முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை இடம்பெற்ற உள்ளூராட்சிசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபை மற்றும் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசியகூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.
அதற்கமைய சபையின் தவிசாளர் பதவியினை ஆட்சிகாலப்பகுதியில் இரண்டரை வருடங்கள் என பங்கிட்டு வகிப்பதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிளட் மற்றும் ரெலோ கட்சிகளிற்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது.
அதற்கமைய தவிசாளர் பதவியை பிளட்டுக்கு வழங்கும் நோக்குடன் வவுனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் தனது பதவியை கடந்தவாரமளவில் ராஜினாமா செய்திருந்தார்.
இதேவேளை இரண்டுதினங்களின் பின்னர் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் பிளட்டை சேர்ந்த தவிசாளர் பதவி விலகல் முடிவினை எடுக்கவில்லை என தெரிவித்து தனது ராஜினாமா முடிவினை மீளப்பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் தனது பதவியை இன்று ராஜினாமாசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரசியில் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணியின் நிர்வாக செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக அந்த கட்சியின் வவுனியா மாவட்ட தலைவர் சந்திரகுலசிங்கம் மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மீண்டும் பதவி விலகல் கடிதத்தை சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாணசபை தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும். இவ்விடயத்தில் இந்தியாவின் ஆலோசனை பெற வேண்டிய தேவை கிடையாது.
வெள்ளை யானையாக கருதப்படும் மாகாண சபை முறைமையினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தயாரில்லை என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
மருதானையில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வெள்ளை யானையாக சித்தரிக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமை நாட்டுக்கு அவசியமற்றது என்பது பெரும்பாலான மக்களின் அபிப்பிராயமாக காணப்படுகிறது.
மாகாண சபை தேர்தல் அவசியமான , இல்லையா என்பது தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் இவ்விடயத்தில் இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் ஆலோசனைகளை கோருவது பயனற்றது.
பலவீனமான மாகாண சபை முறைமையினை தொடர்ந்து வலுப்படுத்த நாம் தயாரில்லை.மாகாண சபை முறைமையின் கீழ் வீண் செலவுகள் மாத்திரமே மிகுதியாகுகின்றன.
மாகாண சபை தேர்தலை விடுத்து உள்ளூராட்சிமன்றங்களை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற சபைகளிலும் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
மாகாண சபை முறைமையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளுடன் மாகாண சபைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது. ஆகவே மாகாண சபை முறைமை குறித்து உறுதியான தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் என்றார்.
இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்பதுடன் அந்தச் சமூகத்தை ஓரங்கட்டும் வகையிலும் அமைந்துள்ளன. அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள், தீர்மானங்கள் மற்றும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் என்பன இலங்கையின் மொத்த சனத்தொகையில் 9 சதவீதமாக உள்ள முஸ்லிம் சமூகத்தின் மீது பாகுபாடு காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்மைக்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயத் தகனத்திற்கு உட்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இடம்பெற்ற வன்முறைகள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடமுடியும்.
இம்மாதத்தில் கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதிக்கு இடைப்பட்ட 9 நாட்களில் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அமைச்சரவை யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் என்பன பதிவாகியுள்ளன.
அவற்றின் புர்கா மற்றும் நிகாபை தடைசெய்வதற்கான அமைச்சரவை யோசனை, மத்ரஸா பாடசாலைகளைத் தடைசெய்வதற்கான அமைச்சரவை யோசனை, நாட்டில் வெளிவரும் அனைத்து இஸ்லாமிய நூல்களையும் கண்காணிப்பிற்கு உட்படுத்தல், இன மற்றும் மத ரீதியிலான அடிப்படைவாதச் செயல்கள், வன்முறைகளில் ஈடுபடுவோரைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் போன்ற விடயங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையின் பிரித்தானியாவுக்கான லண்டன் தூதுரக முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம், இன்று (20) இரத்துச் செய்துள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு இலண்டனில் போராட்டம் நடத்தியிருந்த தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் காட்டியிருந்தமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன், அவருக்கு 2400 பவுண்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த அபராத தொகையை பிரியங்க பெர்னாண்டோ செலுத்தாத நிலையில் அவரை உடனடியாக கைதுசெய்யுமாறு மேற்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், அவரை கைதுசெய்யமுடியாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் சர்வதேச நீதிகோரி மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நீதிகோரிய எழுச்சிப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தின் 17 ஆவது நாளான இன்று அதனை நிறைவுறுத்தும் வகையிலும், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரிய வகையிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறித்த போராட்டத்தில் ஈடுபடுவோர் என்ற ரீதியில் 25 பேருக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
குறிப்பாக காந்தி பூங்கா,மாமாங்கம் ஆகிய பகுதிகளிலில் போராட்டம் நடாத்துவதற்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்ததுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஒருங்கிணைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ்.சிவயோகநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலருக்கும் நேற்றைய தினம் தடை உத்தரவுகள் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டதுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய மதில்களிலும் தடை உத்தரவுகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீர்த் தாரைத் தாக்குதல் மேற்கொள்ளும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததுடன் கலகமடக்கும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டு மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக அச்சநிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் நீதிமன்றத் தடை உத்தரவுகள் காரணமாக போராட்டம் நடைபெறும் இடம் திடீரென மாற்றப்பட்டது. மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குள் தடையுத்தரவு காரணமாக அவை மாற்றப்பட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் முன்னெடுக்கப்பட்டது.
சித்தாண்டி மாவடிவேம்பு மருங்ககையடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து பேரணியாக சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயம் வரையில் சென்றனர்.
தமிழர் தாயகத்தினை அங்கீகரிக்கவும், இந்திய இராணுவத்தினை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி தாய் உண்ணாவிரதம் ஆரம்பித்த இன்றைய தினத்தில் தமிழர்களுக்கான நீதிகோரிய இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமிழர் தாயகப்பகுதியை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்,அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தவேண்டும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிமன்றம் ஊடாகத் தீர்வினை வழங்க வேண்டும், ஐநாவில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தினை
நிராகரிப்போம், கடத்தப்பட்டுக் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், மேய்ச்சல் தரை நிலத்தினை மீட்டுத்தாருங்கள்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் உட்பட பல்வேறு கோஷங்கள் இந்தப் பேரணியின் போது எழுப்பப்பட்டன.
இந்தப் பேரணி ஆரம்பமான நிலையில் அங்கு வந்த ஏறாவூர் பொலிஸார் தடையுத்தரவு உள்ளதாக கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு கோரிய நிலையிலும் அவற்றினைக் கருத்தில் கொள்ளாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போலியான தடையுத்தரவினைக் காட்டி பேரணியை தடுக்கமுனைவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைப் பொலிஸார் வீடியோ, புகைப்படம் எடுத்த போது அதற்கு எதிரான கோஷங்களையும் பேரணியில் சென்றோர் எழுப்பினர்.
தடைகள் அனைத்தையும் தாண்டி முன்னெடுக்கப்பட்ட பேரணியானது சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றதும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்கு ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அனுப்பிவைக்கும் மனுவொன்றும் வாசிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தின் வட-கிழக்கு ஒருநினைப்பாளர்களான தவத்திரு வேலன் சுவாமிகள், எஸ்.சிவயோகநாதன், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பா.அஅரியநேந்திரன், ஞா. சிறிநேசன் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் மற்றும் ஏனைய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதிக்குச் சென்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தினர் அங்கு சமாதியில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் பட்சத்தில் அமெரிக்கா , பிரித்தானியா போன்ற கோத்தாபய ராஜபக்ஷவினால் அதனை செய்ய முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
இலங்கைக்கு சர்வதேச தொடர்புகள் அத்தியாவசியமானவையாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இனவாதம் , மதவாதத்தின் அடிப்படையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். அதற்காக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு செயற்படும் அரசாங்கம் ஜெனிவா இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக மக்களிடம் போலி பிரசாரங்களை முன்னெடுக்கிறது. எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றி கொள்ள முடியும். ஜெனிவா நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு காணப்படும் ஒரேயொரு வழி மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
இவ்வாறு செயற்படுவதன் மூலம் ஜெனிவாவில் சார்பான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ள போதிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் அதனை செய்ய முடியாது. நாட்டை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை பாதுகாக்க தவறியுள்ளார் என்றார்.
சிறீலங்காவுடனான இராஜீக உறவில் மனித உரிமைகளை மையப்படுத்துமாறும் சிறீலங்காவுக்கான ஒரு பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஊக்குவிக்குமாறும் ஒன்பது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ராஜாங்கச் செயலரான அன்ரனி பிளிங்கனுக்குக் கடிதம்.
குறித்த கடிதத்தின் மழு வடிவம்,
“மாநிலச் செயலாளராக நீங்கள் பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள்!
இலங்கையில் மனித உரிமைகளை நிவர்த்தி செய்வது உட்பட பல விடயங்களில் உங்களுடன் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்கு 2009இல் முடிவடைந்த ஆயுத மோதலுக்குப் பின்னர் நீதி மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அல்லது மதிக்க அரசாங்கம் தவறியதால் நாங்கள் கவலைப்படுகிறோம்.
இறுதி மோதல், இலங்கையின் தமிழ் சமூகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இறந்தனர்.
இலங்கையுடனான இராஜதந்திர ஈடுபாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை ஊக்குவிக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்ய அமெரிக்காவை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை (30/1) வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது உங்களுக்குத் தெரியும். இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது. இந்த விலகலானது, உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டு பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மையையும் வெளிப்படுத்துகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம், போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள நபர்களை மூத்த அரசாங்க பதவிகளுக்கு உயர்த்தியுள்ளது, முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை மாற்றியமைத்தது, ஜனாதிபதி பதவியேற்புக்குப் பின்னால் அதிகாரத்தைப் பலப்படுத்தியது, போர்க் குற்றங்களில் ஈடுபடுவோரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடுப்பதற்கும் தடையை ஏற்படுத்தும் முயற்சிகள், பெரும்பான்மை மற்றும் பிரிவினைவாத சொல்லாட்சியை ஊக்குவித்தது, மனித உரிமை ஆதரவாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலை மேற்கொள்வது மற்றும் எதிர்ப்பாளர்களைக் கடத்தி சித்திரவதை செய்ய பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் பற்றிய அந்த அறிக்கை நீடிக்கின்றது.
ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், “கடந்த கால மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன” என எச்சரித்துள்ளார்.
அத்துடன், அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமைகள் பேரவையில் ஒரு வரைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன.
அந்தத் தீர்மானத்தில், இலங்கையில் கடந்த கால மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாதமை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த முற்படுகிறது.
மேலும், “மனித உரிமை மீறல்களுக்கான செயன்முறைகளுக்கான எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்து மேம்பட்ட கண்காணிப்பு உள்ளிட்டவற்றை தீர்மானம் கோருகிறது.
இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், இது நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமைகள் பேரவையின் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளிடம் அமெரிக்கா தீவிரமாக ஆதரவைப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டச் சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற அமெரிக்காவை சர்வதேச அரங்கில் முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், இலங்கை விடயத்தில் உங்களின் அக்கறைக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களே குறித்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.
தென்னாபிரிக்கா ஐக்கிய உலமா சபை மற்றும் தென்னாபிரிக்கா சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சர் ஆகியோர், குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை உலமா பேரவை இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, ‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான குரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் தற்போது, புர்கா தடை மற்றும் மத்ரசாக்கள் மூடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இவை அனைத்தும் பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்’ என அப்பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்றைய தினம் நடைபெற்றது(18-03-2021.
இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தது.
கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்றைய தினம் நடைபெற்றது(18-03-2021).
இந்த விவாதமானது தொழில் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் உபதலைவர் சிவோன் மாக்டோனாவின் (Siobhain McDonagh MP) முன்னேற்பாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் வேண்டுகோளின் பிரகாரம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொன் செர்வ்டிவ் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் எலியட் கோல்பேர்ண் (ElliotColburn MP) மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழு உபதலைவர் சேர் எட் டேவி (Sir Ed Davy MP) ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டு மேலும் பல அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் (Backbench Debate) நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொள்கின்ற அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அழுத்தங்கள் மற்றும் இலங்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய ஆவணங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பாக ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்பதனையும், தமிழர்களுக்கான ஒரு வலிமையான அரசியல் தீர்வினை பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், இலங்கை மீது பொருளாதாரத் தடை, இன அழிப்பு போன்ற மோசமான குற்றமிழைத்தவர்கள் மீது பயணத் தடை, சொத்து முடக்கம் ஆகியவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்று(18) நடைபெற்றது.
இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தது. கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் ந டைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில் ,
“இலங்கை அரசால் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின் மிக உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடூரத்தை நாம் அனைவரும் அறிவோம்.
இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தனர்.
1980 களில் இருந்து தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரான இலங்கையில் குறைந்தது 60,000 மற்றும் 100,000 மக்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் துன்பத்தின் அளவு, உண்மைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் தீர்வுக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன.
உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கொடுமை, பெண்களின் உரிமைகளை பெருமளவில் மீறிய கதைகள், அவை நாம் ஒருபோதும் மறக்க முடியாத கதைகளாகும். எனினும், இன்று வரை சர்வதேச குற்றங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் மீண்டும் மீறப்படுகின்றன. கடுமையான போர்க்கால துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் ஏழு அமைச்சரவை பதவிகள் உட்பட ஒன்பது அமைச்சர் பாத்திரங்களை வகிக்கின்றனர். மேலும் பாதீட்டில் கால் பகுதியை நிர்வகிக்கின்றனர்.
மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக கருதப்படும் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களில் ஒருவரான சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பு வழங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான மிரட்டல் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்தது.
இது தமிழர்களின் மனித உரிமைகள் பற்றியது மட்டுமல்ல. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத நம்பிக்கைகளை புறக்கணித்தது.
இதனிடையே, பிரித்தானியா முழுவதும் அரை மில்லியன் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, மரியாதைக்குரிய மற்றும் அர்ப்பணிப்புள்ள சமூகம், அவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார்கள்.
அயராது உழைக்கும் ஏராளமான தமிழர்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன்.
நல்லிணக்கத்திற்கான பாதை நீண்ட காலமாக இருந்தாலும் அவை அடையப்படும் வரை நாங்கள் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடுவோம் என்று சத்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே ஏற்படும்.
“இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.