சமையல் எரிவாயு வெடிப்பு – இலவச சட்ட உதவி வழங்குவதாக சஜித் தெரிவிப்பு

எரிவாயு தொடர்பான வெடிப்பு மற்றும் தீ விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சட்ட உதவிகள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 600 எரிவாயு தொடர்பான வெடிப்புகள் மற்றும் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“இதுவரை 600-க்கும் மேற்பட்ட எரிவாயு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. நான்கு குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ளனர், ஒரு கணவன் மனைவியை இழந்துள்ளார். இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு? எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு இன்று அரசாங்கத்தால் முறையான தீர்வை வழங்க முடியவில்லை.

எரிவாயு ஊழலில் நம் நாட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் இந்த எரிவாயு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் நாங்கள் இலவச சட்ட உதவிகளை வழங்குகிறோம்.

இந்த நிறுவனங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கும், உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். வெடிப்புக்கு காரணமானவர்கள் பற்றிய தகவல்களை கட்சி தலைமையகத்திற்கு வழங்கியுள்ளோம்.

யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் வசமுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதே வேளை,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் பொருளாதார ரீதியாக ஒரு தேர்தலை நடத்தக்கூடிய நிலையில் அரசாங்கமம் இல்லை – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நிதி அமைச்சர் கடன் கேட்டு இந்தியாவிற்குச் செல்லும் நிலைமை தான் தற்போது நாட்டில் இருக்கின்றது. ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தற்போது நான்கு வருடங்களுக்கு மேலாகின்றது. வடக்கு மாகாணசபையும் கலைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகின்றது. அதேபோன்று அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, சுகாதர நிலைமை என்பன வெளிப்படையான விடயம்.

நாட்டின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நிதி அமைச்சர் கடன் கேட்டு இந்தியாவிற்குச் செல்லும் நிலைமை தான் நாட்டின் தற்போதைய நிலையாக இருக்கின்றது. வரவு செலவுத் திட்ட விவாதம் நடக்கும் போது நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டிய நிலையில் அவர் கடன் கேட்டு வெளிநாடு செல்கின்றார்.

கடந்த வருடம் இந்த நாட்டை விட படுமோசமாக இருந்த பங்களாதேசிடம் இலங்கை அரசாங்கம் கடன் வாங்கியிருக்கின்றது. இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலையோ இன்னுமொரு தேர்தலையோ வைக்கக்கூடிய நிலைமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.

வருகின்ற வருடம் மார்ச் மாதத்துடன் உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்படலாம். சிலவேளைகளில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் உள்ளுராட்சி சட்டத்தின் படி ஒரு வருடங்கள் நீடிக்கக் கூடிய நிலைமையும் ஏற்படலாம் அல்லது உள்ளுராட்சி மன்றங்களையும் கலைகத்து விட்டு உறுப்பினர்களுக்கான நிதியையும் மீதப்படுத்துகின்றோம் என்ற பெயரில் ஆணையாளர், செயலாளர்களுக்குக் கீழ் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கொண்டு வரலாம். எதுவும் எந்த நேரமும் நடக்கும்.

ஆனால் ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் பலமிழந்த நிலையில் இருக்கின்றது. அந்த விடயம் அரசாங்கத்திற்கே தெரியும். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தில் இருக்கின்ற சில அமைச்சர்கள் கூட இதனை ஒத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் அரசாங்கம் தேர்தலுக்குச் செல்லாது.

ஆனால் மகாணசபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று நாங்கள் மிக உறுதியாக இருக்கின்றோம். நேற்றைய தினம் கூட வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகள் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்றும் 13வது திருத்தச் சட்டத்தை இனப்பிரச்சனைக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொண்ட கட்சிகள் கூடிக் கலந்துரையாடியிருந்தோம்.

இந்தியா மூலமாக மகாணசபைத் தேர்தல் தொடர்பில் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும், மாகாண சபைகளுக்கு உரிய முழுமையான அதிகாரங்களைக் கொடுத்து அந்தத் தேர்தலை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினையும் இந்தியாவிற்கு விடுத்திருக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மாகாணசபை முழு அதிகாரங்களுடன் இருக்குமாக இருந்தால் எமது ஊழியர்கள் இவ்வாறு ஐந்து, ஆறு வருடங்கள் தற்காலிய, அமைய தொழிலாளர்களாக வேலை செய்யக் கூடிய நிலைமை இருக்காது. மாகாணசபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் மாகாணசபை நினைத்தால் கூட ஊழியர்களை நிரந்தரமாக்க முடியாது. ஏனெனில் மாகாணசபைகளின் ஊழியர்களுக்கான சம்பளம் மத்திய அரசின் திறைசேரியில் இருந்து தான் வர வேண்டும். திறைசேரியின் அனுமதியைப் பெற்று நியமனம் வழங்கக் கூடிய விதத்திலேயே தற்போதைய மாகாணசபையின் அதிகாரம் இருக்கின்றது.

எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு எவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தனவோ அந்த அதிகாரங்கள் அனைத்தையும் உள்வாங்கி அதிகாரங்களைப் பரவலாக்கி இந்த மாகாணசபைத் தேர்தல் வைக்கப்படல் வேண்டும். அவ்வாறான தொரு நிலைமை வருமாக இருந்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்ப்பு-வவுனியாவில் போராட்டம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா கருத்து தெரிவிக்கையில்,
இன்றைய தினம் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை வவுனியா மாவட்ட செயலகத்தில் சந்திப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் அந்த தகவலின்படி இதுவரை நேரமும் அவர்கள் வருகை தரவில்லை. எந்தவித ஆணைக்குழுக்களும் தேவையில்லை, உள்ளக விசாரணைகளும் தேவையில்லை சர்வதேச விசாரணையே தேவையென 12 வருடமாக போராடி வருகின்றோம்.
எத்தனையோ ஆணைக்குழுக்கள் வந்தும் பதிவுகளை மேற்கொண்டு செல்கிறார்களே தவிர, எந்தவிதமான நீதியும் வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக அதே வேலையை தான் செய்கின்றார்கள். எங்களுக்கு நீதியே கிடைக்க வேண்டும்” என்றார்.
Posted in Uncategorized

வடக்கு ஆளுநர் தலைமையிலான கூட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு – சிறிதரன் வெளிநடப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனை காரணமாக தான் வெளியேறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேலாக இந்த கோரிக்கை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து தாம் அந்த கூட்டத்தில் இருந்து இடைநடுவே வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சம்பூர் இளைஞன் விடுவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் (வயது 28) என்பவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செளியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.

மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த நபர் மாவீரர் நாளை முன்னிட்டு கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக 27.11.2020 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் திருகோணமலையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நானாட்டான் பிரதேச சபையின்  பாதீடு குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது!

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம்,   தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால், குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த சபை அமர்வு, தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு கூட்டம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. ஆனாலும் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம் பெற்றது.

இதன்போது நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மேலதிகமான ஒரு வாக்கினால் 9 வாக்குகள் பெற்று நிறைவேறியுள்ளது.

அதாவது, தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்களாக 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அந்தவகையில் தவிசாளரின் மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது.

குறித்த வரவு- செலவு திட்டத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உதய சூரியன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஈ.பி.டி.பி.கட்சி உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Posted in Uncategorized

யாழ். மாநகர சபை அரசின் கீழ் செல்லும் நிலை ஏற்படும் – எச்சரிக்கின்றார் அனந்தி

தமிழ்த் தேசிய அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். நகரை ஒரு அழகிய நகரமாக கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தபோதும் வடக்கு மாகாண சபையினால் அது முடியாது போனது என அவர் குறிப்பிட்டார்.

தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நகரை அழகாகக் கொண்டு வருவதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தனிப்பட்ட அல்லது அரசியல் கட்சி ரீதியான காழ்ப்புணர்ச்சி காரணமாக நல்ல விடயங்களை செய்வதற்கு தடையை ஏற்படுத்தக் கூடாது என அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

எனவே மீண்டும் ஒருமுறை வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின் பக்கம் சென்றுவிடும் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளார்.

இதனிடையே, ஆளும் கட்சியின் கூட்டம் அலரிமாளிக்கையில் நடைபெறுகின்றது. அதனை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்தி​க்கொண்டிருக்கின்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

சாணக்கியன்,சுமந்திரன் எம்.பிக்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது – செல்வராசா கஜேந்திரன்

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை  ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர்  சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என   என பாராளுமன்ற உறுப்பினரும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான  செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  அலுவலகத்தில்   இன்று   இடம்பெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது

தமிழ் தாயகத்தில் இடம்பெறுகின்ற பௌத்தமயமாக்கம் சிங்கள மயமாக்கம் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தாவிடின் தமிழ் தேசத்தின் இருப்பினை நாங்கள் பாதுகாக்க முடியாது என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறான விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசத்தின் இறைமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போன்று ஒரு சுயாட்சி எட்டப்பட வேண்டும்.இவ்வாறு இல்லாமல் வெறுமனே வடக்கு கிழக்கினை இணைப்பதன் ஊடாக மாத்திரம் இந்த குடியேற்றங்களையோ அல்லது பௌத்த மயமாக்க விடயங்களையோ தடுத்து நிறுத்த முடியாது.

ஏனெனில் அதிகாரம் முழுவதும் அவர்களது (அரசு) கைகளிளே உள்ளது.அதே வேளை வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தாலும் அங்கு ஆளுநருக்கு தான் அதிகாரம்.அதே போன்று அந்த ஆளுநருக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்கள் ஆளுநரின் கட்டளை படி தான் நடப்பார்கள்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபையில் கூட முதலமைச்சரின் செயலாளரையும் ஆளுநர் தான் நியமிப்பார்.அங்கே சகல கட்டுப்பாடுகளும் ஆளுநரின் கீழ் தான் இருக்கும்.ஆகவே மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கருத்துக்களை கூற முடியும்.
ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஒரு போதும் சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாது.இது 1987 1988 ஆண்டுகளில் இருந்து மாகாண சபை உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இந்த மாகாண சபை நடைமுறையில் தான் இருக்கின்றது.இச்சபை இணைந்தும் இருந்தது.குடியேற்றம் அந்த வேளையிலும் இடம்பெற்றிருந்தது.அப்போது ஆயுதப்போராட்டத்தினால் குடியேற்றங்கள் தடுக்கப்பட்டு கொண்டிருந்ததே தவிர இந்த மாகாண சபையின் நிர்வாகத்தின் ஊடாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.இது தான் உண்மையான விடயம்.சாணக்கியன் எம்.பி  மக்களை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற ஒரு விடயமாகும்.
என்னை பொறுத்தமட்டில் அவர்கள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி வந்தமை வரலாறு.2015 ஆண்டு எமக்கு கடைசி சந்தர்ப்பம் ஒன்றினை தாருங்கள் என்று கூறினார்கள்.அதாவது வடக்கு கிழக்கு இணைந்த  தாயகத்தில் ஒரு சமஸ்டி தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் கூறினார்கள்.அதே போன்று 2016 ஆண்டு இறுதிக்குள் யுத்த குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று கூறினார்கள்.மக்களை அதனை நம்பி பெருவாரியாக வாக்குகளை இவர்களுக்கு வழங்கி இருந்தார்கள்.வென்ற மறு வாரமே சுமந்திரன் எம்.பி சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என்று  கூறினார்கள்.ஜெனிவாக்கு சென்று உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார்கள்.இப்படி இவர்களது ஏமாற்றுக்களை தேர்தலை மையப்படுத்தி செய்கின்றார்கள்.இவர்களது இவ்வாறான நாடகங்களை மக்களும் அறிவார்கள்.முழுக்க முழுக்க ஏமாற்றும் விடயங்களே இவர்களிடம் உள்ளன.மக்கள் இவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
Posted in Uncategorized