பயங்கரவாத தடைச்சட்டம் சீரமைக்கப்பட வேண்டும்: ஐ.நா-வின் 7 விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது.

இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

ஆகவே உரியவாறான நோக்கத்தைப் பூர்த்திசெய்யாத மேலோட்டமான பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறும் அதுவரை அதன் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கூறியபோது, அதில் ஓரளவு நம்பகத்தன்மை காணப்பட்டது.

இருப்பினும் இவ்வருட ஆரம்பத்தில் விசாரணைகளின்றி நீண்டகாலத்திற்குத் தடுத்துவைக்கக்கூடியவாறான சட்டத்தை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டார்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்ட வலுவான அழுத்தங்களையடுத்து, பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்கென போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் படையணிக்குத் தலைமைதாங்கியவரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது.

அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அப்பரிந்துரைகள் சிவில் சமூக அமைப்புக்களின் அர்த்தமுள்ள கரிசனைகளையும் ஆலோசனைகளையும் உள்வாங்கத்தவறியிருப்பதாகத் தோன்றுகிறது.

அதுமாத்திரமன்றி தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த செயன்முறை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பெரும்பாலும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதுடன், இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்கனவே அச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் மாறாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடியவாறான குறைபாடுகள் (பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள்) குறித்து இப்பரிந்துரைகளில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் அண்மையில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று இலங்கை கொண்டிருக்கக்கூடிய சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைக்கும் போது மிகமுக்கியமாக அவதானம் செலுத்தப்படவேண்டிய 5 விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களைப்போன்று அவர்களும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான மதிப்பீடுப்பணிகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வரிகளைச் செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொண்டபோது, ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மனித உரிமைகள்சார் கடப்பாடுகளில் ஒன்றான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாகவோ அல்லது அதில் உரியவாறான திருத்தங்களை மேற்கொள்வதாகவோ வாக்குறுதியளித்தது.

மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் தொடர்பில் அர்த்தமுள்ள மறுசீரமைப்பு இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜுன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் அத்தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கக்கூடிய உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் விளைவுகள் அமையும். ஆகவே தற்போது அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கத்தைப் பூர்த்திசெய்யாத மேலோட்டமான பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் கரிசனைக்குரிய வகையில் மிகமோசமாகச் சரிவடைந்துவரும் சூழ்நிலையில், அதனை மாற்றியமைப்பதுடன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமிருக்கின்றது.

இலங்கையில் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட மேலும் இரு படைவீரர்களுக்கு எதிராகக் கடந்த வாரம் அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், இலங்கையில் மேலும் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய வகையில் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேசமட்ட பங்காளிகளுடன் இணைந்து செயலாற்றுவது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

திருக்கோவில் சந்தியில் அமைந்திருந்த பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டுவந்தனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத விசமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

வௌிநாடுகளிலுள்ள 3 இலங்கை தூதரகங்கள் மூடப்படுகின்றன

வௌிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையும் ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேவையின் தேவை மற்றும் செலவீனங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க, நைஜீரியாவிற்கான தூதுவர் மியன்மாருக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, சைப்பிரஸிற்கான கன்சியூலர் ஜெனரல் நாடு திரும்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆண்டு இலங்கையில் “நாவலர் ஆண்டு” ஆக பிரகடனம்

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022 ஆம் ஆண்டை – “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த பிரகடனத்திற்கான அங்கீகாரத்தையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கும் வகையில் பிரதமரினால் அங்கீகாரக் கடிதம் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ. உமாமகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் திரு. மு. பத்மவாசன் அவர்களினால் தத்ரூபமாக வரையப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இரு திருவுருவப் படைப்புகள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் வெளியிட்டு வைக்கப்பட்டன.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் திருவுருவ வர்ணப் படைப்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நல்லை ஆதீனக் குரு முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மற்றைய படைப்பு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி ஆகியோரிடம் வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேற்படி பிரகடன நிகழ்வில், நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாசார்ய சுவாமிகள், கொழும்பு, இராமகிருஷ்ண மிஷன் தலைவர் வணக்கத்திற்குரிய அக்ஷராத்மானந்த மகராஜ் சுவாமிகள், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன், அங்கஜன் இராமநாதன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர்களான திரு.எஸ்.தில்லை நடராஜா மற்றும் திருமதி.சாந்தி நாவுக்கரசன், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் திரு.சி.தனபாலா, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளர் திரு.வே.கந்தசாமி, திரு.சுந்தரலிங்கம், திரு.சுப்பிரமணியன், திரு.விக்னேஸ்வரன், திரு.ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு அமெரிக்க தூதரை சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தலைமையில் தமுகூ தூதுக்குழு, நேற்று (16)அமெரிக்க தூதரை சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின் போது, தற்போது நடைபெறும் தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாடு, தேசிய அரங்கில் மலையக தமிழ் மக்களின் எழுச்சி, இலங்கை தேசிய இனப்பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கு, பொறுப்புகூறல், எதிர்வரும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கூட்டங்கள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன.

புதிய வருடத்தில் அமெரிக்காவில் இருந்து அரசாங்க பிரமுகர்கள், அதிகாரிகள் இலங்கை வர உள்ளதாகவும், அவர்கள் தமுகூ உட்பட இலங்கையின் அனைத்து தரப்பினரையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அமெரிக்க தூதர் தெரிவித்தார். அதேபோல் அமெரிக்கா வந்து ராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்கும்படியும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பிக்கு அமெரிக்க தூதர் அழைப்பு விடுத்தார்.

தற்போதைய தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டின் பின்னர், தேசிய, சர்வதேசிய அரங்குகளில் நாம் முன்வைக்க உள்ள, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் பொது குறைந்தபட்ச யோசனைகள் அடங்கிய ஆவணத்துடன் நாம் சர்வதேச சமூகத்தை காத்திரமாக எதிர்கொள்வோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் பதிலளித்தார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தரப்பில் பதில் தூதுவர் மார்டின் கெலி, பதில் துணை தூதர் சுசன் வோல்க், அரசியல் அதிகாரி ஜெப்ரி சனின் ஆகியோரும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ எம்பியுடன், தமுகூ நிதி செயலாளர் கண்டி மாவட்ட எம்பி வேலு குமார், பொது செயலாளர் சந்திரா சாப்டர், இணை தவிசாளர் பேராசிரியர் விஜயசந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Posted in Uncategorized

சாணக்கியர்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தெளிவு வேண்டும்-சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து

இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் குறித்து தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் பட்டம் வழங்கிக்கொள்பவர்கள் அதற்கு முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்ந்திரன், அவர்களுக்கு தமிழர்களின் இன்றைய யதார்த்தநிலை புரியவேண்டுமென்பதுடன், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் குறித்தும் தெளிவு வேண்டும் என்றும் தனது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1987ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதுவே இப்பொழுது அனைவராலும் பேசப்படும் 13ஆவது திருத்தமாகும். பதின்மூன்றாவது திருத்தம் வந்ததைத் தொடர்ந்து இலங்கையில் மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு-கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாகவும் ஏனைய ஏழு மாகாணங்களை உள்ளடக்கி எட்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக டெல்லியில் தமிழ் தரப்புகளுடனான பேச்சுவார்த்தையில் வடக்கு-கிழக்கு என்பது எப்போதும் இணைந்திருக்கும் என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே தமிழர் தரப்புகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டன. பின்னர், பதின்மூன்றாவது திருத்தத்தைக் கொண்டுவந்தபொழுது இந்தியாவுடனோ தமிழர் தரப்புகளுடனோ சரியான பேச்சுவார்த்தைகளை நடாத்தாமல் ஜே.ஆர். ஜெயவர்த்தன தான் விரும்பியவாறு அரைகுறை அதிகாரப்பரவலாக்கலுடன் தமக்கு இருந்த ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்தத் திருத்தத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றினார்.

அப்பொழுது வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபையை உருவாக்கிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பதின்மூன்றாவது திருத்தத்தில் இருக்கின்ற குறைகளைச் சுட்டிக்காட்டி அவை எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஓர் ஆவணத்தைத் தயார்செய்து அன்றைய ஜனாதிபதி திரு.பிரேமதாச அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களுக்கும் அனுப்பிவைத்தனர். அதேபோன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு.அமிர்தலிங்கம் அவர்களும் பதின்மூன்றில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ராஜீவ்காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆகவே, பதின்மூன்றாவது திருத்தம் என்பது முழுமையான அதிகாரப்பகிர்வு அல்ல என்பதை தமிழர் தரப்பு அன்றே ஏற்றுக்கொண்டது. ஆனால் அது ஒன்று மாத்திரம்தான் தமிழ் மக்களுக்குக் கிடைத்த சட்டபூர்வமான, அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களாக இருக்கின்றது. அதனை நடைமுறைப்படுத்தும்படிதான் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகளால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

1950களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவாகிய பொழுது, தந்தை செல்வா அவர்கள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தார். 1976ஆம் ஆண்டுவரையில், அவரது சமஷ்டி கோரிக்கையில் எத்தகைய முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. தந்தை செல்வாவிற்கும் தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் அரசதரப்பால் கிழித்தெறியப்பட்டன. இதன் காரணமாக பிரித்தானியரிடம் தமிழர்கள் இழந்த இறையாண்மையை மீளப்பெறுவதற்கான தமிழர்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றபபட்டது. ஆனால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எத்தகைய பொறிமுறைகளோ, திட்டங்களோ, மூலோபாய,தந்திரோபாயங்களோ அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடம் இருக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தமிழ் இளைஞர்களை ஒரு தற்காப்பு நிலைக்குத் தூண்டியது. இதன் காரணமாக, பல்வேறுபட்ட ஆயுத அமைப்புகள் தோற்றம் பெற்று, தமழின விடுதலைக்காக போராடின.

இந்த வரலாற்றைப் புரிந்துகொள்ளாதவர்கள் அல்லது புரிந்துகொள்ள விருப்பமில்லாதவர்கள், தங்களுக்குத் தாங்களே சாணக்கியர்கள் என்று ஒருவருக்கொருவர் பட்டம் சூட்டிக்கொண்டும் புகழாரம் சூட்டிக்கொண்டும் தவறான கருத்துகளையும் அணுகுமுறைகளையும் தமிழ் மக்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கின்றனர். “பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி சில கட்சித் தலைவர்கள் பேசுவதாகவும் மகிந்த ராஜபக்சேவே பதின்மூன்றாவது திருத்தத்திற்கு மேலே சென்று இந்த பிரச்சினையைத் தீர்ப்பேனென்று பலமுறை கூறியதாகவும் ஆனால் அவற்றையெல்லாம் மறந்துபோன சில தமிழ்த் தலைமைகள் பதின்மூன்றை நிறைவேற்றும்படி இப்பொழுது கோரிக்கைகளை முன்வைப்பது என்பது தமிழருக்குச் செய்யும் துரோகம்” என்றும் இந்த சாணக்கியர்கள் 11.12.2021 அன்று சுண்ணாகத்தில் நடந்த சாணக்கியர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதே விடயத்தை இவர்கள் இலண்டனிலும் தெரிவித்திருந்தனர்.மாகாணசபைகளுக்கு அரசியல் சாசன ரீதியில் வழங்கப்பட்டுள்ள பதின்மூன்றாவது தீருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்திக்கொண்டு அதன் பிறகு சமஷ்டியை நோக்கி முன்னேற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் அரசியல் தலைமைகளின் இன்றைய நிலை. ஆனால் அரசாங்கம் அதனையே நடைமுறைப்படுத்த முடியாதென பிடிவாதம் பிடிக்கிறது. இந்த நிலையில் இந்த சாணக்கியர்களும் பதின்மூன்றை ஏற்கமாட்டோம் என்று கூறுவது இவர்கள் யாருடைய நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்த சாணக்கியர்களின் சாணக்கியத்தை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் அவசர அவசரமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளை சூட்டோடு சூடாக பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது மக்கள் அனுபவித்த கொடுமைகளை நேரடியாகவே கேட்டறிந்ததுடன், இது குறித்து ஐ.நாவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் கொடுப்பதற்காக விரிவான அறிக்கை ஒன்றையும் தயார் செய்திருந்தனர். இதனைக் கையளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஐ.நாவிற்குச் செல்லுமென்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று கூட்டமைப்பின் பேச்சாளராகவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமும் இருந்த நான் இலங்கைக்கு வெளியில் இருந்த நேரத்தில் அமெரிக்கா ஜெனிவாவிற்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது பயணத்தை ஒத்திவைத்ததாக தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தன்னிச்சையாக அறிவித்தார். ஆயினும் அதனை ஏற்க மறுத்து நாம் ஜெனிவா சென்று பல நாட்டு ராஜதந்திரிகளைச் சந்தித்து மக்களின் நிலை பற்றி தெளிவுபடுத்தினோம்.

2015ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாகத் திகழ்ந்த ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றும் பொருட்டு, ஐ.நாவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட காத்திரமான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்வதில் முனைப்புடன் செயற்பட்டவர்கள் இந்த சாணக்கியர்கள். இதற்கு இவர்கள் சொன்ன காரணம் விசித்திரமானது. சர்வதேச விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டது. இனி அதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியதுதான் வேலை. எனவே நாம் பொறுமையுடன் இருந்து அதற்கான காரியம் ஆற்ற வேண்டும் என்று கூறியதுடன் சர்வதேச விசாரணையில் உள்ளுர் நபர்களும் இருப்பார்கள். அதே போன்று உள்ளக விசாரணைகளிலும் சர்வதேசத்தவர்களும் இருப்பார்கள் என்று வியாக்கியானம் அளித்தவர்கள். 2015ஆம் ஆண்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டாண்டுகள் அவகாசத்தையும் பெற்றுக்கொடுத்துவிட்டு, பின்னர் மீண்டும் 2017இல் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் மூலம்தான் நாம் அதனை சர்வதேசத்தின் பிடியில் வைத்திருக்க முடியும் என்று சொல்லி மீண்டும் காலநீட்டிப்பைப் பெற்றுக்கொடுத்தவர்கள்.

2018ஆம் ஆண்டில் அடுத்த சில மாதங்களில் புதிய அரசியல் யாப்பு வரப்போகின்றது. அதில் ஈழம் என்ற சொல்லைத் தவிர ஏனைய அனைத்தும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று கூறியதுடன் இந்த நேரத்தில் காரியத்தைக் கெடுத்து விடக்கூடாது என்று சொல்லி அன்றைய அரசாங்கத்தைக் காப்பாறற்றியவர்கள். அன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் யாப்பின் நகலை அனைவரும் அறிவோம். இதற்கு சமஷ்டிக்குள்ளும் ஒற்றையாட்சி அடங்கியிருக்கிறது. ஒற்றையாட்சிக்குள்ளும் சமஷ்டி ஒளிந்திருக்கிறது என்று வியாக்கியானம் கூறியவர்கள்தான் இன்று தமிழ்த் தலைமைகளைவிமர்சிக்கின்றனர்.

புதிய அரசியல் சாசன வரைபு தொடர்பில் நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நாங்கள் அதுபற்றி பேசவில்லை என்றும் வடக்கு-கிழக்கை மதச்சார்பற்ற பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரினால் சிங்கள பௌத்த மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் ஆகவே அந்த விடயங்கள் தொடர்பாக பேசவில்லை என்றும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பதில் சொல்லப்பட்டது.

யுத்தத்திற்குப் பிற்பாடு வந்த முதலாவது பாராளுமன்றத்தில், மகிந்தராஜபக்ச அரசுடன் பதினெட்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். இந்தக் கூட்டங்கள் தோல்வியிலேயே முடிந்தன. ரணில்-மைத்திரி ஆட்சியில் பங்காளியாக இருந்துகொண்டு ஒவ்வொரு வருடமும் புதிய அரசியல் சாசனம் வருமென்றும் பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு என்று உறுதிமொழி வழங்கிவந்தீர்கள். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இப்பொழுது கோத்தபாய அரசுடனும் பேசுவதற்கு முயற்சிக்கின்றீர்கள். ஆனால் சிங்கள பௌத்த தீவிரவாத எண்ணங்களைக் கொண்ட கோத்தபாய அரசு அதற்கான நேரத்தை இன்னமும்; உங்களுக்கு ஒதுக்கவில்லை. ஆனாலும் அவர்களுடன்கூட நீங்கள் பேசுவதற்குத் தயாராகத்தான் இருக்கின்றீர்கள். இப்பொழுது இறுதியாக நீங்கள் அமெரிக்கா, கனடா, இலண்டன் போய்வந்து “2022இல் மாற்றங்கள் நிகழலாம்…ம்…ம்” என்று கயிறு திரிக்கிறீர்கள். இந்த நிலையில்தான் விடுதலைப் புலிகள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதற்குப் பின்னர் நடந்த யுத்தத்தில் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆயுதப் போராட்டத்தை ஏற்காத நீங்களே இப்பொழுது அவர்களைத் துணைக்கு அழைக்கிறீர்கள். ஒரு இலட்சம்பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லும் நீங்கள் ஒரு இனவழிப்பு நடந்ததாகச் சொல்ல முடியாதென்றும் சொல்கிறீர்கள். இந்த சாணக்கியர்கள் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவை மேவி வேறு எந்தவொரு நாடும் தலையிடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வரவிருக்கின்ற புதிய அரசியல் சாசனத்தில் பதின்மூன்றை முற்றாகவே நீக்கப்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. ஆகவே எமக்குக் கிடைத்த அதிகாரங்களை விட்டுக்கொடுப்பது என்ற முட்டாள்தனத்தை நாங்கள் செய்ய இயலாது. செய்யக்கூடாது.

கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும் என்று இதுவரை காலமும் கூறி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்த இந்த சாணக்கியர்கள் இப்பொழுது அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பதிமூன்றாவது திருத்தத்தை ஏற்கமாட்டோம் என்று கூறுவது இவர்களது சுயமுரணைக் காட்டுகிறது. இவர்களின் செயற்பாடுகள் இவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனாவாதிகளின் நிகழ்ச்சிநிரலையும் முன்னெடுத்துச் செல்லும் தரகர்களாகவே முன்னிலைப்படுத்தியிருக்கிறது. எனவே எமது மக்கள் இத்தகைய அரசியல் தரகர்களிடம் விழிப்புடன் செயற்பட்டு எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்கள் பா.உ கோ.கருணாகரம் ஜனா அவர்களைச் சந்தித்தனர்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்கள் தங்கள் நியமனங்களை நிரந்தரமாக்கக் கோரி மட்டக்களப்பு மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்களைச் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கை தொடர்பிலும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடலொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் உட்பட மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் புஸ்பலிங்கம், போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் ரஜனி, முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபைத் தவிசாளர்களான புஸ்பலிங்கம் மற்றும் ரஜனி ஆகியோரின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் 2015ம் ஆண்டு தற்காலிக அமைய அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் இன்னமும் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் தாங்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை மெற்கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, உருக்கமான வேண்டுகோளினையும் விடுத்தாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடும் முகமாக இச்சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறப்பினர் தெரிவிக்கையில்,

கட்சி பேதங்களுக்கப்பால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கையும் ஒன்று சேர்த்து ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடி எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளுக்கும் தாம் ஆதரவு வழங்குவதாகவும், எப்போதும் ஊழியர்களின் நியமனத்தை நிரந்தரமாக்கும் விடயத்தில் தங்களுக்கான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சுகளுடன் கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ​நேற்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி வௌிநாடு பயணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மருத்துவ பரிசோதனை ஒன்றுக்காக சிங்கப்பூர் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் சில தினங்கள் அவர் தங்கியிருந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சிங்கப்பூர் சென்ற குழுவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முதல் பெண்மணி மற்றும் மூவர் அங்கம் வகித்தாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பயணத் திட்டம் மற்றும் பயணத்தின் நோக்கம் குறித்து தகவல்களை வெளியிட முடியாது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பும்வரை அவரின் பொறுப்புக்களை பிரதமர் கவனிக்கவுள்ளார் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

எம். எஸ்.தெளபீக்கை அனைத்து பதவிகளிலும் இருந்து இடைநிறுத்தியது முஸ்லிம் காங்கிரஸ்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். தெளபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக வரவு – செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு விளக்கம் கோரி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு வாக்களிப்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழு கடந்த மாதம் 20ஆம் திகதி கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கூடியது.

இதன்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தெளபீக் ஆகிய இருவர் மாத்திரமே அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஏனைய 3 உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் சுகயீனம் காரணமாக வரவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த மாதம் 22ஆம் திகதி இடம்பெற இருந்த நிலையில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் 22ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெற்றபோது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதற்கு எதிராக வாக்களித்திருந்ததுடன் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தெளபீக் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

எனினும் ஏனைய 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர். கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக செயற்பட்டமைக்கு இரண்டு வாரங்களில் விளக்கம் கோரி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் நசீர் அஹமட் ஆகியோரை கட்சியில் இருந்து இடை நிறுத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றபோது, ஏனைய 3 உறுப்பினர்களுடன் இணைந்து எம்.எஸ்.தெளபீக் ஆதரவாக வாக்களித்திருந்தார்.

அதன் காரணமாகவே இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் விளக்கம் கோரி, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் கடிதம் அனுப்பியுள்ளார்.