அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக  நன்றியும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவார்.

இவ்வாறு விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வெளியிட்டார். அவர்களின் பெயர்கள் வருமாறு,

01) வரதராஜன்

02) ரகுபதி சர்மா

03) இலங்கேஷ்வரன்

04) நவதீபன்

05) ராகுலன்

06) காந்தன்

07) சுதா

08) ஜெபநேசன்

Posted in Uncategorized

அன்று சிங்களம் மட்டும் இன்று ஆங்கிலம் மட்டுமா – நீதி அமைச்சரிடம் மனோ கணேசன் கேள்வி

1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்ததைப் போன்று, இன்று ஆங்கிலம் மட்டும் சட்டம் கொண்டு வருகின்றீர்களா? அதென்ன எதையெடுத்தாலும் “மட்டும்” என்கிறீர்கள்?” என இன்று நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டக்கல்லூரி பரீட்சை ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்படுவது என்ற புதிய விதி பற்றிய சர்ச்சை நாடாளுமன்றத்தில் எழுந்த போது அதில் தலையிட்டு மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது,

“இலங்கையில் தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய மற்றும் ஆட்சி மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். இந்த மூன்றில் விரும்பிய ஒரு மொழியில் பரீட்சை எழுத சட்டக்கல்லூரி மாணவர் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆங்கிலம் அவசியம்தான். ஆனால், ஆங்கிலம் மட்டும் என்றால் அது கொழும்பில் உள்ள ஒரு வகுப்புக்கு மட்டுமே உதவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஆனந்தபுரத்தில் மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த 11.10.2022 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று 19.10.22 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிதி ரி.சரவணராஜா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது தடையவியல் காவல்துறையினர், மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி ஆர்.றொஹான் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் பகுப்பாய்வு நடத்தி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.

எனது அன்பு பூமியின் மிகவும் அழகான இலங்கை தேசத்திற்கானது-எரிக்சொல்ஹெய்ம்

எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக பல வருட சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமாக நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாக உறவை வளர்த்துக்கொண்டேன் ஆனால் பலர் கருதுவதற்கு மாறாக ஏனைய இலங்கை அரசியல்வாதிகள் பலருடன் எனக்கு சிறந்த உறவு உள்ளது.

நான் மகிந்த ராஜபக்சவை சந்தித்தேன். பரஸ்பரம் இருவரும் ஆரத்தழுவிக்கொண்டோம். சம்பந்தன் சுமந்திரன் போன்ற பல தமிழ்தலைவர்களை எனக்கு தெரியும், ஆகவே எனது அன்பு ஒரு தலைவருக்கானது இல்லை. பூமியின் மிகவும் அழகான தீவான இலங்கை தேசத்திற்கானது .

என்னால் உதவிவழங்க முடியுமா என ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார் என்னையும் மாலைதீவின் முகமட் நசீட்டையும் அவர் கேட்டுக்கொண்டார் என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமை கழக தீர்மானமும் முன்னோக்கிய பாதையும் -பிரித்தானிய தமிழர் பேரவை

முக்கியமான சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு நடுவர் மன்றமாக (Arbitration) செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வை உருவாக்கி  அதை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.என பிரித்தானிய தமிழர்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமை கழக தீர்மானமும் முன்னோக்கிய பாதையும்என்ற தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

ஒவ்வொரு வகை குற்றங்கள் தொடர்பான தரவுகள் திரட்டல் மற்றும் நிரல்படுத்தப்பட்ட அறிக்கைகள் தாயகத்திலுள்ள அரசியல், சமூக மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகள் தொகுத்து வழங்குவது போதுமான அடிப்படையில் தொடர்ச்சியாக பொது வெளிக்கு வருவது இல்லை. குறிப்பாக உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடிய காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான ஆதாரபூர்வமான தகவல் அறிக்கை மற்றும் நில ஆக்கிரமிப்பு போன்றன பதிவிடப்பட வேண்டியது தமிழ் மக்களின் நீதிக்காக உலகளாவியரீதியில் குரல் கொடுப்போருக்கு கை கொடுக்கும்.

சர்வதேச சட்டங்களுக்கெதிரான பாரதூரமான குற்றங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதனை ஆதாரபூர்வமான பதிவுகள் தொடர்ச்சியாக பொது வெளிக்கு கொண்டு வரப்படாவிடின் தமிழ் மக்களின் மீதான தொடரும் இனஅழிப்பு சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் பின் தள்ளி விடப்படும்..

இலங்கையின் தற்போதைய இக்கட்டான நிலைக்கான உண்மையான காரணத்தை அறியாமல், அது பாரதூரமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகும்போது, அதற்கு எதிராக கடுமையான தீர்மானத்தை சுமத்துவது நியாயமற்றது என்ற இலங்கையின் பாசாங்குக்கு பெரும்பாலான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் (Developing countries) அனுதாபம் தெரிவித்தன.

ஏழு தசாப்தகால சிங்கள பௌத்த மேலாதிக்கம்,  தண்டனையிலிருந்து விடுபடுதல் (Impunity), தொடரும் வன்முறைச் சுழற்சிகள் (Cycles of Violence), மோதல்களை தூண்டி விடும் இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரல், இறுக்கமாக அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்கள் போன்றன உள்ளிட்ட மூல காரணங்களே (root causes) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருப்பதை இந்த நாடுகள் புரிந்து கொள்ள தமிழர் தரப்பு காத்திரமான முறையில் செயல்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான சான்றுகள் இருந்தும் கூட அரசியல் விருப்பு (Political will) மற்றும் புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான வழிவகைகளை ஐநா உறுப்பு நாடுகள் முன்னெடுக்க தவறி வருகின்றன. ஐ.நா, உறுப்பு நாடுகள் (அ) இந்த குற்றங்களை ஏனைய ஐ.நா பொறிமுறைகளுக்கு அறிக்கையிடுதல் (ஆ)  பொதுச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கான பரிந்துரையினை மேற்கொள்ளல் என்பனவற்றினை தாமதமின்றி நிறைவேற்றியிருக்க வேண்டும்.

பெரும்பாலும் நாடுகள் தம் தலைநகரத்தில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளின் அடிப்படையிலேயே மனித உரிமைக் கழக தீர்மானங்களில் வாக்குகள் பதியப்படுகின்றன. ஐ.நா.வின் பொதுச் சபை மற்றும் ஐ.நா. மனித உரிமை கழகத்தில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு தமிழர் தரப்பிற்கு திரட்டப்பட வேண்டும் என்ற மூலோபாயத் தெரிவொன்றினை கடந்த பத்தாண்டுகளாக தாயகப் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் நாம் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். ஆயினும் இதனை புரிந்து கொண்டு வினைத்திறனுடன் செயல்படுவோர் ஒரு சிலர் மட்டுமே.

இந்த வகையில்   2022 செப்டம்பர் மாத கால மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பிக்க முன்னரும் கூட்டத் தொடர் இடம்பெற்ற வேளையிலும், பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நாட்டு பிரதிநிதிகளையும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களையும் நேரடியாக சந்தித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்த கோரி அதற்கான அடிப்படைகளை விளக்கியிருந்தனர்.

செப்டம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட புதிய தீர்மானத்தில் இரு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவதாக 2021 மார்ச் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்கள் திரட்டடப்பட்டு அவை தொடர்பான குற்ற வழக்கு கோப்புகள் தயாரிக்கும் பொறிமுறை 2022 செப்டம்பரில் நீட்டிக்கவும் வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக $6.09 மில்லியன் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதற்காக இரு வருட காலத்திற்கு இப் பொறிமுறை உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளது.

இரண்டாவது முக்கிய விடயமாக, செயற்பாட்டு பத்தியில் (Operative Paragraph) கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அதிகாரப் பகிர்வு குறித்த சர்வதேச தீர்மானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதால் எமக்கான உரிமைகள் முழுமையாகக் கிடைப்பதற்கான வழி முறைகளை சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் (arbitration) பலப்படுத்தி வெற்றி ஈட்டும் உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழ் அமைப்புக்களிடமும் தமிழ் அரசியல் கடசிகளிடமும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கின்றது.

இன்னொரு முக்கிய விடயமாக, இந்தியா  இவ் வாக்கெடுப்பு தொடர்பில்  நடுநிலைமையான  முடிவை எடுத்திருப்பினும், தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்க்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தமை தமிழர்களை பொறுத்த வரையில் ஒரு முக்கிய விடயமாக அமைந்திருந்தது. இது தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவினையும் கோரி இந்திய அரசுக்கு மேலதிக அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

46/1 & 51/1 தீர்மானங்கள்

தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலை பற்றி ஆர்வமாகக் கதைக்கும் பலர், 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களில் உள்ள சாட்சியங்களை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் எதிர்கால நீதி விசாரணைப் பொறிமுறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்குமான இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (Sri Lanka Accountability Project) என்கின்ற பொறிமுறை பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை.

கடந்த மார்ச் 2021 ஐ.நா. மனித உரிமை கழக கூட்டத் தொடரில் இப் பொறிமுறையின் அத்தியாவசியத் தேவையை பிரித்தானிய தமிழர் பேரவையும் அதன் சகோதர அமைப்புகளும் உறுப்பு நாடுகளுக்கு முன்மொழிந்து அதனை தீர்மானத்தில் கொண்டு வர எடுத்த பாரிய முன்னெடுப்பின் பயனாக சிறிலங்காவின் ஆதரவு நாடுகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து இப் பொறிமுறை 46/1 தீர்மானத்தில் முக்கிய செயல்பாட்டு விடயமாக கொண்டு வரப்பட்டது.

சிறிலங்கா சார்பு நாடுகள் ஐ.நா. நிதி ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தி இதற்கான நிதியை வழங்க விடாமல் இழுத்தடித்து கடந்த ஏப்ரல் மாதமளவிலேயே இப் பொறிமுறை செயல்படத் தொடங்கியது.

மார்ச் 2021 தீர்மானம் 46/1 இன் பிரதான உள்ளடக்கம்

ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல், பகுப்பாய்வு செய்தல், எதிர்காலத்திற்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக (victims and survivors) வாதிடுவது, திறமையுள்ள அதிகார வரம்பு கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, உலகளாவிய நீதி விசாரணைகளை ஆதரித்து செயல்படுவது.

செப்டம்பர் 2022 தீர்மானம் 51/1 இக் குறிப்பிட்ட பொறிமுறிக்காக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் (extend and reinforce the capacity) என்ற முடிவை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 2021, மார்ச் 2022 மற்றும் ஜூன் 2022 மனித உரிமைக் கழக கூட்டத் தொடர்களின் போதும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடனான எமது நேரடிப் பேச்சுவார்த்தைகளின் போதும் மேற்படி 46/1 தீர்மானத்தின் சரியான விளக்கம் குறித்து வலியுறுத்தி வாதாடினோம். இத் தீர்மானம் (i) முன்னைய தீர்மானங்கள் போல LLRC கமிஷன் விசாரணைக்கான 2002 – 2009 காலப் பகுதிக்குள் (Time limit) முடக்கப்படவில்லை. மாறாக இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இலிருந்தான தமிழ் மக்களுக்கெதிரான குற்றங்களை சாட்சியப்படுத்த வேண்டும், (ii) சர்வதேச சட்டங்களால் வரையறுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான அனைத்து விதமான குற்றங்கள், குறிப்பாக இன அழிப்பு குற்றங்கள் என்பன சாட்சிய திரட்டில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற எம் தரப்பு சட்ட வியாக்கியானம் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே நீண்ட கடும் பிரயத்தங்களின் பின் 46/1 தீர்மானத்தில் எம்மால் கொண்டு வரப்பட்ட சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை உலகளாவிப் பரந்து வாழும் எம் தமிழ் மக்கள் இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையை பயன்படுத்தி எம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ஆதாரபூர்வமான முக்கியமான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டி வழங்க வேண்டும் என்று உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.  பல்வேறு கொடுமைகளை அனுபவித்த எம் இனத்தின் ஆயிரக்கணக்கான உண்மைப் பதிவுகள் இருக்கையிலே, பொய்யான விடயங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

தமக்கு நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு சாட்சியங்களை திரட்ட யூத மக்கள் எவ்வாறு நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை ஏற்படுத்தினார்களோ அது போன்ற நிறுவனம் ஒன்றினை தமிழர் தரப்பு ஒருங்கினைத்து வினைத்திறனாக செயல்பட முன்வர வேண்டும்.

முன்னோக்கி செல்லும் வழித் தடம் 

எதிர் வரும் ஐ.நா. கூட்டத் தொடர்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கழக ஆணையாளரின் வாய்மூல மற்றும் எழுத்து மூல அறிக்கைகைகளிலே (Oral and Written reports)  இப் பொறிமுறையின் உள்ளீடு மிகக் காத்திரமானதாக அமைவதனை செயல் திறமையுள்ள தமிழ் அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக இவ் வேலைத் திட்டங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். பாரதூரமான குற்றங்களை இப் பொறிமுறை சட்டரீதியாக ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதன் மூலம்  சர்வதேச நீதி விசாரனைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான அடிப்படையை வலுப்படுத்த முடியும்.

முக்கியமான சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு நடுவர் மன்றமாக (Arbitration) செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வை உருவாக்கி  அதை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.

Posted in Uncategorized

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம்-அமெரிக்கா

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கயை சந்தித்த போதே டொனால்ட் லு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுடன், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ,மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே (Susan Walke) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும் டொனால்ட் லூ தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர் பிரச்சினை தொடர்பில் சீமானுடன் சிறீதரன் கலந்துரையாடல்!

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.

சென்னை, பாலவாக்கத்தில் உள்ள சீமானின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன் போது, உலக அரங்கின் சமகால அரசியல் நகர்வுகள், அதிகூடிய சமூக, பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், வாழ்வுரிமைக்காக போராடும் ஈழத்தமிழர்களின் எதிர்கால நலன்கருதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது, நாம் தமிழர் கட்சியின் முதன்மை உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான திரு.சந்திரசேகர், இளம் செயற்பாட்டாளர் திரு.மைக்கேல் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கை வருகிறார்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

அமெரிக்க – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை கோரும் ஐநா தலைவர்!

கடனில் சிக்கித் தவிக்கும் வளரும் நாடுகளுக்கு உதவ ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கோரியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் மூன்று அண்டை நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாயண நிதியத்தின் கடனை எதிர்ப்பார்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 பாதிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சேதங்களில் இருந்து மீள்வதற்காக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கடந்த சில மாதங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனை கோரி வருகின்ற நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு இந்தோனேசியாவிடம் இருந்து ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

”நேரடி வரிகளை உயர்த்த வேண்டும் – கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்”

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரியில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே அசர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட அறிக்கை வருமாறு,

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த (அக்டோபர் 07) கூட்டத்தில், எமது நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவொன்று பங்குபற்றியது. அதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.

75க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகவும், சூம் தொழில்நுட்பம் மூலமாகவும் கலந்து கொண்டனர். இலங்கைக்கு கடன் வழங்கிய ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 03 பிரதான நாடுகளுடன், பொதுவான ஒரு இடத்தில் கூடி, சலுகை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இச்சந்திப்பில், பொதுவான மேடை ஒன்றின் அவசியத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் சுட்டிக்காட்டியிருந்தன. இந்தியாவும் சீனாவும் இது தொடர்பில் ஆராய்ந்து பதில் அளிப்பதாக அறிவித்துள்ளன. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் பல நாடுகள் கலந்து கொண்டன. குறிப்பாக அமெரிக்க திறைசேரியின் உதவிச் செயலாளர் இங்கு வருகை தந்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து அங்கு எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதால் தான் எமக்கு இவற்றை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தொடர்பில் முக்கிய விடயமொன்று இருக்கிறது. 2015ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தபோது ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தில் மிகையிருக்க வேண்டும் என எமக்குக் கூறப்பட்டது. அந்த மிகையை 2017-2018ல் காண்பித்தோம். எனினும், 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் அது குறைவடைந்தது. எனினும், அதனால் பாரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஆரம்ப வரவு செலவுத்திட்டத்தில் மிகையிருப்பதால் எமது வருவாயை அதிகரிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.
அந்த சமயம் நமது வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% – 15% வரை இருந்தது. ஆனால் இதை படிப்படியாக 17%-18% ஆக அதிகரிக்க முடியுமென்று நாம் அறிவித்தோம்.
எனினும், 2019 நவம்பர் மாதமளவில் நமது நாட்டில் வரிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. இதனால் அரசின் வருவாய் 8.5% மாக குறைவடைந்தது. ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டதால் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முடியாது என அறிவித்தது.

அந்த ஆண்டு சுமார் 600, 700 பில்லியன் ரூபாய்களை இழக்க நேரிட்டது. அதே நேரத்தில், நாங்கள் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணிகளாக அமைந்தன.

நமது ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு அறிவித்திருந்தது. அவர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை என்பதால் நாங்கள் அதற்கு உடன்பட்டிருந்தோம்.

அடுத்து, நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5% இல் இருந்து 14.5% ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனை ஒரேயடியாகச் செய்வது சாத்தியமில்லை. 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருமானத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

முதலில் நமது வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். வருமானம் குறைந்ததால்தான் பணம் அச்சடிக்கப்பட்டது.கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 70% – 75% வரை உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பணவீக்கம் அதனை விடவும் அதிகரித்துள்ளது.

இவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று வருமானத்தை ஈட்டவும் வேண்டும். எனவே, இந்த பேச்சுவார்த்தைகளின் போது புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, ஏற்றுமதி பொருளாதாரம் உள்ள நாடுகளில் வரி செலுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் எமது பிரதான ஏற்றுமதிப் பொருளாதாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் என அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தேயிலை, தேங்காய், இறப்பர் போன்றவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.
எனவே, அந்த இலக்கை நோக்கி செல்வதற்கு வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்தோம். ஏற்றுமதி துறை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. அவ்விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பில் விளக்கமளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.

இரண்டாவது விடயம் தனிநபர் வரி. நாம் பெரும்பாலும் மறைமுகமாகவே வரியைப் பெற்றிருந்தோம். நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போது நமது நேரடி வரி வருமானம் 20 சதவீதம் ஆகும். 80 சதவீதம் மறைமுகமான வரி வருமானமாகப் பெறப்படுகிறது.

எனினும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளது. நேரடி வரி மூலம் பெறப்படும் வருமானம் 20 சதவீதத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இல்லையேல் எமது இலக்கு வெற்றியளிக்காது என்றும் இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரிச் செலுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே இதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.

இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை.

விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன். எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.