பெளத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டோம் – விடுதலையின் பின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக அதே சமயம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்திலே நாங்கள் பங்கெடுத்திருந்த போது எங்களில் ஐவரை தேடித் தேடி கைது செய்தனர்.என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் விடுதலையின் பின் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கைதாக பொலிசாரின் இந்தக் கைது அமைந்துள்ளது.

குறித்த பௌத்த பன்சலையை நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுடைய காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்து அடாத்தாக இராணுவப்பலத்துடன் தாங்கள் அதனை ஆட்சியுரிமை செய்து முகாமை செய்கின்ற நிலமையிலே நாங்கள் எங்கள் மக்களின் காணிக்காக நீதியுரிமை வேண்டிப் போராடிய நிலையில் கைது செய்யப்படுகின்றோம். கௌரவ நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கியதாகவும் சொல்லி இருந்தார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமில்லாமல் ஜனநாயக அகிம்சை வழியிலே நாங்கள் போராடி இருந்தோம். இலங்கையிலே பௌத்த சிங்கள பேரினவாதம் தொடர்பில் கடந்தகாலங்களிலே கௌரவ நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைக் கூட பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை. அது ஒரு அப்பட்டமாகவே தெரிந்த விடயம். குருந்தூர்மலையிலே பொலிசாரை அமுல்படுத்துமாறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்று வெவ்வேறு பட்ட விடயங்களின் அடிப்படையிலே பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை குறைந்த பட்சமேனும் நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்த இடத்தில் அமைதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து ஜனநாயக ரீதியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். இந்தக் கைதுகளின் போதான நடவடிக்கைகள் என்பது எங்களின் பாதுகாபைஇ அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் செயல்வடிவம் அளிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.