நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது – மைத்திரி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நல்ல விடயமல்ல என அந்த கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உடன்படுவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி நிறுத்த வேண்டும் – சரத் பொன்சேகா

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டச் செயற்பாட்டாளர்களை அடக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்த அவமானத்தைப் போல் தற்போதைய ஜனாதிபதியும் சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்தார்கள் என மார்தட்டி வீர வசனம் பேசிய கோட்டாபய ராஜபக்ஷ இறுதியில் இலங்கையைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்று எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் இலங்கைக்கு வர எத்தனிக்கின்றார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலை கட்டுமானத்தை நிறுத்தி , கோணேஸ்வரர் ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்க கோரிக்கை!

திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்மாண பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதன் பணிப்பாளர் மனவிதானய தெரிவித்ததாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்

பேராசிரியர் புஷ்பரட்ணம் ஏற்பாட்டில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மனவிதானவிக்கும் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தான தலைவர் ஆகியோருக்கும் இடையில் இன்று ம் விசேட சந்திப்பு இடம்பெற்றது

குறித்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த கலாநிதி ஆறு திருமுருகன் முக்கியமாக, கீரிமலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் மூன்று கோவில்கள் நீண்டகாலமாக பூஜை வழிபாடுகள் இடம்பெறாது உள்ளன எனவே அந்த மூன்று கோயில்களிலும் உடனடியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடனும் கலந்துரையாடி அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருக்கின்றோம்

அதேபோல் கீரிமலையில் சமாதிகள் சிலவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றையும் பெற்றுத் தருவதற்கு உதவ வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்ததோடு திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளுக்கு தொல்பொருத்திணை கழுத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தெரிவித்த போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் இந்த விடயத்தினை உடனடியாக அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை தான் பெற்றுத் தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் முல்லை தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை நீண்ட காலமாக சைவ மக்களால் வணங்கப்பட்டு வந்த அந்த மலையில் வேறு சில கட்டுமான பணிகள் இடம்பெறுகின்றன

எனவே அந்த விடயங்களை நிறுத்து உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம் எனினும் திருகோணமலை விடயம் தொடர்பில் உடனடியாக தான் அமைச்சு மட்டத்திற்கு தெரியப்படுத்தி தீர்வினை பெற்று தரமுயற்சிப்பதாக தெரிவித்தார் என்றார்,

Posted in Uncategorized

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் தொடர்பில் விசாரணை

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் புகைப்படம் எடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்தமை மற்றும் ஜனாதிபதியை கொடியை பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சனை பாராளுமன்றம் அழைத்துச் செல்ல தயாராகும் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் ஏற்படும் முதலாவது வெற்றிடத்தில் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ரஞ்சனுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்துள்ளது. அவருக்கு ஜனநாயக உரிமைகள் இருந்திருக்க வேண்டும்.

அந்தச் சுதந்திரத்தை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சகல அரசியல் உரிமைகளுடன் வழங்குமாறு ஜனாதிபதிக்கு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

Posted in Uncategorized

கோட்டாபயவுக்கு முன்னாள் ஜனாதிபதியின் சலுகைகளை வழங்க முடியாது?

இலங்கையின் அரசியலமைப்புக்கமைய முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட முடியாது என்று  முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல என்பதனால் அவருக்கு அந்தச் சலுகைகளை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் பதவி விலகியவர் என்பதனால், ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை எனவும் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் நடத்தப்படும் விசேட நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கு அமைய இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால பொருளாதாரத் திட்டங்கள் குறித்து பயனுள்ள சொற்பொழிவுக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கைகொடுக்கும் ஜப்பான்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினர்களுக்கான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் இணைந்து நடத்தும் பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் குறித்த கலந்துரையாடலில் சீனாவின் பங்கேற்பு தெளிவில்லாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுக் கடனில் ஐந்தில் ஒரு பங்கு சீனாவிடம் உள்ளது.

இதன் மதிப்பு 3.5 பில்லியன் டொலர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக்கூடாது: K.V.தவராசா அறிக்கை

நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விடுதலை செய்து விட்டு, 12 முதல் 26 வருடங்கள் வரை சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ அரச தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்படும்போது தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே அப்போதைய நீதி அமைச்சராக செயற்பட்டவர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டத்தை நசுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தும் முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.

மே 9ஆம் தேதி முதல் கைது செய்யப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 9 ஆம் தேதி முதல் நடந்த அனைத்து வன்முறைச் செயல்களுக்கும் காரணமானவர்களைக் கண்டறிந்து, தகுந்த தண்டனையைப் பரிந்துரைக்க, உரிய அதிகாரங்களைக் கொண்ட ‘உண்மை ஆணையத்தை’ நியமிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் கேலிக்கூத்து முயற்சியில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.