ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகம் ; பொலிஸார் தகவல்

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து திவயின மேலும் தெரிவித்துள்ளதாவது;

இதற்கு முன்னர் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணியாற்றிய காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்துவரப்பட்ட யுவதி ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் ரிஷாத் பதியுதீன் அமைச்சராகக் கடமையாற்றிய போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர் ரிஷாத்தின் மைத்துனர் என தமக்குக் கிடைத்துள்ள தகவல் குறித்து பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தையும் அந்த அறையையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு பணிப்பெண்ணாகக் கொண்டுவரப் பட்ட இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பிரதான பொலிஸ் பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்தவை நியமிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார் .

அதன்படி, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பாலியல் துஷ் பிரயோகத்திற்குட்பட்ட யுவதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருணி போகஹவத்த தலைமையிலான விசேட குழு மலையக தோட்டப்புறப் பகுதிகளுக்குச் சென்றுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சகல யுவதிகளும் மலையக பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று கைது செய்யப்பட்ட தரகர் மூலமாக அனைவரும் கொழும்பு அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வீட்டு பணிப்பெண்களான யுவதிகள் மற்றும் சிறுமிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்த தரகருக்கு இலட்சக் கணக்கான பணத்தைச் செலுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள சிறிய இருட்டு அறையில் மேற்படி யுவதிகள், சிறுமிகள் விடப்படுவதாகவும் இரவு 10.30 மணியளவில் குறித்த அறையின் கதவை அடைப்பதாகவும் மறுநாள் காலை 5.30 மணிக்கு திறக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அவர்கள் கழிப்பறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் டயகம சிறுமியை வீட்டுப் பணிபெண் ணாக அழைத்து வந்த தரகரிடம் நீண்ட நேரம் பொலிஸார் விசாரணை நடத்தி பல முக்கியமான தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் 05 பொலிஸ் விசேட குழு குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது.

கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகோரி நேற்று(23) டவ்னிங் ஸ்ட்ரீட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.

இதேவேளை தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, கைக்கு கிடைத்த இலகுவான சந்தர்ப்பங்களை நழுவவிட்ட தமிழ், சிங்கள தலைமைகள்.

தமிழரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, கைக்கு கிடைத்த இலகுவான சந்தர்ப்பங்களை நழுவவிட்ட தமிழ், சிங்கள தலைமைகள்.
தவறுகள் மனிதரோடு பின்னிப் பிணைந்தவை. ஒரு சமூகத்தின் தலமை மக்களை நல்வழிப்படுத்த படுத்தி இலக்கை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டும். அது தவறும் போது பின்னாலுள்ள மக்கள் கூட்டம் ஆபத்தை சந்திப்பதும், உருக்குலைந்து போதும் தவிர்க்க முடியாததே. இதன் அடிப்படையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாகிய ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் அவர்களுடன் நடந்த சிறப்பு நேர்காணல் வீரகேசரி- எஸ்.எஸ்.தவபாலன்

கேள்வி: இலங்கை பல்லின் பன்மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு ஆயினும் இனப்பிரச்சனை மொழிப்பிரசாசனை என்பன தீர்க்கப் படாமல் இருந்து வருகின்றன. அதனை தலமைகள் தவற விடுகின்றனர்? இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான இலகுவானதும், ஆரோக்கியமானதுமான சில சந்தர்ப்பங்கள் கடந்த காலத்தில் எமது நாட்டின் தமிழ், சிங்கள, தலைமைகளது கையில் இலகுவாக கிடைத்தபோதும் அவைகள் தவறவிட பட்டுவிட்டன. இது தூதிஸ்டமானதும், சோகத்திற்குரியதுமாகும். அவைகளை துன்பியல் சம்பவங்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அவை இப்போதைய இரு இனம் சார்ந்த தலைமைகளுக்கும் பல பாடங்களையும் எச்சரிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளன என்பதில் தவறில்லை. அது மட்டுமினறி இப்போதைய அனைத்து இனத்தலைமைகளுக்கும் இனப் பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்பட வெண்டுமென்ற உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளன எனலாம்.

சுதந்திரத்திற்கு முன்னர் 1939ம் ஆண்டுகளில் சமஸ்டி ஆட்சிமுறை என்ற சொற்பதத்தினை சிங்களத் தலைவர்களே முதன் முதலில் உச்சரித்தனர். அந்த நேரத்தில் பிரித்தானியர்களோடு இணைந்து நன்மதிப்பை பெற்றிருந்த தமிழ்த் தலைவர்களான சேர்.பொன்னம்பலம் இராமனாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர், அதனை கவனிக்கவுமில்லை, அதில் சிரத்தை காட்டவுமில்லை. அப்போது சமஸ்டி ஆட்சிமுறையை ஏறபடுத்தியிருந்தால், இப்போது நாம் நிம்மதியோடு இருந்திருக்கலாம் என்பதை இந்த இடத்தில் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
1948ல் பிரித்தானியாவிடமிருந்து இந்தநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. அச் சுதந்திரத்தினை பெறுவதற்கு பாடுபட்டவர்கள் தமிழ்த் தலைவர்களே. அவர்கள் தமது இனத்தின் எதிர்காலம்பற்றி சிந்தித்திருக்கவேண்டும். சிந்திக்க தவறிவிட்டனர், அங்கேயும் ஒரு தவறு தமிழ்த் தலைவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
பிரித்தானியாவோடு மிக நெருக்கமாக இருந்த தமிழ் தலமைகள் தம்மினத்திற்காக எவ்வளவோ சந்தித்திருக்க முடியும். அதிலு அவர்கள் நாட்டம் கொள்ளாமல் விட்டு விட்டனர். இது நமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்ட முதல் நிலையாகும்.

கேள்வி: இந்நாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சியை ஸ்தாபித்தவர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா. அவர் அரசியலில் பலவற்றை சாதித்தார் என்றதொரு பெருமை பெற்றவர். அவர் விட்ட தவறுகள் பற்றி கூறுங்கள்?

பதில் : 1952ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எஸ். டப்ளியு. ஆர. டி. பண்டாரநாயக்காவால் தோற்றுவிக்கப்பட்டது. அவரால் எடுத்த எடுப்பில் வெற்றிகண்டு அரசை அமைக்க முடியவில்லை. 1956ல் நடாத்தப்பட்ட தேர்தலில் தான் ஆட்சி அமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் சிங்கள மொழியே இந்த நாட்டின் அரச கரும மொழி என்ற ஒரு நீதியற்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்தே ஆட்சிக்கு வந்தார்
அதன் பிற்பாடு அவர் 1957ல் தந்தை செல்வாவோடு ஒப்பந்தமொன்றினை செய்து கொண்டார். அவ் ஒப்ந்தத்தினை சிங்கள மக்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. இவ்விடயத்தில், குறிப்பாக ஜே.ஆர்.போன்றோரை குறிப்பிடலாம், ஜே.ஆர். அதனை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த நிலையில் பண்டா அந்த ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்தார். அவர் ஒரு ஒக்ஸ்போட் பல்கலைக் கழக கல்வியியலாளன், நல்ல பேச்சாற்றலுள்ளவர் அப்படியான ஒருவர் இரு தரப்பினர் கைச்சாத்திட்ட ஒப்ந்தத்தனை மாற்றுத் தரப்போடு கலந்துரையாடாமல் கிழித்தெறிவதென்பது எவ்வளவு அநாகரீகமானது, பாரதூரமானது என்பது சாதாரணமானவர்களுக்கே புரியும். ஆனாலும், பண்டா அதுபற்றி கவலை கொள்ளவில்லை.

கேள்வி: தமிழருக்கெதிரான இனக்கலவரம் பற்றி ?

பதில் : அதற்கு பிற்பாடு 1958ல் தமிழருக்கு எதிரான வன்முறை உருவானது. அது தமிழினத்தை பலவகைகளிலும் பாதித்திருந்தது. தமிழினத்தின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலைவைக்கப்பட்டன. பண்டா தான் பாரிய தவறுவிட்டதை உணர;ந்து கொண்டார். பின்னர் 1959ல் அவர் புத்திரகித்தர தேரர், சோமவார தேரர் என்ற இரு புத்த துறவிகளினால் படுகொலை செய்யப்பட்டார்,. இதுவே நமது நாட்டில் நடந்த முதலாவது அரசியல் படுகொலையாகும்.

கேள்வி: டட்லி சேனநாயக்காவின் ஆட்சி பற்றி ?

பதில் : இதன் பிற்பாடு 1965ல் டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தினை அமைத்தார். அவரது அரசுக்கு தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியது. அப்போது டட்லி-செல்வா ஒப்பந்தம் உருவானது. அதில் மாவட்ட சபையை மையப் படுத்தி அதிகாரப் பகிர்வு என அந்த ஒப்பந்தத்தில்; குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவும் காலப்போக்கில் சிங்களத் தலைவர்களால் காலம் கடத்தப்பட்டது. ஆனால் ஆட்சி நடந்தது, ஆட்சி நடந்தபோதும் தமிழர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. வேறுவழியின்றி தந்தை செல்வா தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார். இது டட்லி சேனனாயக்கா விட்ட தவறு.

கேள்வி: 1970ல் ஸ்ரீமாவோ அம்மையார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்தி இன்னும் சில சிறு கட்சிகளோடு ஆட்சிக்கு வந்தார்; அவர் விட்ட தவறுகள் பற்றி?

பதில் : 1970ல் ஸ்ரீமாவோ அம்மையார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்தி இன்னும் சில சிறு கட்சிகளோடு ஆட்சிக்கு வந்தார்; நல்ல ஆட்சிப் பலம் அம்மையாருக்கு இருந்தது. புதிய அரசியல் அமைப்பொன்றினை ஆக்கினார்;. அச்செயற்பாட்டின்போது ஆகக் குறைந்த பட்சக் கோரிக்கையாக ஆறு அம்சக் கோரிக்கைகள் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டது. வடகிழக்கில் தமிழ்மொழியில் நிர்வாகம், இன விகிதாசாரப்படி வேலைவாய்ப்பு,. வடக்கு கிழக்கிலுள்ள நீதி மனறங்களில் தமிழ் மொழியில் நிர்வாக நடை முறை, வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் என்ற சாதாரண கோரிக்கைகளாக அவைகள் இருந்தன. ஆயினும் அவைகள் எதுவுமே உள்வாங்கப் படவில்லை. இது ஸ்ரீமா அம்மையார் விட்ட பாரிய தவறு.
இந்த அரசியலமைப்பில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கக் கூடியதாய் இருந்தபோதிலும் வேண்டுமென்றே தமிழ்த்தரப்பினர்களின் கோரிக்கைகள் ஒதுக்கப்பட்டன. இன்று அவைகளின் தாக்கத்தை சிங்களத் தலைமைகள் மட்டுமல்ல முழு நாடுமே உணர்கிறது.

கேள்வி: 1977ல் இந்நாட்டில் சிறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியவர் ஜே. ஆர் மூளை சாலி என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. அவரது ஆட்சியில் பலவற்றை சந்தித்தனர் சாதித்தனர் என்ற பெருமையும் உண்டு. அவர் விட்ட தவறுகளைப் பற்றி கூறுங்கள்

பதில் ஜே. ஆர் சிறந்த ஒரு சிறந்த மூளை சாலியாக இலங்கை மக்களால் பேசப்பட்டாலும் அவர் பண்டாரநாயக்காவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவும் நாட்டு மக்களை தவறாக திசை திருப்பியது இங்கு குறிப்பிடலாம். இவ்விரு தலைவர்களும் தங்களது சிந்தனைக்கு எடுத்தது தங்களது பதவிக்காக மக்களிடத்தில் பொய்யுரைத்து திசை திருப்பியது மட்டும்தான். அவர்கள் விதைத்த மொழிபேதமும் இனபேதமும் இப்போது வெவ்வேறு வடிவில் பரிமாணம் பெற்று இன்று உலகத் தலைவர்கள் கூடுகின்ற ஐ.நா சபை வரை சென்று இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இந்த தலைவர்களுக்கெல்லாம் நாடும் நாட்டு மக்களும் எதிர்காலத்தில் சந்தோஷமான சுபிட்சமான பொருளாதார அபிவிருத்தியோடு உலக நாடுகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்பது மனதை வாட்டுகிறது. இப்போது உள்ள தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதைக் கூறினால் பலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.

கேள்வி : இந்திய அரசின் பங்களிப்போடு உருவான வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்து ?

இதற்குப் பிற்பாடு நாட்டில் மெதுமெதுவாய் ஒரு “களேபர” ஆட்சி தமிழ் மக்களின்மீது நடத்த ஜே. ஆர் அரசு தொடங்கிற்று. அது 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு வித்திட்டது. இந்தியாவின் பாரிய பங்களிப்பு அதற்கு இருந்தது. அது அக்காலத்தில் தமிழரின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தினை நிறுத்தியது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் அசாத்திய துணிச்சல் என்றுதான் அதனை கூறமுடியும். அது முற்று முழுதான அம்சங்கள் கொண்ட ஒப்பந்தமல்ல என்றாலும், வடக்கு கிழக்கை இணைக்கும் சரத்திற்கு அதில் ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதனை இந்திய நாட்டின் உதவியோடு செய்து முடித்திருக்கக் கூடிய வாய்ப்பு தமிழ்த் தலைமைகளுக்கு இருந்தது. தனித் தமிழ்நாடு என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தரப்பு மனதினில் வளர்த்துக் கொண்டதால் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. இது தமிழ்த்தரப்பினர் விட்ட தவறு. அதன் விளைவை இன்று சந்திக்கிறோம்.

கேள்வி: சந்திரிகா அம்மையாரின் ஆட்சி பற்றி ?

பதில்: இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வந்த இந்திய அமைதி காக்கும் படையை எதிர்த்தோம். அதனால் பலவகையான வேண்டாத விளைவுகளை சந்தித்தோம். இதன் பின்னாலே சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்கு வந்தார். அம்மையாரை ஆட்சியில் அமர்த்தியதற்கு வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் காரண கர்த்தாவாக இருந்தார்கள். அம்மையார்; இதய சுத்தியோடு தமிழ் மக்களுக்காக சிலபல நன்மைகளை செய்ய முன்வந்தார். அதில் பிரதானமாக வடகிழக்கை ஒன்றிணைத்து ஒரு பிராந்தியமாக்க முன்வந்தார். கலைக்க முடியாத பிராந்திய அரசு என்பதை அத்திட்டத்தில் உட்புகுத்தினார்; இதற்கு உந்து சக்தியாக இருந்தவர; கலாநிதி நீலன் திருச்செல்வமாகும் அதுவும் காலப் போக்கில் பரிதாபக்கிடங்கிற்குள் புகுந்து கொண்டது. இது யாருடைய தவறு என்பதை பரிந்து கொள்ள முடியும்.

கேள்வி : நோர்வே மத்தியஸ்தம் , சமாதானம் பற்றி ?

இந்தநிலையிலேயே எம்மோடு நோர்வேயின் சமாதானத்துவமும் அதன் நடவடிக்கைகளும் எமக்கு 2005ல் கிடைத்தன அவர்களின் முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் நாம் பரிசீலிக்கக்கூட கையிலெடுக்கவில்லை. அவர்களை வைத்தே காரியங்கள் சிலவற்றை நகா;த்தியிருந்திருக்க முடியும். அதனை கையாள அனுமதிக்கப்படவில்லை. இருதரப்பாருக்கிடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமாயின் இவ் இருதரப்புக்களும் பிடித்தபிடியில் நிற்கக்கூடாது இறங்கி வரவேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும். இதய சுத்தி வேண்டும். அப்போதுதான் அவைகள் நடைமுறைச் சாத்தியமானதாய் மாறும். அவைகள் எல்லாமே இருக்கின்றன. அப்படி இருந்தாலும் இவைகளை கையாளக்கூடிய தலைமைத்துவம் வேண்டும். அப்போதுதான் அவை நடைமுறைப் படத்தப்படும்.

கேள்வி: இப்போது இந்நாட்டில் பௌத்தத் துறவிகள் அரசுக்கு ஆலோசனை கூறி வருகிறார்கள். அதை அப்படியே அரசு ஏற்கின்றது என்பதற்கு அப்பால், தமிழர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். இதுபற்றி?

பதில்: அரசுக்கு ஆலோசனை கூறுபவர்கள் பலர் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களே. இப்படிப்பட்ட துறவிகள் காலத்துக்கு ஏற்ற ஆலோசனைகளை முன்வைப்பார்கள் ஆயின் அவை வரவேற்கத்தக்கவை. நாட்டிற்கும் பிரயோசனமானவையாக இருக்கும்.
நமது நாட்டை பூகோள அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது. ஆகவே பூ போல அரசியலுக்கு ஏற்றாற்போல் அல்லது அவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை தவிர்த்துக் கொள்வதற்கு ஏதுவான ஆலோசனைகளை முன்வைப்பது பலன் தரும். இதற்கு நல்ல உதாரணம் ஒன்றை முன்வைக்கலாம். இலங்கை அரசு துறைமுகத்தின் ஒரு பகுதியை சீனாவிற்கு வழங்கியுள்ளது. இதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேநேரம் இந்தியாவும் தனக்கு ஒரு பகுதியை தருமாறு கூறியது. அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. இதை அரசு பல வியூகங்களை பார்க்க தவறி விட்டது. இதனால் உலக நாடுகளில் இந்தியாவும் அதற்குச் சார்பான நாடுகளும் இலங்கையை எதிர்க்கின்றனர். இதன் பிரதிபலிப்பு ஐநா சபையும் தாண்டி எமது நாட்டின் மீது எதிரொலிக்கிறது. இது நம் நாட்டுக்குப் பல பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழலை இலகுவாக எடை போட முடியாது. அரசுக்கு புத்தி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் உணர்வுபூர்வமாக புத்தி கூறுவதைவிட தாங்கள் சொல்லப்போகும் புத்திமதிகளின் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தே செயலில் இறங்க வேண்டும். உணர்வுபூர்வமாக புத்தி சொல்லும் தவறை தொடர விடாது தடுக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் முதல் முதலாக தமிழினத்திற்கு சாதகமாக எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அரசியல் படு கொலை செய்தவர்களும் புத்தபிக்குகளே என்பதை யும் நினைவிற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் சாதகமாகவும் பெளத்த துறவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். சில பௌத்த துறவிகள் தமிழர்கள் இந்நாட்டின் தேசிய இனத்தினர் அவர்களுக்கு இந்நாட்டு அரசியலில் பங்கு இருக்கிறது, அவர்கள் முன்வைக்கும் நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும் அதுவே தர்மம் என கூறிவருகின்றனர். தேசிய ஒற்றுமைக்கு முன் நிற்பவர்களுக்கு நமது நாட்டு மக்கள் இனம் மதம் மொழி பிரதேசம் பாராமல் அங்கீகாரம் வழங்க வேண்டும். இதை இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் செய்யத் தவறி விடுகின்றனர்.

கேள்வி: தமிழ்ர்களுக்கான தலைமைத்துவம் பற்றி ?

பதில் : எமது இப்போதைய தமிழ்த் தலைமையைப் பொறுத்தவரை நம்பகத்தன்மை. 40வருட கால பாராளுமன்ற அரசியல் அனுபவம். வேற்றுக் கருத்துள்ளவர்களை தமது பக்க நியாயங்களை ருசுப்படுத்தி தம்பக்கம் ஈர்க்கக்கூடிய ஆற்றல், அரசியல் முதிர்ச்சி எனபன நிறைந்திருக்கிறது. சமகாலத்தைய நமது அரசியல்வாதிகளுக்குள் இத்தனை திறமையும் கொண்டவரொருவரை தேடிப்பிடிப்பது முடியாத காரியம். ஆதலால், தமிழர் தரப்புக்கு நல்ல தலைமை கிடைக்க வேண்டும் அப்போதுதான் திட்டங்களும், செயற்பாடுகளும் நடைமுறைச் சாத்தியமானதாய் மாறும். தமிழர்கள் தமது தலைமையில் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். வீணான உபத்திரவங்களை தலைமைக்கோ, கட்சிக்கோ ஏற்படுத்தலாகாது. தமிழ் மக்கள் சமகாலதைய அரசியல் நிலவரங்களை நன்கு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்;. அதற்கு கடந்த காலத்தில் விட்ட தவறுகளிலிருந்த ஒரு படிப்பினையை பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
முக்கியமாக தமிழினம் எதிர்கொண்டிருக்கும் பன்முக பிரச்சனைகளை எதிர்கொள்ள அரசியல் தலைமைகள் ஒருமித்த நிலைப்பாட்டில் விடயங்களை கையாளத் துணியவும் தொடங்கவும் வேண்டும். இதுதான் தமிழினத்திற்கு தலைமைகள் செய்யக்கூடிய காத்திரமான பணியாகும்.

Posted in Uncategorized

இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மன்னார் வளைகுடா கடற்பரப்பில் கண்காணிப்பு

மன்னார் வளைகுடா கடற்பகுதி மற்றும் தீவுகளை இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் (Ajendra Bahadur Singh) ஹெலிகொப்டர் மூலம் கண்காணித்துள்ளார்.

மன்னார் வளைகுடா வழியாக தொடர்ந்து கடத்தல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு அருகே இலங்கை இருப்பதால், தெற்கு கடற்கரையான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கடல் பல்லி, கடல் குதிரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி சந்தேகநபர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் பிரவேசிக்கின்றமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மன்னார் வளைகுடா பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) காலை இராமேஸ்வரம் சென்ற இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் இராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல்களை பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்னார் வளைகுடா பகுதியிலும் தீவுகளிலும் தாழ்வாக பறந்து கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 19 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் என்பன இத்தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டுமூலம் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேலும் ஆராய்ந்த பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் தசநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார். அன்றையதினம் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

ஓகஸ்ட் 04ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

மறுநாள் 05ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்ட இலக்கம் 14/2008 இன் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.

ஓகஸ்ட் 06ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இரண்டாவது நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.

பாராளுமன்றம் கூடும் நான்கு நாட்களிலும் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

டயகம சிறுமி மரணம் – ரிஷாத்தின் மனைவி உட்பட மூவர் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த தினம் உயிரழந்திருந்தார்.

குறித்த மரணம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய ​நேற்றைய தினம் பொரளை பொலிஸார் ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

Posted in Uncategorized
Velikkadai Sirai Padukolai

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவேந்த மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு!

ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூரத் தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.

சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து ஒரு குழுவினருக்கு இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு தரப்பினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிஸார் மன்றுக்கு தெரிவித்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த பின்னர், மூதூர் நீதிவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத் தலைவர் தேவநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேஷபிள்ளை குகன் உள்ளிட்டோருக்குத் தடை உத்தரவு கட்டளையை வழங்கினார்.

1983ஆம் ஆண்டு, ஜூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இதில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; காயப்படுத்தப்பட்டனர்; காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன – சூறையாடப்பட்டன. தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை கண்டனத்துக்குரியது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சியா? ரெலோ கேள்வி

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க தேவையில்லை. சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் என ரெலோ கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவிக்கையில்,

“சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பலதரப்புடக்கள் இந்த சட்டத்தினால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே வீழ்ந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என புதிய நிதி அமைச்சர் நாட்டுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இந்த சட்டத்தை நீக்காது விட்டால் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை வழங்க பட மாட்டாது. எமது ஏற்றுமதியும் அந்நிய செலாவணியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அப்படியான அபாய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் பரிந்துரையை ஜனாதிபதி ஆணைக்குழு வழங்குவது எதற்காக?

ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சி யாக அமைவது போல் இருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால் எமது தமிழினம் சொல்லொணாத கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறது. இன்றும் பல தசாப்தங்களாக விசாரணையோ, வழக்குகளோ, பிணையோ இன்றி பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலம்மிக்க இளைய சமுதாயம் இந்த நாட்டை விட்டு குடி பெயர்வதற்கும் இன குடிப்பரம்பலில் சிதைவை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

சட்டவிரோதமான கைதுகள், காலவரையறை அற்ற தடுப்பு, பிணை வழங்காமை, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை என்று அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவே அமைந்திருக்கிறது. நியாயமான எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து எமது இளம் சமுதாயத்தை வகை தொகையின்றி கைது செய்ததோடு சித்திரவதைக்கும் உள்ளாக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக எம்முடைய போராட்டத்தை தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று தமது தோல்விகளை மறைப்பதற்கும் தமக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முற்படுபவர்களை கைது செய்வதற்கும் அரசியல் பழிவாங்கல்களை அரங்கேற்றுவதற்குமே இந்த சட்டம் பயன்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கப்படாத போற்றப்படாத இந்த அரசாங்கத்தில், இந்த சட்டத்தில் சிறிய மாற்றங்களின் மூலம் ஜனநாயகத்தை பேணிவிடலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அப்பாவி மக்களை படுகொலை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அதேவேளை தம்முடைய இனத்திற்காகவும் மக்களுக்காகவும் நியாயமாக குரல் கொடுப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதற்கு வழிவகுக்கும் அரசாங்கத்திற்கு பயங்கர வாத தடுப்பு சட்டத்துக்கு பரிந்துரைக்கும் மாற்றங்கள் எந்த விதத்தில் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் ?

இதே அரசாங்கத்தில் பதவி வகித்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கடந்த காலங்களில் அதே சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டதை அல்லது தடுத்து வைக்கப்பட்டு வருவதை இந்த நாடு நன்கு அறியும்.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் அராஜகத்தைத்தையும் சர்வாதிகாரத்தையும் நிலை நிறுத்த பயன்படும் இந்த சட்டத்தில், எந்த மாற்றங்களும் இதன் அடிப்படை நோக்கத்தை சீர்செய்து விடப்போவதில்லை. ஆகவே முற்றாக இந்த சட்டமூலம் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

அனைத்து தரப்பினரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருமித்து செயலாற்ற கோருகிறோம். அதிகாரங்களுக்கும் அற்ப சலுகைகளுக்காகவும் இந்த சட்டத்திற்கு நொடர்ந்தும் ஆதரவு வழங்குபவர்கள் அறிந்தோ அறியாமலோ உங்களுக்கும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் சிதை மூட்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

யாழிற்கு புதிய இந்தியத் துணைத் தூதுவர் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்தியத் துணைத் தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கண்டியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தற்போது கடமையாற்றி வரும் நிலையில் விரைவில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேவேளை, இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆர். பாலச்சந்திரன் சிறப்பாக கடமையாற்றி வந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்க குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து கலந்துரையாடி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பிலான நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.