எனது பதவி நீக்கம் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் – சுசில் பிரேமஜயந்த

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.

மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டமை பெரியதொரு விடயமல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமயந்த குறிப்பிட்டார்.

மேலும் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரை நீக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு உள்ளது.

எனவே அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றாலும் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஜயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நேற்று காலை வருகை தந்து வெளியேறுகையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன ?

பதில் ; தொலைநோக்கு கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கபபட்டுள்ளேன் என்பதை அறிந்துக் கொண்டேன்.இது பெரியதொரு விடயமல்ல.2000ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன் அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றது.

3 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன்.நான் சட்டத்தரணி நாளை முதல் தொழிற்துறை நடவடிக்கையில் ஈடுப்படுவேன்.

கேள்வி ; பதவி நீக்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா ?

பதில் ; இல்லை பதவி நீக்கப்பட்டதாக காலையில் ( நேற்று) ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டேன்.நிறைவேற்று துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விரும்பிய ஒருவரை பதவிக்க நியமிக்கவும்,பதவி நீக்கவும் முடியும்.பதவி நீக்கத்திற்கான காரணம் கூற வேண்டிய அவசியம் தேவையில்லை.

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?

பதில் ; கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் என்னிடம் மரக்கறிகளின் விலை வாழ்க்கை செலவு உயர்வு குறித்து வினவினார்கள்.பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1200 ரூபாவிற்கு விற்கப்படுகிறது அதற்கான காரணம் என்ன என்று வினவினார்கள்.விவசாயத்துறை அமைச்சு தோல்வி,விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை தோல்வி என மக்களின் தரப்பில் இருந்து கருத்துரைத்தேன்.

கேள்வி ; அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள் .அவர்கள் ஏன் பதவி நீக்கப்படவில்லை ?

பதில் ; நான் சந்தையில் குறிப்பிட்ட விடயம் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.கல்வி தகைமைக்கு அமைய நலன்புரி தொழிலாளராக முடியாதவர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றி தெரியாது.

கேள்வி ; உங்களை பதவி விலக்கி அரசாங்கம் எதனை செய்ய போகிறது ?

பதில் ; அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்ட அரசியல்வாதியாக இல்லாமலிருக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சிரேஷ்ட அரசியல்வாதி.அரசியலில் எனக்கான கடமையினை முறையாக நிறைவேற்றியுள்ளேன்.பதவி நீக்கம் எதிர்கால அரசியலுக்கான ஆசிர்வாதமாக அமையும்.

கேள்வி ; ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்த்தீர்களா ?

பதில் ; அவ்வாறு தீர்மானம் எடுக்காமலிருந்தால் தான் பிரச்சினை.தற்போதைய பொருளாதார முகாமைத்துவத்திற்கமைய நாடு எதனை நோக்கி செல்கிறது என்பதை அறிய முடிகிறது.அது தொடர்பிலும், மக்கள் தொடர்பிலும் கருத்துரைப்பது அவசியமாகும்.மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவே மக்கள் எம்மை தெரிவு செய்கிறார்கள்.மக்களுக்காகவே கருத்துரைத்தேன்.

கேள்வி ; எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும்.

பதில் ; அரசியலில் இருந்து நான் புறக்கணிக்கப்படவில்லை.1991ஆம் ஆண்டு கோட்டை நகரசபையில் இருந்து சுதந்திர கட்சி ஊடாக எனது அரசியல் பயணம் ஆரம்பமானது.கூட்டணியின் செயலாளராக 11 வருடகாலம் பதவி வகித்துள்ளேன்.மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தில் கூட்டணியை ஒழுங்குப்படுத்தியுள்ளேன்.தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன்.ஒரு முறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.என்றார்.

பொது இணக்க ஆவணம் தயாரிக்க தமிழ்ப் பேசும் கட்சிகள் உடன்பாடு!

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளை ஒன்றுபட்டுப் பிரதிபலிக்கும் பொது ஆவணம் ஒன்றை மேலும் காலம் தாழ்த்தாமல் விரைந்து தயாரித்து முடிப்பது என்ற இணக்கப்பாட்டுக்கு தமிழ்ப் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் வந்துள்ளனர்.

தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் அவரின் இல்லத்தில் நேற்று (31) மாலை 6 மணி முதல் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), மனோ கணேசன் (தமிழ் முற்போக்குக்குக் கூட்டணி), எம்.ஏ.சுமந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ),தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்கள் வருமாறு,

“ஐக்கியமாக நாங்கள் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் நம் அனைவருக்கும் இடையில் ஒத்த நிலைப்பாடு இருந்தது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. நாம் ஒன்றுபட்டு செயற்படுவது முக்கியம் என எல்லோரும் வலியுறுத்தினர்.

எல்லாத் தரப்பினருக்கும் இருக்கும் கரிசனைகளைக் கருத்தில் எடுத்து, இந்த ஆவணத் தயாரிப்பை வெகுவிரைவில் ஓர் இணக்கப்பாட்டுடன் நாம் முடிவுக்குக் கொண்டு வந்து, அதை வெளிப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் காலம் கடந்தாமல் துரிதமாகப் செயற்படுவதற்காக இன்று (1) முற்பகல் 11 மணிக்கு சுமந்திரன் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் சிலர் திரும்பவும் கூடி இந்த ஆவணத்தை இறுதி செய்யும் செயற்பாட்டை முன்னெடுக்கத் தீர்மானித்து உள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் மீண்டும் இந்தியா செல்கிறார் பசில்

விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பூகோள மாநாட்டிற்காக இந்தியா செல்லும் நிதியமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக உரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது டிசம்பர் முதலாம் திகதி பசில் ராஜபக்ஸ இந்தியா சென்றிருந்தார்.

இந்த விஜயத்தின்போது திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையின் நவீனமயமாக்கல் , எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள நான்கு நிவாரணங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும் நடைமுறையே இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆலயத்துக்கு சால்வையை அணிந்து சென்று வழிபாடுகள் நிறைவடைந்த பின்னர் அதனை பை ஒன்றிலிட்டு வழங்கப்பட்ட இடத்திலுள்ள பெட்டியில் மீள வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இளஞ்செழியன் வடக்கிற்கு இடமாற்றம்!

அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

பஷில் பிரதமரானால் ஆளும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்படும் – வாசுதேவ நாணயக்கார

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடம் முதல் முறையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். அவ்வாறு நிகழ்ந்தால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும் என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த 2 வருடகாலமாக நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இரண்டு வருடங்களும் கொவிட் தாக்கத்துடன் நிறைவடைந்தன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கொவிட் தாக்க சவாலுக்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளோம்.இவ்வருடம் முதல் வாக்குறுதிகள் அனைத்தையும் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாகவுள்ளார். அவர் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு அவசியமில்லை. நாட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தே 2019ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றால் அது கூட்டணிக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தும்.யுகதனவி மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அவருக்கும் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சுமூகமான தன்மை கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கும், பிரதான ஆளும் கட்சிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு இக்காலப்பகுதியிலாவது தீர்வு பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

இந்திய பிரதமருக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது 29ஆம் திகதி கைச்சாத்திடப் படலாம் சுரேந்திரன்

இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்காக தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் தயாரித்த கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் கொழும்பில் தலைவர்கள் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு அனுப்பும் கோரிக்கைகள் அடங்கிய இறுதி செய்யப்பட்ட வரைபை சீர்செய்யும் நோக்கத்திற்காக கூடினர்.
அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சி சமர்ப்பித்த வரைபும் பரிசீலிக்கப்பட்டது. இரண்டு வரைபுகளுக்கு இடையிலும் பெரிய வித்தியாசங்கள் காணப்படாமையினால் தமிழரசுக்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபில் உள்ள விடயங்களையும் சேர்த்துக் கொள்ள இணக்கம் காணப்பட்டது.

அன்று மாலைவரை நடந்த கலந்துரையாடலில் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்திற்கான வரைபை இறுதி செய்தனர். இணக்கம் காணப்பட்ட விடயங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட வரைபு மறுநாள் தலைவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சீர் செய்வதற்காக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து தலைவர்களுடைய வழிகாட்டுதலோடும் வரைவு இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. எதிர்வரும் 29-12-2021, அனைத்து தலைவர்களின் வசதிக்கேற்ப கொழும்பில் இக்கடிதத்தில் கைச்சாத்திட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இவ்விடயத்தை செவ்வனே நிறைவேற்றி தமிழ் பேசும் மக்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு தம் மக்களை மீட்க விட்டுக்கொடுப்போடும், அர்ப்பணிப்போடும் ஒருமித்து செயலாற்ற அனைத்து தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் – ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

திருக்கோவில், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சார்ஜன்ட் தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், T-56ரக இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவைகளுடன் அவர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? – ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன.

இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த தீர்வாக அமையுமென பொருளாதார நிபுணர்கள், பொருளாதார நிபுணத்துவம் பெற்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான தீர்மானமொன்றை எடுக்காது தடுமாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை மாகாணசபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

வவுனியா வடக்கு பிரதேச சபை போல மாகாண சபையும் மாறலாம். புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

மாகாண சபை முறை தான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஒரு அடிப்படை. ஆனால் ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறுகின்றார்கள். தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சீனா கால் பதிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை என்பது இந்தியாவுக்கு தெரியும். அதை கையாள வேண்டியது இந்திய தரப்பு. எங்களை பொறுத்தவரை இந்த விடயத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் நாங்கள் இல்லை.சீனாவின் செயற்பாட்டில் எமக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். அதற்கு மேலாக இது இரு நாடுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.