அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள உயரதிகாரி உயர்மட்டத்தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருப்பதுடன் நாட்டின் உயர்மட்டத்தலைவர்களை பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

கெல்லி கெய்டர்லிங்கின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி மார்ட்டின் கெல்லி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அதில் இலங்கைக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளரை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், கெல்லி இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் உயர்மட்டத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் தெற்று மற்றும் மத்திய ஆசிய விவகாரப்பணியகத்தின் பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பொது இராஜதந்திர துணைச்செயலாளராவார்.

கடந்த 2016 – 2019 ஆம் ஆண்டுவரை உருகுவே நாட்டிற்கான அமெரிக்கத்தூதுவராகவும் 2019 – 2021 ஆம் ஆண்டுவரை தேசிய போர்க்கல்லூரியில் பிரதிக்கட்டளைத்தளபதியாகவும் சர்வதேச விவகார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள அவர், நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கிப்பயணிப்பதற்கான பங்களிப்பை வழங்கிவரும் ‘குட் மார்க்கெட்’ முயற்சியாண்மையின் இணை ஸ்தாபகரை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.