கொரோனா பலி எண்ணிக்கை 1600 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை , இன்றைய தினம் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

50,000 கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது மாகாணத்துக்கா? மாவட்டத்துக்கா? ரெலோ வினோ எம்.பி

வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஐம்பதாயிரம் கொவிட் தடுப்பூசிகளும் அரசாங்கத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் வட மாகாண மக்களுக்கென தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அது யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டது. யாழ் மாவட்ட மக்களிடம் கொவிட் தொற்றின் பரவல் காணப்படுவது போலவே வன்னியிலும் தீவிர பரவல் காணப்படுகின்றது.

வட மாகாணம் என்பது யாழ் மாவட்டம் என்பதாக வடமாகாண சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும், அரச உயர் அதிகாரிகளும், அரச தரப்பின் யாழ் அரசியல் தலைமைகளும் எண்ணங்கொண்டிருப்பது தவறான முன்னுதாரணமாகும்.

ஐம்பதாயிரம் சினோபார்ம் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவினையாவது வன்னி மாவட்ட மக்களுக்கும் செலுத்தி கோவிட் பரவலை கட்டுப்படுத்த தவறுவது, அல்லது அக்கறை கொண்டிருக்காமை அரசாங்கமும், யாழ் மையவாத அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் வன்னி மக்களுக்கு செய்கின்ற துரோகமாகும்.

கொவிட் 19 முழுமையாக இன்று அரசியல் மயப்பட்டிருக்கும் இக்காலத்தில் வன்னியை பிரதி நிதித்துவப்படுத்தும் இரு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அக்கறையற்று இருப்பது அல்லது திராணியற்று இருப்பது கவலைக்குரியது.

அரசில் அங்கம் வகிக்கும் இவர்கள் அடுத்த கட்ட தடுப்பூசிகளை வன்னி மக்களுக்கு செலுத்துவதற்கான அழுத்தங்களை கொடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளும் வழங்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளை வன்னி மாவட்டத்துக்கும் வழங்க முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும்.

வவுனியாவிலும், மன்னாரிலும் மரணங்களும், தொற்றும் அதிகரித்துச் செல்கின்றதுகின்றது. அதே போல் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக் கொத்தணி பல நூற்றுக்கணக்கான தொற்றாளர்களை இனங்கண்டது.

பல கிராமங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமைக்கு ஆடைத்தொழிற்சாலைக் கொத்தணியே காரணமாகும்.

நாம் ஆரம்பத்தில் ஆடைத் தொழிற்சாலையில் ஒருசில தொற்றுக்கள் காணப்பட்ட வேளையில் தொழிற்சாலையை இழுத்து மூடுமாறு பல தரப்பினரிடமும் கோரியிருந்தோம்.

அவர்கள் மறுத்துவிட்டனர். இன்று அது 350க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு தொடர் கொத்தணியாக பரவிவிட்டிருக்கின்றது.

இதன் பின்னரும் தடுப்பூசியின் அவசியத்தை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவார்களாயின் அது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

வன்னி மாவட்டம் தடுப்பூசி வழங்கலில் புறக்கணிக்கப்படுவது அல்லது ஏமாற்றப்படுவது ஏன் என்பதை அதிகாரிகளும், அரசாங்கமும் பகிரங்கமாக வன்னி மக்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.

மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று, அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.டபிள்யு.ஜெயந்த தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழில் தாதியர்கள் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில்

யாழ். மாவட்ட தாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று காலையில் இருந்து அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடல்வாழ் உயிரினங்களுக்காக பிரார்த்திக்கின்றேன் – எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்கிறேன்.

பேர்ள் கப்பல் விபத்தினால் உள்நாட்டு கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் பாரதூரதன்மை குறித்து அறியமுடிகின்றது என உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

பேர்ள் கப்பல் விபத்து குறித்து வீரகேசரி – செய்திப்பிரிவிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொழும்புத் துறைமுகத்திற்கு வடமேற்குப்பகுதி கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற சரக்கு கப்பலில்பாரிய தீ ஏற்பட்டது.

சுமார் ஒரு வாரக்காலம் வரை நீடித்த அந்த கப்பலின் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் அதனால் கடல்வளத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை சீர் செய்ய முடியாத நிலையே உள்ளது.

குறிப்பாக இராசாயண பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசுப்பொருட்கள் ஏற்கனவே கடல் நீரில் கலந்து விட்டுள்ளது.

இந்த விபத்தின் மோசமான பின்விளைவுகள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இவ்வாறான இரசாயணங்கள் கடலில் கலப்பது ஆபத்தானதாகும். இலங்கை கடற்கரைக்கு பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட ஆபத்தான நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது பாரியதொரு ஆபத்தாகவே காண முடிகிறது.

இலங்கையின் அழகிய கடற்கரைகளுக்கு கப்பலிலிருந்து பிளாஸ்டிக் மாசுபாடு பரவியுள்ளது. இது பாரியதொரு ஆபத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

இலங்கையின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் இயற்கை குறித்து பிரார்த்தனை செய்வதாக உலக மூலவள நிறுவனத்தின் தலைமை ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அமெரிக்கா தமிழர் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை வரவேற்கிறோம் ரெலோ ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன்

அமெரிக்க காங்கிரஸ் தமிழர் தாயக பூமியான இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை தமிழரின் பூர்வீக தாயகமாக அங்கீகரிக்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களின் ஏற்பாட்டிலே இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் பூர்விகத் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களின் அங்கீகாரத்தின் பின்னர் இது செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சந்தர்ப்பம் நிலவுகிறது.

அமெரிக்காவினுடைய இந்த நிலைப்பாடு தமிழர்களுடைய தாயகக் கோட்பாட்டினை சர்வதேச அரங்கிலே அங்கீகரிப்பதற்கானதும் எம்முடைய இனத்தினுடைய தேசியக் கோரிக்கைகளை படிப்படியாக வெற்றிபெற உதவும் நிலைப்பாடாக அவதானிக்கிறோம்.

இதன் பின்னணியாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் அமைந்துள்ளது.

ஒன்றிணைந்த வடகிழக்கு பிரதேசத்தை வலியுறுத்திய இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1987 ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் பூகோள அரசியலில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை தமிழ் தரப்புகள் தட்டிக் கழிக்க முடியாது. இணைந்த வடக்கு கிழக்கு இலங்கைத் தமிழரின் வரலாற்று அல்லது பூர்விக வாழ்விடப் பிரதேசங்கள் என்பதை வலியுறுத்தி இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் இன்று சர்வதேச அரங்கிலே குறிப்பாக அமெரிக்கா வடக்கு கிழக்கு இலங்கை தமிழரின் பூர்விகத் தாயகமென அங்கீகரிக்க முனைய வழியமைத்திருக்கிறது.

இப்பிரேரணை வெளியுறவு கமிட்டியின் அனுமதியை பெறும் பட்சத்தில் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இது தமிழரின், இணைந்த வடக்கு கிழக்கு தாயகக் கோட்பாட்டுக்கும் அதன் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்குமான கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் அமெரிக்காவின் வெளியுறவு கமிட்டியின் முடிவு இந்தியாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கியுள்ளது. உள்ளக அரசியலில் தமிழர் தரப்பாகிய நாம் ஒன்று பட்ட குரலுடன் செயல்படுவதே சர்வதேச நாடுகளின் முயற்சிக்கு பலமளிக்கும்.

இப்பூகோள சூழல்களை உணர்ந்து அதை எமது மக்களுக்கு சாதகமாக்க தமிழர் தரப்பின் ஐக்கியத்தின் அவசியத்தை அண்மையில் நாம் வலுயுறுத்தியுள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பேச்சுக்களையும் முன்னெடுத்துள்ளோம்.

தமது பதவிகள், தேர்தல் நோக்கங்கள், கட்சி நலன்கள் , தற்பெருமை என்பவற்றை கடந்து நாம் இந்த கணத்தில் எம்மக்களுக்காக ஒன்றுபட்டு சர்வதேச அரசியல் சூழலை சாதகமாக்க செயல்படத் தவறினால், எந்த நியாயப் படுத்தலுக்கும் அப்பால், பாரிய வரலாற்றுத் துரோகத்தை இழைத்தவர்கள் ஆவோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

தபால் நிலையங்கள் நாளை முதல் திறப்பு

நாளை (03) முதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு, மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள வரும் போது குறித்த கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பு தரப்பினருக்கு காண்பித்து பயனாளர்கள் தபால்/ உப​தபால் நிலையங்களுக்கு வர முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள்

COVID தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமது வேலை நாட்கள் குறைக்கப்படுவதால் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பல வருடங்களாக போராடியதன் விளைவாக 1000 ரூபா நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

1000 ரூபா சம்பளத்திற்கு 20 கிலோகிராம் கொழுந்தை பறிக்க தாம் நிர்பந்திக்கப்படுவதாக பொகவந்தலாவை தோட்ட மக்கள் தெரிவித்தனர்.

20 கிலோகிராம் கொழுந்தினை பறிக்க முடியாத தற்போதைய சூழலில், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டனர்.

கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏப்ரல் , மே மாதங்களில் 7 தொடக்கம் 12 நாட்கள் மாத்திரமே இந்த மக்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடரும் பயணக் கட்டுப்பாடு மற்றும் முடக்கல் நிலைமை காரணமாக முற்கூட்டியே பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கும் இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் இதன் உண்மையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 39 பேர் பலி,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.