மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவவர்களின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமையை அரசு துக்க நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் அவசர கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும். இதற்காக தமிழர்கள் அனைவரும் எதிர் வரும் மூன்று நாட்களுக்கு துக்க தினம் அனுஸ்டிக்க வேண்டும்.
யுத்த காலத்தில் இன, மத , மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளை வழங்கியவர் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.
ஆண்டகை அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று (1)அதிகாலையில் இயற்கை எய்தினார். அவரது இழப்பானது எமது தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
ஆயர் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார். இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என்றால் அது மிகையாகாது.
யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர். குhணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் அரசியல் கைதிகளுக்கும் ஓடி ஓடி உழைத்தவர்.
தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதியான பற்றோடு இருந்தவர்.
இன்று அவர் எம்மை விட்டு பிரிந்து உள்ளார.; ஆகவே எமது ஆயரின் ஆன்மா சாந்தி அடைவதற்காக அனைத்து மக்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் .
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் இறுதி நல்லடக்க நாளான திங்கட்கிழமையை (05) ஒரு துக்க நாளாக அறிவிக்கும் படி கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளேன்.
பிரதமர் ஆயரை நன்கு அறிந்தவர். அந்த வகையில் எதிர் வரும் திங்கட்கிழமையை துக்க நாளாக அறிவிக்க வேண்டும்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் பௌத்த மத தலைவர் ஒருவர் மரணித்த போது அவரது இறுதி அடக்க நாளை துக்க நாளாக அரசு அறிவித்து இருந்தது.
அதே போன்று மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி அடக்க நாளான திங்கட்கிழமையை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும். குறித்த கோரிக்கையை பிரதமரிடம் முன் வைத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.