இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சிறந்ததாக அமையும் -ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்தொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்கள் அத்து மீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். போர்க் காலத்தின் போது எமது மீனவர்கள் குறுகிய கடல் பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறான ஒரு பிரச்சினை உள்ள போது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

இந்திய ரோலர் படகுகள் உட்பட படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டிய விடயம். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்ற போது தமிழ் நாட்டு மக்களுக்கும், எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ் நிலை காணப்படும்.தமிழ் நாட்டை பொறுத்த வகையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக பலர் தீக்குழித்து உள்ளனர்.

பலர் தற்கொலை செய்துள்ளனர். தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன் னெடுத்துள்ளனர். அந்த வகையிலே எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது. இவ்வாறு எமது தமிழ் நாட்டு மக்கள் எமது இனத்திற்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீர்க்கப் போவதாக கூறுகின்ற இந்த சிறிய விடயங்களை கூறுகின்ற போது இரு தரப்புக்களும் கருத்துக்களையும் தெரிவிக்கின்ற போது இரு சமூகத்திற்கு இடையிலும் ஒரு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

எனவே இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும். ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் இந்திய அரசுடன் பேசி இரண்டு தரப்பு மீனவர்களுக்கும் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இதனால் எல்லை தாண்டி வருகின்ற, மீன் பிடிக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னார் கடற் பிராந்தியத்தில் உள்ள பவளப் பாறைகள் இந்திய இழுவைப்படகுகளினால் அழிக்கப் படுகின்றது.

மீன் உற்பத்தியாகும் இடமாக குறித்த பாறைகள் உள்ள நிலையில் அவை அழிக்கப்படுகின்றது. எனவே இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள ஆழ் கடல் மீன் பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சிறந்ததாக அமையும்.

இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடுத்தக்கூடாது என தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து மனுதாக்கல்

இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் குறித்த சட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாட்டை சீன காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

நாட்டை சீனாவின் காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்ப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக இன்று (15) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி 204.62 ரூபாவாக மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Posted in Uncategorized

மலரும் சித்திரை தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலுமுள்ள தமிழர் எமக்கு அமைதி மலரட்டும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் அமைதியும் சமாதானமும் மலர தாங்கள் ஆசிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இன்று சர்வதேச அரங்கில் சமவுரிமை ஐக்கியம்,சமாதானம் ஆகியன பெரிதும் தேவையானவைகளாக காணப்படுகிறது.

எமது முன்னோர்களின் பண்பாடான விட்டுக்கொடுப்பு ,சகிப்புத்தன்மை ஆகிய அறங்களை எமது இளைய தலைமுறையினருக்கு கொடையாக்கி எமது வருங்கால சந்ததியினரை நாம் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

எம்மை சுற்றி கொரோணா அபாயமும் இன்னும் தீராத நிலையில் நாம் இந்த புத்தாண்டை மிக நிதானமாக சுகாதார வழிமுறைகளையும் பேணி கொண்டாடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் எமது பாரம்பரியங்களையும், மரபுவழிமுறைகளையும், கலாச்சார பண்புகளையும் பேணி அன்பு இரக்கம் ஆகியவற்றோடு ஆசித்தவர்களாக எமது தாயக தேசமும், நாமும் சிறக்க இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோமாக.

என்றும் அன்புடன்.

கெளரவ செல்வம் அடைக்கலநாதன்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Posted in Uncategorized

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

11 இஸ்லாமிய அடைப்படவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தௌஹீத் ஜமாத்

சிலோன் தௌஹீத் ஜமாத்

ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்

அகில இலங்கை தௌஹீத் ஜமாத்

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா

தாறுல் அதர்

ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்

இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு

அல்கய்தா அமைப்பு

சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு

சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகிய அமைப்புகள் நேற்று (13) நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பல் இலங்கைக்குப் பயணம்

ஐந்தாவது ராஐ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கான நல்லெண்ண விஜய் ஒன்றைமேற்கொண்டுள்ளது.

இலங்கை – இந்தியா ஆகிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்தக் கப்பலின் விஜயம் அமைகின்றது என்று கொழுப்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ச்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“புதுவருட கொண்டாட்டங்கள் நடைபெறும் தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகை அமைகின்றது.

இக் கப்பல் கப்டன் நாராணன் ஹரிஹரனின் கட்டளையின் கீழியங்குவதுடன் மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதி சுதர்ஷனவையும் கப்டன் நாராயணன் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் நாளை இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்துாபியில் அவர் அஞ்சலி செலுத்தவுள்ளார். பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பராம்பரிய ரீதியாக பகிர்ந்து வருகின்றன.

பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மை தரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகிறது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினைக் கொண்டிருக்கும் இந்த ஏவுகனை எதிர்ப்பு கப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்துடன் பேசுவதால் எந்த தீர்வையும் காணமுடியாது : அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றோம் – காணாமல் போனோரின் உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கடந்த 2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.

எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்கள பொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐ.நா.வில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில், இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.

இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.

இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே. என்றனர்.