15 பேரின் ஆதரவுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக ரெலோ விஜிந்தன் தேரிவு!

தமிழ்தேசியக கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் புளட் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் க.தவராசா தவிசாளர் பதவியினை வகித்துவந்துள்ளார் இவர் கடந்த 18.03.21 அன்று தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

இன்னிலையில் புதிய தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன், தலைமையில் நடைபெற்றுள்ளது.

தவிசாளர் பதவிற்காக பொதுஜன பெரமுன கட்சி சார்பில் அன்ரனி ரங்கதுசார அவர்களும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு சார்பில் ரெலோ இளைஞர் அணியின் உறுப்பினர் க.விஜிந்தன் அவர்களும் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டுள்ள நிலையில் தவிசாளரின் வாக்கெடுப்பு தொடர்பில் சபை உறுப்பினர்களிடையே விருப்பு கேட்டறியப்பட்டுள்ளது.

இரகசிய வாக்கெடுப்பிற்காக 5 வாக்குகளும் பகிரங்க வாக்கெடுப்பிற்காக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பிற்கு அறிவிக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்களால் தவிசாளரை தேர்ந்ததெடுக்க நடைபெற்ற வாக்கெடுப்பில் மூவர் நடுநிலைமையாக வாக்களித்துள்ளார்கள் அன்ரனி றஞ்கதுசார அவர்களுக்காக நான்கு வாக்குகளும்,கமலகாந்தன் விஜிந்த அவர்களுக்காக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் அவர்கள் 15 வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வாக்கெடுப்பினை பார்வையிடுவதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் அவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான ரெலோ க.ஜெனமேஜயந், இ.சத்தியசீலன், இ.சந்திரூபன், சி.குகநேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சிங்கள பௌத்த தேசியத்தைப் பிளவுபடச் செய்துள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – பி.மாணிக்கவாசகம்

இலங்கை ஒரு சிறிய நாடு. சின்னஞ்சிறிய தீவு. இதனை ஒரேயொரு தேசமாகப் பேண வேண்டும். இங்கு பிரிவினைக்கு – நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு இடமளிப்பது முறையல்ல என்பது சிறீலங்காவின் பொதுவான நிலைப்பாடு. இது இந்த நாட்டு மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களும் இந்தப் பொதுக் கொள்கையை, பொது நிலைப்பாட்டை, பொதுத் தேசியத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள்.

இந்த நாடு இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும், பல்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் சொந்தமானது. அவர்கள் தங்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களுடன், தத்தமது பிரதேசங்களில் சகல உரிமைகளுடனும், தனித்துவமாகவும் வாழ வேண்டும். அந்த வகையில் பன்மைத்தன்மையுடன் கூடிய சமஸ்டி முறையிலான அல்லது அதனையொத்த இறைமையுள்ள ஒரு பொதுத் தேசியத்தை அவர்கள் மறுக்கவில்லை. எதிர்க்கவில்லை. இதில் சந்தேகமும் இல்லை.

ஆனால் இங்கு ஓர் ஒற்றை ஆட்சி நிலவ வேண்டும். அது சிங்கள பௌத்த தேசியத்தை மட்டும் முதன்மைப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். சிங்கள மொழி மாத்திரமே தேசிய மொழி. ஏனைய மொழிகள் வேண்டுமானால் தேசிய மொழிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அது ஏனோ தானோ என்ற நிலைப்பாட்டை மீறுவதாக இருக்கக் கூடாது.

சிங்கள பௌத்தம் மட்டுமே இந்த நாட்டின் ஒரே தேசிய மதம். அதற்கே முன்னுரிமை. அனைத்து முதன்மை நிலைகளையும், முதன்மை உரிமைகளும் அதற்கே வழங்கப்பட வேண்டும் என்றதொரு தேசிய கொள்கையை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனைய மொழிகளைப் பேசுபவர்களும், ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களும், ஏனைய கலை, கலாசார விழுமியங்களைப் பின்பற்றுபவர்களும் இரண்டாந்தரக் குடிமக்களாக இருக்க வேண்டும். வந்தேறு குடிகளாக, உரிமைகளற்றவர்களாக, இறைமையற்றவர்களாகவே வாழ வேண்டும். அவர்கள் இந்த சிங்கள பௌத்த, ஒற்றைத் தேசியத்தை ஏற்று ஒழுக வேண்டும். அவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் உரிமைகள் பற்றிப் பேசக் கூடாது.

அது பற்றிய சிந்தனையே அவர்களிடம் இருத்தல் ஆகாது என்பதே சிங்கள பௌத்த தேசியத்தின் உட்கிடக்கை. உள்ளார்ந்த அசைக்க முடியாத கருத்து. உறுதியான நிலைப்பாடு. இதன் அடிப்படையிலேயே நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆட்சி செலுத்தி வருகின்றார்கள்.

ஆனால், இந்த நாட்டில் இரண்டு தேசிய மொழிகள் இருக்கின்றன. இரண்டு பிரதான தேசிய இனங்கள் வாழ்கின்றன. இரண்டு பிரதான கலை, கலாசார விழுமியங்கள் பின்பற்றப்படுகின்றன. அதையும்விட வேறு மொழி பேசுபவர்களும், வேறு தேசிய அடையாளங்களைக் கொண்ட மக்களும் சிறுபான்மையினத்தவர்களாக வாழ்கின்றார்கள். அவர்களும் தத்தமக்குரிய சிறப்பான அடையாளங்களையும், பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் கொண்டு வாழ்கின்றார்கள். இந்த உண்மையை யதார்த்த சமூக, அரசியல், மத, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இதுவே இந்த நாட்டின் இனப்பிரச்சினையின் தாற்பரியம்.

இந்த வகையிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை சுமார் ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இழுத்தடித்து, வளர்த்தெடுக்கப்பட்டு, புரையோடிப் போயிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஆட்சியாளர்கள் எவருக்குமே விருப்பம் கிடையாது. அதனை ஒரு பிரச்சினையாகவே ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் வேறு வழிகள் எதுவுமற்ற ஏதிலி நிலையில் இந்த நாடு பிரிவினையை நோக்கி, தனித்தமிழ் ஈழத்தை நோக்கித் திசை திரும்ப நேரிட்டிந்தது. ஆனால் இந்த நாட்டுப் பிரிவினையை சிங்கள பௌத்த தேசியத்தில் ஊறிப் போயுள்ள ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தார்கள். அதனை அதிகார பலத்தின் மூலம், வன்முறைகளைப் பயன்படுத்தி அந்த அரசியல் திருப்பத்தை இல்லாமற் செய்வதற்கான இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

அரசியல் வழியில் இணக்கப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இராஜதந்திர வழியில் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் கண்டு, நாடு பிளவுபடுவதைத் தடுப்பதற்கு அவர்களால் முடியாமற் போனது. அந்த வழியில் சிந்திக்கவும் திராணியற்றவர்களாக இருந்தார்கள். இன்னும் இருக்கின்றார்கள். அவர்கள் அரசியல் தீர்வு காண்பதற்கு இணங்கி, இறங்கி வர மறுக்கின்றார்கள் அந்த ‘மறுப்புத் தேசிய இருப்பில்’ – தமது ஒற்றைத் தேசியத்தில், நாளுக்கு நாள் கணத்திற்குக் கணம் பிடிவாதமாக இறுகிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டை சிங்கள பௌத்த தேசிய நாடாக உரு மாற்றிவிட வேண்டும் என்பதில் திட சங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகின்றார்கள். இந்த நிலைப்பாட்டை உள்நாடு என்ற சமூக, அரசியல் நிலைமையைக் கடந்து, சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான இனவாத அரசியலுக்கான முயற்சிகளிலும் அவர்கள் தொடர்ந்தேர்ச்சியாகத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ஆட்சி அதிகாரங்களுக்காக, தனித்துவ ஆட்சி உரிமை என்ற அற்பத்தனமான சுய அரசியல் நலன்களுக்காக ராஜபக்சக்கள் அரசியலில் தலையெடுத்துச் செயற்பட்டு வருகின்றார்கள். இனவாதத்தையும் மதவாதத்தையும் சிங்கள மக்கள் மனங்களில் ஆழமாக விதைத்து, அதற்குத் தூபமேற்றியதன் மூலம் 2019 ஜனாதிபதி தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும், அந்த அரசியல் உத்தி – அரசியல் தந்திரம் வெற்றியளித்தது.

ஜனாதிபதி பதவியில் அதீத நலன்களை அனுபவித்த மகிந்த ராஜபக்சவின் வழியொட்டி, அவரது சகோதரர் கோத்தாபாய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், இன, மதவாத அரசியலுக்கும், சிங்கள பௌத்த தேசியத்திற்கும் புத்துணர்வேற்படுத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் சிறுபான்மை இன மத குழுமங்களுக்கு இடையூறுகளை விளைவித்து வருகின்றார். அத்துடன் அவர்களது அடிப்படை இன, மத உரிமகளையும் சமூக, அரசியல், பொருளாதார, கலை, கலாசாரப் பண்பாட்டு உரிமைகளையும் துச்சமாக மதித்து அடக்கி ஒடுக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பலமுனைகளிலும் முடக்கிவிட்டிருக்கின்றார்.

ஆனால் சிங்கள பௌத்த தேசியம் என்ற சிங்கள பௌத்த அரசியல் மதப் பண்பாட்டுக் கோட்பாடு இன்று பிளவுபட்ட நிலைமையை எட்டி இருக்கின்றது. இதற்கு வலுவான உள்ளுர் மற்றும் சர்வதேச அரசியல் பின்னணி காரணமாகி இருக்கின்றது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான, பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான அதீத ஆயுத பலப்பிரயோகம் கொண்ட ஆயுத மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூறுகின்ற பொறுப்புடைமை இந்த அரசியல் அடித்தளத்தின் அத்திவாரமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமை மீறல்களிலும், போர்க்குற்றச் செயற்பாடுகளிலும் நேரடியாக ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவ பொறுப்பின் கீழ் இறுதிப் போர்க்காலத்து பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவும் பொறுப்பாளிகளாவர். இவர்களுடைய நேரடி கண்காணிப்பு மற்றும் உத்தரவுகள், யுத்த நடவடிக்கைகளுக்கான தீர்மானங்களின் அடிப்படையிலேயே இராணுவ அதிகாரிகள் செயற்பட்டிருந்தனர். இராணுவத்தினர் அதன் வழியில் யுத்த மோதல்களில் ஈடுபட்டிருந்தனர்.

ஆயுதமேந்தியிருந்த எதிராளிகளான விடுதலைப்புலிகளைப் போலவே அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் சிக்கியிருந்த நிராயுதபாணிகளாகிய அப்பாவி தமிழ்ப் பொதுமக்களையும், யுத்தத்தில் தாக்கி அழிக்கப்பட வேண்டிய எதிரிகளாகக் கருதி கட்டுக்கடங்காத வழிகளில் இராணுவத்தினர் செயற்பட்டிருந்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு விஜயம் செய்த அப்பொதைய ஐ.நா மன்ற செயலாளர் நாயகம் பன் கீ மூன் இறுதி யுத்தச் செயற்பாடுகளில் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் என்பன இடம்பெற்றிருந்ததை ஆதாரபுமூர்வமாக அறிந்து, அதற்கான பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். அதற்கான பொறுப்பு கூறுலைச் செய்ய வேண்டும். எனவே, அதற்கான சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்று நேரடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தி இருந்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச, பொறுப்பு கூறலைச் செயற்வதுடன், யுத்தம் மூள்வதற்குக் காரணமாகிய இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதாகவும் உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் பன் கீ மூனும் மகிந்த ராஜபக்சவும் இணைந்து ஐநா மற்றும் இலங்கை அரசு என்ற இருதரப்பினருடைய இணக்கப்பாட்டைத் தெளிவுபடுத்தி இணை அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் உரிமை மீறல்களுக்கும், போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூறுவது என்பது தாங்களே நேரடியாக விரும்பி தற்கொலை செய்து கொள்வதாகவே முடியும் என்ற கசப்பான உண்மையை மகிந்த ராஜபக்சவும், கோத்தாபாய ராஜபக்சவும் உள்ளூரத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.

இதனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றக் கூடாது. முடிந்த அளவில் இழுத்தடித்து, அதனை இல்லாமற் செய்து விட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். உடனடியாகவே அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தனர்.

அந்த நடவடிக்கைகள் ஜனரஞ்சகம் மிக்கதாகவும் சிங்கள மக்களினால் மறுப்பேதுமின்றி முழுமையாக ஏற்றுக்கொண்டு தங்களைப் பின்பற்றத்தக்கதாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் மிகுந்த கவனமாக இருந்தார்கள். அதன் விளைவாகவே யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்து, படுகாயமடைந்து உடல் உறுப்புக்களை இழந்து நாட்டுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களாக இராணுவத்தை அவர்கள் முதன்மைப் படுத்தினார்கள்.

அந்த முதன்மையின் அடிப்படையில் நாட்டுக்காகத் தியாகம் செய்த இராணுவத்தினரை எந்தக் காரணத்தைக் கொண்டும். போர்க்குற்றச்சாட்டுக்களுக்கோ உரிமைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிற்கோ உள்ளாக்கி தண்டனை பெற அனுமதிக்கப் போவதில்லை என்ற தமது நிலைப்பாட்டை படிப்படியாக பௌத்த மதத் தலைவர்களது வாயின் ஊடாகவும், சிங்கள பௌத்த தேசியத்தின் மீது பற்றுள்ள அரசியல் கட்சிகளின் ஊடாகவும் வெளிவருமாறு பார்த்துக் கொண்டார்கள்.

அத்தகைய திரட்சி மிக்க மக்களுடைய குரல் ஓங்கி ஒலிப்பதற்கு ஏதுவாக, இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டைத் தங்களது அரசியல் கொள்கையாக படிப்படியாக வெளியிட்டு அந்தக் குரலுக்கு வலிமை சேர்த்தார்கள்.

இந்த அரசியல் தந்திரோபாயம் சிங்கள மக்கள் மத்தியிலான அவர்களது அரசியல் செல்வாக்கை வளர்ந்தோங்கச் செய்தது. ஏனைய அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும்கூட அந்த வழியிலேயே சிந்திக்கவும் செயற்படவும் தக்கதான ஓர் அரசியல் நிலைமையை அவர்கள் உருவாக்கி விட்டார்கள். இந்த வகையிலேயே அவர்கள் தமது இராணுவ வெற்றியை இனவாத, மதவாத அரசியலுக்கான முதலீடாகக் கொண்டு 2015 தேரதல்களில் தோல்வி அடையச் செய்த பின்னரும் 2019 இல் சிங்கள பௌத்த மக்களின் பேராதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

உள்ளூர் அரசியலில் மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களாக மீண்டெழுந்த ராஜபக்சக்கள், சர்வதேச ரீதியில் தொடர்ந்த பொறுப்புக் கூறலுக்கான அழுத்தத்தை முறியடித்துத் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், போர்க்குற்றச் செயற்பாடுகளில் இருந்து தப்பிக் கொள்வதற்குமாகவே சீனாவுடன் நெருங்கிய வெளியுறவுக் கொள்கையை அவர்கள் வகுத்துக் கொண்டார்கள்.

சீனாவின் விருப்பங்களை நிறைவேற்றி, சர்வதேச அரங்கில் பொறுப்பு கூறுகின்ற விடயம் பெரும் விவகாரமாக மாறி, தங்களுக்குத் தீங்கு நேராத வகையில் சீனாவைத் தங்களது சர்வதேச அரசியல் கவசமாக ராஜபக்சக்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சீனாவின் உதவியுடன் பொறுப்பு கூறுகின்ற சர்வதேசத்தின் வலியுத்தலை முறியடித்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்ததோர் இராஜதந்திர மார்க்கமாகவே கொழும்பு துறைமுக நகரத்தை அவர்கள் இப்போது பயன்படுத்தி உள்ளார்கள்.

கொழும்பு துறைமுக நகரத்தை முழுக்க முழுக்க சீனாவின் நேரடி கண்காணிப்பில் அதன் பொறுப்பில் செயற்படப் போகின்ற ஒரு சர்வதேச வர்த்தக மையமாக உருவாக்குவதே ராஜபக்சக்களின் திட்டம். இந்து சமுத்திரத்தின் மிகச் சிறிய தீவாகிய இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச அளவில் வளர்ச்சி பெறச் செய்கின்ற ஒரு மாயத் தோற்றத்தை அவர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள்.

முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற கடப்பாட்டில் கட்டுப்பாடற்ற கடன் தொல்லைக்கு ஆளாகிய இலங்கை சர்வதேச ஆட்கொல்லியாகிய கோவிட் – 19 இன் பாதிப்புக்கு உள்ளாகி பொருளாதாரத்தில் மேலும் மோசமான பின்னடைவுக்கு ஆளாகியது. இந்த நிலைமையில் இருந்து தலை நிமிர்த்துவதற்கு உரிய கடன் வசதிகளைச் செய்ய நிபந்தனையற்ற வகையில் சீனா முன்வந்தது.

சீனாவின் நிபந்தனையற்ற இந்த நிதியுதவி அணுகுமுறையானது, அதன் சர்வதேச வர்த்தக பாதுகாப்புச் செயற்பாடுகளின் அடிப்படையிலானது. அதற்கான நோக்கங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கு அது இலங்கையின் பலவீனமான பொருளாதார நிலைமையைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துகின்ற சந்தர்ப்பமாக சீனாவுக்கு இது அமைந்துவிட்டது. தனது பட்டுப்பாதை விரிவாக்கத்திற்கான கேந்திர முக்கியத்துவம் மிக்க புள்ளியாக இலங்கையைக் கையகப்படுத்துகின்ற அதேவேளை இந்து சமுத்திரத்தின் பொருளாதார, இராணுவ பாதுகாப்பு நிலைமைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொண்டையில் சிக்கிய முள்ளாக மாற்றி, அவர்களின் செல்வாக்கை முறியடிப்பதற்கும் வசதியாக சீனா மாற்றிக் கொண்டுவிட்டது.

இந்த நிலைமையானது ராஜபக்சக்களுக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் தூக்குக் கயிறை எதிர்கொள்கின்ற நிலைமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்தவற்கான கவசமாக சீனாவைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது,

பொறுப்பு கூறுகின்ற விவகாரத்தில் சர்வதேச அரங்கில் இலங்கையைப் பாதுகாக்கின்ற அதேவேளை, பொருளாதார ரீதியில் அதனை வளர்ச்சி அடையச் செய்கின்ற போக்கில் உறுதியாக இலங்கையில் காலூன்றுவதற்கான அருமையான மார்க்கமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் சீனாவுக்கு வாய்த்து விட்டது.

ஆனால், சிங்கள பௌத்த தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் உள்ளூர் அரசியலில் கொடி கட்டிப் பறந்த ராஜபக்சக்கள் சீனாவைக் கையாள்கின்ற விடயத்தில் பௌத்த மதத் தலைவர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற முடியமல் போயுள்ளது. ராஜபக்சக்களின் ஆட்சி அதிகார மீள்வருகைக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட முக்கியமானவர்களில் ஒருவராகிய அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனித்துவப் பிரதேசமாக மாறும் என தெரிவித்து அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

அதேபோன்று ராஜபக்சக்களின் முக்கிய ஆதரவாளராகிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச துறைமுக நகரத்தை முழுமையாக சீனாவுக்குத் தாரை வார்க்கத்தக்க துறைமுக ஆணைக்குழு அங்கு ஒரு தனிநாட்டை உருவாக்க வல்லது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ராஜபக்சக்களின் அரசியல் வாழ்க்கைக்கும், இருப்புக்கும் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ள சீனச் சார்பு வெளிவிவகார நிலைப்பாட்டிலான கொழும்பு துறைமுக நகரத்தின் பொறுப்புடைமை உரிமைக்கு பௌத்த பிக்குகள் மத்தியில் இருந்தும், ஆளும் கட்சியாகிய பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடின அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவராகக் கருதப்படுகின்றவருமாகிய விஜயதாச ராஜபக்சவிடம் இருந்தும் கிளம்பியுள்ள எதிர்ப்புக்கள் ராஜபக்சக்களின் பௌத்த தேசிய கோட்பாட்டைப் பிளவுபடச் செய்திருக்கின்றது.

துறைமுக ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு எதிராகக் கிளம்பியுள்ள நீதிமன்ற வழியிலான ஏனைய பலருடைய எதிர்ப்பும் ராஜபக்சக்களை கொழும்பு துறைமுக நகர விவகாரம் சந்தியில் நிறுத்தி நிலை தடுமாறச் செய்திருக்கின்றது.

இந்த நிலைதடுமாற்றமே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, கொழும்பு துறைமுக நகரம் பற்றிய விஜயதாச ராஜபக்சவின் கடுமையான கருத்துக்களுக்கு எதிராக தொலைபேசி முலம் தகாத வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக அச்சுறுத்தச் செய்திருக்கின்றது.

தமிழீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி – ராஜித

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது.

அன்றி தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர்.

அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது ? இதுவும் தனியொரு ஈழமாகும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையான்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் முரண்பட்டுக்கொண்டனர்

நாடாளுமன்றத்தில் நாளை கொண்டு வரப்படவுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை யார் முன்வைக்க வேண்டும் என்று விவாத்தின் போது இன்று ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் முரண்பட்டுக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவும், ஆளும்கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சியும் ஒருவரை ஒருவரை தள்ளிக்கொண்ட சம்பவமும் இடம்பெற்றது. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கொண்டு வந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தனவிடம் இந்த விவாதத்தை நகர்த்த எதிர்கட்சியை அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும் இந்த விவாதத்தை முன்கொண்டுவர ஆளும் கட்சியை அனுமதிக்க எதிர்க்கட்சி ஒப்புக் கொண்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வாதிட்டார். அத்துடன் முன்னைய அரசாங்கத்தின் கீழ் அரசியல் பாதிப்புக்குள்ளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்த விவாதத்தை நகர்த்த தார்மீக உரிமை உள்ளது என்று அவர் வாதிட்டார்.

இதன்போது வாக்குவாதங்களுக்குப் பின்னர் இறுதியாக பதற்றம் ஏற்பட்டது. அரசாங்க உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்க்கட்சியினர் கொலைகாரர்கள் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாஷிமின் படங்களை வைத்திருந்தனர்.

அரசாங்க உறுப்பினர்கள் கறுப்பு துணிகளை கைகளில் கட்டியிருந்தனர் ஐக்கிய மக்கள் சக்தியினர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் திஸ்ஸ குட்டியராச்சி ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்ட சம்பவமும் பின்னர் சண்டையை தவிர்க்கும் சம்பவங்களும் இடம்பெற்றன.

Posted in Uncategorized

தொல்லியல் திணைக்கள வழக்கில் ரெலோ தவிசாளர் நிரோஷ் ஒரு இலட்சம் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பொலிஸாருக்கு அறிவுறுத்தியதுடன் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா செந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொல்லியல் திணைக்களம் நிலாவரையில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைக்கு தவிசாளர் தடை ஏற்படுத்தினார் என்றும் இதன் மூலம் அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்தினார் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கமைய அச்சுவேலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று (21) மாலை எடுக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில், தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். அவர்கள் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இக் கிணற்றில் இருந்து அப்பால் தான் தொல்லியல் திணைக்களத்தின் முயற்சி இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அரச பெறுகை கேள்விக்கோரல் நடைமுறைகளின் பிரகாரம் குத்தகைக்கு வழங்கிவந்துள்ளது. பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக் கோவை சரத்தின் பிரகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். நிலாவரையில் பிரதேச சபை பல முதலீடுகளைச் செய்துள்ளது.

தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெற்றே தொல்லியல் திணைக்களம் செயற்படும் என உத்தரவாதமளித்துள்ளார். ஆனால் இங்கு பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் என்ன நடக்கிறது என்ற விபரத்தினைக் கேட்டால் அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்தினார் என்கின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருதமுடியாது. நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது.

எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
தனியாராக இருந்தாலேன்ன அரச தாபனமாக இருந்தாலேன்ன பிரதேச சபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்த அச்சுவேலிப் பொலிஸார் தாம் இவரை முதலாவது எதிராளியாகக் கொண்டு மேலும் பலருக்கு இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மன்றில் தெரிவித்தனர். அத்துடன் மன்றில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந் நிலையில் நீதிபதி பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவை சரத்தின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்ப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ள என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை மன்றில் பிரசன்னமாகியுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் மேலதிக விசாரணைகள் ஏற்படின் ஒத்துழைக்க வேண்ம் எனவும் அவர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவிட்டு அனுமதித்தார்.

Posted in Uncategorized

தமிழ் தேசிய இனத்துக்கு மறுக்கும் அதிகாரத்தை துறைமுக நகரத்துக்கு வழங்குவதா – ரெலோ சுரேந்திரன் கேள்வி

துறைமுக நகர முகாமைத்துவத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான சிறப்பு சட்ட மூலத்திற்கான பிரேரணையை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. இந்த ஆணைக்குழுவின் முலம் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஆணையாளராக நியமிப்பதற்கும், காணி மற்றும் நிதி அதிகாரங்களும் வழங்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி கணிசமான உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள.

இந்த நிலையில் தமிழ் தேசிய இனமான நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக எங்களுக்கான அதிகாரங்களைப் பகிர, ஆகக்குறைந்தது மாகாணசபை அதிகாரங்களை, ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பிரகாரம் முற்றுமுழுதாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்படுகிறது. ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு, வெளிநாடு ஒன்றுக்கு அதே அதிகாரங்களை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரும் தேசிய அமைப்பாளரைமான சுரேந்திரன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

ஆதிக்குடிகளாக, தேசிய இனமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் எமது மக்களை சிறப்பாக நிர்வாகிக்கும் அதிகாரப் பரவலாக்கலாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களாக ஜனநாயக வழியிலும் ஆயுதப் போராட்ட மூலமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எமது போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட அதே வேளையில் வெளிநாடு ஒன்றுக்கு தாம்பாளத்தில் வைத்து அதே அதிகாரங்களை அரசு கொடுக்க முற்படுவது எதற்காக?

வியாபார ரீதியாக அந்த துறைமுக நகரம் நாட்டுக்கு நிதி சேர்த்துக் கொடுக்கும் என்றால் நாம் கோரும் அதிகாரங்களை எங்களுக்கும் தாருங்கள். இதைவிட சிறந்த முறையிலே நாங்கள் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அதிக அளவு வருமானத்தை ஈட்டித் தரும் தேசமாக மாற்றி அமைத்து காட்டுகிறோம்.

தனது நாட்டில் தேசிய இனத்துக்கு பல்வேறு காரணங்களை கூறி மறுக்கும் உரிமையை, வெளிநாட்டுக்கு வருமானம் என்ற நியாப்படுத்தலோடு வழங்குவது எப்படி? இதற்கு அரசு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ

20ற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசர சந்திப்பு

இன்றுபுதன்கிழமை காலை 10.30 மணிக்கு 20வது சீர்திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளார்.

இந் சந்திப்பில் கடந்த வாரம் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் விவகாரம், சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை விவகாரம் போன்ற இன்னும் பல முக்கிய முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்து இருந்தார்.

அந்த சந்திப்பின் பின்னர், சந்திப்பு தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர்,

அந்த சாலை விடயமாக போக்குவரத்து அமைச்சர், இராஜாங்க அமைச்சரை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசியுள்ளோம். இது தொடர்பில் இன்று பிரதமருக்கு எடுத்துரைத்தவுடன் சம்மாந்துறை பிரதேசத்தை தான் தனிப்பட்டமுறையில் நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக தெரிவித்து போக்குவரத்து அமைச்சர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஆகியோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு இவ்விடயத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் போது இது தொடர்பில் விளக்கமளிக்க முனைந்த இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு கடும் தொனியில் பேசிய பிரதமர் உடனடியாக சாலையை மீண்டும் சம்மாந்துறையில் திறக்குமாறும், இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களை மீள சம்மாந்துறைக்கு திருப்பியனுப்புமாறும் உடனடியாக இந்த டிப்போவை இயங்கவைக்குமாறு உத்தவிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் சம்மாந்துறையில் சாலையை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மேலும் பல முக்கிய விடயங்களும் இங்கு பேசப்பட்டது.

இந்த சந்திப்பில் என்னுடன் முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் இசட்.ஏ. நஸீர் அஹமட், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைஸல் காஸிம், முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், சட்டத்தரணி முஷாரப் முதுநபின், அலிசப்ரி ரஹீம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்றார்.

Posted in Uncategorized

அணு மூலக்கூறுகளுடன் இலங்கைக்கு வந்த சீனக் கப்பல் குறித்து சபையில் சஜித் கேள்வி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வேதியல் அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? குறித்த நாட்டின் தூதரகத்தின் வலுயுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் இதனை கண்டுகொள்ளாது மௌனம் காக்கின்றதா? இது உண்மையென்றால் நாட்டின் நிலைமை என்னவாகும் என தெரியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் துறைமுக நகருக்கு கற்கை விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வருமாறு சீன தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் குறித்து வெளிவரும் செய்தி தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார்.

“சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. நேற்று 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று வேதியல் அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது. இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளனர். இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், அது தவறான செய்தி சென்றால் அது குறித்து அரசாங்கம் அறிவிக்க முடியும். ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌன கொள்கையை பின்பற்றி வருகின்றது. ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதியல் அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தலாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இதனை ஆராய்ந்து உண்மை பொய் தன்மைகளை ஆராய்ந்து உண்மையென்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு ஆராய அனுமதிக்க வேண்டும்” என அவர் சபையில் வலியுறுத்தினார்.

அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சீன தூதரக அறிவித்தல் தொடர்பில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இருந்து எமது தொலைபேசிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதனை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

கொழும்பு துறைமுக நகர் கற்கை விஜயம் ஒன்றினை சீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்த பின்னர் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எமது ஆட்சியிலும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எமது நாட்டின் நிலப்பரப்பில் விஜயம் ஒன்றினை செய்ய சீன தூதரகம் எவ்வாறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதனை கைவிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்த வேளையில் குறித்த குறுஞ்செய்தி தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

வலி கிழக்கு ரெலோ தவிசாளர் நிரோஷ் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு

வலி கிழக்குத் தவிசாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிக்கு வழக்கை மல்லாகம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தவணையிட்டார்.

தம்மால் வீதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடப்பட்ட பெயர்ப்பலகையினை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் அகற்றினார் எனக் குற்றஞ்சாட்டி அரச சொத்துக்குத் சேதம் விளைவித்தார் எனத் தெரிவித்து கடந்த வருட இறுதியில் வலிகிழக்குத் தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் தவிசாளர் கைதுக்கு எதிராக நீதிமன்ற பாதுகாப்பைப் பெறும் நோக்கில் முன்பிணை பெற்றார்.

இந் நிலையில் மீள வீதி அபிவிருத்தி அதிகார சபை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவ் வழக்கு இன்று புதன்கிழமை காலை (21) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சார்பில் சிரோஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியது. சட்டத்தரணிகளால் தற்போதைய நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய அனுமதிகளை உரியவாறு பிரதேச சபையில் இருந்து பெற்றுக்கொள்கின்றது.

இந் நிலையில் குறித்த வீதிக்கான பெயர்ப்பலகைக்கான அனுமதியையும் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் கிடைத்துள்ளன. குறித்த வழக்கு நிலுவையில் உள்ளமையின் காரணமாக குறித்த விளம்பரப்பதாகைக்கான அனுமதி பற்றி பரிசீலிக்க முடியவில்லை என முன்வைக்கப்பட்டது.

இந் நிலையில் இருதரப்புமாக முடிவெடுத்து வழக்கை பின்வாங்கிக் கொள்ள பெறமுடியும் எனவும் நிதிபதி அறிவுறுத்தி வழக்கை எதிர்வரும் மார்கழி முதலாம் திகதிக்கு தவணையிட்டதுடன் குறித்த வழக்கில் தவிசாளரை ஐம்பதாயிரம் ரூபா சொந்தப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.

பழிவாங்குவதால் திருப்திப்படுத்த முடியாது ; தவறிழைத்தவர்களை மன்னிப்போம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாப்பரசர்

கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோடு பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. அதே போன்று பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூறிக்கொள்வதுடன் அனைவரையும் ஆசிர்வதிப்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நிழ்வில்; பாப்பரசரின் செய்தியை அறிவிக்கும் போது பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ப்ரையன் யுடைக்வே இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற இன்றைய தினத்தில் நான் பாப்பரசரின் செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். அவர் அவரது ஆசீர்வாதத்தை உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் வழங்கியுள்ளார்.

கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகும். பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்று பாப்பரசர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஷ்வரர் ஆலய குருக்கள் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் முக்திக்காக நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம். தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் ஆருதல் கூறுகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இதன் போது ஹசன் மௌலானா மௌலவி குறிப்பிடுகையில் ,

தீவிரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் மதத்தில் ஒருபோதும் அனுமதி கிடையாது. இந்த தாக்குதல்களை உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்களின் செயற்பாடுகள் வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றோரால் தற்போது சமூகத்தில் சாதாரண ஒரு பிரஜையாக வாழ முடிகிறது என்றால் , அதே போன்று அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம்களும் மனம் திருந்தி ஏன் வாழ முடியாது? அடிப்படைவாதத்தை கைவிட்டு சிறந்த பிரஜைகளாக வாழுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.