ஜுலை 20ம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்!

இன்று நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13ம் திகதி பதவி விலகினால் ஜூலை 15 பாராளுமன்றத்தை கூட்டி அவரது பதவி விலகலை அறிவித்து 19ம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு கோரப்பட்டு ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

முடிவை இறுதி நேரத்தில் மாற்றுவாரா ‘ரிவஸ் மன்னன்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எடுத்த பல தீர்மானங்களை தலைகீழாக மாற்றிய அல்லது “மீளப்பெற்ற” ஜனாதிபதி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ரசாயன உரத்தடை, காலத்துக்கு காலம் அமுல்படுத்தப்படும் அவசர சட்டம், காலத்துக்கு காலம் ஊரடங்குச் சட்டம், பல தடவைகள் வாபஸ் பெறப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் உள்ளிட்ட கோத்தபாய ராஜபக்சவின் தீர்மானங்கள் தலைகீழாக மாறுவது உலக சாதனையாகக் கூட இருக்க முடியும்.

தற்போது அவர் பதவி விலகுவதற்கான திகதியை அறிவித்துள்ளார். அது நாளை மறுநாள் 13ம் திகதியாகும். நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற போதிலும், ஜனாதிபதி பதவி இருக்க எந்த அவகாசமும் இல்லை. ஆட்சியில் அவருக்கு இருந்த தார்மீக சக்தி ஏற்கனவே அவரது காலடியில் இருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் தனது ராஜினாமா குறித்து சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் தனது உடன்பாட்டை தெரிவித்தாரே தவிர இன்னும் எழுத்துமூலம் பதவி விலகவில்லை.

எனவே, ‘ரிவஸ் மன்னன்’ நாளை மறுநாள் தனது ராஜினாமா முடிவை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Posted in Uncategorized

”எதிர்க்கட்சித் தலைவரே பிரதமர்”

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும் போது எதிர்க் கட்சித் தலைவரே மாற்று பிரதமராக கருதப்படுவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்படி தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கவுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இப்போது நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இல்லாத நிலைமையே காணப்ப

பிரதமரின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சீஐடி விசாரணை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கொள்ளுப்பிட்டி பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கடவத மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றிரவு (09) பிரதமரின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பிரவேசித்ததை அடுத்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் இருந்த கலைப் பொருட்கள், மதிப்பு மிக்க புத்தகங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் நேற்று (09) மாலை 6 மணிக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட வகையில் மின்வெட்டு எதுவும் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளைய தினம் (11) விசேட கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை முற்பகல் 10 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க குறிப்பிட்டார்.

நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று மாலை எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை கலந்துரையாடப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து மீட்கப்பட்ட பணம் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக தகவல்

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட பணம் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த பின்னர் நில நிலைமையை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தீ வைக்கப்பட்ட ரணிலின் பாரம்பரிய வீட்டில் இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இருந்ததாக தகவல்

நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்ரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த கொழும்பு அலரி மாளிகைக்கு அவர் ஒருபோதும் இடம் பெயர்ந்ததில்லை எனவும் உத்தியோகபூர்வ வேலைக்காக அலரி மாளிகைக்கு சென்றாலும், இந்த வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த வீடு பிரதமரால் மரபுரிமையாக பெறப்பட்டு பழைய கட்டிடக்கலைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் ரணிலின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்தது.இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன. இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.பிரதமர் மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த வீட்டில்தான் தனது வாழ்நாளைக் கழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர்கள் சிலர் பதவி விலகினர்!

கமத்தொழில், வனசீவராசிகள் அமைச்சரான மஹிந்த அமரவீர தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கொண்டுவரப்படும் உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக நேற்றிரவு அறிவித்தனர்.

அதேபோல், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார்.

மேலும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்..

புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களினதும் மதத் தலைவர்களினதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது பங்களிப்பை செலுத்த உள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

போரட்டத்தின் போது பலர் காயம்!

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 56 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குகின்றனர்.

பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் -IMF நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிலைமை களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதித்து தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized