கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

COVID தொற்று நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – புறக்கோட்டை ரயில் சேவை 5 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமானது.

காலை 05.30-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மாலை 06.10-க்கு அங்கிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

பகல் 01.15-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் நகர்சேர் கடுகதி ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் – பொது மகஜர் வெளியீடு

இலங்கைப் பொலிஸாருக்கு சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் இலங்கைப் பொலிஸாரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் இதுவரையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.

மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான ‘பொதுத்தொடர்பு மேம்பாட்டு’ உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்று ஸ்கொட்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை ஸகொட்லாந்து பொலிஸ் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமகஜர் ஒன்றையும் அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ (சித்திரவதைகளிலிருந்து விடுதலை பெறல்) என்ற அமைப்பு, உலகளாவிய ரீதியில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதுடன் அவர்களது உரிமைகளுக்காகவும் போரடிவருகின்றது.

அவ்வமைப்பு அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் ‘ஸ்கொட்லாந்து பொலிஸுக்குக் கூறுங்கள்: இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிணையுங்கள்’ என்ற தலைப்பில் பொதுமகஜர் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான சித்திரவதைகள் மற்றும் பாலியல் ரீதியான அச்சுமீறல்களுடன் இலங்கைப் பொலிஸார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்று அந்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வாழ்பவர்கள், சித்திரவதைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான அனுசரணையைத் தமது அமைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்திருக்கின்றது.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தால், ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமது இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பொதுமகஜரைப் பூரணப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை வெளிக்காட்டுமாறும் அவ்வமைப்பு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சுமார் 1000 பேரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொதுமகஜரை தற்போதுவரை (நேற்று நண்பகல்) 204 பேர் பூரணப்படுத்தி, இலங்கைப்பொலிஸாருடன் ஸ்கொட்லாந்து பொலிஸார் இணைந்து பணியாற்றக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை இம்மகஜர் தொடர்பில் ‘ப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளது. ‘பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் பொலிஸாருக்குப் பயிற்சி வழங்கப்படக்கூடாது.

இலங்கைப் பொலிஸ் பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதுடன் சிறுபான்மையின சமூகத்தின்மீது அடக்குமுறையைப் பிரயோகித்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறிருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான ஊதியத்தை போரிஸ் ஜோன்ஸனின் அரசாங்கம் ஸ்கொட்லாந்து பொலிஸுக்கு வழங்குகின்றது’ என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், இதுவரையில் மனித உரிமைகள் விவகாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.

மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான பொதுத்தொடர்பு மேம்பாட்டு உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்றும் அவ்வமைப்பு அதன் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா மற்றும் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வௌ்ளை மற்றும் சிகப்பு சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் கட்சிகளின் இன்றைய தீர்மானங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இருவாரங்களுக்குள் நடாத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பேசும் கட்சிகளிடையே இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,

தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை, அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுதத்ப்பட வேண்டும், அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தினாலும் அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படடு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுததுவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் இன்றைய தீர்மானங்கள்

1. 13 A முழுமையாக அமுல்படுத்த வேண்டும்
2. மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படல் வேண்டும்
3. திட்டமிட்ட காணி அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4. பயங்கர வாத தடை சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.
5. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நிராகரிக்கின்றோம்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem), தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் (Siddharthan), தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா (N. Srikanth), தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் (V.P.Sivanathan),தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாக மிகவும் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலிருக்கும் நிலையில், மாற்று அரசியல் கொள்கைகளையுடைய அனைத்துக் கட்சிகளினதும் சமூகக்குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடியவகையில் பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின் பிரகாரமே நடாத்தப்படவேண்டும் என்று சிறிய அரசியல் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மை பேணப்படுவதை உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலொன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் சனிக்கிழமை கொழும்பிலுள்ள மெரினா பீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாட்டிலுள்ள சிறுகட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ),தமிழரசுக்கட்சி, ,புளொட், தமிழ் முற்போக்குக்கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மேலும் சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கூறியதாவது:

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கிலான இந்தக் கலந்துரையாடல் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதக்கூடாது.

மாறாக இது நாட்டின் ஜனநாயகத்தையும் அனைத்து சிறுகட்சிகளினது பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலாகும். அண்மைக்காலத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுகட்சிகளை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆனால் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலுள்ள சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதன் ஊடாகவே நிறைவேற்றதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான சமநிலையை உறுதிசெய்யமுடியும்.

உண்மையைக் கூறுவதானால் தேர்தல் முறைமை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடமிருந்து பாடங்கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார முறைமையின் ஊடாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதுமாத்திரமன்றி தேர்தல் முறைமை விவகாரம் ஒட்டுமொத்த நாட்டினதும் பிரச்சினை என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும். பாராளுமன்றத்தில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதித்துவத்தைப்போன்றே பெண் பிரதிநிதித்துவமும் சமளவில் உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

அதனை முன்னிறுத்தி பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் அனைத்தும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையிலேயே நடாத்தப்படவேண்டும் என்ற பொதுநிலைப்பாடு எட்டப்படவேண்டும். அத்தோடு அம்முறையின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், அரசியலில் பெண்பிரதிநிதிகளை உள்வாங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமது கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டபோதிலும் அவர் ஏற்கனவே அரசியல் பின்புலமொன்றைக் கொண்டிருந்தமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தல் நடாத்தப்பட்டாலும் எல்லைநிர்ணய முறைமை நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதிர்பார்க்கக்கூடிய பிரதிபலனை அடைந்துகொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள எல்லைநிர்ணய முறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று குறிப்பிட்ட அவர், இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படக்கூடிய எல்லை நிர்ணயத்தின் விளைவாக விகிதாசார முறையின் ஊடாக உள்வாங்கப்படக்கூடிய சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவம் சிதைக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியதுடன் எல்லை நிர்ணயமுறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

அதேவேளை அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்துப்பேசிய தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள வட்டாரங்களில் குறித்த எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்மூலமே அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், சமஷ்டி முறைமை தொடர்பில் கூட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய உறுதியான நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஒருபுறம் தேர்தல் முறைமை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேசப்படும் அதேவேளை, மறுபுறம் சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றியடைந்ததாக அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பதிவுசெய்யும் ஜனாதிபதியின் போக்கு மற்றும் சிறுபான்மையினக்குழுக்களின் செயற்பாடுகள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற வெளிவிவகார அமைச்சரின் கருத்து என்பன நாடு பயணிக்கவேண்டிய பாதை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கின்றது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இதன்போது தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி உள்ளுராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரேவேளையில் தயார்செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புத்திருத்தமாகக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகனாணசபைத்தேர்தல்களை விகிதாசார முறைமையின்கீழ் விரைந்து நடத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இக்கலந்துரையாடலின்போது கூட்டாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீ;ம், வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் உள்ளடங்கலாக மேலும் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கோட்டாபயவுக்கு எதிராக விசாரணை கோரும் GRC என்ற சட்ட நிறுவனத்தின் நடவடிக்கை சரியானதே- விக்னேஸ்வரன்

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLR (GRC) என்ற சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில், Global Rights Compliance LLR (GRC) இந்த நிறுவனத்தின் நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையின் முழு விபரம்:

கேள்வி:- இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLR (GRC) என்ற சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துநருக்கு சமர்ப்பித்துள்ள ஆவணம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? இது சாத்தியமா?

பதில்:- இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்த இனப்படுகொலை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எல்லா தமிழ் கட்சிகளுமே கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளன. அத்துடன், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாகக் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளன. ஆகவே, இந்த பின்னணியில், Global Rights Compliance LLR (GRC) செய்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் சரியானதும் அத்தியாவசியமானதும் காலத்துக்குப் பொருத்தமானதும் ஆகும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத் ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உரிய சட்டக் கொள்கைகள், கோட்பாடுகள், வாதங்களுடன் இந்த முதலாவது தொடர்பாடலுக்கான ஆவணத்தை முறையாக Global Rights Compliance LLR (GRC) சமர்ப்பித்துள்ளது என்று நான் நம்புகின்றேன்.

கேள்வி:- இந்த சமர்ப்பணத்தின் அடிப்படையில் அடுத்து என்ன நடைபெறும்?

பதில்:- இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் இந்த ஆவணத்தை பரிசீலித்து எடுக்கவிருக்கும் முடிவிலேயே அது தங்கி இருக்கின்றது. சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி:- இந்த சமர்ப்பணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அவசியமாக செய்யப்பட வேண்டிய ஒரு விடயத்தை நல்ல முறையில் புடழடியட சுiபாவள Global Rights Compliance LLR (GRC) செய்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகவே, இந்த ஆவண சமர்ப்பணம் வலுவானதாக செய்யப்பட்டிருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் இந்தக் கால கட்டத்தில் அவசியமாகின்றன. இங்கு எமது வட கிழக்கு நிலங்கள் பறிபோகின்றன. பௌத்தர்கள் இல்லா இடத்தில் பௌத்த வணக்கஸ்தலங்கள் பலாத்காரமாக நிர்மாணிக்கப்படுகின்றன. தொல்பொருளியலைத் திரிபுபடுத்தி தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களாக எடுத்துக் காட்டி பல ஏக்கர் காணிகளை தொல்பொருள்த் திணைக்களமும் வேறு காரணங்களை முன் வைத்து மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பலவும் எமது காணிகளைக் கையேற்று வருகின்றன. அங்கு வாழும் தமிழ் மக்கள் இராணுவ ஒத்துழைப்புடன் விரட்டி அடிக்கப்படுகின்றனர். சிங்கள குடியேற்றம் தமிழர் தாயகத்தில் துரிதமாக நடைபெறுகின்றன. இனப்படுகொலையின் பல்வேறு பரிமாணங்கள் இவை. இவ்வாறான விசாரணைகளின் போது தற்போது இங்கு நடைபெறும் விடயங்களும் உண்மையை உலகம் உணர உதவி புரியும். நான் இந்த நடவடிக்கையை முற்றும் வரவேற்கின்றேன்.

Posted in Uncategorized

திருடன் கையில் பொலிஸ் வேலை கொடுக்கும் அரசாங்கம் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லின மக்களுக்கான சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காதவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதிய விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைந்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகம் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் காலங்காலமாக செயற்படும் கொள்கையே இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த வகையில் சிங்கள இனவாதத்தின் ஒருமித்த செயற்பாடே ஒரேநாடு ஒரே சட்டம். இத்திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். இல்லையேல் நாடு பாரதூரமான விளைவுகளையே சந்திக்கும்.

நான் ஒரு சிங்கள இனவாதி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஜனாதிபதி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொடர்ச்சியாகச் செயறபட்டுவருகிறார். கொவிட் பரவல், பொருளாதார நெருக்கடி, விவசாயிகளது பிரச்சினைகளென மக்களது விடயங்களெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே கிழக்கு மாகாணத்துக்கென ஜனாதிபதி செயலணியொன்றினை தொல்பொருள் பாதுகாப்புக்கென தாபித்திருந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. மாகாண சபைகளினுடைய அதிகாரங்களைக் குறைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மாகாண சபையை இல்லாமற் செய்கின்ற முனைப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் சிறுபான்மை மக்களினுடைய இருப்பிலும், அவர்களுடைய நம்பிக்கையிலும் மண்ணைப்போடும் ஒரு செயற்திட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியினுடைய சிந்தனைப் போக்கும், ஆதிக்கமும் இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கிறது. இதன் உட்பொருளை நாம் எல்லோரும் விளங்கிக் கொண்டு விமர்சிக்காமலும் அதற்கெதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமலும் இருக்க முடியாது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சிப்பவர்கள் ஏதோ அதற்கு ஞானசார தேரர் தலைமையாக நியமிக்கப்பட்டமைதான் பிரச்சினை என்பதுபோல் காண்பிக்க முயல்கின்றனர்.

கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காது, சட்டத்துக்கு விரோதமாகச் செயற்பட்டவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதியவிடயமல்ல.

இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் என பல்லின மக்களைக் கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் என பல மதங்களைப் பின்பற்றுகின்ற, தமிழ் சிங்களம் என பல மொழிகளைப் பேசுகின்ற பல கலாசார பின்பற்றலைக் கொண்டுள்ள நாடாகும்.

இங்கு ஒவ்வொரு இனத்திற்கென்று பாரம்பரியமான தேசவழமை, முற்குக, கண்டிய, ஷரியா சட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றினைக் கவனத்திலெடுக்காத வகையில் சட்டங்கள் அமைக்கப்படுவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மேலைத்தேயத்தவர்களது வருகையின் காரணமாக உருவான சட்ட ஒழுங்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னர் பல சிக்கல்களை எதிர் கொண்டது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைத்து சிறுபான்மை மக்களின் பாதுக்காப்புக்கான ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட சட்டம் இப்போதில்லை. அதனை பெரும்பான்மைத் தேசியம் இல்லாமல் செய்து விட்டது. அதன் பிரதிபலிப்பாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவ்வாறானாலும் சிறுபான்மை மக்களை பொருட்படுத்தாத அவர்களை அனுசரிக்காத நாட்டின் தலைவருடைய செயற்பாடு வீண் விளைவுகளைக் கொண்டுவரும்.

நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற சட்டத்தினை உருவாக்குவதற்கு என்ன தேவை ஏற்பட்டது என்பதனை இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் இன முறுகல் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஜனாதிபதி அதனை வலுப்புடுத்தும் வகையிலான செயற்திட்டங்களை உருவாக்குகிறார்.

வெளிப்பூச்சில் வெளிநாடுகளுக்கு ஒரு முகத்தையும், நாட்டுக்குள் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு பேரினவாத முகத்தையும் காண்பிக்கும் ஜனாதிபதி பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லினம் பல் சமய, பல மொழி பேசுகின்ற மக்களிற்கு சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது ஏதோ திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும்.

நாட்டில் இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், ஆதிக்க ரீதியான செயற்பாடு என பல குற்றச்சாட்டுக்கள் இருந்து கொண்டிருக்கையில் மேலும் ஒரேநாடு ஒரே சட்டம் இன்னுமொரு படி மேலே நகர்த்தப்படுவது இலங்கை மக்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் சாபக்கேடாகும்.

ஜனாதிபதி ஸ்கொட்லாந்து நோக்கி பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (30) ஸ்கொட்லாந்து நாட்டிற்கு பயணமானார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொண்டு செயற்படுவதற்காக உலக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் இந்த மாநாடு, நாளை (31) தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 02 ஆம் திகதி, உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

‘காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் 197 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ் விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

13-ஐ முழுமையாக அமுல்செய்ய உதவுமாறு இந்தியாவிடம் கூட்டாக கோர தமிழ் கட்சிகள் ஏற்பாடு!

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் -02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட்டி இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இது குறித்த முடிவை எடுத்துள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள இராஜதந்திர உறவுக்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசுடன் மேற்கொள்ளும் இராஜ தந்திர உறவினை எதிர்த்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பால் கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துமென்றும், இலங்கை அரசாங்கமும் , பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.