதிகள் குருந்தூர் மலை விவகாரத்தின் உண்மையை அறிந்துக்கொண்டு அரசியல் நோக்கத்துக்காக அமைதி காத்து செயற்பட்டு வருகிறார்கள். புத்தசாசனத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அனைவரும் சபிக்கப்படுவார்கள்.

குருந்தூர் மலையில் 100-103 வரையிலான காலப்பகுதிக்குள் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த தொல்பொருள் அம்சங்கள் அடங்கிய விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் மகாவசம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பௌத்த மத அடையாளத்தை பிரதிபலிக்கும் சின்னங்கள் குருந்தூர் மலையில் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலை விகாரை இந்து கோயில் என்று குறிப்பிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. விகாரையின் நிர்மாண பணிகளுக்கு தமிழ் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் கட்டளைக்கு அமையவே தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். மேலும், புத்தசாசன அமைச்சர் மற்றும் தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகத்தில் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் குருந்தூர் மலையில் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவ்வாறு ஏற்படின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி

அண்மையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தமானது 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்களை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்றும், நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் இப்புதிய திருத்தத்தின் பிரகாரம் நிறுவப்படும் அரசியலமைப்புப்பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியம் என்பதுடன் அவை நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளுறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும் என்று அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தம் தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தமெனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இத்திருத்தம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அரசாங்கத்தினால் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக குழுநிலையின்போது மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களுடன் கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் வலுப்பெற்ற மக்கள் போராட்டங்களே அரசியலமைப்புத்திருத்தத்தை மேற்கொள்வதற்கான அவசியத்தைத் தோற்றுவித்தது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி உள்ளடங்கலாக நிறைவேற்றதிகாரத்தின் பொறுப்புக்கள் தொடர்பில் போதியளவிற்கு ஆராயப்படாமையும் தற்போதைய நெருக்கடிக்கான காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன.

இருப்பினும் வருந்தத்தக்கவகையில் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தமானது 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்களை முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்பதுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்கவில்லை.

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் அச்சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருந்ததுடன் அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் செயன்முறை அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதானது அப்பேரவையின் ஊடாக அதிகாரிகளின் நியமனம் இடம்பெறும் கட்டமைப்புக்களின் நேர்மை, சுயாதீனத்தன்மை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

எதுஎவ்வாறிருப்பினும் தற்போது அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதன்கீழ் நிறுவப்படும் அரசியலமைப்புப்பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியம் என்பதுடன் அவை நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை மீளுறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும்.

எனவே அரசியலமைப்புப்பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் செயன்முறையின்போது அதன் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சித்தலைவர்களிடம் வலியுறுத்துகின்றோம்.

அதேவேளை அரசியலமைப்புப்பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும் அனைவரையும் உள்ளடக்கியதுமான செயன்முறையை அப்பேரவை பின்பற்றவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

IMF ஒப்பந்தம் குறித்து அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் பேச்சு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நிலையான தீர்வுகள் தொடர்பிலும் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் முதலீடு செய்யும் அமெரிக்க வர்த்தகர்கள் குழுவுடனும் அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 25ஆம் திகதி நாட்டிற்கு வந்த ரொபர்ட் கப்ரோத், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனோ, அனுர முன்வைத்த கோரிக்கை பாராளுமன்றில் ஏற்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த (Most Vulnerable) பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க முன்வைத்த கோரிக்கையை இன்று, பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

இதன்படி வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் பாராளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் எட்டாம் திகதி செவ்வாய்கிழமை அன்று இந்த கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பெருந்தோட்ட துறை 51 விகிதம், நகர துறை 43 விகிதம், கிராமிய துறை 34 விகிதம், என்ற ஐநா நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்ட துறை மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.

நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாக பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜேவிபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம். அதன்படி இன்று அனுரகுமார திசாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சி தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்து கொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும். பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாள குடும்பங்கள், மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.

இந்த பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும், ஆகவே அந்த அப்பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும், நான் கோர விரும்புகிறேன். எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள், தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகிறேன். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

AIIB இன் ஊடாக இலங்கைக்கு 100 மில்லியன்

கடுமையான கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகள் குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) தனது ஆண்டறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஆதரவை வழங்க AIIB முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்த தயார் நிலையில் மக்கள் – சஜித்

மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தி அரசை நிறுவ நாட்டு மக்கள் எந்நேரமும் தயாராகவே உள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்தக உதவியாளர் சங்கம், அவர்களின் தொழில்முயற்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட தேசிய மக்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு
இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும், இறக்குமதி முறையின் பிரச்சினையும் ஆகும். பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும்.

அவ்வாறு இல்லாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறுவதல்ல. இதன் மூலம் மருந்துத் தட்டுப்பாடு மட்டுமின்றி, நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும். இது தனிநபர்களைக் குறிவைப்பதன் மூலம் அன்றி, மாறாக தவறு செய்த மற்றும் திருடிய, கொள்ளையடித்த, அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்து ஆகும். ஆனால், தற்போதைய அரசு அந்த வழியைப் பின்பற்றுமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என்றாலும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ், திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான, வெளிப்படத்தன்மையுடனும் பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும்.

நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன” – என்றார்.