டீசல் கிடைக்காவிடின் முடக்கம் நீடிக்கும் – ரணில் விக்கிரமசிங்க 

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குள் இலங்கையால் கோரப்பட்ட டீசல் கிடைக்கவில்லை என்றால், ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையால் டீசலுக்கு பணம் கொடுக்க முடியாததால், நாட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அறிந்ததாகக் கூறிய அவர், அரசாங்கம் ஏற்கெனவே டீசலுக்கு பணம் செலுத்திதால் நாட்டிற்கு டீசல் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 க்குள் டீசல் வரவில்லை என்றால், அரசாங்கம் முடக்கத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்

சர்வதேச வர்த்தக சபையுடன் ஒன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்தார்.

ஊடக அறிக்கையின்படி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சரிடம் கடன் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு கோரியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பொதுவாக அவ்வாறு செய்யாவிட்டாலும், இலங்கை வெளியுறவு அமைச்சரின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குழந்தைகள் பிறந்தவுடனேயே அடையாள அட்டை

இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த யோசனையை முன்வைப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழு கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

Posted in Uncategorized

கட்டுநாயக்கவில் நாளை முதல் பரிசோதனைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட பிசிஆர் பரிசோதனை வசதிகள் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இன்னும் இயங்கவில்லை என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சனிக்கிழமை முதல் விரைவான பரிசோதனை வசதி கிடைக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்த போதிலும், விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்ந்து ஆய்வகங்களுக்கு அறிக்கைகளைப் பெற அனுப்பப்படுகின்றன.

எவ்வாறாயினும், தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, நாளை (28) க்குள் இந்த மையத்தில் மாதிரிகளின் பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் – இராணுவ தளபதி

நாட்டை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, தேவையான வழிகாட்டுதல்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, விவசாயம், பொதுச் சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53% பேருக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், 30 வயதுக்கு மேற்பட்ட 98% பேருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஒரு டோஸைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் எம்.பி.க்கள் முறைப்பாடு

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள்.

இதற்கமைய சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

ஞானசார அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது.

எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு ஐ.சி.சி.பி.ஆர் (ICCPR )சட்டத்தின்கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

Posted in Uncategorized

தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயை அழைத்துவந்தது எதற்காக – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கரும்புள்ளி ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் சில நாட்களாக இலங்கையிலே குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பெயர் அடிபட்டவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்து பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திலே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் இணைந்து அவரது கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

தகவல்களின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நிறை வெறியுடன் சென்று தமிழ் அரசியற் கைதிகளைத் தன் முன் முழந்தாழிட வைத்து தனது கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லெஹான் ரத்வத்த கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது, அவருடன் இணைந்து சந்திப்பை நடத்தியது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே பாhர்க்கின்றேன்.

லெஹான் ரத்வத்தயின் தகப்பனாhர் அனுரத்த ரத்வத்த நான் பாராளுமன்றத்திலே இருந்த 1989ம் ஆண்டு காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலே நான் நினைக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே பிரேமதாசாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு கேட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை நேரடியாகச் சென்று சந்தித்தவர்.

தந்தை தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் மகன் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு தமிழ் அரசியற் கைதிகளை அவமானப்படுத்துகின்றார்.

2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கூட கண்டியிலே பதினொரு முஸ்லீம் இளைஞர்களைச் சுட்டுக் கொண்ட சம்பவத்தில் தகப்பன் மகன் இருவரும் சம்பந்தப்பட்டவர்களாகத் தகவல்கள் இருக்கின்றன. அந்த பரம்பரைச் செயல்களினூடாவே அரசியல் நடத்துபவர், தற்போது தமிழ் அரசியற் கைதிகளைத் தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பாதணியை நக்க வைத்துள்ளார்.

நான் பொதுவாக அரசியல்வாதிகளைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பவன் அல்ல. ஆனாலும் நானும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து, அதனூடாக அரசியலுக்குள் வந்தவன் என்ற அடிப்படையில் எனது இரத்தம் கொதிக்கின்றது. அதனால்தான் எனது கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றது.

மேற்சொன்னவாறு எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள். லொஹான் ரத்வத்த ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிவு அரசியல்வாதி. அந்தக் கழிவு அரசியல்வாதியை மட்டக்களப்பிற்குக் கொண்டு வர வேண்டாம்.

அவருக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்பவர்கள் இருவர். ஒருவர் பொலிஸிற்குப் பொறுப்பானவர். சரத் வீரசேகர கூறுகின்றார். அவர் கையில் வைத்திருந்தது அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கியாம், அனுமதிப்பத்திரம் வைத்துள்ள துப்பாக்கி என்றால் கொலை அச்சுறுத்தல் விடலாமா? இல்லை கொலை தான் செய்யலாமா?

அவருடன் இணைந்து லொஹானுக்கு ஆதரவு கொடுக்கும் மற்றையவர் விமல் வீரவன்ச. இலங்கையில் முதற்தர இனத்துவேசி. அவர் சிறைச்சாலை அமைச்சராக இருந்து செய்த குற்றத்திற்காகவே அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். அவர் வகிக்கும் ஏனைய பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டாம் என்கின்றார். அங்கும் ஏதாவது நடக்க வேண்டும். அதன் பின்னர் தான் அதிலிருந்தும் அவரை இராஜினாமா செய்ய வைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் நீதி அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே சம்மந்தப்பட்டவர்களிடமும், சம்மந்தப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றார். ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அவர்களது தலைமையில் இந்தச் சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பதற்கான குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த இராஜாங்க அமைச்சரை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து மாலை அணிவித்து நீங்கள் அவரை நல்லவராகக் காட்ட முற்படுகின்றீர்கள்.

இது மாபெரும் தவறு என்பதுடன், பன்றியுடன் சேரும் கன்றும் பவ்வி அருந்தும் என்ற பழமொழிக்கேற்றால் போலான வேலையையே செய்துள்ளீர்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திலும் செய்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை

சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை  முன்வைத்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின்  34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல்.

இனப் படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல்.

இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல்.

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்காக ஈடுசெய் நீதி கிடைப்பதை உறுதி செய்தல்.

ஈடு செய் நீதி கிடைப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த  5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது.

அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திலீபனின் நினைவேந்தல்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான  தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தனது குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது.

ஆனால், தமிழர்களான நாம் தியாகி திலீபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஞ்சலித்தமைக்காக, தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறாக இராணுவமும் பொலிஸாரும் நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

அந்த நினைவு கூர்தல் நிகழ்வு பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பங்காளிகள் எனப் பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை நினைவில் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் தமிழர் என்பதற்காக அரசாங்கம் வேறுபட்ட அணுகுமுறை வாயிலாக எமது நினைவுகூரலைத் தடுக்கின்றது என்பதே பிரச்சினை.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்தின் உள்நோக்கத்தினை சட்டம் ஒழுங்கு என நடைமுறைப்படுத்துகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறித்த குழு கலந்துரையாடவுள்ளது.

குறித்த குழு இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

Posted in Uncategorized