வருட இறுதியில் அல்லது ஜனவரியில் மாகாண சபை தேர்தல்?

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மற்றுமொரு தகவலும் கூறுகின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. முறைப்படி வருகின்ற ஜனவரி மாதத்திலேயே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று பரவலை 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து, அதனூடாக மக்களின் மனங்களை வென்றெடுக்கவும், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் பல நிவாரணங்களை அறிவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

அதனூடாக தேர்தல் வெற்றியைப் பதிவுசெய்ய வாய்ப்பிருப்பதாக அரச உயர்மட்டத்திற்கு ஆலோசனையும் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,

பஷில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாக இந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருப்பதாக கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- ரெலோ செயலாளர் ஜனா எம்.பிசாடல் !

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சுகாதார பிரிவினர், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.

இதேவேளை முதலாவது, இரண்டாவது அலையினை கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தினை மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டவில்லை.

மேலும் இத்தகைய கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்யமுடியாத வகையில் அவர்களின் கைகள் கூட இராணுவத்தினரால் கட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.

மத்திய அரசாங்கத்தில் கூட துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள், கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் உள்ளனர்.

கொவிட் செயலணிக்கு பொறுப்பாக இராணுவத் தளபதியை நியமித்தது மாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்டத்தினையும் கண்காணிப்பதற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தன் ஊடாக சுகாதார பிரிவினருக்கு கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சில தடைகளும் ஏற்பட்டுள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாயாற்றில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்-சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தல்-ரெலோ விஜிந்தன்!

நாயாற்று பகுதியில் பருவகால கடற்தொழிலுக்காக வந்த மீனவர்கள் சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தலையும் சவாலினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் முல்லைத்தீவில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயநிலையினையும் தோற்றிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று 02.07.21 முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர்தெரிவிக்கையில்

சபையின் எல்லைக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் பருவகால மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருவது வளமையாக மாறிவிட்டது.
இவர்களில் 5பேருக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கொவிட் 19 இன் உச்சம் எங்கள் பிரதேசங்களை பாதிப்படைய வைக்கின்ற நேரங்களில் நாங்கள் பயணங்களை மேற்கொண்டுள்ளோம் ஆயிரம் வரையான சிறுவர்கள் தொடக்கம் பெண்கள் முதியவர்கள் வரை எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றோம் ஆனால் சுகாதார துறைக்கு அச்சுறுத்தலான நிலமையாகவே காணப்படுகின்றது.
அங்கு உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்கின்ற நிலையும் காணப்படவில்லை சமூக இடைவெளியும் காணப்படவில்லை அங்கு பல்வேறு பட்ட மாவட்டங்களில் இருந்து மாகாணங்களில் இருந்தும் வந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

சுகாதார துறையினரால் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் குறித்த பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது இது முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு அச்சுறுத்தலாக காண்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டவிரோதமான மீன்பிடி நடைபெற்று வருகின்றது அங்கு எந்த பாதுகாப்பும் அற்றநிலையில் நெருக்கமாக வாடிகள் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்கு வந்திருப்பவர்கள் தொடர்பில் எந்த அமைப்புக்களிடமும் பதிவுகள் எதுவும் இல்லை சுகாதாரதுறைக்கு மிகவும் அச்சுறுத்தலாகத்தான் காணப்படுகின்றது.

இதனை உடனடியாக அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ஒரு கொரோனா கொத்தணி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வன்னி மக்களுக்கும் வழங்க வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்பி

கொரோனா தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வன்னி மக்களுக்கும் ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசிகள் இதுவரை வன்னி மக்களுக்கு ஏற்றப்படாமை தொடர்பாக அவர் இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்று நாட்டில் பரவலாக காணப்படும் நிலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனினும் தற்போது இந்நடவடிக்கையில் அரசின்ற ஈடுபாடு போதுமானதாக காணப்படாமையினாலேயே பல பகுதிகளிலும் மக்கள் முதலாவது தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு சென்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி பிரதேசத்தில் இதுவரை எந்த ஒரு பொது மகனுக்கும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சுகாதார பகுதியினருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பொது மக்களுக்கு வழங்க பாரபட்சம் காட்டி வரும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வட மாகாணத்தின் நுழைவாயிலாக காணப்படும் வவுனியா மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவது கட்டாயமாகும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

அதற்குமப்பால் இன்று வவுனியாவில் கொரனா தொற்றாளர்கள் விகிதாசார அடிப்படையில் பார்க்கின்ற போது அதிகமாக காணப்படுகின்றனர். கொரனா மரணங்கள் 19 வரை அதிகரித்துள்ளது. இது அம் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று மன்னார் மாவட்டமும் இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வைரஸ் பரவல் மீனவர்கள் மூலம் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள மாவட்டமாக காணப்படுகின்றது. ஏனவே இங்குள்ள மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

முல்லைத்தீவில் மீன் வியாபாரத்திற்காக பல மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து செல்வதனாலும் குறித்த மாவட்டம் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண எல்லைகளை கொண்டு காணப்படுவதனாலும் ஏனைய மாகாண மக்கள் பல்வேறு தேவைகளின் பொருட்டு இங்கு வந்து செல்வதனாலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு குறித்த தடுப்பூசி கட்டாயமாக செல்லுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையின்றி காணப்படுகின்றமையை பார்க்கும்போது பாரபட்சமாக செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனா அகலக்கால் பதிப்பு, தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும்-ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு தமிழரின் அரசியல் அபிலாசைகளை சிதைத்துவிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவில் என்றுமில்லாத வகையில் சீனாவின் உட் பிரவேசம் ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கேள்விக்குள்ளாக்கும் என்ற அபாயம் உருவாகி வருகின்றது. காரணம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் கடந்த காலங்களை விட ஏற்பட்ட பாரிய மாற்றம்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்தகாலங்களில் அணிசேராக் கொள்கையின் கீழ் இந்திய மேற்குலக நாடுகளை அனுசரித்த வெளியுறவுக் கொள்கையில் இருந்தனர் ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சீன சார்புக் கொள்கையை முதன்மைப் படுத்தியுள்ளனர். இதனால் இந்திய அமெரிக்க நாடுகள் இலங்கை தொடர்பாக புதிய வெளியுறவுக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை இலங்கையில் சீனாவின் அகலக்கால் பதிப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தி உள்ளது என இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட பலர் வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். .

அந்த வகையில் இலங்கையின் செயற்பாடுகளை அவதானிப்பதாக தற்போது சிறிது காலமாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தலைவர்கள் கூறி வருகின்றனர் அவர்களின் உரைகளின் வெளிப்பாடு இந்தியா இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் ஈடுபட்டுள்ளது என்பதை உணர முடிகின்றது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மத்திய அரசை முழுமையாக தாம் கையாள வேண்டும் என்ற வகையிலேதான் நகர்வுகள் இருக்கின்றன. தமிழர் விடையத்தை அரசியல் அழுத்தங்களுக்கு இடை இடையே உச்சரிப்பதாகவே உள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தங்கள் பக்கம் இலங்கை அரசாங்கத்தை வளைத்துப் போடும் வியூகத்தில் அழுத்தங்கள்,திட்டங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தென்னிலங்கையில் இருந்து தமிழர் தாயகத்தின் வடக்கு கிழக்கு நோக்கி மிக வேகமாக நகர்த்தப்படுகின்றன இத் திட்டங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழி முற்றாக புறக்கணிக்கப் பட்டதுடன் சீன தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதுடன் சீன நிறுவனங்களின் பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக மாறுவதால் நீண்ட காலத்தில் தமிழர்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவிடம் பெற்ற நீண்டகாலக் கடன்கள் 99 வருட குத்தகைத் திட்டங்கள் யாவும் நான்கு தலைமுறைக்கு சீனர்களை இலங்கைத் தீவில் நிலைபெறச் செய்யவுள்ளது.

இவ்வாறு சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு பெரும் தலை வலியாக மாறி உள்ளமையால் இலங்கை அரசுடன் இணைந்து பயணிக்கும் வியூகங்களையே இந்திய நகர்த்த ஆரம்பித்துள்ளது உதாரணமாக கடந்த மாதம் இலங்கை இந்திய வர்த்தக உறவுகளை விரிவாக்குதல் தொடர்பான மெய்நகர் உரையாடலில் கலந்துரையாடப்பட்ட விடையங்கள்.

எனவே சீனாவின் இலங்கை மீதான அகலக்கால் பதிப்பு எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களின் மறுக்கப்பட்ட அரசியல் அபிலாசைகள் சிதைத்துவிடும் அபாயநிலை உள்ளது” என்றார்.

Posted in Uncategorized

பணம் வெளியேறுவதை தடுக்க அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் மஹிந்த !

இலங்கையில் இருந்து பணம் வெளியேற்றப்படுவதை தடுக்க நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால், அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவை அவர்களின் நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான வர்த்தமானியே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடுப்புச் சட்டதை மீளாய்வு செய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தெரிவித்துள்ளது என்ன ?

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வழக்கமான ஈடுபாடு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக, நல்லிணக்கத்தின் குறிப்பிட்ட துறைகளிலான முன்னேற்றம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள், கடந்தகால நடைமுறைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தல் உட்பட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, ஜூன் 25 ஆம் திகதி வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் முன்னுரிமையை மீளாய்வு செய்வதற்காகவும், ஒரு அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காகவும், அமைச்சரவை துணைக்குழுவுக்கு உதவும் முகமாக அமைச்சரவை துணைக்குழு மற்றும் அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்காகவும் ஜூன் 21 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நோக்கத்திற்காக, நீதித்துறை, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், பொது பாதுகாப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், இலங்கை பொலிஸ் மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிநிதிளுடன் ஜூன் 24 ஆம் திகதி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற மற்றும் தண்டனை அனுபவித்த பதினாறு முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு, அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் படி ஜூன் 24 ஆம் திகதி ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், நீண்ட காலமாக நீதித்துறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நல்லிணக்க வழிமுறைகளில் முன்னேற்றம் குறித்து தெரிவிக்கையில், 1,230 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக, ஜூன் மாதத்தில் ரூபா 79 மில்லியன் தொகையை இழப்பீட்டு அலுவலகத்திற்கு விடுவித்தமையை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.

3,389 மொத்த இழப்பீட்டு உரிமைக்கோரல்களில், 1,451 இழப்பீட்டு உரிமைக்கோரல்களைத் தீர்ப்பதற்காக மேலதிகமாக ரூபா. 80 மில்லியன் தொகை ஜூன் 29 ஆம் திகதி ஒதுக்கப்பட்டது.

வழக்கமான, நல்ல மற்றும் பன்முகத்தன்மையானதொரு உரையாடலை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வருகின்றது.

27 சர்வதேச சாசனங்களுடன் நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி.+ வரிச்சலுகையை மீளாய்வு செய்வதில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் இடையில் உள்ள ஆக்கபூர்வமான ஒத்துழைப்பும் இதில் உள்ளடங்கும்.

இது சம்பந்தமாக, 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி.பிளஸ் கண்காணிப்பு செயற்பாட்டில் இலங்கையின் மூன்றாவது சுழற்சி மீளாய்வு நடைபெற்று வருகின்றது.

இந்த செயன்முறையின் ஒரு பகுதியாக, இராஜதந்திர இணைப்புக்களின் மூலமாக, ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவைக் கடைப்பிடித்து, தற்போதைய ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்பு சுழற்சியில் பின்தொடர்தல் கேள்விகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் விரிவான பதிலை வெளிநாட்டு அமைச்சு ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளது. 26 வரிசை அமைச்சுக்கள் / இராஜாங்க அமைச்சுக்கள் / முகவர் நிலையங்கள் மற்றும் ஆணைக்குழுக்களுடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு அமைச்சு பதிலளித்தது. மூன்றாம் சுழற்சிக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் கண்காணிப்புக் குழுவினர் 2021 செப்டம்பர் / அக்டோபர் மாதங்களில் பரஸ்பரம் வசதியான திகதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வழக்கமான ஈடுபாட்டின் பிரகாரம், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட திகதிகளில் ஆட்சி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி தொடர்பான செயற்குழுவைக் கூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மீளாய்வு செய்வதற்காக 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது அமர்வை ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசித்து கூட்டுவதற்கு வெளிநாட்டு அமைச்சு எதிர்பார்க்கின்றது.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய துறைகளில் நாட்டின் கணிசமான முன்னேற்றத்தை நிரூபிக்கும் அதே வேளையில், இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதன் நெருக்கமான மற்றும் நல்லுறவு உரையாடலைத் தொடரும்.

இலங்கையின் இணைந்த ஆடை சங்க மன்றம், இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் சந்தித்து, நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் ஜி.எஸ்.பி. + வரிச்சலுகையை தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணுவதை உறுதி செய்வதிலான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான அரசாங்கத்தின் ஈடுபாட்டைப் புதுப்பிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட வணிக சபைகளுடனான சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கையுடனான ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்படும்: சீன தூதரகம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம் பெற்றதன் பின்னரான கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் செயற்பட்டு வந்துள்ளன. தற்போதும் பல்வேறு சவால்கள் காணப்படும் நிலையில், அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தப்படும் என்று சீனத்தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 1921 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம் திகதி உதயமானது. ஆரம்பத்தில் சுமார் 50 உறுப்பினர்களைக் கொண்டிருந்த அந்தக் கட்சி கடந்த நூறு ஆண்டுகளில் சுமார் 91 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி உலகின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் பெருமளவில் பங்களிப்புச்செய்யக்கூடிய நாடாக சீனா சிறந்த முறையில் வழிநடத்திச் செல்கின்றது.

கடந்த 100 வருடகாலத்தில் சுதந்திரத்திற்காகவும் இறையாண்மைக்காகவும் போராடிய தருணங்களிலும் ஒற்றுமையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சந்தர்ப்பங்களிலும் சீனாவும் இலங்கையும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாகவும் பக்கபலமாகவும் துணைநின்று செயற்பட்டு வந்துள்ளன. தற்போது பல்வேறு சவால்கள் காணப்பட்டாலும், அதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையே மேலும் வலுப்படுத்தப்படும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைத்திருப்பும் சீன – இலங்கை நட்புறவும் நெடுங்காலத்திற்குத் தொடரவேண்டும் என்று சீனத்தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வருடப்பூர்த்தியை முன்னிட்டு இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஸென்ஹொங் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ‘பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த சீனாவில் 1921 ஆம் ஆண்டு ஜுலை முதலாம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சி தோற்றம்பெற்றது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் உருவாக்கமானது மிகவும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றது. நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு கடந்த 72 ஆண்டுகளாக சீனாவை ஆட்சிசெய்துவரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியானது ஆரம்பத்தில் 50 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்து, இப்போது 91 மில்லியன் உறுப்பினர்களுடன் விரிவடைந்திருக்கிறது’ என்று சீனத்தூதுவர் விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் வறுமையிலிருந்தும் பின்னடைவிலிருந்தும் சீனா முழுமையாக மீட்சி பெற்றிருக்கிறது. அதுமாத்திரமன்றி வலுவான தேசியத்துவத்துடன் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக்கொண்ட நாடாகவும் எழுச்சியடைந்திருக்கிறது என்றும் குய் ஸென்ஹொங் தெரிவித்துள்ளார். கடந்த 100 வருடகாலத்தில் சீன கம்யூனிஸட் கட்சியானது இலங்கை உள்ளிட்ட மேலும் பலநாடுகளில் உள்ள அரசியல்கட்சிகளுடன் தொடர்புகளைப் பேணிவந்திருக்கின்றது. அதேவேளை சமாதானத்தையும் அபிவிருத்தியையும் விரும்பும் சர்வதேச நாடுகளுக்கு சீன கம்யூனிஸட் கட்சி சிறந்த வழிகாட்டலை வழங்கியிருக்கின்றது. உலகளாவிய நிலைமைகள் எவ்வாறு மாற்றமடைந்தாலும், சீனாவானது எப்போதும் வரலாற்றையும் மக்களையும் முன்னிறுத்தி சரியான பக்கத்திலேயே நின்றிருக்கிறது. பூகோள அமைதியை நிலைநாட்டுகின்ற, உலகளாவிய அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்கின்ற நாடாகவே சீனா இருந்திருக்கிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வருடப்பூர்த்தியை முன்னிட்டு 132 பக்கங்களைக்கொண்ட விசேட பத்திரிகை இணைப்பொன்று சீனத்தூதரகத்தினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் சீனர்களின் ஆதிக்கம் இந்தியாவை பாதிக்கும் -ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில்,

கேள்வி:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டதன் பின்புலம் என்னவாக இருக்கும் என்று கருதுகின்றீர்கள்?

பதில் :கடந்த பொசன் விடுமுறையின் போது ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட சில கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அதிலே தமிழ் அரசியற் கைதிகள் பதினாறு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த அரசியற் கைதிகள் விடுதலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இலங்கைக்கு மேற்குலக நாடுகளில் இருந்து பலவிதமான அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது. காரணம் இலங்கை அரசு சீனாவை முற்றுமுழுதாக நம்பி சீனாவின் வழித்தடத்தில், சீனாவின் ஒரு மாகாணம் போன்று செயற்படுவது. மேற்குலக நாடுகளுக்கோ, இந்தியாவிற்கோ விரும்பத்தகாத செயலாகவே பார்க்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அமெரிக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிரான, தமிழ் மக்களுக்கு சாதகமான வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்மொழியப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாக ஐரோப்பிய பாராளுமன்றத்திலே இலங்கையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை 628 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கின்றது. பங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கடந்த 22ம் திகதி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது. இது உண்மையிலேயே சம்மந்தம் இல்லாத அமைச்சரினால் சொல்லப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் சொல்ல வேண்டியதை இளைஞர் விளையாட்டு அமைச்சர் அறிக்கையாக விட்டிருந்தார்.

இதற்கிடையில்தான் கடந்த 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு அது பிற்போடப்பட்டது. 22ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக அமைச்சர் பேசுகின்றார். 24ம் திகதி அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெறுகின்றது என்றால் இரண்டு நாட்களுக்குள் அந்த அரசியற் கைதிகளின் விபரங்கள், யார் யார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் சேகரித்திருக்க முடியுமா?

கடந்த காலங்களிலே ஒட்டுமொத்தமாக பயங்கரவாதத் தடைச்சட்த்தீன் கீழ் சமூகவளைத்தளங்களில் பதவிடடார்கள், முள்ளவாய்க்காலில் விளக்கேற்றினார்கள் என்பதற்காகக் கைது செய்யபப்பட்டவர்களைத் தவிர நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக 93 பேர் சிறைக்கைதிகளாக இருக்கும் போது அதில் 16 பேரைத் தெரிவு செய்திருக்க முடியாது என்பது எனது கருத்து.

இவ்வாறு விடுதலை செய்யப்படும் அரசியற் கைதிகளின் தெரிவு 16ம் திகதி கூட்டமைப்பின் சந்திப்பிற்கு முன்னமே இடம்பெற்றிருக்க வேண்டும். பெயரளவிலே 22அம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை விட்டு 24ம் திகதி அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும்.

எனவேதான் 16ம் திகதி ஜனாதிபதி கூட்டமைப்பினைச் சந்தித்த பின்னர் இந்தக் கைதிகளின் விடுதலை நடைபெற்றிருந்தால் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையின் நிமித்தம், கூட்டமைப்பின் அழுத்தத்தின் காரணமாக இந்தக் கைதிகள் விடுதலையானார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படும். அதனால் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியாகச் செல்வாக்கு உயரலாம் என்ற காரணத்தினால் தான் கூட்டமைப்புடனான சந்திப்பினைப் பிற்போட்டு அரசியற் கைதிகளில் விடுதலையின் பின்னர் ஒரு திகதி வழங்க ஜனாதிபதி முற்பட்டிருக்கின்றார் என்று கருதுகின்றேன்.

கேள்வி :திஸ்ஸமகராம வாவி துப்பரவுப் பணியில் ஈடுபடும் சீனர்கள் சீன இராணுவ உடைக்கு ஒப்பான உடையணித்திருந்தமை தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் கருத்து தொடர்பில் தங்களின் நிலைப்பாடு?

பதில் :தற்போது பேசுபொருளாக இந்த நாட்டிலே இருப்பதும், இந்த நாட்டைப் படுகுழிக்குள் தள்ளுவதுமான ஒரு வேலைத்திட்டமாகத்தான் சீனர்களின் வருகையும் அதையொட்டி பல பிரதேசங்களில் அவர்களது வேலைத்திட்டங்களும் இடம்பெறுகின்றன. திஸ்ஸவாவி தற்போது தூர்வாரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வேலைத்திட்டத்திலே சீனர்கள் பங்குபெறுகின்றார்கள் சீன இராணுவத்தின் உடையை ஒட்டிய சீருடைகள் அவர்களால் பாவிக்கப்பட்டிருப்பதாக பல ஊடகங்களில் பல பிரமுகர்களும் அறிக்கை விட்டிருக்கின்றார்கள்.

நேரடியாக நாங்களும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. பாதுகாப்புச் செயலாளரும் சீனத் துதரகத்துடன் இது தொடர்பில் பேசியிருப்பதாகவும், அவர்கள் இரணுவத்தினர் இல்லை, இராணுவத்தின் உடையை ஒத்த உடையை அணித்திருக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பாதுகாப்புச் செயலாளர் இனிமேல் அந்தச் சீருடை அணியக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்.

இதிலிருந்து ஒன்று புலப்படுகின்றது. அவர்கள் ஏதொவொரு வகையிலான சீருடையை அணிந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சீன இராணுவத்தினராகவும் இருக்கலாம் எனவும் எண்ணத் தோணுகின்றது.

இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்து இந்த நாட்டின் மூத்த குடிகளான தமிழ்க் குடிகள் வடக்கு கிழக்கிலே வாழ்ந்து கொண்டிருக்கும் போது யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்கள் மாநகரசபை எல்லைக்குள் வாகன போக்குவரத்து காவல் நிமித்தம் புலிகளின் சீருடையுடன் ஒத்த சீருடையினை அறிமுகப்படுத்தினார் என்பதற்காக மேயராக இருந்தும் அவர் கைது செய்யப்பட்டார். அதுபோல் அந்த ஊழியர்களும் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிவரை விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

ஆனால் நமது நாட்டில் சீன இராணுவ சீருடைக்கு ஒப்பான சீருடை அணிந்திருந்தவர்களுக்கோ அல்லது அவர்கள் வேலை செய்யும் அந்த வேலைத்தளத்தின் மேலதிகாரிகளுக்கோ எந்தவித விசாரணையும் இல்லை, கேள்வியும் இல்லை. இந்த நாட்டில் சட்டங்கள் எவ்வாறெல்லாம் அமுல்ப்படுத்தப்படுகின்றது.

இவற்றைப் பார்க்கும் போது சீனர்களுக்கு எந்தளவிற்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதற்கும் மேலாக தெற்கிலே அம்பாந்தோட்டையிலே தொடங்கி திஸ்ஸமகாராம வாவியிலே தூர்வாரி கொழும்பு துறைமுக நகரத்தை முற்றுழுதாகக் கொடுத்து, கொழும்பில் இருக்கும் தொண்மை வாய்ந்த கட்டிடங்கள், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையாகக் கட்டப்பட்ட கட்டிடம் போன்றனவற்றை ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் போது வடக்கு கிழக்கிலே வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையையும் கூட சீனர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கிளிநொச்சி கௌதாரிமுனையிலே சீனர்களினால் கடலட்டை பண்ணையொன்று நடாத்தப்படுகின்றது. அதனை நேரில் சென்று எமது அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் பார்த்திருக்கின்றார்கள். மேலும் வடபகுதி கடல்களிலே கடலட்டை பண்ணைகள் நிறுவ இருப்பதாகவும் நாங்கள் அறிகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஒட்டுமொத்த நாட்டையே சீனர்களுக்கு கொடுக்கும் ஒரு நிலைமை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது இந்த நாட்டை ஒரு அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

நிச்சயமாக வடக்கு கிழக்கிலே சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடம்கொடுக்கின்றது என்றால் அது நேரடியாக இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் என்ற அடிப்படையில் நேரடியாக இந்தியாவின் பகையையும் சம்பாதிக்க கூடிய ஒரு நிலையைத் தான் இந்த அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

கேள்வி :வடக்கில் சீனாவின் ஆதிக்கம் மிகக் கூடுதலாக இருக்கின்றது. இது தொடர்பில் இந்தியா மௌனமாக இருக்கின்றது. இந்த விடயத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :இந்தியா இதுவரைக்கும் நேரடியாக இலங்கையுடன் மோதவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இல்லையென்று நான் நினைக்கின்றேன். இலங்கையின் மூத்த இராஜதந்திரியான கயான் ஜயதிலக, இலங்கையில் சீனர்களின் ஆதிக்கத்தை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இதற்காக இந்தியா ஒரு விசேட தூதுவரை நியமிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்.

எனது பார்வையில் அமெரிக்க காங்கிரஸில் கொண்டு வரப்பட்ட பிரேரணையாக இருந்தாலும் சரி ஐரோப்பிய பாராளுமன்றத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான பிரேரணையாக இருந்தாலும் சரி அவை இந்தியாவின் பின்புலத்தில்தான் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக இலங்கைக்கு அவ்வப்போது சில செய்திகளையும் இந்தியா சொல்லிக் கொண்டிருக்கின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் எரிந்து கொண்டிருந்த நேரம் இந்தியாவிடம் உதவி கேட்டிருந்தார்கள். அந்தக் கப்பல் எரியத் தொடங்கி ஐந்து நாட்களின் பின்புதான் இந்தியா உதவிக்கு வந்தது. ஒன்றரை நாட்களுக்குள் அந்தத் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுடன் இலங்கை உண்மையான நட்பைப் பேணியிருந்தால் இந்தக் கடல்வளம் இந்தளவிற்கு அழிந்திருக்காது. அதனை இந்தியா செயல்முறையிலே காட்டியிருக்கின்றது.

ஏனெனில் ஒருமுறை கிழக்குக் கடற்பரைப்பில் சங்கமன்கண்டிக்கு மேலே ஒரு கப்பல் தீப்பற்றி எரிந்த போது இந்தியாவிடயம் உதவி கேட்க உடனடியாக இந்தியா வந்து அந்தத் தீப்பரவலைக் கட்டுப்பாட்டிருற்குள் கொண்டு வந்து கடல்வளத்தைப் பாதுகாத்தது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்குதவாது என்பது இதைதத்தான்.

இலங்கை சீனர்களை நம்பியிருக்கும் போது எதிர்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் போது இந்தியா பார்த்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகலாம். ஏனெனில் 1971ம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியானது இந்தியாவினால்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று உண்மையைச் சொல்லப் போனால் இந்தியாவின் உதவியில்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கையினால் தோற்கடித்திருக்கவும் முடியாது.

இவற்றையெல்லாம் மறந்துதான் இன்று இலங்கை அரசு இந்தியாவிற்கு எதிராக சீனாவை இந்த நாட்டுக்குள் உள்வாங்கி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று சொல்ல முடிhது உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. சிலவேளைகளில் அது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாகக் கூட இருக்கலாம்.

கேள்வி :இந்தியத் தூதுவருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த போது சீன ஆக்கிரிப்பு தொடர்பில் ஏதும் பேச்சுகள் இடம்பெற்றதா?

பதில்:வெளிப்படையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தப் பேச்சுக்ள் நடைபெற்றதாக நான் அறியவில்லை. இந்திய தூதுவருடன் நடைபெற்ற பேச்சுகளில் 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும், இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் அதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமையாக, ஒரே குரலாக ஒலிக்க வேண்டும் போன்ற விடயங்கள் தான் பேசப்பட்டன.

கேள்வி :வடக்கு கிழக்கில் உள்ள வளங்களை அரசாங்கம் சீனாவுக்கு வழங்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு ஏதும் முறைப்பாடுகள் செய்துள்ளதா?

பதில் :இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்ய வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் வளங்கள் சூரையாடப்பட்டு, தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் அவை தொடர்பில் நாங்கள் வெளியுலகிற்குக் கொண்டு வருவோம். பேச வேண்டிய இடங்களில் பேசுவோம்.இந்த விடயத்தில் எங்களையும் விட இந்தியா மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் என்பது யாவரும் அறிந்த விடயம்.

கேள்வி :சேதனப் பசளைத் திட்டம் தெடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் :சேதனப்பசளைத் திட்டமென்பது என்னைப் பொருத்தவரையில் வரவேற்கத்தக்கது. ஏனெனில் நஞ்சற்ற உணவுகளுக்குப் போக வேண்டிய தேவை இருக்கின்றது. வெளிநாடுகளிலும் இந்த விடயங்கள் கையாளப்படுகின்றன. சேதனப்பசளை முறைமைக்கு நாங்கள் மாற வேண்டும். ஆனால் அந்த சேதனப்பசளை பூரணமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அத்துடன், சரியான வழிகாட்டலின் மூலமாக விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆனால், திடீரென இரசாயணப் பசளை இறக்குமதியை நிறுத்தியமையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் போகத்திற்கு இரசாயணப் பசளை கிடைக்கும் என்று அரசாங்கம் கூறினாலும் அதனைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் இரண்டு, மூன்று மடங்கு விலையில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சேதனப்பசளை முறைமைக்கு மக்களைக் கொண்டுவந்துவிட்டு இந்த அரசாங்கம் இரசாயணப் பசளையை நிறுத்தியிருக்கலாம். அதற்குரிய தன்னிறைவு அடையாமல் இரசாயணப் பசளையை நிறுத்தியமையானது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அது மாத்திரமல்லாமல் பல பொருட்களின் இறக்குமதியைக் கூட இந்த அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படாத, மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குரிய பொருட்களின் இறக்குமதிகள் நிறுத்தியமையால் மக்கள் அதிகம் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முன்னெச்சரிக்கை இல்லாமல், எமது மக்களை வளப்டுத்தாமல், சேதனப்பசளை முறைமைக்கு மாற்றாமல் தன்னிச்சையாக இந்த இரசாயணப் பசளையை நிறுத்தியது ஒரு முட்டாள்தனமான செயல். அதனைப் படிப்படியாகச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் மக்கள் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள்.

மக்களை படுகுழியில் தள்ளுகின்ற வேலையைத் தான் இந்த அரசாங்கம் தொடர்ச்சியாகச் செய்கின்றது. கொவிட் பாதிப்பு ஒருபக்கம், எரிபொருள் விலையேற்றம் ஒருபுறம், பசளையற்ற விசாயிகளின் பாதிப்பு ஒருபக்கம், மீனவர்களின் பிரச்சினை ஒருபுறம் என மக்களை துன்புறுத்திக் கொண்டு வருகின்றது.

கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டை வளப்படுத்துவதற்காக, தன்னை ஒரு அரசனாகச் சித்தரித்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வந்த பிதாமகராகக் கூறிக் கொண்டு இந்த ஆட்சியைக் கைப்பற்றியவர். இன்று அத்தனை மக்களின் சாபக்கேட்டுக்கும் உள்ளான ஒரு மனிதராக மாறியிருக்கின்றார்.

Posted in Uncategorized

தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சிக்கு வரவேற்பு!

தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியினை வரவேற்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான குமாராசாமி மதுசுதன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஒன்றுபடுத்தல்கள், பத்துக் கட்சிக் கூட்டு என இடம்பெற்றாலும் அவை பின்னர் பிசுபிசுத்து போயின. தற்போது கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அந்த முயற்சியினைக் கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆரம்பகால விடுதலை இயக்கம் மற்றும் கூட்டமைப்பு உருவாக்கம் முதல் அதில் இன்று வரை ஒற்றுமையாகப் பயணிக்கும் ஒரே இயக்கமாக அது அமைவதால் அந்த ஒற்றுமை முயற்சி பெரிதும் வெற்றியளிக்க கூடியது.

மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளில் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது தமிழர் நலன்களுக்காக இன்றியமையாதது.

இந்த ஒற்றுமை முயற்சிகள் தள்ளிப் போனாலும் இறுதியில் தமிழர்களின் நலனுக்காக வெற்றியளிக்க வாழ்த்துகிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார் .