மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ கோரிக்கை

மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதேதோ காரணங்கள் சொல்லி அரசினால் பின் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் பின் போடப்படுவதால் மாகாண சபை முறைமை செயலிழந்துள்ளது.

கடந்த ஆட்சியில் இருந்து இது தொடர்டகிறது. இதனால் மாகாண சபை முறைமையை அவசியமற்றது என்று கருத்து கூற அரச தரப்பில் பலர் முன் வந்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். எமது பூர்விக தாயகப் பரப்பில் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்லியல் என்ற பெயரிலும் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாக கூறி அரசு சட்ட சிக்கலை முன்வைத்து மாகாணசபை தேர்தலை மேலும் பின்னடித்து செல்கிறது.

மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது.

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல், அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.

எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது.

வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன.

ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில், அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் , ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும்,
விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.

தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய காலத்தின் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழ் தேசியம் சார்ந்தவர்களும், மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துப் பயணிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. இதற்கான முழுமையான செயற்பாட்டுக்கு எமது முற்றான ஆதரவையும் வழங்கவும் தயாராக உள்ளோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -(ரெலோ)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

மே தின கூட்டங்களுக்கு அனுமதி இல்லை

மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும்

இலங்கை விரைவில் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்துவது உட்பட்ட நடவடிக்கைகள் மூலம் அதிகாரங்களை பகிர்வது குறித்த தனது அர்ப்பணிப்பை நிறைவேற்றவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

இது இலங்கையின் 13வது திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து மாகாணசபைகளும் பலனளிக்ககூடிய விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பையும் உள்ளடக்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தியா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை ஆனால் வாக்களிப்பிற்கு முன்னதாக சமத்துவம் நீதி கௌவரம் மற்றும் சமாதானத்திற்கான தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வது குறித்த வலுவான அறிக்கையொன்றை இந்தியா வெளியிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுடன் நேற்றைய கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு என்பன சுதந்திரக் கட்சி வழமையைப் போன்று மே தினக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளன. அதற்கமைய கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் வரலாற்றை அவதானிக்கும் போது கீழ் மட்டத்திலுள்ள மக்களை உயர்மட்டத்திற்கு கொண்டு வந்தததும் சுதந்திர கட்சியாகும். எனவே நாம் மே தினக் கூட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை வெகுவிரைவில் எடுக்கவும், மே தின கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகள் அனைத்து ஒன்றிணைத்து நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அலரிமாளிகையில் பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேதினக் கூட்டத்தை தனித்து நடத்தப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை.

கூட்டணி, மற்றும் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாட பிரதமரிடம் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளார்கள்.

பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் சுதந்திர கட்சியின்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன, பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன,கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ், நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள். பங்காளி கட்சியின் முக்கிய தரப்பினர்களாக கருதப்படும் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், இது குறித்து கட்சியின் பொது செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,

சுதந்திர கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதோடு , பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஏனைய சகல தரப்பிற்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் என்ற ரீதியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொள்வார் என்றார்.

Posted in Uncategorized

இரட்டை வேடம் போடுகிறார் மல்கம் ரஞ்சித் – ஞானசாரர் குற்றச்சாட்டு

கார்டினல் மல்கம் ரஞ்சித் இரட்டை வேடம் போடுவதாக சாடியுள்ளார் பொது பல சேனாவின் ஞானசார. ஈஸ்டர் தாக்குதல் அதிகாரத்தைக் கைப்பற்றத் தேவையிருந்த ஒரு அரசியல் சக்தியாலேயே நடாத்தப்பட்டது என கார்டினல் அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கார்டினலுக்கு பிரச்சினையிருந்தால் அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அதற்கு மாறாக இவ்வாறு கருத்துரைப்பது தீவிரவாதத்துக்கு மேலும் தீனி போட்டு அங்கீகரிப்பதாகி விடும் எனவும் ஞானசார தெரிவிக்கிறார்.

இதேவேளை, தான் கூறிய கூற்று தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தான் ‘சர்வதேச’ அரசியல் சக்தியொன்றே தமது ஆளுமையை பலப்படுத்திக் கொள்ள இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்ததாகவும் கார்டினல் மறு விளக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ரிசாதுடன் அரசாங்கம் போட்ட ‘டீல்’: கார்டினல் விசனம்!

20ம் திருத்தச் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் கட்சித் தலைவர்கள் வாக்களிக்காமல் அவர்களது கட்சி உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களித்த விதம் அரசியல் ‘டீல்’ ஒன்றின் வெளிப்பாடு என தெரிவிக்கிறார் கார்டினல் மல்கம் ரஞ்சித்.

அதற்கு சில தினங்களுக்கு முன்பாக ரிசாதின் சகோதரர் கைது செய்யப்பட்ட போதே தான் இது பற்றி தெரிவித்ததாகவும் அப்போது அது மறுக்கப்பட்ட போதிலும் பின்னர் வாக்கெடுப்பின் போது நடந்த விடயங்கள் அந்த டீலை உறுதிப்படுத்தியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை திருப்திகரமாக நடாத்தவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், உண்மையான சூத்திரதாரிகளைக் கைது செய்யாது காட்டப்படும் காட்சிகள் எவ்விதத்திலும் நம்பக் கூடிய வகையில் இல்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்

மலைநாட்டில் 10 இலட்சம் மலையக மக்கள் செரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10 இலட்சம் மக்களுக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போதைய நிலைமையின்படி, மலையகமெங்கும் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 25 பேர் காணப்படுகின்றனர். ஆனால், புதிய முறைமையின்படி ‌ஐவர் மாத்திரமே கிடைக்கப்பெறுவர். அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இ.தொ.கா.வின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர்

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.கா.வின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, மாகாணசபைத் தேர்தல்களை புதியமுறைமையின் இரு வழிமுறைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது.

இவ்விரண்டு முறைமைகளில் எதையேனும் மற்றைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு வழிமுறைகளுக்கும் நேரடியாக எதிர்ப்பைத் தெரிவித்தது.

இதன்போது, இதற்கான மாற்று வழிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த செந்தில் தொண்டமான், மலைநாட்டில் 10 இலட்சம் மலையக மக்கள் செரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10 இலட்சம் மக்களுக்கும் ஐந்து உறுப்பினர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படுவர்.

தற்போதைய நிலைமையின்படி, மலையகமெங்கும் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 25 பேர் காணப்படுகின்றனர். ஆனால், புதிய முறைமையின்படி ‌ஐவர் மாத்திரமே கிடைக்கப்பெறுவர். அதனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதன்போது, இந்த முறைமையைத் தாங்கள் தயாரிக்கவில்லை என்றும் கடந்த அரசாங்கமே இந்த முறைமையைத் தயாரித்துள்ளதென்றும், அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த செந்தில் தொண்டமான்,

அதனால்தான் கடந்த அரசாங்கத்தின்போது, இந்த முறைமைக்குத் தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இந்த 25 பேர் கிடைக்கப்பெறக்கூடிய வழிமுறைகள் பற்றியும் கேள்வி எழுப்பினார். அத்துடன், இரட்டைத் தொகுதி தொடர்பிலும் இதன்போது அரசாங்கத்தால் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதலளித்த செந்தில் தொண்டமான், இரட்டைத் தொகுதி எனும் பட்சத்தில், சிறுபான்மைக் கட்சிகள் கட்டாயமாகப் பெரும்பான்மைளோடுபோகக்கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அதனால், சுயமாகத் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பற்றுப் போகிறது. அதனால், அம்முறைமையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

அந்த வகையில், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வழிமுறைகள் சாத்தியப்படாது எனும் பட்சத்தில், தங்களின் ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, கருத்துரைத்த செந்தில் தொண்டமான், நீங்கள் தற்போது 70,000 – 80,000 பேருக்கான தொகுதிகளை உருவாக்குகிறீர்கள்.

அவ்வாறு செய்யாமல், குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தனித் தமிழ் மக்கள் மாத்திரம் உள்ளடங்கும் வகையில், 25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறும் அதற்குத் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

உதாரணமாக, சுமார் 14 இலட்சம் சனத்தொகையைக் கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தையும் சுமார் 6 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட மொனராகலை மாவட்டத்தையும் எவ்வாறு தனி மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறீர்களோ, அவ்வாறே தமிழ்ப் பிரதேசங்களுக்கும் தனித் தொகுதிகளை உருவாக்குமாறும் வலியுறுத்தினார்.

அத்துடன், அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் அது எந்தக் கட்சியாயினும், மலையக மக்களின் பிரதிநிதிகள் வரும் வகையில் வழிமுறைகளை வகுத்து அறிவிக்கிறோம் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மத்தியரசின் தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை ரெலோ தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல்

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காலரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் முறையிட்டனர்.

அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர். தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் உடன்படவில்லை.

தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என அறிவித்திருந்தார். எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய தினத்திலேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தவிசாளருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் மீள மன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அனுமதியின்றி அச்செழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அதிகாரசபை நாட்டிய பெயர்ப்பலகையினை தவிசாளர் அகற்றிய வழக்கே மீள எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிசார் தீவீரமுயற்சி எடுத்தனர். தவிசாளர் மல்லாம் நீதிமன்றில் தோன்றி சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் ஊடாக உள்ளூராட்சிக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை தான் நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினை எனத் தெரிவித்து அரசியல் பழிவாங்கல் கைதில் இருந்து முன் பிணையில் தற்போது உள்ளார். இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திணைக்களம் உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்டவிதிகள் மீது கவனத்தினைச் செலுத்தாது தாம் பிரதேச சபையின் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தது.

இந் நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் தாபனங்கள் உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே ‘ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்

ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை வழங்கி வருகின்ற இவ்அமரர் ஊர்தி சேவையில் தங்களது அதிகார மோதலை வெளிப்படுத்துவதை ஆணையாளர் உடன் நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் பின்புலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் சேவைக்காக இயங்கும் இவ்அமரர் ஊர்தி சேவை வாகனத்தினை மாநகர வளாகத்திலேயே தரிப்பதற்கு எவ்வித இடையூறும் வழங்காது அனுமதியளித்து மக்களுக்கான சேவைகளைத் தொடருவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமரர் ஊர்தியில் அரசியல் வேண்டாம், அதிகார மோதலில் மக்கள் சேவையைத் தடுக்காதே போன்ற கேசங்களை எழுப்பியவாறும், ஆணையாளரே ஊழியரை மிரட்டாதே, ஜி.கே அறக்கட்டளை மட்டக்களப்பிற்குத் தேவையான ஒரு சேவை, ஆணையாளரே ஏழை மக்களின் இலவச சேவையை முடக்காதே, ஆணையாளரே ஏழை மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல், ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே, கிழக்கின் ஆளுநரே நீதியினை நிலைநாட்டு போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விடயம் தெடர்பில் மாநகர முதல்வர் உட்பட உரியவர்கள் வருகை தந்து தங்களுக்குரிய உகந்த பதிலை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இது எவ்வித அரசியல் பிரச்சினையும் இல்லை. இது மக்களின் பிரச்சினை, மக்களுக்கான இலவச சேவையை முடக்குவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது, அரசிலைத் தாண்டி மக்கள் பற்றி சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நன்மை பெற்ற இவ்அமரர் ஊர்தி சேவைக்கு தடையினை எற்படுத்தவதென்பது பாவப்பட்ட ஏழை மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாகும் என்று தெரிவித்தனர்.

இதன் போது அவ்விடம் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடினர். 2019ம் ஆண்டு ஜி.கே அறக்கட்டளையின் வேண்டுகோளுகிணங்க மாநகரசபை அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 38 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவ்அமரர் ஊர்தி மாநகர வளாகத்தில் தரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரண்டரை வருடங்களுக்கு மேல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வந்த சேவை தற்போது புதிய ஆணையாளர் வருகை தந்ததன் பின்னர் இவ்வாகனம் வெளியில் போடப்பட்டது. பின்னர் இன்னுமொரு சபைத் தீர்மாதனத்தைக் கொண்டு வந்து வாகனம் மீண்டும் தரிப்பிடத்தில் கொண்டு செல்லப்பட்ட வேளை அவ்வானத்தைச் சேதப்படுத்தி, வாகனத்தைச் சூழ கற்களைக் குவித்து, ஜி.கே. அறக்கட்டளை இலவச அமரர் ஊர்தி என வாகனத்தில் பதிக்கப்பட்டிருந்த பெயரையும் வெள்ளைப் பூச்சினால் அழித்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் உரியவர்களிடம் வாகன சாவி இருக்கையில் எவருக்கும் தெரியாமல் திருப்பெருந்துறைக்கு வாகனம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இது முற்றுமுழுதாக ஆணையாளரின் செயற்பாடுகள். சபையின் தீர்மானங்களை மீறிச் செயற்படுகிறார் என்று கூறி ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்தும் நீதிமன்றத்தினையும் அவமதிக்கும் முகமாக மேலும் மேலும் ஆணையாளர் செயற்பட்டு வருகின்றார் என பிரதி முதல்வர் இதன் போது சுட்டிக் காட்டினார்.

இதேவேளை மாநகர ஆணையளரின் தலைமையில் ஊழியர்களை ஒன்று திரட்டி மாநகர வாயிலில் இவ்வார்ப்பாட்டத்திற்கு எதிராகவும், ஜி.கேஅறக்கட்டளையின் அமரர் ஊர்தி சேiவையினை மாநகர வளாகத்திற்குள் இடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அவ்விடம் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என ஆணையாளர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆணையாளருக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்காமல் ஒரு விடயத்தை ஏற்பாடு செய்து விட்டு ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என்று சொல்வது பொருத்தமற்ற விடயம் என ஊடகவியலாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

பின்னர் அமரர் ஊர்தியினை மாநகர எல்லைக்குள் இடுவதற்கு மாநகர ஊழியர்களுக்கு விருப்பமில்லாத நிலை காணப்படுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு தனிநபரின் அரசியல் செயற்பாடுகளுக்காக இவ்ஊர்தி சேவை செயற்படுவதாகவும், அவருக்கு மாவட்டத்தில் பல இடங்களில் காணிகள் உள்ளதாகவும், அவற்றில் இவ்வாகனத்தைத் தரித்து தங்கள் சேவையைச் செய்ய முடியும் என்றும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார். மாநகரசபை அனுமதியளிப்பதற்கு அதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எந்த அதிகார வரம்பிற்குள் மாநகரசபை இவ் ஊர்திக்கு அனுமதியளித்தது என்று தெரியாது. ஊழியர்களின் அச்சமும் நியாயமானது. எனவே தான் இதனை திருப்பெருந்துமுறைக்கு மாற்றினோம். அங்கிருந்தும் இச்சேவையைத் தொடர முடியும் எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது ஊர்தி சேவைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஊழியர்கள் கடமை நேரத்தில் இவ்வாறு கவனயிர்ப்பில் எவ்வித நடைமுறைகளின் ஊடாக ஈடுபடுகின்றார்கள், ஆணையாளர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றாரா? என்ற கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். அதன் அடிபப்படையில் மாநகர முதல்வர் ஊழியர்களிடம் கடமை நேரத்தில் இவ்வாறு செயற்படுவது உகந்ததல்ல என்று தெரிவிக்கையில் மாநகர உத்தியோகத்தர்கள் பலர் கலைந்து சென்றனர்.

இதன் பிற்பாடு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் மாநகர ஊழியர்கள் சிலர் முற்பட்டனர். இதன் போது பிரதான வாயிற் கதவு ஊழியர்களால் மூடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டிற்கமைவாக நுழைவாயில் மீளத்திறக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறும். மாநகரசபைக்குள் நுழையாமல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபடுமாறும் தெரிவித்தமைக்கமைவாக வீதியில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்ம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க முடிவு

நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் அனைத்து ஆண்டுகளுக்குமான பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பல்கலைகழகங்களை ஆரம்பிப்பதாகவும், விடுதிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருக்கும் காரணத்தினால் முதலில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களை மாத்திரம் விடுதிகளுக்குள் உள்வாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.