ஒரே நோக்கத்திற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஓரணியாக கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக அணி திரண்டுள்ளனர்.
தொடர்ச்சியாக 5 நாட்களாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியே இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, போத்தல ஜயந்த, சிவராம், நிமலராஜன், கீத் நொயார் உள்ளடங்கலாக கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதி செயலத்திற்கு முன்பாக அவர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் இளைஞர், யுவதிகள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து ஆரம்பித்த இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் புதிய சிந்தனைகளுடன் பிறிதொரு பரிமாணத்தைக் கண்டுவருகின்றது.
அந்தவகையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டது.
இவ்வாறு கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவிரவாக இன்று 5 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சி போராட்டம் தொடர்கின்றது.