ராணுவ ‘ஹெல்மெட்’ டெண்டர் சீனாவுக்கு! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆப்பு!

இலங்கை இராணுவத்திற்கு தலைக்கவசங்களை (HELMET) வழங்குவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு அரசாங்க நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22/04/2020 அன்று திகதியிடப்பட்ட டெண்டரை வழங்க அரசாங்க வர்த்த நிறுவனத்தின் கொள்முதல் குழு (State Trading Corporation) நிறுவனத்திற்கு 29 ஜூலை 2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஏலம்.அமெரிக்க டொலர்களில்!

நாட்டின் ஒரே ஒரு அனுபவம் வாய்ந்த ஹெல்மெட் உற்பத்தி நிறுவனமான ஹர்ஷ இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட், டெண்டரை பெற்றுக்கொள்வதில் கடுமையான அநீதிக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் போரின் போது கூட, இந்த நிறுவனம் அரச படைகளுக்கு கிட்டத்தட்ட 75,000 தலைக்கவசங்களை (HELMET) வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ஹிமாலி விஜேதுங்க, ஜனாதிபதிக்கு எழுதியயள்ள கடிதத்தில், நிறுவனம் புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அதனது தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் நம் நாட்டில் மேலும் பல தொழிற்சாலைகள் வளர வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் இருக்கும் மற்றும் சோதனையில் தேர்ச்சி பெற்ற தனது நிறுவனத்தின் தலைக்கவசம் நிராகரிக்கப்பட்டது “வருத்தத்திற்குரியது” என்று அவர் கூறினார்.

ஹிமாலி விஜேதுங்க ஜனாதிபதியிடம் இந்த விவகாரம் குறித்து விசேட விசாரணை நடத்தி, நாட்டின் வெளிநாட்டு செலாவணியை மிச்சப்படுத்தும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரே ஒரு உள்ளூர் உற்பத்தியாளரான தனது நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா நோயாளர்களால் நிரம்பும் வைத்தியசாலைகள்; பாரதூரமான நிலை என சுகாதார பிரிவு எச்சரிக்கை

டெல்டா பிறழ்வு பரவல் தொடர்பில் மக்கள் மிகுந்த புரிதலுடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

பெரும்பாலான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள், நோயாளர் விடுதிகள், இடவசதியுள்ள அனைத்து இடங்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால், இதனை பாரதூரமான நிலைமையாகக் கருத வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

காலி – கராப்பிட்டிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் 120 கட்டில்கள் காணப்படுவதுடன், 220 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்களுக்கு மேலதிகமாக அங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 70 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 100 கொரோனா நோயாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்காக 54 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 156 கொரோனா நோயாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏனைய விடுதிகளின் பகுதிகளும் பயன்படுத்தப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் தெல்தெனிய வைத்தியசாலையிலும் நோயாளர்களின் எண்ணிக்கை கொள்ளளவை அண்மித்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள 160 கட்டில்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

தெல்தெனிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 5 கட்டில்கள் காணப்படுவதுடன், அவை அனைத்தும் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

களுபோவில வைத்தியசாலையின் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 160 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும், சுமார் 250 கொரோனோ நோயாளர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்தார்.

IDH வைத்தியசாலையும் நிரம்பியுள்ளது. அங்கு சுமார் 200 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அவை அனைத்திலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தாதியர்கள்

இன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 600 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து சுகாதார பணியாளர்களையும் கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்குமாறு அரசு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கையை இரத்து செய்ய வேண்டும் எனவும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியமில்லாதது, அது நீதி முறைமைக்கும் முரணாகும் ; பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே இறுதித் தீர்வாக இருக்கவேண்டும். என்றாலும் இன்றைய நிலையில் தென்னிலங்கை மக்கள் அதற்கு தயாரான நிலையில் இல்லை. அதனால் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளாமலேயே இதனை மேற்கொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிககைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தத்தின்போது மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மிக மோசமான முறையில் மீறப்பட்டிருக்கின்றன. இதுதொடர்பில் சுந்திரமான விசாரணை மேற்கொள்ள சுதந்திரமான பொறிமுறை ஸ்தாபிக்கப்படவேண்டும்.அப்பொறிமுறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையவேண்டும். மனித உரிமைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற விடயங்களை ஆணைக்குழுவுக்கு தெரிவித்ததுடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சில ஆலோசனைகளையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தேன்.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும்

யுத்தத்தின்போதும் யுத்தத்துக்கு பின்னரும் தமிழ் அரசியல் கைதிகள் பலர் மிக நீண்டகாலமாக சிறைகளில் இருந்துவருகின்றனர். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு அவசியமில்லாத சட்டமாகும். ஏனெனில், அதில் இருக்கும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நாட்டில் இருக்கும் நீதி முறைமைக்கு முரணாகும். அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இல்லாமலாக்கப்பட்டு இலங்கையில் ஏற்கனவே இருக்கின்ற தண்டனைச்சட்ட கோவை, குற்றவியல் நடவடிக்கை கோவை மற்றும் சான்று கட்டளைச்சட்டம். அவைகளைக்கொண்டு ஒரு சட்டமைப்புக்கு கீழ் எல்லா குற்றங்களையும் கொண்டுவரவேண்டும்.

மேலும் பிணை வழங்க முடியாத குற்றங்களின் கீழ் ஒருவரை கைதுசெய்தால், அவரை நீண்டகாலத்துக்கு தடுத்துவைக்க முடியாது. ஒன்றில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் அவருக்கு பிணைவழங்கப்படவேண்டும். அதேபோன்று நீதிமன்றங்களும் அவ்வாறான வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். ஏனெனில் பிணை வழங்கியவர் வெளியில் இருக்கின்றார். பிணை இல்லாதவர் உள்ளே இருக்கின்றார். அதனால் அவரை பிணையும் வழங்காது வழக்கு விசாரணையும் மேற்கொள்ளாது வைத்திருக்கக்கூடாது.

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக கடும் சட்டம் ஏற்படுத்தப்படவேண்டும்

மேலும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தடைசெய்யப்படவேண்டும். குறிப்பாக சமூக வலைத்தலங்களில் ஒரு இனத்துக்காே அல்லது ஒரு சமூகத்தை இலக்குவைத்தோ மேற்கொள்ளப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தடைசெய்யப்படவேண்டும். கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சில வன்முறை சம்பவங்களுக்கு வெறுப்பூட்டும் பேச்சுக்களே பிரதான காரணமாக இருந்தன. அதேபோன்று மொழி உரிமை நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

சிங்களம் மற்றும் தமிழ் அரசகரும மொழியாக அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தென்னிலங்கையில் சிங்கள மொழி மாத்திரம் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் சிங்கள மொழி தெரியாத தமிழ் பேசும் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அதேபோன்று வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மாத்திரம் பயன்படுத்தப்படுவதால், அந்த பிரதேசத்தில் இருக்கும் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அதனால் தமிழ் சிங்கள மொழியை நாட்டில் அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவதை கட்டாயமாக்கவேண்டும். அதேபோன்று சமாதானக் கல்வி எமது கல்வித்திட்டத்தில் உள்வாங்கப்படவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது மிக முக்கியமானதாகும். நாட்டின் அபிவிருத்திக்கு இது அத்தியாவசியமானதாகும். இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் இல்லாமல் நாட்டை அபிவிருத்தியடையச்செய்ய முடியாது. என்னை பொருத்தமட்டடில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒரு சமஷ்டி முறையிலான தீர்வே அவசியமாகும். ஆனாலும் இலங்கையை பொறுத்தமட்டில் அதற்கு தயாரான நிலையில் தென்னிலங்கை மக்கள் இல்லை. அதனால் தற்போதுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

அத்துடன் சமஷ்டி என்றால் நாட்டை பிரிப்பதென்ற பிழையான கருத்தொன்று தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.சமஷ்டி என்பது ஆட்சியில் ஒருவகை. பெரிய நாடுகளுக்குதான் இது பொருந்தும் என சிலர் தெரிவிக்கின்றனர். அப்படி இல்லை. இலங்கையைவிட சிறிய நாடுகளிலும் சமஷ்டி முறை இருக்கின்றது. சமஷ்டி என்பது அந்த நாட்டு மக்கள் நேரடியாக அந்த ஆட்சியில் பங்கெடுப்பதாகும். வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களை பொருத்தளவில் உண்மையில் அவர்களுக்கு ஆட்சி உரிமை வழங்கப்படவேண்டும்.

அத்துடன் இந்த சமஷ்டி முறையை இலங்கையில் ஆரம்பமாக குறிப்பிட்டது எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவாகும். அவர் 1923 அல்லது 26 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, அங்கிருந்த மாணவர் அமைப்புகளின் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகையில், இலங்கைக்கு சமஷ்டி முறையே பாெருத்தம் என அப்போதே தெரிவித்திருந்தார். அதனால் இது ஒரு புதிய விடயமல்ல.

அதேபோன்று காணாமல் போன அலுவலகம், இழப்பீட்டு காரியாலயம், உண்மையை கண்டறிதல் என எந்த பொறிமுறையை அமைத்தாலும் அதுதொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதேபோன்று எந்த பொறிமுறையை கொண்டுவந்தாலும் ஆரம்பமாக பாதிக்கப்பட்டவர்களுடம் அதுதொடர்பில் கலந்துரையாடி அவர்கள் நம்பக்கூடியதான பொறிமுறையாக அதனை ஏற்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டுடன், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே அது நம்பிக்கை தருவதாக அமையும். இதுவரை அமைக்கப்பட்ட பல பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. மக்களுக்கு நம்பிக்கை இல்லாத எந்த பொறிமுறையை அமைத்தாலும் அதில் பயனில்லை.

மேலும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட எல்.எல்.ஆர்,சி. ஆணைக்குழு பல பரிந்துரைகளை செய்திருந்தது. குறிப்பாக அத்தியாயம் 9இல் தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை. என்றாலும் அதற்கு அப்பாற்பட்ட சில பரிந்துரைகளையே நான் முன்வைத்திருக்கின்றேன்.

இராணுவத்தினரிடம் இருக்கும் காணிகள் கையளிக்கப்படவேண்டும்

யுத்தம் முடிவடைந்து 12வருடங்கள் கழிந்துள்ளன. என்றாலும் வடக்கில் பொது மக்களின் அதிகமான காணிகள் இன்னும் ராணுவத்தினர் வசமே இருந்து வருகின்றன. இந்த காணிகள் உரியவர்களுக்கு கையளிக்கப்படவேண்டும். அது மாத்திரமல்லாது அவர்களுக்கு நஷ்டஈடும் வழங்கவேண்டும். அண்மையில் சில காணிகளை ராணுவத்தினர் உரிமையாளர்களுக்கு ஒப்படைத்திருந்தனர். எதிர்காலத்திலும் படிப்படியாக மக்களின் காணிகளை திருப்பி வழங்குவதாக இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

ஆள்சார் சட்டங்கள் தொடர்ந்து இருக்கவேண்டும்

ஆள்சார் சட்டங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருத்தல் வேண்டும். அவைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகயின், அந்த சமூகங்களில் இருந்தே அந்த திருத்தங்கள் வருதல் வேண்டும். வெளியில் இருந்து திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது. அதேபோன்று தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும்போதும் எல்லா கட்சிகளுடனும் கலந்துரையாடி மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை குறைப்பதாக தேர்தல் மறுசீரமைப்பு இருத்தல் கூடாது.

மேலும் பாரபட்சத்தை இல்லாமலாக்கும் சட்டம் அரசியலமைப்பில் மாத்திரம் இல்லாது மேலதிகமாக விசேடமான சட்டம் ஆக்கப்படவேண்டும் என்றார்.

 

Posted in Uncategorized

ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 16 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், பிரதான வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாகவும் அவர் கூறினார்.

சில பொலிஸ் குழுக்களை நியமித்து, அவ்வாறு செயற்பட வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும், அறிவுறுத்தல்களை பின்பற்றாது ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களின் 10 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதான வீதிக்கு சேதம் ஏற்படுத்தியமை, பெருமளவான மக்களை ஒன்றுகூட்டியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொது அமைதி என்ற பெயரில் ஐனநாயகப் போராட்டங்களுக்கு அடக்குமுறையா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ்,நாட்டில் பொது அமைதியைப் பேணுவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டம் 12 இல் தனக்குள்ள அதிகாரத்தை கொண்டு இராணுவத்தை களம் இறக்குமாறு ஐனாதிபதி கோட்டாபய கூறியதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐனாதிபதியின் அறிவிப்பு பொது அமைதி என்ற பெயரில் நாட்டில் நடைபெறுகின்ற பொது மக்களின் ஐனநாயக போராட்டங்களை இராணுவத்தின் இரும்புக்கரத்தின் மூலம் அடக்குமுறைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடா என்ற சந்தேகம் நியாயம் கேட்டு போராடும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மக்களின் ஐனநாயகப் போராட்டங்களுள் விசமிகள் ஊடுறுவி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள் அவதானமாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இராணுவத்தை வீதிக்கு இறக்குவது கோட்டாபய ஆட்சியில் ஒரு புதிய விடையம் இல்லை காரணம் ஏற்கனவே நாட்டில் வீதி எங்கு பார்த்தாலும் சீருடை, ஆயுதம் தரித்த இராணுவம் தான் வீதித் தடைகளை போட்டு நிற்கின்றார்கள். அவ்வாறான நிலையில் மேலதிகமான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுகிறது என்றால் அது தமக்கு வாக்களித்த மக்களின் ஐனநாயகப் போராட்டங்களை ஆயுத முனையில் அடக்குவதே ஆகும்.

ஆனால் ஐனாதிபதியின் அறிவிப்பு நியாயம் கேட்டு ஐனநாயக வழியில் வீதியில் போராடும் மக்களை அடக்கி அவர்களது குரல் வளையை நசுக்குவதே ஆகும்.

வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை- மத்திய அரசிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், தமிழக மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் திகதி கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் காயம் அடைந்திருந்தார். இது முதல் முறையல்ல. தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதோடு, கைது செய்வது படகுகளை சேதப்படுததுவது எனத் தொடர்ந்து னொண்டுதான் இருக்கின்றது.

இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம்,

கடந்த ஓகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை கடற்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒன்பது மீனவர்களும் இந்தத் தாக்குதலில் இருந்து நல்வாய்ப்பாகத் தப்பியுள்ளனர்.

சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்.

இந்தச் சம்பவம், தமிழ்நாட்டில் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்ய வேண்டியது நமது கடமையாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கொதித்தெழுந்த ஜீவன் ரிஷாட்டுக்கு எதிராக கையை நீட்டினார்

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேவலமான அரசியலை செய்து வருகிறார்கள். 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்ற மூன்று சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்று (04) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) , வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) , இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.

8 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் ரிஷாட் வீட்டில் நடந்துள்ளதாக வாக்குமூலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரிஷாட்தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவிட்டமைக்கு அவரும் ஒரு காரணம் என்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ரிஷாட் வீட்டில் எழுதியதாகக் கூறுகிறார்கள். இதெல்லாம் பொய்யென தெரிவித்த ஜீவன் தொண்டமான், இதுபோன்ற விடயங்களை சும்மா வேடிக்கைப் பார்க்கப்போவதில்லை என்றார்.

இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கடுமையான தண்டனை வழங்குவதன் ஊடாகவே, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க முடியும். மேலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார்.

18 வயது வரையில் இலவசக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமெனவும் இதன்போது கல்வி அமைச்சரிடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.

Posted in Uncategorized

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவு

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல போவதில்லை என சட்டமா அதிபர், கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

கொழும்பில் வசித்த 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக கடற்படையின் முன்னாள் தளபதியான வசந்த கரன்னாகொட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதி தமது திணைக்களம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார மன்றுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அன்றைய தினத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட நீதிபதிகள் குழாம், சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் உத்தரவை, எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி, வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும் சந்தர்ப்பத்திலேயே மன்றுக்கு அறிவிக்குமாறு அரச சிரேஷ்ட சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.