புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம்?

புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன், ஜப்பானிய பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக பிலிப்பைன்ஸிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 8 வருடங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிற்காக ரூ.504 மில்லியன் செலவு

கடந்த எட்டு வருடங்களில் நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் நியமித்த, ஜனாதிபதி ஆணைக் குழுக்களுக்கு 504 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மூலம், இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கோட்டாபய தலைமையிலான அரசின் ஆட்சிக்காலத்திலேல் அதிகபட்சமாக 120 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை இதில் தெரியவந்துள்ளது.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து ஆண்டுகளில், ஐந்துஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்காக 254 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வெளியிடும் இந்த விசேட ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் முடிவுகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, இந்தச் செலவினங்களிற்கு பலன் கிடைத்துள்ளதா என்பதை அளவிட முடியவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது

Posted in Uncategorized

ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படப்போகும் நிலை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள 51/1 தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், இதில் இலங்கைக்கு தோல்வியே கிட்டும் என  ஐக்கிய மக்கள் சக்தி ​தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ​இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அக்கட்சி எம்.பி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலயங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணர்தவனவே கொண்டுவந்துள்ளார். அன்று செய்த அதே சண்டித்தனங்களையே கமல் குணர்தன செய்து வருகிறார் எனவும் கூறினார்.

ரதுபஸ்வலயில் மக்கள் தண்ணீருக்காகப் போராடியபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது யார்? கோட்டாபய ராஜபக்ஷ இல்லையா? அப்படி என்றால் நாளை மக்கள் உணவுக்காக வீதிக்கு இறங்கினால் அவர்கள் மீது அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்துமா? எனவும் வினவினார்.

Posted in Uncategorized

அமெரிக்காவிலிருந்து மீண்டும் உதவிகள்

அமெரிக்காவிடமிருந்து 12 மில்லியன் டொலர் பெறுமதியான வைத்திய நிவாரண உதவிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டுடன் இந்த வைத்திய நிவாரணப் பொருள்கள் கிடைத்துள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்க மனிதாபிமான உதவி அமைப்புகள் என்பன இணைந்து இந்த மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளதுடன், 3 கட்டங்களின் கீழ் சுகாதார அமைச்சிடம் இந்த மருத்துவப் பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் இறுதி கட்ட உதவிப் பொருள்கள் இன்று இலங்கையிடம் கையளிக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சியினருக்கு இந்த நோய் இருக்கிறது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு ஆளுங்கட்சி பதவிகள் இல்லாது இருக்க முடியாதென அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 1994ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு மேலாக நாம் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள்.

இதனால் சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு நோய் ஒன்று இருக்கிறது.  ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், பதவிகள் இல்லாது இருக்க முடியாது. இதுவொரு நோய் எனவும்​ தெரிவித்தார்.

Posted in Uncategorized

”போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்த வேண்டும்”

கடந்த மாதங்களில் போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இந்நாட்களில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில்  கலந்துகொள்வதுடன், வெலிமடை நுகதலாவையில் இன்று நடைபெற்ற செயற்றிட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

நிகழ்வை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதன்போது பதிலளித்த அவர், அவ்வாறானதொரு யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை. போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

அவர்களை சிறையில் அடைத்து , தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும். எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ ​வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது. வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனுமொரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூயமயப்படுத்த வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ்!

கொழும்பின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (01) அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஐ.நா. பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் இலங்கை மீது மேலும ஒரு குற்றச்சாட்டு

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள மக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக ஒரு புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு சந்தித்தார்கள் என்பதை இந்த அறிக்கை விபரிக்கிறது.

தடுத்து வைத்தல் கட்டுப்படுத்தப்பட்ட சட்டத்தால் இலக்கு வைக்கப்படல் மற்றும் இணையங்கள் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அத்துமீறல்கள் அனைத்தும் 2021 மே 1ஆம் திகதி முதல் 2022 ஏப்ரல் 30ஆம் திகதி வரையில் இடம்பெற்றுள்ளன.

இந்த செயற்பாடுகள் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் உள்ளவர்கள் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பதைத் தவிர்த்தனர் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கை கூறியுள்ளது.

பழிவாங்கலுக்கு எதிராக உறுப்பு நாடுகளின் உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதும் பொதுமக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் இல்சே பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளுடனான ஒத்துழைப்பைத் தடுக்கும் வகையில் நீண்ட கால சிறைத்தண்டனை அல்லது வீட்டுக் காவலில் பலர் வைக்கப்பட்டுள்ளனர்.

பல நாடுகளில் தொடர்ச்சியான மற்றும் இதே போன்ற அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

முன்னைய ஆண்டுகளைப் போலவே பழங்குடி மக்கள் சிறுபான்மையினர் அல்லது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறைகளுடன் பணிபுரிபவர்கள் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர்

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்களையும், பெண் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புபவர்களின் பாதுகாப்பை, உறுதிசெய்ய தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபை பணியாற்றுவதாக பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையை சமர்ப்பித்தபோது தெரிவித்துள்ளார்.

இலங்கை,ஆப்கானிஸ்தான்,பஹ்ரைன், பங்களாதேஸ், பெலாரஸ், ​​பிரேசில், புருண்டி, கெமரூன், சீனா, கியூபா, சைப்ரஸ், ஜனநாயகக் குடியரசு கொங்கோ, ஜிபூட்டி, எகிப்து, குவாத்தமாலா,இந்தியா, இந்தோனேசியா, ஈரான் இஸ்லாமிய குடியரசு, இஸ்ரேல், கஸகஸ்தான், லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசு, லிபியா, மாலத்தீவு,மாலி, மெக்சிகோ, மொரொக்கோ, மியான்மர், நிக்கரகுவா, பிலிப்பைன்ஸ், ரஸ்ய கூட்டமைப்பு, ருவாண்டா, சவுதி அரேபியா, தெற்கு சூடான், சூடான், பாலஸ்தீனம், தாய்லாந்து, துர்க்மெனிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், பொலிவேரியன் குடியரசு வெனிசுலா, வியட்நாம் மற்றும் ஏமன் போன்ற நாடுகளை பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களின் கனவுகளை நனவாக்க அமெரிக்கா உதவும்-அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்

இலங்கையர்களுக்கு இது ஒரு சவாலான நேரம் என தெரிவித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung), இலங்கையில் உள்ள மக்களுக்காக அமெரிக்கா தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் புதிய அமெரிக்க மையத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung), இந்த சவாலான நேரத்தில் அமெரிக்கா இலங்கை மக்களுக்காக தொடர்ந்து முதலீடு செய்யும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த  இடம் தன்னுடையது அல்ல என்றும் இது உங்கள் இடம் என்றும் தெரிவித்த அவர், இது உங்கள் கனவுகளை அடைய உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவும் இலங்கையும் நண்பர்கள் என்றும் மதிப்புமிக்க ஜனநாயக நாடுகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த இலங்கை கடும் பிரயத்தனம்-லிப்பைன்ஸில் ரணில் தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபையின் 55 ஆவது வருடாந்த மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இன்று நடைபெற்றது.

கொரோனா தொற்று நிலைமைக்கு பின்னரான உலகின் காலநிலை மாற்றத்திற்கு அமைய, பசுமையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.

மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், வங்கியின் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 68 நாடுகளின் இராஜதந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக்கொள்வதற்கு இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொள்வதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் குழுவின் வர்த்தக அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு இலங்கையின் கடன் வழங்குநர்களும் கடன் பங்குதாரர்களும் ஆதரவளிப்பார்கள் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Ferdinand R. Marcos-ஐ மணிலாவில் சந்தித்தார்.

ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை முன் நகர்த்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

Posted in Uncategorized