நானாட்டான் பிரதேச சபையின்  பாதீடு குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது!

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம்,   தலைவர் உட்பட 8 உறுப்பினர்களின் வாக்குகளினால், குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியுள்ளது.

நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த சபை அமர்வு, தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு கூட்டம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. ஆனாலும் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம் பெற்றது.

இதன்போது நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், மேலதிகமான ஒரு வாக்கினால் 9 வாக்குகள் பெற்று நிறைவேறியுள்ளது.

அதாவது, தலைவர் உள்ளிட்ட 7 உறுப்பினர்களும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்களாக 8 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். அந்தவகையில் தவிசாளரின் மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது.

குறித்த வரவு- செலவு திட்டத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உதய சூரியன் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 7 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். ஈ.பி.டி.பி.கட்சி உறுப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றுள்ளது.