கொரோனா பலி எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் இதுவரை 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 202,348 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,851 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166,132 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் இயற்கையின் சீற்றம் : 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நிர்க்கதி

நாட்டில் கடந்த மூன்று நாட்களாக சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில் மண்சரிவு மற்றும் வெள்ளத்தினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளனர்.

இவ்வாறு சீரற்ற காலநிலையால் இதுவரையில் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பிரதேச செயலகப்பிரிவில் தெவனகல கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

மண் சரிவில் சிக்கிய இக்குடும்பத்தைச் சேர்ந்த 57 வயதுடைய தந்தை, 56 வயதுடைய தாய் மற்றும் 23 வயதுடைய மகள் மற்றும் 29 வயதுடைய மகன் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்க்கப்பட்டனர். மேற்கு பாதுகாப்புபடை தலைமையகத்தின் இராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை கேகாலை மாவட்டம் , வரகாப்பொல பிரதேச செயலகப்பிரிவில் அல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடொன்றில் நேற்று மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கி காணாமல் போன 72 வயதுடைய ஆணொருவரும் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த வீட்டிலுள்ள ஏனைய அங்கத்தவர்கள் இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்க்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று 4 பேர் பலி

நேற்று வெள்ளிக்கிழமை சீரற்ற காலநிலையால் 4 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி அயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மண் சரிவில் சிக்கி உயிரிழந்ததோடு , புத்தளம் – மாம்பே மகுணுவட்டவன கிராம உத்தியோகத்தர் பிரிவில் 21 வயதுடைய இளைஞன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதே போன்று களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதோடு , இரத்தினபுரி – அயகம கெப்பிட்டிபொல கிராம உத்தியோகத்தர் பிரிவில் 43 வயதுடைய ஆணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

காணாமல் போனார் மீட்க்கப்படவில்லை

நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தில் மஹவெள பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். எனினும் குறித்த சிறுவன் நேற்று சனிக்கிழமை மாலை வரை மீட்க்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இரத்தினபுரி மாவட்டம் – அயகம , மெதபொல பிரதேசத்தில் மண்சரிவில் சிக்கி காணாமல் போன நபரும் நேற்று மாலை வரை மீட்க்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

2,19,027 பேர் பாதிப்பு

அதற்கமைய இன்று மாலை வரை சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 45 380 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 19,027 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை 1,275 குடும்பங்களைச் சேர்ந்த 5375 நபர்கள் 39 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு , 612 குடும்பங்களைச் சேர்ந்த 2,471 நபர்கள் பாதுகாப்பிற்காக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு மண்சரிவு உள்ளிட்டவற்றால் இதுவரையில் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு , 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர, அகலவத்த, மத்துகம, வலல்லாவிட்ட மற்றும் ஹொரனை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்த்தில் எஹலியகொட, கலவான, அயகம, குருவிட்ட எலபாத்த, நிவித்திகல, கிரியெல்ல, இரத்தினபுரி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்பத்தர பிரதேச செயலப் பிரிவு, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சீதாவக்க பிரதேச செயலக பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, மாவனெல்ல, கேகாலை, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகல, புளத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, ரம்புக்கனை, அரநாயக்க மற்றும் வரகாப்பொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கும் தேசிய கட்டட ஆராய்வு நிறுவகம் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை நீடித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கங்க, பல்லேபொல மற்றும் யட்டவத்த ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் , நுவரெலியாவில் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவிற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

களனி கங்கையை அண்மித்த பகுதிகளில் 125 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதால் இன்று மாலை 8.30 மீற்றர் வரை உயர்வடைந்திருந்த நீர்மட்டம் 9 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மேலும் அதிகரிக்கும் என்று நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களனி கங்கையை அண்மித்த தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவாக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கும் வெள்ளம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அத்தனகலு ஓயாவில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அத்தனகலுஓயா மற்றும் உருவல்ஓயாவை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும்.

களுகங்ககையில் நீர் மட்டம் உயரும் பட்சத்தில் ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்கள, தொடங்கொட, மில்லனிய, மதுராவல மற்றும் களுத்துறை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும்.

மகாஓயாவில் நீர்மட்டம் அதிகரித்தால் அலவ்வ, திவுலபிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் மகாஓயாவை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நீர் தேக்கங்களில் 8 வான் கதவுகள் திறப்பு

100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக 3 நீர் தேக்கங்களில் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குகுலே நீர் தேக்கத்தில் 3 வான்கதவுகளும் , தெதுருஓயா நீர்தேக்கத்தில் 4 வான்கதவுகளும் , லக்ஷபான நீர்தேக்கத்தில் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளன.

மழைவீழ்ச்சி

இதேவேளை இன்று கேகாலை மாவட்டத்திலேயே அதிக மழை வீழச்சி பதிவாகியது. இம்மாவட்டத்தில் அல்கம என்ற பிரதேசத்தில் 24 மணித்தியாலங்களுக்கும் 197.5 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை கலிகமுவ பிரதேசத்தில் 132 மி.மீ, பஸ்யால பிரதேசத்தில் 130 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் மேல் , சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 75 மி.மீ மழை வீழ்ச்சியும் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேலைகளில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் விவகாரம்- ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம்

மன்னார் வைத்தியசாலை ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகள் நியாயமானவை. ஆகவே இவ்விடயத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகின்ற போதிலும் இந்த ஊழியர்கள், தங்களது உயிரை பெரிதாக கருதாது மக்களுக்கான சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனாலும் அதனை பெரிதாக கருதாது தங்களது வேலையை சிறந்த முறையில் செய்து வருகின்றனர்.

இத்தகையவர்களின் நலன் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும். ஆகவே 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தை கருத்தில் கொண்டு, நியாயமான தீர்வை அவர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்” என அவர் கடிதத்தில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் மேலும் 2,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 198,546 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,883 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 164,281 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர்-ஜெனிவா உட்பட பல விடயங்கள் ஆராய்வு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், சாரா ஹல்டன் (Sarah Hulton) அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றி கருத்துத் தெரிவித்தார். வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்துவரும் முயற்சிக்கு, பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் அவதானம் செலுத்தினார்.

2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு, அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவும், சாரா ஹல்டன் அவர்கள், இணக்கம் தெரிவித்தார்.

சேதனப் பசளைப் பயன்பாட்டின் மூலம் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கு ஜனாதிபதி எடுத்தத் தீர்மானத்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாராட்டினார். 20.8சத வீதமான “வன ஒதுக்கீட்டை” 30சத வீதம் வரை உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அவசியமான அறிவு மற்றும் பொறிமுறைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, உயர்ஸ்தானிகர் தனது அவதானத்தைச் செலுத்தினார்.

“எக்ஸ் – பிரஸ் பர்ள்” கப்பல் மூலம் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்வதற்கு, பிரித்தானியாவின் தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். ஜெனிவா முன்மொழிவு தொடர்பாகவும் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட ஏனைய விடயங்கள் பற்றி அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்தினார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew Price), ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

தமிழ் மொழியை புறக்கணித்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு!

பொண்டேரா நிறுவனத்தின் அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபையின் அலுவலகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வுவனியா மாவட்ட ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன் மற்றும் ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரினால் இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உணவுப் பொருட்களின் சில்லறை விலை மற்றும் திகதி உள்ளிட்ட பல விடயங்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மும்மொழிகளில் குறிப்பிட வேண்டும் என முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் பொண்டேரா நிறுவனத்தின் அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில், அரசின் வர்த்தமானி அறிவித்தலை மீறி சீனாவின் மண்டரின் மொழி உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மொழி உள்ளடக்கப்படவில்லை என முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

அங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தது.

பயணத்தடையை மீறி யாழில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் தனிபைப்படுத்தல்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் குறித்தபகுதியின் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

தற்போது நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள்

யாழ்ப்பாண போலீசார் மற்றும் குறித்த பகுதி பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம்

பாராளுமன்றத்தின் அடுத்த வார நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.

சைபர் தாக்குதல் தொடர்பான தகவல் பொய்யானது

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட 6 அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்தொழில்நுட்ப சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு சைபர் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தாக இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த இணையத்தளங்களின் தகவல்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.

அஸ்ராசெனிகா கிடைக்காவிடின் மாற்றுத் தடுப்பூசியை ஏற்றலாம் ! ஆய்வுகளில் உறுதி

ஆறு இலட்சம் பேருக்கான அஸ்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாது போனால், முதலாம் கட்டத்தில் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசியை ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், மாற்றுத்தடுப்பூசிகள் ஏற்றுவதனால் எந்தவொரு தீங்கும் உடலுக்கு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களில் ஆறு இலட்சம் பேருக்கு இன்னமும் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையொன்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுத் தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதா அல்லது ஒரு தடுப்பூசியுடன் நிறுத்துவதா என்பதில் பாரிய குழப்பமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றுத் தடுப்பூசி ஏற்றுவது குறித்து நேற்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பொன்றை விடுத்திருந்த நிலையில், இது குறித்த ஆய்வுகளை முன்னெடுக்கும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேனவிடம் வினவியபோது அவர் கூறியதானது,

அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக அதே தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தொடர்ச்சியாக வெளிநாடுகளிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் இன்னமும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் சகல நாடுகளுமே வைரஸ் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் எம்மைப்போன்றே அவர்களும் தமது மக்களுக்கான பாதுகாப்பை கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துகின்றனர்,

எனவே அவர்கள் எமக்கான தடுப்பூசிகளை வழங்க மறுக்கின்றனர் என கருதுகின்றோம். எவ்வாறு இருப்பினும் நாம் மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டியுள்ளது.

ஆகவே அஸ்ராசெனிகா தடுப்பூசியை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது போனால் முதலாம் தடுப்பூசியாக அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு மாற்றுத் தடுப்பூசியாக ஸ்புட்னிக் அல்லது ஜோன்சன் அன் ஜோன்சன் தடுப்பூசியை ஏற்றுவது சாதகமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளும் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஒத்ததாகும். ஆகவே இவற்றை ஏற்றுவதால் உடலுக்கு எந்தவித தீங்கும் அல்லது பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

கடந்த சில மாதங்களாக நாம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி ஆய்வுகளுக்கு உட்படுத்திப்பார்த்தோம். அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஒருவரது மாதிரியை எடுத்து எத்தனை நாட்களில் எவ்வாறான மாற்றங்கள் உடலில் ஏற்படுகின்றது என்பதை அவதானித்தோம்.

அதேபோல் ஏனைய இரண்டு தடுப்பூசிகளின் சோதனை முயற்சிகளிலும் சாதகமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. எனவே மாற்றுத் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற தீர்மானத்தை நாம் எட்டியுள்ளோம்.

இதற்கு மாறாக மொடேனா, பைசர் ஆகிய தடுப்பூசிகளையும் இலங்கையில் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்பகட்ட உடன்படிக்கைகளில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். அடுத்த மாதமளவில் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார்.