பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இலங்கை வருகை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்காக விசேட இராணுவ மரியதை அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது இடம்பெறுகின்றது.

சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று அங்கு சென்று ஒத்திகை நிகழ்வு வேலைத்திட்டத்தை பார்வையிட்டார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜய செயற்பாடுகளுக்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று கலந்துரையாடினார்.

Posted in Uncategorized

பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம்

பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம். விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் சஹா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை. நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்ட வேளையில் அருகில் இருந்தவர்களுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக நாம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும். பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை

தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அவர்களினால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது.

எவ்வாறெனின், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையை பரப்பி அவர்களின் இலங்கை பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இன்றுவரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும், புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றது என்றார்.

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்குடையது என்பதால் தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாகக் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொலிஸார் தேடித்தேடி விசாரிக்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதிமன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் எனவும் காட்டுவதற்காகவே இந்த முயற்சி நடைபெறுகின்றது.

ஆனால், இலங்கை அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களை புறக்கணிக்கின்ற அல்லது சிங்களக் குடியேற்றங்களை உட்சேர்க்கின்ற செயற்பாட்டையும் வன விலங்கு பறவைகள் சரணாலயம், மகாவலி வலயம், புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழரின் மரபுகளை அழித்தல் போன்றவற்றிற்கு எதிராகவுமே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையானது மிகவும் வலுவான அறிக்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் புரட்சிகளைத் தடைசெய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புறுரிமைகளை இல்லாது செய்கின்ற வன்முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும். ஏனென்றால், தீர்மானம் நிறைவேற்றினால் ஐ.நா. சபை இரண்டாக உடையும் என்று கூறியிருக்கிறார்.

சரத் வீரசேகரவின் கருத்து, வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கமே. ஆகவே, தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

அதேநேரம், பொலிஸாரின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்கனிக்கின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற மற்றும் ஐ.நா. சபையில் எமது கோரிக்கைகளை இல்லாது செய்கின்ற முயற்சியாகும். இதனால்தான் எமது இளைஞர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும்,பொதுமக்களிலும் கை வைக்கின்றார்கள்.

பொலிஸாரின் அடக்கு முறைகளை கிழக்கு மாகாணம் பொத்துவிலில் உடைத்தெறிந்து அதே எழுச்சியானது பொலிகண்டிவரை இருந்துள்ளது. அது எங்களுடைய வெற்றி.

மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இந்தப் போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் செய்யப்பட்ட ஒரு விடயம். இந்நிலையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எமது மக்கள் அடிபணிய மாட்டார்கள்.

இலங்கை தேசம் இறுதி யுத்த வெற்றியை பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கொண்டாடியது. அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்று பாடம் எடுக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தமிழ் மக்களோ, அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற செய்தியை சரியான நேரத்தில் எழுச்சி ஊர்வரத்தின் மூலம் இலங்கைக்கும் உலகத்திற்கும் சொல்லியுள்ளார்கள்.

ஆகவே, எமது மக்களை யாரும் அடக்க முடியாது. எங்களுடைய பிரச்சினைகளை இந்த ஜனநாயகப் போராட்டத்தின் ஊடாகத் தெரிவிப்போம். இந்நிலையில், உலக நாடுகளும் இந்தியாவும் தமிழர்களுடைய பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த எழுச்சிப் பேரணியின் நோக்கமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது -. சுவிஸ்தூதுவரிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவரிடம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதின்ம் யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலின்போது.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தமிழர்களுக்கு எதிரா மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலே உலக நாடுகளின் நிலைப்பாடுகள் முக்கியமாக 47 நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பிலே மிகமுக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் 30/1 34/1 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக இப்பொழுது வரப்போகின்ற தீர்மானம் இலங்கைக்கு என்ன படிப்பினையினை கொடுக்கும் அல்ல எவ்வாறு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன்.

இவற்றைவிட தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நிலப்பறிப்புக்கள் வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும்,

அரசாங்கத்தினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டும் அல்லாது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு செல்லாத மக்களது விடயங்கள் தொடர்பாகவும்,

அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்ற நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதத்தினை நாங்க சுவீஸ் தூதுவரிடம் கையளித்து இருந்தோம் அதனை அவர் ஏற்றுக்கொண்டதுன்.

எமது மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் கையாலவில்லை என்றும் தப்போதும் அவ்வாறான எண்ணம் நமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனிடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்ள வருகை தருமாறு பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் உற்பட பலரிடம் பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக வினோ நோகராதலிங்கத்திடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் மாங்குளத்தில் கலந்து கொண்டமைக்காக மாங்குளம் பொலிசாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் .

நேரமின்மையென பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களால் கூறப்பட்டதற்கிணங்க வவுனியா ரெலோ மாவட்ட கட்சி அலுவலககத்துக்கு வந்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக தமது உணர்வுடன் கூடிய விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்ப்ட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கிய விவகாரத்தில், கடற்படை சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் தெ ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்ரில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் வசந்த கருணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. .

அம்மனு எதிர்வரும் 4 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது. அந்த ரிட் மனுவின் தீர்ப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜூலை 2 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரு­ணா­கொட உள்ளிட்ட 17 பேர் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்துள்ளது.

அதில் முன்னாள் கடர்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே மூவர் கொன்ட ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஏற்கனவே 17 ஆவது சந்தேக நபரான உபுல் மூன்றாவது சந்தேக நபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேக நபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்ட மா அதிபர் தீர்மானித்து அவர்கள் மூவரும் அரச சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல் காந்தி தெரிவிப்பு

தனது தந்தையான முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுவையில் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, தனது தந்தையை இழந்தமை வலியைத் தந்ததாகவும் அதற்காக தாம் கோபப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பொறுப்பானவர்கள் மீது வெறுப்போ கோபமோ ஏற்படவில்லை என கூறிய ராகுல் காந்தி, அவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை “மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்’ (Old ghosts in new garb: Sri Lanka return to fear) என அந்த ஆட்சியை குறிப்பிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட் டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிக்கையை மன்னிப்புச் சபையின் கொழும்பில் உள்ள தென்னாசிய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக பிந்திய அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீதியை பெறுவதற்கான முயற்சிகளை நெரித்துத் தடுக்கும் அரசாங்கத்தின் போக்கை வன்மையாக எதிர்ப்பதோடு, அரசின் அப்போக்கு நீதி பெறுதலையும் தடைசெய்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

மறுப்புரைகள் (மாறுபாடான கருத்து நிலைப்பாடு) மீது இலங்கை அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுபிக்கப்பட்ட கடும் நடவடிக்கையானது சிவில் சமூக சுதந்திரத்தை வன்மையாக கட்டுப்படுத்துகின்றது.

அத்தோடு, சர்வதேச சட்டத்தின் கீழ், முரண்பாடு காலக்கட்டத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கான நீதியை பெறும் முயற்சிகளையும் தடைசெய்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபையால் இன்று வெளியிடப்பட்ட பிந்திய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

30 வருட ஆயுதப் போராட்டத்தில் நாட்டில் நடைபெற்ற குற்றங்களுக்கு எதிராக இடைக்கால நீதி செயல்முறைகளைத் தடைசெய்யவும் அக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை அடக்குவதற்கும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகளில் மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள், சட்டத்தரணிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அலுவலர்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு இலக்கு வைத்தது என்பதை அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

“கடந்த வருடகாலத்தில், இலங்கை அரசாங்கம் நாட்டின் சிவில் பரப்பை தீவிரமாக மாற்றியமைத்துள்ளது.இது தற்போது, கருத்து வேறுபாடு/ மறுப்புரை தெரிவிக்கும் குரல்கள் நோக்கி அதிகரித்து வரும் விரோதம் மற்றும் சகிப்பற்ற தன்மையால் வரையறுக்கப்படுகின்றது,’ என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் பணிப்பாளர் டேவிட் க்ரிஃபித் கூறினார்.

“வெறுமனே, அதிகாரிகளை அதிருப்திபடுத்தும் செயல்களில் ஈடுபடுதல் அல்லது கருத்துக்களை தெரிவித்தல் போன்ற காரணங்களால், எல்லா மட்டங்களிலும் உள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு, மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். மறுப்புரைக்கு எதிரான பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கம் துண்டிக்க வேண்டும். அத்துடன், கருத்து

தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் ஆதாரமின்றி தன்னிச்சை தடுப்புக்காவலில் வைப்பதிலிருந்து சுதந்திரம் ஆகிய சர்வதேச சட்டத்தின் கீழுள்ள கடமைகளை மதிக்க வேண்டும்.

‘மாசி மாதம் 2020 இல் ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து அணுகப்பட்ட முரண்பாட்டுக்கால குற்றங்களுக்கான நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளில் விலகியதிலிருந்து, நீதியை அணுகுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தடைசெய்யும் நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுகின்றார்கள்.

22 மாசி மாதம் வரை 23 பங்குனி மாதம் கூடும்போது, கடந்த மாதம் மனித உரிமைகளுக்காக ஐ.நா. உயர் ஆணையாளரால் வெளியிடப்பட்ட, இலங்கை மீதான பாதகமான அறிக்கையில் உள்ள பரிந்துரைப்புகளை அமுல்ப்படுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா. மனித உரிமை சபைக்கு தெரிவிக்கின்றது.

“நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளால் இலங்கையில் நலிந்து வரும் மனித உரிமைகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்கக் கூடாது. தண்டனையிலிருந்து விலக்களிக்கும் சுழற்சித் தொடரை முடிவிற்குக் கொண்டு வந்து, இலங்கை அரசாங்கத்தை முழுமையாக பொறுப்புக்கூற வைத்திருப்பதற்கு மனித உரிமை சபை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அத்துடன், சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் புதிய நீதி முறைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.’ என டேவிட் க்ரிஃபித் கூறினார்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல்

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக பரிந்துரைப்பு செய்வதில் விசாரணையை மேற்கொள்ளுதல், ஆவணப்படுத்தல், வழக்குத்தொடுத்தல் அல்லது அறிக்கையிடுதல் போன்றவற்றில் பங்கு வகித்தோரை இலக்கு வைக்கும் செயல்வடிவத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதில், குறைந்தபட்சம் 6 தடவைகள் வழக்கறிஞர்களை இலக்குவைத்த சம்பவங்கள் அடங்கும்.

யஹஜாஸ் ஹிஸ்புல்லா, சிறுபான்மையின உரிமைகளுக்கான பரிந்துரையாளர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தரணிக்கு எதிராக இலங்கையின் கடுமையான தீவிரவாதத்தை தடுக்கும் சட்டம் உட்பட ஏனைய சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒருவித

குற்றமிழைத்ததற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாமல் இவர் 10 மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக அமுலாகிய சட்டத்தரணி அசலா செனவிரத்ன, சமூக ஊடகம் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளால், வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றால் அச்சுறுத்தப்பட்டார்.

சர்வதேச சட்டத்திற்கு எதிராக புரிந்த குற்றங்களுக்கான நீதியை நாடும் குற்ற விசாரணையாளர்களும் கண்காணிப்பிற்கு உள்ளாகின்றார்கள். குற்ற விசாரணையின் முன் பணியாளர் பதவியிறக்கம் செய்யப்பட்டு பின்பு ஆதாரங்களை உருவாக்கிய வழக்கின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தற்போதும் அவர் சிறைக்காவலில் உள்ளதோடு, ஆயுதப்படையினர்களால் இழைக்கப்பட்ட துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்ததன் காரணமாக எதிரீட்டு நடவடிக்கையாகப் பழிவாங்கப்படுகின்றார் என்று நம்புகின்றார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய குற்றச் சாட்டுகள் பரவி வரும் நிலையில், யுத்தத்தின் இறுதி கட்டத்தில் தலைமையில் இருந்த இராணுவ தலைமை உறுப்பினர்களுக்கு புதிய நிர்வாகத்தின் கீழ் பதவி உயர்வு மற்றும் சிவில் வகிநிலைகள் உட்பட அதிகார வகிநிலைகள் வழங்கப்படுகின்றன. நியாயத்தை கோரும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது இது பயங்கரமான விளைவை கொண்டிருந்தது.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டப்பூர்வமான திருத்தங்கள் ஆகியன, நீதியை பெறக்கூடிய நம்பகத்தன்மை உள்ள உள்ளூர் வழிமுறைகளை எவ்வாறு வலு குறைவடையச் செய்தது என்பதை இவ்அறிக்கை குறிப்பிடுகின்றது.

மேலும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள், எவ்வாறு மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கான பொறுப்புக்கூறலை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது என்பதையும் இவ் அறிக்கை குறிப்பிடுகின்றது.

குடியுரிமை இடம் மீதான தாக்குதல்

மறுப்புக்கூறலை தடுப்பதற்கு புதிய கருவிகளையும் செயல்முறைகளையும் அறிமுகப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் நேரத்தை வீணடிக்கவில்லை.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராகக் கரி பூசும் பிரச்சாரத்தை அரசு நபர்கள் முன்னெடுத்த அதேவேளையில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய பின் ஊடகவியலாளர்கள் மரண அச்சுறுத்தல்கள் பெற்றதோடு புலனாய்வு மற்றும் விசாரணைக்களுக்கு அழைக்கப்பட்டனர்.

மனித உரிமை அரச சார்பற்ற அமைப்புகளின் அலுவலகங்களுக்கு அரசு பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை கடந்த பதினான்கு மாத காலமாக அதிகரித்து வருகின்றது. அக் காலக் கட்டத்தில் அத்தகைய 18 வருகைகளை சர்வதேச மன்னிப்புச் சபை பதிவு செய்துள்ளது. வருகையின் போது, அதிகரிகள் பதிவு விவரங்கள், ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளரின் வங்கி விவரங்கள் பற்றி விசாரித்தனர். சில ஊழியர்களின் தனிப்பட்ட வகிவிடத்திலும் அவ் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ) சட்டம் உட்பட, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. முன்குறிப்பிடப்பட்ட சட்டமானது ரம்ஸி ரஸீக் அவர்களை கைதுசெய்து குற்றஞ்சாட்டப்படாத நிலையிலும் வழக்கறிஞ்சரை முறையே அணுகவிடாத நிலையிலும் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தடுப்பில் வைத்திருக்க பயன்படுத்தப்பட்டது.

இவர் முகப்புத்தகத்தில் கொவிட் 19 ஆல் இவர்களின் கட்டாயத் தகனத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தமைக்காக, பேனா மற்றும் விசைப் பலைகையை ஆயுதமாக பயன்படுத்தி கருத்தியல் போரட்டத்திற்கு அழைப்புவிட்டார் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளார்.

பின்னணி

22 ஆம் திகதி மாசி மாதம் தொடக்கம் 23 ஆம் திகதி பங்குனி மாதம் வரை மனித உரிமை சபை தனது 46ஆவது அமர்வில் கூடும். இதன் போது,

கனடா, ஜேர்மனி, மொன்டநீக்ரொ, வடக்கு மசதோனியா மற்றும் ஐக்கிய இரச்சியம் இலங்கை மீது தலைமைதாங்கும் தற்போதைய முதன்மை குழுவில் அடங்கும் நாடுகள் மனித உரிமைக்கான உயர் ஆணையாளர் அலுவலக அறிக்கையைத் பின்தொடரும் பிரகடனத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

தை மாதம் 2021 ஆம் ஆண்டு சர்வதேச மன்னிப்புச் சபை தான் வெளியிட்ட இலங்கையில் உள்ள நிலைப்பாட்டின் மதிப்பீடு அறிக்கையில், மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவை பிற்போடுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. அதில் 2ஆயிரத்து 608 மாணவர்கள் பட்டங்களை பெறவுள்ளனர்.

இந்நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டால் யாழில் புதிய கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

நாட்டில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலை நிகழ்வுகள் உட்பட விழாக்கள் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டை முடக்குமாறு கூட கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் 2ஆயிரத்து 608 மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்வில் அவர்களை ஓர் இடத்தில் கூட்டுவது மிகவும் ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

இந்நிகழ்வில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் உறவினர்கள் என பலரும் அன்றைய தினங்களில் வருகை தருவார்கள்.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பட்டமளிப்பு விழாவிற்கு பலர் வருகை தந்து ஓர் இடத்தில் கூடுவது மாத்திரமின்றி அவர்கள் யாழில் பல இடங்களிலும் தங்கி செல்வார்கள்.

அதனால் யாழ்.மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உண்டு இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்காக திரும்பிய வேளை அவர்களை தனிமைப்படுத்தி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது மாணவர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக நிர்வாகம் பிற்போட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில் , இது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் , அது தொடர்பில் விரைவில் சுகாதார அமைச்சு தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தும் என தெரிவித்தார்.

அதேவேளை இது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவிக்கையில் , கொரோனா அச்சறுத்தல் காரணமாக விழாக்களுக்கு 150 பேருக்கே அனுமதி வழங்கியுள்ளோம். அதற்கு மேல் கூடுவது பிழையானது.

கொரோனா தடுப்பு சுகாதார முறைப்படியே எந்த நிகழ்வையும் நடாத்த முடியும். பட்டமளிப்பு விழா தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பில் ஆராய்கின்றனர் என அறிகிறேன். அடுத்துவரும் நாட்களில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி பட்டமளிப்பு விழா தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை நாம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி , திட்டமிட்டவாறு பட்டமளிப்பு விழாவை நடத்துவோம் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா கூறியுள்ளார்.