அனலைதீவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு

யாழ்.அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம்(04) இடம்பெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனலைதீவில் அமைக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள அனலைதீவு தெற்கு பகுதியில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் “பூமி பூஜை” ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

சாணக்கியமற்ற ஈழத் தமிழர் அரசியல் – யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் ரெலோவின் 11வது தேசிய மகாநாடு இடம்பெற்றது. அதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான, செந்தில் தொண்டமானும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் பேசிய தொண்டமான் குறிப்பிட்ட விடயமொன்று என்னை கவர்ந்தது. அதாவது, போராட்டங்கள் உச்சத்தில் இருக்கின்ற போது நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்பார்கள். அதற்கு எங்களின் ஜயா சௌமியமூர்த்தி தொண்டமான் கூறுவார் – நாங்கள் தோசை சுடுகின்றோம். தோசைக்கல் எங்களுடையதுதான் – அடுப்பும் எங்களுடையதுதான், அடுப்பை எரிக்க பயன்படும் நெருப்பும் எங்களுடையதுதான் (எரிவாயு) வீடும் எங்களுடையதுதான். அதற்காக எங்களுடைய வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு, ஆறுதலாக வந்து தோசையை பார்த்தால் தோசை இருக்குமா?
அப்படித்தான் போராட்டங்களும், போராட்டத்தில் உச்சத்தில் இருக்கின்ற போதே, சிலதை விட்டுக்கொடுத்து எடுக்கக் கூடியவற்றை, எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் நாம் விடயங்களை சாதிக்க முடியாமல் போகும். ஏனெனில் போராட்டத்தின் வேகம் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்காது. தங்கள் ஜயா தங்களுக்கு கற்றுத்தந்த சாணக்கியத்தினால்தான், நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம் என்று தொண்டமான் கூறுகின்ற போது, எங்களுடைய மூத்த தலைவர்கள் என்போர் எங்களுக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத் தந்திருக்கின்றனர் என்னும் கேள்வியே என்னுக்குள் எழுந்தது.

எங்கள் ஜயாக்களும், எங்கள் அண்ணன்களும் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத்தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்? வரலாறு முழுவதும் முன்னோடிகள் விட்டுச் செல்கின்ற வழித்தடங்களிலிருந்துதான், அடுத்த தலைமுறை தனக்கான எதிர்காலத்தை ஆக்கிக்கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்களின் நிலையோ சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகவே தொடர்கின்றது. இதற்கு என்ன காரணம்? ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை தமிழர்களின் மூத்த தலைமுறை விட்டுச் செல்லவில்லை.

இன்று தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமோ, பிச்சை வேண்டாம் ஜயா – நாயை பிடியுங்கள் என்னும் நிலைமையை வந்தடைந்திருக்கின்றது. இதற்காக, நாம் எவரையாவது, குற்றம்சாட்ட வேண்டும் என்றால், நமது மூத்த தலைமுறை முழுவதையும் குற்றவாளிக் கூண்டில், நிறுத்துவதை தவிர வேறுவழியிருக்காது. ராஜதந்திரம் பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் ஒரு கூற்றை கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது நினைவுண்டு. அதாவது, ராஜதந்திரம் என்பது தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் செல்வதல்ல என்பாராம். ஆனால் இன்று தமிழரின் அரசியல் நிலையோ தொடங்கிய இடத்தில் கூட ஆரம்பிக்க முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ராஜதந்திரத்தின் அரிச்சுவடியைக் கூட தமிழ் அரசியல் சமூகம், அறியவில்லை என்னும் முடிவுக்கல்லவா நாம் வரவேண்டியிருக்கின்றது.

நான் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட விடயத்தை இந்த இடத்தில் நினைவுகொள்வது பொருத்தமென்று எண்ணுகின்றேன். அதாவது, போராட்டங்கள் பிழையில்லை ஆனால் நாங்கள் ஆரம்பிக்கும் போராட்டங்களை எப்போது முடிக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரிய வேண்டும் – அவ்வாறில்லாது, நாங்கள் ஆரம்பித்த போரட்டத்தை இன்னொருவர் முடிப்பாரானால், அப்போது எங்களுக்கு சர்வ நாசமே மிஞ்சும். இந்த பின்புலத்தில் நோக்கினால் நமது போராட்டத்தை திருப்பிப்பார்த்தால் நமது கையறு நிலையை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறான அனுபவங்களுக்கு பின்னர் கூட நாங்கள் அரசியல் யதார்த்தங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதுதான் கவலையானது. நாங்கள் உயர்த்திப் பிடிக்கும் சுலோகங்கள் மூலம் மக்களை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சி;க்கின்றோம்? இந்தக் கேள்விக்கான பதில் இல்லாமலேயே, நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கப்பல்கள் வருகின்றன, வெளிநாடு செல்ல விரும்புவோர் அனைவரும் ஏறலாம் என்றால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இதுதான் இன்றைய நிலைமை. மக்களுக்கு நம்பிக்கையை வழங்க முடியாத அரசியல் தலைமைகள், வெறும் சுலோகங்களை உயர்த்துவதில் என்ன பொருளுண்டு?

ஓரு சிறிய இனத்தால் ஆயுத போராட்டத்தில் அதிக காலத்தை செலவிட முடியாதென்று, அன்றைய சூழலிலேயே அரசறியவில் அறிஞர் மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் கூறியிருக்கின்றனர். எனது தேடலில், உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தோடு ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டது. இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்காக நாங்கள் கொடுத்த விலையோ கணக்கிலடங்காது. உண்மையில் அன்றே இந்த உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால், நாங்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காது. இது ஒரு வராலாற்றுப் படிப்பினை.
அமெரிக்க தத்துவஞானியான, ஜோர்ஜ் சந்தயாணாவின் கூற்று ஒன்றுண்டு. அதாவது, வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர். இது க.வே.பாலகுமாரனின் மொழிபெயர்ப்பு. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக அறியப்பட்ட க.வே.பாலகுமாரன் தனது கட்டுரையொன்றில் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் இந்தக் கூற்றை சிங்களவர்களை நோக்கியே பயன்படுத்தியிருப்பார். சிங்களவர்கள் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்னும் தனது பார்வையை நிறுவுவதற்காகவே, அவர் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தக் கூற்று இப்போது யாருக்குப் பொருத்தமானது என்பதை வரலாறு நிரூபித்துவிட்டதல்லவா!
இறுதி யுத்தத்தின் போதான நிலைமைகளை பாவத்தின் சம்பளம் என்று பாலகுமாரன் வர்ணித்த கதையுமுண்டு. ஒரு வேளை, அவர் உண்மைகளை உணர முற்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கம், அனைத்தும் கைமீறிப் போய்விட்டது என்பதை உணர்ந்தே, இந்தியாவை நோக்கிச் சென்றார். இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ராஜீவ்காந்தி படுகொலை ஆகியவற்றுக்காக இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்ததுடன், கடந்தகாலத்தை பின்னுக்குவைத்து, பெருந்தன்மையுடன் தலையீடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்திருந்தார். ஆனால் இன்றோ இவற்றிலிருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத ஒரு குழுவினரோ, தொடர்ந்தும் அரசியல் விடலைகளாகவே தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே விடலைகளாகவே இருக்கலாம் . அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்கள் அறியாமலும் இருக்கலாம் ஆனால் அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுமல்லவா, அனைத்துக்கும் பின்னால் இழுபட்டுச் செல்லுபவர்களாக இருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சாந்தனுக்கான அஞ்சலி நிகழ்வும் அதன் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். நாங்கள் எந்தளவிற்கு வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முடியாத இனமாக இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த பதின்நான்கு வருடங்கள் என்னவெல்லாம் பேசப்பட்டது. சற்று அனைத்தையும் திருப்பிப் பாருங்கள். சர்வதேச அழுத்தங்கள் இலங்கையின் குரல்வளையை நெருக்கப் போகின்றது, இனி அவர்கள் தப்ப முடியாது என்றெல்லாம் பேசப்பட்டது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சென்று வந்த பின்னர். அமெரிக்கா விரைவில் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளது என்றவாறு கதைகள் புனையப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலும் ஏராளமாக பேசப்பட்டது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாருக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் சண்டைகள் இடம்பெற்றன. எதனை எவ்வாறு உள்ளடக்குவது என்று தங்களுக்குள் மோதிக் கொண்டன கட்சிகள். மக்களோ, அனைத்தையும் சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது? சொல்லிக் கொள்ளுமளவிற்கு ஏதாவது நடந்ததா? ஆனால் பதின்நான்கு வருடங்கள் சென்றுவிட்டன.

2012இல் அமெரிக்க அனுசரணையில் இலங்கையின் மீதான பிரேரணை கொண்டுவரைப்பட்டது. இந்தக் காலத்தில் இந்தியா என்றொரு பிராந்திய சக்தி இருப்பதையே சம்பந்தனும் அவரது தலைமையில் இயங்கிய கூட்டமைப்பும் மறந்திருந்தது. ஆனால் ரெலோவின் முயற்சியில் 2022இல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமந்திரன் அதற்கு எதிரான கருத்துக்களையே பொது வெளிகளில் முன்வைத்தார். அவருக்கு அந்த முயற்சியில் ஆர்வமில்லை என்றே தெரிந்தது. முயற்சியில் ஆர்வமில்லையா அல்லது இந்தியாவை நோக்கி மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லையா? ஒரு வேளை மேற்குலக அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசியதால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், ஆறுகட்சிகளின் தலைவர்களது கையெழுத்துடன் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. உண்மையில் பத்துவருட கால, மேற்குலகம் நோக்கிய தமிழர் அரசியல் நகர்வுகளின் தோல்விதான், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்னும் நிலைமையை உருவாக்கியது. 2006இல் பாலசிங்கம் எவ்வாறு வேறு வழிகள் எதுவுமின்றி, இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று சரியாக சிந்தித்தாரோ, அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சிந்தித்தன. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

இந்தியா இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நகர்விலும் இதுவரையில் தமிழர்களால் ஒரு படி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இதுதான் நமது இதுவரையான அரசியல் வரலாறு சொல்லும் உண்மை. இந்த உண்மையை புறம்தள்ளிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் பின்நோக்கியே சென்றிருக்கின்றோம். இனியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் தொடர்ந்தும் இப்படியே ஆதங்கப்பட்டுக் கொண்டு, அவ்வப்போது, சில எதிர்ப்புக்களை காண்பித்துக் கொண்டு, எங்களின் நாட்களை செலவிட்டுக் கொள்வதாகவே எங்கள் அரசியல் மிஞ்சும். காலப்போக்கில் தமிழ் தேசிய அரசியல் என்பது, வெறுமனே, யாழ் குடாநாட்டு அரசியலாகவே சுருங்கிப் போகும்.

நன்றி – தினக்குரல் கட்டுரை

வங்குரோத்து அடைந்த நாட்டுக்கு வறுமை புதிதல்ல – பந்துல குணவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல என்றும், வறிய மக்களின் பாதுகாப்புக்கான நிவாரணமாகவே சமூர்த்தியை போன்ற மூன்று மடங்கு நிவாரணத் தொகையை வழங்கும் அஸ்வெசும வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செலுத்த வேண்டியிருந்த நிலுவைத் தொகையில் 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடித்திருப்பதாகவும் இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. பின்னர் கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டது. அதனால் தற்போது நாடு சுமூகமான பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த நேரத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு கிட்டியதாக காணப்பட்டது. ஆனால் இன்றளவில் டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைந்துள்ளது. அதனால் இறக்குமதிப் பொருட்களுக்கான கொடுப்பனவுகளும் குறைவடைந்திருக்கிறது.

மேலும், பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. நிலுவைத் தொகையின் நடப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது.

மேலும், வட்டி விகிதம் குறைந்துள்ளது. 70% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆக குறைந்துள்ளது. அதனால் பொருட்களின் விலை உயர்வு விகிதமும் குறைந்துள்ளது. அதனால் நாடு பாதகமான நிலையிலிருந்து மீண்டுள்ளது என்றே கூற வேண்டும்.

தற்போதைய புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்தைப் பேண முடிந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அத்தோடு நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குரியாகிவிடும்.

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறை பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல, வறுமை நீங்க நாட்டின் வருமானம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டியது அவசியமாகும். விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் போது, தனிநபர் வருமானம் அதிகரித்து வறுமை குன்றும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், கடந்த கால நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே, சமூர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணந்தை வழங்கும் அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவையில் இருந்த 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று மாதங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படும்.

இவ்வாறான நிதி ஒழுக்கத்தை பேணுவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குள், இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். அதன் பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்a

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் – அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன என்பது ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்கவில்லை.

அவர்களுக்கு ஒரு பையினை கொடுத்துவிட்டு மெழுகுவர்த்தி கொளுத்துவது அவமானம். மைத்திரிக்கு இதன் பின்னணி தெரியும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்குமா? இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது.

குண்டுவெடிப்பின் பின்னணியில் வேறு சிலரும் இருந்தார்கள் என்பதையே நாங்கள் மிக முக்கியமாக வலியுறுத்துகின்றோம்.

அதாவது இதன் பின்னால் சதி உள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறிய கதையும் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம்

மைத்திரி வழங்கிய அந்த அறிக்கை என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

அவ்வாறு மைத்திரி கூறியதாக இருந்தால் ஏன் கடந்த 5 வருடங்களாக அவர் அதனை வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே மைத்திரிக்கு இந்த தகவல் கிடைத்திருக்கவேண்டும் என நாம் நம்புகின்றோம்.

இதற்கு நீதி கிடைக்கவேண்டும் எனில் சுதந்திரமாக செயற்படக்கூடிய ஒரு விசாரணைக்கு அவசியம் தேவை என்பதே எமது நிலைபாடு” என அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்தார்.

வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் – இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் வட மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழலை மையமாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றியும் இந்திய அரசாங்கத்தின் உதவி யுடன் கல்விக்காக மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதில் யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத் தூதுவர் தலைமை அதிகாரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பில் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதனை இன்று (03) மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.

சட்டத்தரணி சந்தீப்த சூரிய ஆராச்சியின் மனுவின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவின் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறினர் முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பின் விடுவிக்கப்பட்ட 3 பேரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் முறை சீர்திருத்தம் எதிர்வரும் தேர்தல்களை பாதிக்காது; ஜனாதிபதி, நீதி அமைச்சர் உறுதியளித்ததாக மனோ தெரிவிப்பு

தேர்தல் முறை சீர்திருத்தம், எதிர்வரும் தேர்தல்களை தொடர்புபடுத்தாது. இவ்விவகாரம் புதிய பாராளுமன்றத்துக்கு ஒத்தி வைக்கப்படும். அது பற்றி புதிய பாராளுமன்றத்தில் கலந்து உரையாடுவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் தனக்கு உறுதி அளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் எம்பி இதுபற்றி ஊடகங்களுக்கு கூறியதாவது,

தற்போதைய விகிதாசார தேர்தல் முறையை மாற்றும் சீர்திருத்தம் தேவையற்றது என்ற நிலைபாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி அன்று முதல் எப்போதும் கொண்டுள்ளது. இதுவே எமது நிலைபாடாக நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவிலும் தொடர்ச்சியாக இருந்துள்ளது.

அன்றைய அமைச்சர், இன்றைய பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தலைமையில் கடைசியாக இடம்பெற்ற தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவில், தேர்தல் முறை சீர்திருத்தம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் ஏற்பட்டது போன்ற தோற்றப்பட்டை அரசாங்கம் காட்ட முயல்கிறது. இது பச்சை பொய்.

பதினாறு உறுப்பினர்களில் சரிபாதி எட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்து விட்டோம். அங்கே ஏற்பட்ட ஒரேயோரு ஏகமனதான தீர்மானம், சட்டத்தை திருத்தி, விகிதாசார முறையில் மாகாணசபைகள் தேர்தல்களை நடத்துவது என்பதாகும். அதையும்கூட அரசாங்கம் செய்யவில்லை.

இந்நிலையில் திடீரென அமைச்சரவையில் தேர்தல் முறை சீர்திருத்தம் வேண்டும் என்று ஒரு நாள், பிறகு இப்போது வேண்டாம் என்று இன்னொரு நாள் தீர்மானிப்பது கேலிக்கூத்து ஆகும்.

இந்நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதியை நான் சந்தித்த போது இது தொடர்பில் தற்போது முன்னெடுப்புகள் இல்லை என்றார். அதேபோல், சில தினங்களுக்கு முன் நீதி, அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சந்தித்த போது அவரும் இதையே எனக்கு தெரிவித்தார். ஆகவே இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வருகிறது.

இந்நாட்டில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் 60 விகிதமானோர் பல மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். எனவே, எமது மக்களை பாதிக்கும் எந்தவொரு அடாத்தான, தன்னிச்சையான தேர்தல் முறை மாற்றங்களையும் நாம் ஏற்க மாட்டோம்.

விகிதாசார முறையை மாற்றாமல் உள்ளக மாற்றங்களை பற்றி வேண்டுமானால் நாம் பேசலாம். இது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தொன்று தொட்டு வரும் நிலைபாடு ஆகும். எதிர்வரும் தேர்தல்களில் பெரும்பான்மை கட்சிகளுடன் உடன்பாடுகள் காணும் போது இதுவும் எமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்.

யாழ் இந்தியத் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட விமானப்படை கட்டளைத் தளபதி இடையே சந்திப்பு

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்றையதினம்(01) இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாண விமானப்படையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயலாற்றக்கூடிய வகையிலான உதவித் திட்டங்கள், பரஸ்பர உதவித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரி ராம் மகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.