வன்னி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு தினங்களிலும், நேரங்களிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அட்டவணைப்படுத்திக்கூட்ட நேர சூசி தயாரிப்பதால் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்று மாலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும்,
வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு தங்களுடன் இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் வவுனியா மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு தினங்களிலும், நேரங்களிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அட்டவணைப்படுத்திக்கூட்ட நேர சூசி தயாரிப்பதால் பல்வேறு சிரமங்களை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர் நோக்குகின்றனர்.
அவசியமாகவும், தேவைகள் உணர்ந்தும் கலந்து கொள்ள வேண்டிய கூட்டங்களில் எம்மால் பங்கேற்க முடியாமையால் நாம் புறக்கணிக்கப்படுவதாக, அந்நியப்படுத்தப்படுவதாக உணர்கின்றோம். பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் எம் மீது கூட்டங்களைத் தவிர்ப்பதாக, குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.
இது எமக்கும் பொது மக்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் செயற்பாடாகக் கருதுகின்றோம். அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரப் போட்டியாலோ அல்லது முறையான ஒழுங்குபடுத்தலின்மை காரணமாகவோ இத்தவறுகள் நடை பெற்றுக்கொண்டு வருகின்றன.
ஒவ்வொரு பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்குத் தீர்வுகள் எட்டப்படும் சந்தர்ப்பங்களும் இதனால் மறுக்கப்படுகின்றன.
இதனால் அரசின் எதிர்க்கட்சி வரிசையின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் திட்டமிடப்பட்டோ, இல்லாமலோ பொது மக்களுக்காகப் பேசுவதற்கும், தீர்வுகள் பெற்றுக்கொடுப்பதற்குமான எமது உரிமைகளுக்குத் தடை போடப்படுவதாக உணர்கின்றோம்.
உதாரணமாகக் கடந்த பங்குனி மாதம் 2ஆம் திகதி வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பகல் 1.30 மணிக்கும், சம காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டமும் வெவ்வேறு தலைமைகளின் கீழ் நடைபெற்றது. ஏதாவதொரு கூட்டம் எம்மால் தவிர்க்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் 27.04.2021 அன்று காலை 09 மணிக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது தங்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனதும் இணைத் தலைமையிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அதே தினத்தில் அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தவறுகளுக்குக் குறிப்பிட்ட குழுக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களா, அரசாங்க அதிபர்களா, பிரதேச செயலாளர்களா காரணம் என்பதை எம்மால் அறிய முடியாமல் இருக்கின்றது.
அரசியல் தவறுகளா, நிர்வாக தவறுகளா என்பதனை நீங்கள் கண்டறிந்து அனைத்து பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளான நாம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இணைத்தலைவர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுடன் சுமூகமான முறையில் கலந்தாலோசித்து சீரான ஒழுங்கு நிரல் படுத்தல்களுடன் ஏற்படுத்தித் தருவது தங்களின் கடமையெனக் கருதுகின்றேன்.
உடனடிக் கவனமெடுத்து தவறுகள் தொடராதிருக்கவும், குழுக்கூட்டங்களின் நோக்கங்கள் பயனடையும் விதத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார், வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.