அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்கு நல்லூர் பின்வீதியில் ஆதனத்தைச் சுற்றி வேலியடைப்பு!

யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல், சபைக்குரிய ஆதனத்தை அத்துமீறிப் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நல்லூர் பின் வீதியில் உள்ள ஆதனம் ஒன்று அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது.

குறித்த ஆதனம், இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாகக் காணப்பட்டது.

அத்துடன், இந்த ஆதனத்தைச் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபையின் அனுமதியுடன் உரிய குத்தகைப் பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர நோக்கங்களுக்குப் பயன்படுத்தின.

இதேவேளை, குறித்த ஆதனத்தை சிலர் அத்துமீறிப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த ஆதனத்தை அறிக்கைப்படுத்திப் பாதுகாக்கும் நோக்குடன் யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி யாரும் உட்செல்ல முடியாதவாறு ஆதனத்தைச் சூழ முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெறவிருந்த அரச வெசாக் தினம் நிறுத்தம்

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய வெசாக் நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஒரு வாரத்தை அரச வெசாக் வாரமாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வை யாழ்ப்பாணம் நயினாதீவில் நடத்த புத்தசாசன அமைச்சு திட்டமிட்டிருந்தது.

தற்போது நிலவும் கொரோனா நிலையை கருத்திற்கொண்டு வெசாக் பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளர் கபில குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சிறிசபாரட்ணம் நினைவேந்தல் காணிக்காரர் விடுவிப்பு தவிசாளர் நிரோஷிடம் பொலிஸார் வாக்குமூலம்

நினைவேந்தலுக்கும் காணி உரிமையாளர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ரெலோவின் யாழ் மாவட்டப்பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சென்று தெரிவித்ததனை அடுத்து சிறிசபாரட்ணத்தின் நினைவேந்தல் இடம்பெற்ற காணி உரிமையாளர் பொலிஸ் நெருக்குவாரங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை (6-05-21) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரட்ணத்தின் 35 ஆவது நினைவு தினத்தினை அவர் மறைந்த இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் அனுஸ்டித்தனர். ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படும் குறித்த இடம் தனியாருக்குச் சொந்தமான காணி ஆகும். எனினும் நினைவேந்தல்கள் மேற்கொள்வதை தடைசெய்யும் முகமாக குறித்த தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகள் அடைக்கப்படவேண்டும் என ஏற்கனவே காணி உரிமையாளர்களுக்கு புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.

இந் நிலையில் கடந்த 5 ஆம் திகதி குறித்த இடம் சிரமதானம் மூலமாக சுத்திகரிப்பட்டதையடுத்து புலனாய்வுத்துறையினரின் அழுத்தங்கள் காரணமாக காணி பராமரிப்பாளர்களால் அஞ்சலி நடைபெறும் இடம் வேலி மூலம் அடைக்கப்பட்டிருந்து. இவ்வாறு அடைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதை வடிவில் காணப்பட்ட இடத்தினைத் திறந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அங்கு வருகைதந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் குறித்த இடத்தில் அஞ்சலித்திருந்தனர். இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த காணியின் பங்கினைக் கொண்ட உள்நாட்டில் உள்ள பராமரிப்பாளர் அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

தொடர்ச்சியாக பொலிஸ் நிலையத்தில் காணி பராமரிப்பாளர் இருநாட்களாக பொலிஸ் நிலையத்திற்கு அலைக்கழிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தவிசாளருக்கு தொலைபேசி வாயிலாக தான் நிலைமையினை அறிவித்தார். இதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற தவிசாளர் நினைவேந்தல் விடயத்திற்கும் இவர்களுக்கும் எதுவித தொடர்புகளும் கிடையாது எனத் தெரிவித்தனை தொடர்ந்து காணிப்பராமரிப்பாளர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை கடந்த மாவீரர் தினத்திற்கு முன்பாகவும் மாவீரர் துயிலும் இல்லத்தினைச் சூழவுள்ள காணிகளில் யாரும் அஞ்சலிக்காதவாறு காணி உரிமையாளர்களுக்கு நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டதுடன் திறந்திருந்த காணிகள் இராணுவத்தினரால் மூடி அடைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனியார் காணிக்குள் நுழைந்து அஞ்சலித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறியமை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷிடம் கோப்பாய் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு (7) வாக்குமூலம் ஒன்றைப்பதிவு செய்துள்ளனர்.

தவிசாளர் பொலிஸ் நிலையம் சென்றமையை அறிந்து யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தேவையான சட்ட உதவி தெடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆராய்ந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று (07) பதவியேற்றார்.

தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வருக்கான பதவியேற்பு உறுதி மொழியையும் இரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என ஆரம்பித்து தமிழில் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார்.

தமிழக முதல்வர் பதவியேற்றதை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளுக்குப் பொறுப்பேற்றார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான துரைமுருகன் நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் அமைச்சராக பொன்முடி பதவியேற்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்தார்.

கயல்விழி செல்வராஜ் ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர், கொத்தடிமைத் தொழிலாளர் நலன் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுமார் 500 பேரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பதவியேற்பு விழாவையடுத்து, ஆளுநர், முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டதுடன், தன் தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்.

தமிழக முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், கொரோனா நிலைமையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், குடும்ப அட்டைகளைக் கொண்டுள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் இந்திய ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் சாதாரணக் கட்டண நகரப் பஸ்களில், பெண்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தமிழகம் முழுவதும் இயங்கும் அரசின் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து பெண்களும் கட்டணமின்றியும் பஸ்களுக்கான பயண அட்டை இன்றியும் நாளை முதல் பயணிக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் சிகிச்சைக் கட்டணத்தை மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், பசும்பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபா வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

ரெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

காவல் படையின் பணியாளர்களுக்கு நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரத்தை தூய்மையான நகரமாகப் பேணும் பொருட்டு, மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

எனினும், உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த சீருடை அமைப்பு கொழும்பு மாநகர சபையின் சீருடை அமைப்பைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டது என வி.மணிவண்ணன் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாது அரசு – ஆளும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன்போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் காணப்படுவதாக பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்களை மறு அறிவித்தல் வரை மூட தீர்மானம்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் COVID-19 நிலைமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரீஸ் தெரிவித்தார்.

கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான பாரிய பொறுப்பு அரசாங்கத்திடம் காணப்படுகின்ற போதும்,
தற்போதைய நிலையில் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் பரிந்துரை

இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக பதில் சொலிஸிட்டர் ஜெனரல் சஞ்சய ராஜரத்தினம் நியமிக்கப்படுவார் என்று நம்பகத் தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சபாநாயகர் தலைமையில் நடைபெறும் உயர் பதவிகளை நியமிக்கும் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வில் இவரது நியமனம் தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என்று சபாநாயகர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டிலிவேர எதிர்வரும் 20 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

இந் நிலையில் வெற்றிடமாகவுள்ள சட்டமா அதிபர் பதவிக்கு சஞ்சய ராஜரத்தினத்தின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அவர் தற்போது சட்டமா அதிபர் துறையின் சிரேஷ்ட அதிகாரியாக உள்ளார்.

AstraZeneca தடுப்பூசிகளை பெறுவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபன தலைவருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, உலக சுகாதார ஸ்தாபன தலைவர் Tedros Adhanom உடன் காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இது குறித்து ஜனாதிபதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு தேவையான 6 இலட்சம் AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom முயற்சிகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக ஜனாதிபதி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Posted in Uncategorized