கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 39 பேர் பலி,உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடானது எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சர்வதேச அமைப்புக்களை நாட நேரிடும் – பேராயர் எச்சரிக்கை

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழ்ச்சி என முன்னாள் சட்டமாதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்ட கருத்தின் உண்மை தன்மையினை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றவாளிகள் என பெயர் குறிப்பிடப்பட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கிற்காக பாதுகாக்கிறது. நல்லாட்சி, சுபீடசமான எதிர்காலம் ஆகியவற்றினால் ஏமாற்றமடைந்தது மாத்திரமே மிகுதயாகியுள்ளது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணையினை துரிதப்படுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவமாறு அரசாங்கத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மூன்று மாத காலத்திற்குள் சட்டத்தின் முன்னிலைப்படுத்துவதாக குறிப்பிட்ட அரசாங்கம் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்தும் இதுவரையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அரசியலாக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என குறிப்பிட்டவர்களை அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக பாதுகாக்கிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்களை செயற்படுத்த 6 அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை ஜனாதிபதி நியமித்தார்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தும் 6 பேர் கொண்ட குழுவின் செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்தோம்.. இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதியின் ஒரு நாடு:-ஒரு கொள்கை என்ற சட்டத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

நல்லாட்சி மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகிய சொற்பதங்களினால் ஏமாற்றமடைந்தது. மாத்திரமே மிகுதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரம் குறித்து உண்மை தன்மையுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும். இல்லாவிடின் முன்னர் குறிப்பிட்டதை போன்று சர்வதேச அமைப்புக்களை நாட நேரிடும் இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றார்

யாழில் தமிழ் மொழியை புறந்தள்ளி ஆக்கிரமித்த சீன மொழி!

யாழ்.சாவகச்சேரியில் சீன அரச நிறுவனமான China State Construction Engineering Corporation எனும் நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது.

அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளதுடன் தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதைப் புத்த பிக்குகளும், ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா? எனக் கேட்டுப் போராடியவர்கள் இன்று சீன மொழி இலங்கையில் எங்கும் பயன்படுத்தப்படுவதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை.

சீனத் தூதர் சட்டமா அதிபர் மாளிகையில் வைத்த கல்வெட்டில் சீன மொழி இருந்ததற்கு தாங்கள் பரிசாக வழங்கிய இடம் அதனால் சீன மொழியைப் பயன்படுத்தினோம் என்று சமாளித்திருந்தார்.

இந்த நிலையில் வடகிழக்கில் தமிழ்மொழி பிரதான மொழியாக காணப்படும் நிலையில் தனியே சீனமொழி மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டில் சீனா இலங்கையை ஆக்கிரமித்து சிங்கள மன்னனை சிறை பிடித்து, சீனாவிற்கு கொண்டு சென்ற நிலை 21 ஆம் நூற்றாண்டிலும் நடக்குமா? எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கையின் புதிய நியமனங்கள் இடைக்கால நீதிக்கான பொறிமுறைகளை சீர்குலைக்கின்றன – ஜஸ்மின் சூக்கா

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் பொலிஸ் அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப் பொறிமுறை முழுமையாக இராணுவமயப்படுகின்றது.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு | Virakesari.lk

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் கடந்த மே மாதம் 20 திகதியன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இடைக்கால நீதி தொடர்பான முன்னணி நிபுணர் ஜஸ்மின் சூக்கா, இந்த நகர்வானது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியினை வழங்குவதற்கான எந்த வாய்ப்பினையும் இல்லாது செய்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இது கடினமான ஒரு விடயமாகும். இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டார் என ஐ.நா விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு அதிபராக இருந்தவர் தற்போது காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்கின்றார்.

இவர் திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை போன்ற ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்வங்களிலும் கட்டளைப் பொறுப்பு வகித்தமைக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் உலகளாவிய சட்ட மேலாதிக்க வழக்குகளுக்கு முகம் கொடுக்கும் ஆபத்தில் உள்ள ஓர் உயர் அரச அதிகாரி என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளளர் ஜஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள ஓர் நாட்டில் காணாமல் போன மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சம்பவங்களை விசாரிப்பதற்குப் பொறுப்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நியமிக்கப்படுகின்றது.

இந்த அமைப்புக்கு நிதியுதவி வழங்கவேண்டாம் எனக் கோரி ஐ.நாவின் அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் சர்வதேச நன்கொடையாளர்கள் ஆகியோருக்கு நாம் கடிதம் அனுப்புவோம்.

அத்தோடு இந்தப் பிரச்சினைக்குரிய நியமனம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட ஐ.நா அமைப்புக்களுக்கும் மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கும் இரகசிய ஆவணம் ஒன்றினையும் அனுப்புவோம் என சூக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால குற்றங்களை மூடிமறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஓர் வாகனமாக மாறியுள்ள இந்த அமைப்புக்கு ஐ.நா மற்றும் ஏனைய நன்கொடையாளர்கள் தமது வரிப்பணத்தினை பயன்படுத்தி நிதி உதவி செய்யக்கூடாது என வலியுறுத்தி கடிதம் அனுப்புமாறு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட சமூகத்தினரை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்கனவே, நீதிபதி உபாலி அபயரட்ண காணாமல் போனோர் அலுவலகத்திற்கு தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டபோது அந்த நியமனம் ஓர் நேரடியான அவமானம் என்றும் வன்முறைச் செயல் என்றும் இலங்கையிலுள்ள பாதிகப்பட்ட குடும்பங்களால் விபரிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல் எனக் கூறப்படும் சம்பவங்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் தலைவராக நீதிபதி அபயரட்ணா இருந்துள்ளார்.

இந்த ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட பல மனித உரிமை வழக்குகளுக்கான நீதிமன்ற தீர்ப்புக்களை குறுக்கிட்டுத் தடுத்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தினை தலைமைதாங்குவதற்கு அவரை நியமித்தமையானது அந்த அமைப்பின் சுதந்திரத்தினையும் நம்பகத் தன்மையினையும் காத்திரமாகச் செயற்படுவதற்கான வலுவினையும் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது.

இலங்கையில் இடைக்கால நீதிக்காக நிறுவப்பட்ட இரண்டு அமைப்புக்களில் ஒன்று இந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம். இரண்டாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இழப்பீடு வழங்கும் அலுவலகமாகும்.

(ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் வாடுகே பாலித பியசிறி பெர்னான்டோ என்பவரை இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்திற்கு நியமித்து தற்போது அந்த அமைப்பும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இழப்பீடு வழங்குதலிலும் பெருந்தொகையான நிதி கையாளப்படும். எனினும் இங்கு இடைக்கால நீதிப் பொறிமுறை இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில் இழப்பீட்டு அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளவர் சர்வதேச சமூகத்தினால் ஆதரவு வழங்கப்பட்ட மற்றும் ஊழல் இடம்பெற்றதாக கண்டுகொள்ளப்பட்ட ஓர் நடவடிக்கையில் முன்னர் பொலிசாரால் விரிவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். அவரது ஊழல் குற்றச்சட்டுக்கள் நீதிமன்றச் சட்டத்தினால் பரிசோதிக்கப்பட்டு இன்னும் தீர்க்கப்பட்வில்லை என சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணாவின் நெருகடகமானவர்களில் ஒருவரான சந்திர நிமால் வக்சித என்பவர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊழல் அணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2009-10 காலப்பகுதியில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வக்சித தலைமைதாங்கினார் – அந்தப் பிரிவினை திட்டமிட்ட சித்திரவதைக்குப் பொறுப்பான ஓர் பிரிவு என ஐநா குறிப்பிட்டது.

வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்களை உள்ளடக்குகின்ற இந்த இடைக்கால நீதிப் பொறிமுறைகளில்இலங்கையிலுள்ள காணாமல்போரின் குடும்பங்கள் பாதுகாப்பாக ஈடுபடமுடியாது. இந்த அமைப்புக்களின் இருப்பானது சாட்சியாளர்களின் பாதுகாப்புக்கு ஓர் பாரிய ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு அவசரக் கடிதம்

வன்னியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், வவுனியா நகர சபை ஊடாக தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றபோது, அவர்களின் உறவினர்களிடம் பணம் அறவிடப்படுவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாடு தொற்றினால் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இவ்விடயம் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும் வகையில் கடிதமொன்றை செல்வம் அடைக்கலநாதன் இன்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை உடலை தகனம் செய்வதற்கு வவுனியா நகர சபையினால் நிதி அறவிடப்படுகிறது.

அதாவது ஒருவரை தகனம் செய்வதற்கு 7 ஆயிரம் ரூபாய், வவுனியா நகர சபையினால் அறவிடப்படுகின்றது.

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழும் மக்கள், குறித்த தொகையை வழங்க முடியாத நிலைமையிலேயே உள்ளனர்.

ஆகவே மக்களின் இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையிலான கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவில் மேலும் ஆறு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்துவிக்ரம, இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்ரமசூரிய ஆகியோரும் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

OREL Corporation-இன் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குஷான் கொடித்துவக்கு, Mercantile Investments and Finance நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெராட் ஒன்டாச்சி, மெக்லரன்ஸ் குழுமத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரொஹான் டி சில்வா ஆகியோரும் துறைமுக நகர ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியல் கைதிகள் விடுதலைக்கான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம்! – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரின் நேர்காணலின் முழுமையான வடிவம்.

கேள்வி : தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?

பதில்: கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரிலே வெளிவிவகார அமைச்சரை தமிழ்க் கட்சியினர் எல்லோரும் சந்தித்து, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவரும் ஏற்கனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், இது சம்பந்தமாக பேசுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கையொப்பமிட்டு கடிதம் மூலம் கேட்டிருந்தோம். அந்த வகையிலேயே, எங்களிடம் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டறிந்து தனக்குத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியான வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை எம்முடன் கலந்துரையாட ஜனாதிபதி அனுப்பியிருந்ததாக தினேஸ் குணவர்த்தன எமக்குக் கூறினார்.

தினேஸ் குணவர்த்தனவின் உரையாடலின் போது எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான முழு விபரங்களையும் நாங்கள் கையளித்திருக்கிறோம். அவரிடம் உரையாடி இருக்கிறோம். எமது விபரங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறி, ஜனாதிபதி எம்மை சந்திப்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தித் தருவதாக தினேஸ் குணவர்த்தன எம்மிடம் கூறியிருக்கின்றார்.

சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் சம்பந்தமாகவும், வெளியிலே அவர்களுடைய குடும்பங்கள் படுமோசமான ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம். முக்கியமாக இந்த கொரோனா தொற்று என்பது சிறைக் கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கைதிகளின் விடுதலை பற்றி எடுத்துக் கூறினோம். அவர்களை பிணையில் விடுவது அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து விடுவது என்பது பற்றியும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசியிருந்தோம்.

இருந்தாலும் அனைவரையும் விடுதலை செய்வது நன்றாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய பொதுவான விடயமாக இருந்தது. இந்த கலந்துரையாடல் மிக நேர்த்தியான முறையிலே நடைபெற்றது. இதற்கு அரசியல் கைதிகளுடைய குடும்பங்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். அந்த வகையிலே நாங்கள் அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக அடுத்த ஜனாதிபதி சந்திப்பிலே ஒற்றுமையாக சென்றுகுறித்த விடயம் தொடர்பாக பேச இருக்கிறோம்.

கேள்வி: இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்கள் தவிர வேறு தரப்புக்களுடனும் பேசப்படுகின்றதா?

பதில்: இது தொடர்பாக இங்கே இருக்கின்ற, எங்களோடு செயற்படுகின்ற உயர் ஸ்தானிகர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். அதே போல வெளி நாடுகளில் இருந்து வந்து சந்திப்புகளை மேற்கொள்பவர்களுக்கும் இது தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டி வருகிறோம். அவர்களுடைய அழுத்தங்களும், அவர்களுடைய செயற்பாடுகளும் இதிலே இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம். அந்த வகையிலே உலக நாடுகளிலே இருக்கின்ற, இங்கே இருக்கின்ற உயர் ஸ்தானிகர்களுக்கும் அரசியல் கைதிகளினுடைய உடல்நிலை சம்பந்தமாக எடுத்துக்கூறி அவர்களும் இதற்கும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

கேள்வி: தமிழ்க் கட்சிகளில் அதிகளவு சட்டவாளர்கள் இருக்கும் போது இதனை நீதிமன்றங்கள் ஊடாக நகர்த்துவது ஏன் கடினமாக உள்ளது?

பதில்: ஏற்கனவே நீதிமன்றத்திலே இவர்களின் பிரச்சினை இருக்கின்றபடியால் அதாவது, இலங்கையை பொறுத்தமட்டிலே உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த வழக்குகள் நிலுவையிலே இருக்கின்றன. அந்த நிலுவையிலே இருக்கின்ற வழக்குகளை துரிதமாக்குகின்ற சூழல் இங்கே மிக கால தாமதமாக்கப்படுகின்றது. அதைவிட எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான விளக்கம் கொடுக்கின்ற, அதாவது கைது செய்யப்பட்ட அல்லது கைது செய்த பொலிசாரோ அல்லது புலனாய்வுத் துறையினரோ அல்லது அதற்கான ஆதாரங்களை செயற்படுத்துகின்றவர்களின் வருகை என்பது குறைவாக இருக்கின்றபடியால் அவர்களுடைய வழக்குகள் மிகவும் தாமதமடைகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

இதனால் எங்களுடைய தமிழ்க் கட்சிகளில் இருக்கின்ற வழக்கறிஞர்கள் நிச்சயமாக அதிலே வாதாடுகிறார்கள். அல்லது அந்த கட்சியினுடைய வழக்கறிஞர்கள் அதிலே தொடர்போடு வாதாடுகின்ற ஒரு பொறுப்பிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அது இல்லாமல் இருக்கவில்லை என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இந்த விடயத்திலே ஒரு கால தாமதமாவது இந்த வழக்குகள் எல்லாம், சாட்சிகள் வராத ஒரு சூழல், மற்றும் வழக்கு எடுக்காத ஒரு நிலை என்பனவே காரணமாகக் காணப்படுகிறன. அதனாலே இந்த வழக்குகள் மோசமான ஒரு பின்னடைவை சந்திக்க கூடியதாக இருக்கிறது. அதனால், எங்களுடைய வழக்கறிஞர்கள், அதை கட்சி சார்ந்த வழக்கறிஞர்களோ, அல்லது எல்லோரும் சேர்ந்து தங்களுடைய வழக்கறிஞர்களை அதற்கு பயன்படுத்துகின்ற ஒரு நிலை இப்பொழுது தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படவுள்ள வாய்வழி அறிக்கையில் இடம்பெறுமாறு அரசியல் கைதிகள் தொடர்பான இலங்கை அரசின் பாரபட்ச நடவடிக்கைகளை ஆவணப்படுத்த முடியுமா?

பதில்: நிச்சயமாக, ஐ.நா சபையினுடைய தீர்மானத்திலே இந்த அரசியல் கைதிகளுடைய விடுதலை சம்பந்தமாக கூறப்பட்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இந்த மகஜர்களை உயர் ஸ்தானிகராலயங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இப்பொழுது அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடமும் கொடுத்திருக்கிறோம். ஐ.நா சபையிலே இந்த வழக்கினுடைய பின்னணி என்ன? அல்லது வழக்குகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்னென்ன கட்டங்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை நாங்கள் நிச்சயமாக சாட்சிகளோடு, அங்கே சொல்ல வேண்டும். இந்த விடுதலை சம்பந்தமான ஒரு நிலைப்பாடு அதிலே இருக்கின்றபடியால் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கான விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும், கொடுப்போம்.

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய்

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் யாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Posted in Uncategorized