வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இழந்தது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை இழந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரு தடவைகள் தோல்வியடைந்தது. இதனையடுத்து, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

தமிழ் கூட்டமைப்பு சார்பில் சோ.சத்தியேந்திரனும் சுதந்திரக் கட்சியின் த.பார்தீபனும் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இருவரும் தலா 12 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

சபையின் 26 உறுப்பினர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் பிரசன்னமாகவில்லை.