மஹிந்தவின் கூட்டத்திலிருந்து எழுந்து சென்ற விமல் குழு

பெரமுனவில் வலுத்து வரும் உட்கட்சிப்பூசலை முடிவுக்குக் கொண்டு வரும் நிமித்தம் மஹிந்த ராஜபக்சவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் சந்திப்பிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நானாயக்கார எழுந்து சென்றுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் சந்திப்பென்று கூறிவிட்டு, அங்கு கட்சித் தலைவர்கள் அல்லாதவர்களும் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் கருத்து முரண்பாடுகள் வலுப்பதைத் தவிர்ப்பதற்காகவுமே தாம் எழுந்து சென்றதாக விமல் கூட்டணி விளக்கமளித்துள்ளது.

பசில் ராஜபக்ச – வியத்மக கூட்டணிக்கும் விமல் – கம்மன்பில குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுத்துள்ளதாக பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருபோதும் அடிபணியப்போவதில்லை : அரசாங்கம் 69 இலட்சம் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது – விஜயதாஸ சூளுரை

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்ச மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது.

எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உரிமை கட்சிக்கு உண்டு நாட்டில் சட்டம் உள்ளது அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும். அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியபோவதில்லை என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு மகாசங்கத்தினர் நேற்று ஆசிர்வாதமளித்தனர். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், சட்டம் தொடர்பில் தெளிவில்லாதவர்களே கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து கருத்துரைக்கிறார்கள். அனைத்து சட்ட மூலங்களும் அரசியலமைப்பிற்கு முரணற்றது என சட்டமாதிபர் குறிப்பிடுவார். இவரது கருத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம். கடந்த காலங்களில் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட காணி சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டது என சட்டமாதிபர் குறிப்பிட்டார்.

காணி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரண் என உயர்நீதிமன்றில் வாதிட்டேன். இச்சட்டம் அபாயகரமானது என குறிப்பிட்டேன். அனைத்துவாத பிரதிவாதங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்றம் காணி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கவில்லை. காணி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நடுத்தர விவசாயிகள் பல நெருக்கடிகளை எதிர் நோக்கியிருப்பார்கள்.

எனக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு கட்சிக்கு முழு உரிமை உண்டு. நாட்டில் சட்டம் உள்ளது. அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும்.

கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்த அடிப்படையில் பிற தரப்பினருக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

அத்தோடு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய சட்டமூலத்தை இரசகியமான முறையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சித்தது. அதற்காகவே கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு என்மீது பல குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை. நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்க நாட்டு மக்கள் இடமளிக்க வேண்டாம்.தேசிய வளங்கள் அந்நிய நாட்டவர் வசமானால் இலங்கை மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்றார்.

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது- சோபித தேரர்

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலுள்ள போதிராஜா தர்ம நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது,“நாங்கள் அனைவரும் முப்பது வருடங்களாக கடுமையான சோகத்தில் இருந்தோம்.

புலிகளுடனான போராட்டம் முப்பது வருடத்துடன் நிறைவடைந்தது. உண்மையில், இலங்கை மக்களாகிய நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.

ஆனால் தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

நாங்கள் அதை ஒரு துறைமுக நகரமாகப் பார்க்கிறோம். மேலும் நவீன சீன காலனி துறைமுக நகரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் அதைத் தொடர முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் நாங்கள் பார்த்தோம்.

மேலும் புதிய சட்டத்தின் கீழ் போர்ட் சிட்டி இலங்கைக்கு சொந்தமானது அல்ல என்பதுடன் இதனை ஒரு சீன மாகாணமாகவே பார்க்கின்றோம்

இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த துறைமுக நகர திட்டத்தின் கீழ் புதிய சீன காலனித்துவ காலனி நிறுவப்பட உள்ளது.

மேலும் புதிய சீன காலனியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த துறைமுக நகரம், நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கு முகவர்கள் யாரும் இல்லை.

அந்த நிலத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான பிரதிநிதித்துவமோ கட்டுப்பாடோ இல்லை.

ஆகவே உருவாக்கப்படவுள்ள புதிய சீன காலனி நிராகரிக்கப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நிறுவப்படக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அன்னை பூபதியை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.

இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறான வரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம்.

உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்த முடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை அடுத்து கொழும்பு விரையும் பிரதமர் மகிந்த

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான தங்காலையிலும் மற்றும் நுவரெலியாவில் புதுவருட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையிலேயே கொழும்புக்கு திரும்புகிறார்.

முருத்தட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி கலந்துரையாடல் நடத்திய பின்னரே பிரதமர் கொழும்பு திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே முருத்தட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு யோசனை நிறைவேற்றப்பட்டால் துறைமுக நகரம் ‘சீன குடியிருப்பாக மாறும் என்று விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ச அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் யாப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விஜயதாச ராஜபக்சவின் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுக் கூறுவதற்காக , பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை திறந்து வைத்திருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மனித வாழ்க்கை என்பது மிகவும் பெறுமதி மிக்கதாகும். அதனை எந்தவொரு பொருளுடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேச முடியாது. சுயநல எண்ணங்கள் நிறைந்த உலகத்தில் மனித உயிர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும். அதனால் மதத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெறவில்லை.

இது தொடர்பில் இலங்கையர் என்ற வகையில் நாம் வெட்கமடைய வேண்டும். எமது சுயநலத்திற்காக இன்னுமொரு மதம் , இனம் மற்றும் மொழியைச் சார்ந்தவரை நாம் துன்புறுத்தியுள்ளோம்.

இந்நிலையில் தனது பலத்தை காண்பிப்பதற்காக இன்னெமொருவரை கொலைச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதேவேளை ஒரு மதம் , இனம் அல்லது மொழியைச் சார்ந்தவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்த்ததுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் காரணமாக முழு உலகமே அசுந்தமானதாகவே விளங்கும். அதனால் , அனைவரும் தங்களது வாழ்க்கையில் மற்றுமொருவரின் வாழ்வுக்கு உதவிகளை செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

இதேவேளை உயிர்த்தஞாயிறுதின குண்டு தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

Posted in Uncategorized

முல்லை ஸ்டார் கலைஞர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதயில் அமைந்துள்ள முல்லை ஸ்டார் இசைக்கலைஞர்களின் ஒராண்டு பூர்த்தி நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும் இன்னிசை நிகழ்வும் குரவில் தமிழ் வித்தயாலயத்தில் நடைபெற்றுள்ளது.(17.04.21)

இசைக்குழுவின் இயக்குனர் ந.நவச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விநோனோகராதலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் ஸ்ரீசபாரத்தினம் அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் க.கணேசகுமாரன்,தமிழர்குடில் இலங்கைக்கான ஊடகவியலாளர் இ.உதயகுமார்,கலைஞர் யோ.புரட்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன் போது பிரமவிருந்தினர்கள்,சிறப்பு விருந்தினர்களால் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

Posted in Uncategorized

உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

மணிவண்ணன் கைது செய்யப்பட்டதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதைவிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். நாட்டுக்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் வெள்ளைக்கார அரசியல் பிரமுகர்களும் அது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு தமிழ்ப்பகுதிகளில் நிகழும் ஒரு சம்பவத்துக்கு வெளித்தரப்புகள் எதிர்வினை காட்டுவது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டபோது இவ்வாறான ஓர் எதிர்வினை ஏற்பட்டது.

கடந்த கிழமை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஹிட்லர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு கொழும்பில் உள்ள ஜேர்மானியத் தூதரகம் எதிர்க்கருத்தைத் தெரிவித்தது. திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நெருக்கமான விசுவாசமான ஒருவர்.

இவ்வாறு நாட்டுக்குள் நடக்கும் விவகாரங்களுக்கு வெளிச்சக்திகள் கருத்துக்கூறும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? குறிப்பாக தமிழ் அரசியலில் நிகழும் முக்கியமான விவகாரங்களுக்கு இவ்வாறு வெளித்தரப்புகள் குரல் எழுப்புவது என்பது எதைக் காட்டுகிறது?

அதாவது தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்வைத்து வெளித்தரப்புகள் இலங்கை விவகாரங்களில் கருத்துக் கூறுகின்றன என்பதுதான். அதாவது, தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு வெளித்தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுகின்றன என்பதுதான்.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட 46/1 ஜெனிவா தீர்மானமும் அத்தகையதுதான். இவ்வாறு, தமிழ் மக்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் ஒரு போக்கு எனப்படுவது ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியது. இன்னொரு விதத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக அரசாங்கத்திற்கும் வெறுப்பூட்டக் கூடியது.

இலங்கை அரசாங்கத்தின்மீது வெளித்தரப்புக்கள் இவ்வாறு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. ஜெனிவா தீர்மானம் தொடர்பாக ஒரு தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் அதைத்தான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

ஜெனிவா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தீவில் மற்றொரு ஆட்சி மாற்றத்துக்கான நிலைமைகளை நொதிக்கச் செய்ய முயற்சிக்கின்றன என்ற ஊகம் பரவலாக மேலெழுந்துவரும் ஒரு பின்னணியில் மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்க்க வேண்டும்.

இது அரசாங்கம் வெளித்தரப்புகளின் அழுத்தத்திற்குள் இருக்கிறது என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். அதாவது, அரசாங்கம் வெளி அரங்கில் அதிகம் பலமாக இல்லை என்பதை இது காட்டும். உள்ளரங்கிலுங்கூட அதாவது நாட்டுக்கு உள்ளேயும் அரசாங்கம் ஸ்திரமாக இல்லை என்ற ஒரு கருத்து நாட்டில் ஒரு பகுதியினர் மத்தியில் உண்டு. எதிர்வரும் 19ஆம் திகதி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கைக்குப் போகலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகிறது.

இந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்பிய அபயராம விகாரையின் அதிபதி கலாநிதி ஆனந்த முருத்தெட்டுவ தேரர், விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்றோர் அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதைப்போலவே, இந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கை வகிக்கும் வியத்மக அமைப்புகுள்ளும் சில முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக எனது நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

சிங்கள ஊடகங்கள் மற்றும் சிங்கள நண்பர்களோடு தொழில்சார் ரீதியாக அதிகம் பழகிவரும் அரசு ஊழியரான மேற்படி நண்பர், அரசாங்கத்தின் மூளை என்று வர்ணிக்கப்படும் வியத்மக அமைப்புக்குள் தற்பொழுது கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பு என்பது 2009இற்குப் பின்னரான சிங்கள-பௌத்த பெருந் தேசியவாதத்தை துறைசார் நிபுணத்துவத்துக்கூடாகப் புதுப்பிக்கும் நோக்கிலானது. அந்த அடிப்படையில்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தந்திரோபாயங்களை அந்த அமைப்பு வகுத்துக் கொடுத்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஒரு சிந்தனை குழாத்தின் உறுப்பினர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது பொருத்தமானது அல்ல என்று வியத்மக அமைப்புக்குள்ளேயே ஒரு பகுதியினர் கருதுவதாகத் தெரிகிறது.

தேர்தல் அபிலாசைகள் அற்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் ஆசைகளற்ற ஆகக்கூடியபட்சம் சுயாதீனமான சிந்தனைக் குழாம்தான் அரசாங்கத்துக்கு நாட்டை முன்னோக்கி செலுத்தும் ஆலோசனைகளை வழங்க முடியும் என்று வியத்மகவிற்குள் இருக்கும் ஒரு பகுதியினர் நம்புவதாகத் தெரிகிறது. சிந்தனைக் குழாத்தின் உறுப்பினர்கள் தேர்தல்மைய அரசியல்வாதிகளாக மாறுவதோ அமைச்சரவையில் பொறுப்புகளை வகிப்பதோ பொருத்தமானதும் சரியானதும் அல்ல என்று மேற்படி தரப்பினர் நம்புகிறார்களாம்.

ஒரு சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த அறிஞர்கள் அல்லது துறைசார் நிபுணர்கள் ஓர் அரசாங்கத்தில் நேரடியாக அங்கம் வகிப்பது அந்த சிந்தனைக் குழாத்தின் சுயாதீனத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் வியத்மக அமைப்பின் ஒரு பகுதியினர் வியத்மக அமைப்பின் நீண்டகால இலக்குகளை அடைவதற்குப் பொருத்தமான விதங்களில் செயற்படவில்லை என்றும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. அரசாங்கத்துக்குள் இயங்கும் ஓர் அரசாங்கம் என்று நம்பப்பட்ட வியத்மக அமைப்புக்குள் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதும் அரசாங்கம் பலவீனம் அடைவதைக் காட்டுவதாக ஒரு பகுதி தென்னிலங்கை அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் பொருட்களின் விலை அதிகரித்து வருவதாகவும் சாதாரண சிங்களச் சனங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கொட்டைப் பாக்கின் விலை 15 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் சதொச ஊடாக ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகளை வழங்கி வருகிறது. ஆனால், அந்தப் பொதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்று முறைப்பாடுகள் வருகின்றன.

புத்தாண்டு தினத்தையொட்டி வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய ஐயாயிரம் ரூபாயின் விடயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. பெருந்தொற்று நோய் சூழலை அரசாங்கம் அது நினைத்தபடி கையாள முடியவில்லை. அதன் பொருளாதார விளைவுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அதனால், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. ஒரு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதில் அரசாங்கம் எல்லா மாகாணங்களிலும் வெல்லும் என்று கூறமுடியாத ஒரு நிலைமை உண்டு என்று கூறப்படுகிறது.

இதனாலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கக்கூடும் என்ற ஊகங்களும் உண்டு. அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சிலரும் அரசாங்கத்தைக் கட்டியெழுப்பும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாகாண சபைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருவது இந்த அடிப்படையில்தான் என்று ஊகிக்கப்படுகிறது. அரசாங்கமே இவ்வாறு அமைச்சர்களையும் பங்காளிக் கட்சிகளையும் தூண்டிவிட்டு மாகாண சபைகளுக்கு எதிராகப் பேசவிடுகிறதா என்ற ஒரு சந்தேகமும் உண்டு. அதன்மூலம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்பு உண்டு என்பதை ஒரு காரணமாகக் காட்டி மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று நம்பப்படுகிறது

எனினும், இது விடயத்தில் மற்றொரு வியாக்கியானமும் உண்டு. ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்து அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிட முடியும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக புதிய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்படவிருக்கும் சான்றுகளையும் சாட்சியங்களையும் சேகரிப்பதற்கான பொறிமுறை எனப்படுவது வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்தே இயங்கத் தொடங்கும். செப்டம்பர் மாதமளவில்தான் ஐ.நா.வின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும். எனவே, அப்பொறிமுறை அதிலிருந்துதான் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பொறிமுறை இயங்கத் தொடங்கும்பொழுது அது, நாட்டில் மேற்கு நாடுகளுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டிவிடும். மறுவளமாகச் சொன்னால் சிங்கள-பௌத்த பெருந் தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடும். அரசாங்கம் அப்பொறிமுறையை நாட்டுக்குள் இயங்க அனுமதிக்காது. எனவே, நவீன தொழில்நுட்பங்களின்மூலம் இரகசிய வழிகளினூடாகவும் அப்பொறிமுறையின் கீழ் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும்.

இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களுமே ஐ.நா.வுக்கு அதிகம் உதவ முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. அதில் உண்மையும் உண்டு. இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட இதுபோன்ற அறிக்கைகள் விடயத்திலும் அதுதான் நடந்தது. இந்தக் காரணத்தினாலேயே அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களில் ஒரு தொகுதியையும் தனிநபர்களையும் தடை செய்திருக்கிறது.

ஐ.நா.வின் மேற்படி பொறிமுறையானது வரும் செப்டம்பரில் இருந்துதான் இயங்கப்போகிறது. அரசாங்கம் அது இயங்குவதைத் தடுக்க முடியாது. வேண்டுமானால் அது நாட்டுக்குள் இறங்குவதைத் தடுக்கலாம். எனவே, தனக்கு எதிரான சான்றுகளையும் தகவல்களையும் திரட்டும் ஓர் அனைத்துலக பொறிமுறைக்கு எதிராக நாட்டில் சிங்கள-பௌத்த இனவாத உணர்வுகளைக் கிளப்புவது இலகுவானது. அதை அரசாங்கம் செய்ய முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பெருந்தொற்று நோயின் பொருளாதார விளைவுகளால் சரிந்த வாக்குவங்கியைச் சரிசெய்ய அது உதவக்கூடும்.

எனவே, பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர்விளைவுகளால் அரசாங்கம் ஆடிப்போகும் என்றோ அல்லது தாமரை மொட்டுக் கட்சி உடைந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஏனெனில், தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிவாதத்தை ஒரு குடும்பத்துக்கும் ஒரு கட்சிக்கும் உரியதாக நிறுவனமயப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். யுத்த வெற்றிவாதம் என்பது 2009இற்குப் பின்னரான சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தின் பிந்திய வளர்ச்சிதான்.

எனவே, பெருந்தொற்று நோயின் தாக்கத்தால் யுத்த வெற்றிவாதம் பலவீனமடைந்துவிடும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. கூட்டணிக் கட்சிகள் மத்தியில் தோன்றும் அதிருப்தி மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற எல்லாவற்றையும் அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளைத் தூண்டக் கடந்துபோய்விடும் என்பதே உண்மை நிலையாகும். அதுதான் இலங்கை தீவின் அரசியல் பாரம்பரியமும்.

அதுமட்டுமல்லாது, அரசாங்கத்துக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற சீனா இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சீன அபிவிருத்தி வங்கி ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் கடனாகப் பெற்றது. இதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கோஹன்ன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கிருக்கிறார்.

பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர்விளைவுகளின் மத்தியில் அந்நியச் செலவாணியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு குறித்த கடன்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கத்தோடு சீன அரசு கடன் வழங்குவதாக பாலித கோஹன்ன கூறியுள்ளார். இதன்மூலம், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தலாம்.

அதோடு, அமெரிக்க டொலரோடு ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றும் இலங்கை அரசாங்கம் நம்புகிறது. இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த ஆண்டு சீனா வழங்கச் சம்மதித்த கடன்தொகையின் இரண்டாவது பகுதியாகும். எனவே, இலங்கை தீவை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க சீனா இருக்கிறது என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு உண்டு.

அதேசமயம், இம்மாத இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். அங்கே அவர் இந்திய பிரதமரைச் சந்திப்பார். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

எதுவாயினும், அரசாங்கத்தின் ராஜிய நகர்வு மிகவும் சாதுரியமானது. சீனாவிடமிருந்து கடன் பெறும் அதேசமயம் இந்தியாவுடனும் நெருக்கத்தைப் பேணும் ஒரு தந்திரம். எனவே, பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர் விளைவுகளால் அரசாங்கம் நிலைகுலையும் என்றோ அல்லது தாமரை மொட்டுக் கட்சி உடனடியாகச் சிதையும் என்றோ நம்புவது காலத்துக்கு முந்திய, எதிர்பார்ப்புக்களின் அடிப்படியிலான ஓர் ஊகம் ஆகும். ஆட்சி மாற்றத்தைக் குறித்த ஊகங்களும் அப்படித்தானா?

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்

Posted in Uncategorized

இலங்கை பொலிஸிலும் உள் நுழைகிறது சீனா!

இலங்கையில் பொலிஸ் நிலையங்களின் தொடர்பாடல் வசதியை நவீன முறையில் மேம்படுத்த சீன அரசினால் புதிய தொடர்பாடல் சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெண்க் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவரது விஜயத்தை முன்நிலைப்படுத்தியே சீனா இந்த அதிரடி நடவடிக்கையை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்பட்ட தொடர்பாடல் சாதனம் ஊடாக பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறந்த முறையில் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் – விஜயத்தின் நோக்கம் இது தான் !

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்திது சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுகர் நகர் உட்பட முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இலங்கை விஜயத்திற்கு முன்பதாக கடந்த மார்ச் மாதம் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்திருந்த ஜெனரல் வெய் ஃபெங் அங்கு இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

தென் சீனக்கட்லில் ஏற்பட்ட பதற்ற நிலையில் போது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகள் தென் சீன கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பியும் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பா விஜயத்தின் போது அந்த நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து ஜெனரல் வெய் ஃபெங் கவனம் செலுத்தியிருந்தார்.

குறிப்பாக ஹங்கேரி, செர்பியா , கிரீஸ் மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான ஜெனரல் வெய் ஃபெங்கின் சந்திப்புகளின் போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் மிக ஆர்வமாக பேச்சப்பட்டுள்ளது.

மறுபுறம் தென் சீன கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பிய நாடுகள் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்று அழைக்கப்படுகின்ற நேட்டோ படைகளையும் குறித்த கடற்பகுதிக்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. தென் சீன கடலில் இவ்வாறானதொரு பாரிய எதிர்ப்பை எதிர்பாராத சீன பின்வாங்கியது.

ஆனால் தென் சீன கடலில் தமது திட்டங்களை முன்னெடுக்கும் போது இவ்வாறானதொரு எதிர்பலை மீண்டும் வந்து விட கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயற்படும் வகையிலேயே சீன பாதுகாப்பு அமைச்சரின் ஐரோப்பிய விஜயம் அமைந்திருந்தது.

ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு விஜயமும் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதுடன் பிராந்தியத்தில் ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள்ள கூடிய வகையிலான மூலோபாயத்தை வகுப்பதாகவே அமையும் என பாதுகாப்பு துறைசார் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை சீனாவின் மேலாதிக்கத்தின் கீழ் வராமல் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய ‘குவாட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடற் பிராந்தியத்தில் சீனாவின் தந்திரோபாயம் வெற்றிப்பெற்று விட கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகவே குவாட் காணப்படுகிறது.

குவாட் காரணமாக இந்து மா சமுத்திரம் மெதுவாக இராணுவமயமாக்கலுக்கு உட்படுவதோடு இங்கு ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள் இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ உறவுகளை சீனா வளர்த்துக்கொள்கிறது.

பாகிஸ்தானுடனம் மிக பலமான இராணுவ உறவை சீனா கொண்டுள்ளது. இவ்வாறனதொரு பின்னணியில் இலங்கை வரும் ஜெனரல் வெய் ஃபெங்க் இலங்கையின் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் முக்கியம் பெறுகின்றது