சுவீடனால் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

கொரோனாவை கட்டுப்படுத்த சுவீடனால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத் துறையின் தலைவர் கிமர்லி பெர்னாடோ (Kimarli Fernado) இதை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு நீக்கப்படுவதுடன், இலங்கையை பல நாடுகள் தமது சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இறக்குமதிக்கான நிதி வைப்பு கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கம்

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி கொள்கை குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கடுமையான பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ளும் கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, 623 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, புதிய பொருளாதாரத் திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் கைது விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வட மாகாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“யாழ்ப்பாணத்தில் கடந்த 23-09.2021 அன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், அவர்களது கைதுக்குரிய காரணம், கைது செய்யப்ப்ட்டமைக்கான ரசீது வழங்கப்பட்டனவா, கைது செய்யப்பட்டப்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கைகள் உள்ளடங்களாக விரிவான அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண காவல்துறை நிலைய தலைமை காவல்துறைப் பரிசோதகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் பேசாலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட, வங்காலைபாடு கிராமத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளிகள் 24.09.2021 (வெள்ளி) அன்று கடலுக்கு தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய வேளையில் கடற்படையினரால் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வெளிவந்த செய்திகளை அடிப்டையாக கொண்டும் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான பூரண விளக்க அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பேசாலை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது.

அது தொடர்பில் பேசாலை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் அறிககையும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் பிரகாரம் மேலதின விசாரணைகள் இடம்பெறும்.

மேற்படி இரு முறைப்பாடுகளும் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணயான பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த படுகொலை வழக்கு ஹெய்க் மக்கள் தீர்பாயத்துக்கு; ஊடக சுதந்திர அமைப்புக்கள் கொண்டு செல்கின்றன

இலங்கையின் புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு விவகாரத்தை உலகின் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் ஹேய்க்கிற்கு கொண்டு சென்றுள்ளன. இதற்காக மக்கள் தீர்ப்பாயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.
லசந்தகொலை குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் நோக்கத்துடன் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் மக்கள் இந்தத் தீர்ப்பாயத்தை உருவாக்கியுள்ளதாகவும், தீர்ப்பாயத்தின் விசாரணைகள் நவம்பர் இரண்டாம் திகதி ஹேய்க்கில் ஆரம்பமாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸிலிருந்து செயற்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு, Free Press Unlimited ஆகிய அமைப்புகள் பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பில் மக்கள் தீர்ப்பாயத்தை ஆரம்பிக்குமாறு நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை கேட்டுக்கொண்டுள்ளன.

பொதுமக்கள் தீர்ப்பாயங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் நியாயபூர்வமான ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் நாடுகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துகின்றன. பொதுமக்கள் தீர்ப்பாயங்கள் பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்துவதுடன் அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவுசெய்கின்றன.

பத்திரிகையாளர்கள் தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் லசந்த விக்கிரமதுங்க மெக்சிக்கோவின் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் வெலாஸ்கோ சிரியாவின் நபில் அல்சர்பார்ஜி கொலைகள் தொடர்பில் நீதியை வழங்க தவறியமை தொடர்பில் இந்த நாடுகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல்செய்யும்.

இதேவேளை, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள மக்கள் தீர்ப்பாயத்திற்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்ஸா விக்கிரமதுங்க தனது முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சிறிலங்காவில் தலைதூக்கியுள்ள சீன ஆதிக்கம்- இந்திய வெளிவிவகார செயலாளர் சிறிலங்காவிற்கு அவசர விஜயம்!

இந்தியா – சிறிலங்காவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சிறிலங்காவிற்கு அவசர விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் தலைதூங்கியுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் தகவலகள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபர் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை அவர் சிறிலங்காவில் தங்கிருப்பார் என புது டில்லி அரச வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் நியூயோர்க்கில் நடந்த ஐ.நா அமர்வின் போது சந்தித்து பேசியிருந்தனர். இந்நிலையிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கையுடன் முக்கிய உடன்படிக்கையில் இந்திய நிறுவனம் கைச்சாத்து

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை  கூட்டாக அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை ஒன்றில்  இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையகம் ஆகியவற்றுடன் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கை  700 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதலீடாகும் என கூறப்படுகின்றது.

மேலும், மேற்கு முனையம் 35 வருட கட்டுமானம் மற்றும் பரிமாற்றம்  ஆகியவற்றின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அதானி குழுமத்தின் அறிக்கையின்படி, மேற்கு துறைமுக முனையம்  ஆயிரத்து 400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழம் கொண்டதாக இருக்கும் என்பதுடன் பெரிய கொள்கலன்களை கையாள இது ஒரு பிரதான தளமாக  அமையும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல்  முறையாக  இந்தியத் துறைமுக நிறுவனம் ஒன்று கூட்டு முயற்சியில் 51  வீதமான  பங்கைக் கொண்டிருக்கும் திட்டமாக  இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  தெரிவித்துள்ளார்.

எனினும், பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே, பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், இந்த நடைமுறையை மீறும் பேருந்துகளை தமது வசப்படுத்திக் கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ரயில் போக்குவரத்துக்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தும் நடத்தாதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Posted in Uncategorized

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா. சபை தயாரித்துள்ள அறிக்கை

சிறிலங்காவில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைமை இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், சிறிலங்கா உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் நேற்று வழங்கப்பட்டது.

சிறிலங்கா குறித்து கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி  மனித உரிமைகள் சபைக்கு மனித உரிமைகள் ஆணையாளர், அளித்த அறிக்கையில், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற செய்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இதேவேளை இந்த நிலைமை குடிமை மற்றும் ஜனநாயக இடத்தில் ஒரு குளிர் விளைவை உருவாக்குகிறது மற்றும் சுய தணிக்கைக்கு வழிவகுக்கிறது என உயர் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே அரசு முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்.

சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியக் குழு – நெருக்கடியில் அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக் குழுவினர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள சந்தர்ப்பத்தில் பிரதான பத்திரிகைகளின் ஆசிரியர்களை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருக்கும் சம்பவத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தென்னிலைங்கையின் பிரபல சட்டத்தரணியான லால் விஜேநாயக்க, பயங்கரவாத தடைச் சட்டமும் சர்வதேச தரத்திற்கு மாற்றுவதை அரசாங்கம் இழுத்தடிப்பதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தை பாதுகாத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நாட்டின் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது.

எனினும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் இந்த சலுகை நிறுத்தப்பட்டதோடு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் பல வாக்குறுதிகளை அளித்து மீளப்பெற்றுக்கொடுத்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த வாக்குறுதிகளில் உள்ள நிலையில் அவற்றை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றும்படி தெரிவிக்கப்பட்டதோடு அவற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கே விசேட குழு விஜயம் செய்துள்ளது.

பயங்கரவாத் தடைச் சட்டம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது. எனினும் போர்க்காலத்திலிருந்து இந்த சட்டம் எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்றது. உலகம் ஏற்றுக்கொண்ட ரீதியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் வகையிலான வரைபு தயாரிக்கப்பட்ட போதிலும் அது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு தற்சமயம் இலங்கையில் இருக்கின்ற நிலையில்தான் இரண்டு பிரதான சிங்களப்பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இப்படியான சம்பவங்கள் பாரிய தாக்கத்தை செலுத்தும். எனவே சலுகையை தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற சம்பவங்கள் மீள்நிகழாமைக்கான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், பயங்ககரவாதத் தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றன தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.