7ம் திகதி கறுப்பு ஞாயிறு ; பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனை அறிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி இவ்வாறு கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையையும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வரும் நிலையில், தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐ.நா முன்பு இன்றையதினம்(01) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சுவிஸிலுள்ள ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பிற்பகல்- 02.30 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்த குரலில் உரிமைக்கான குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

சுவிட்ஸர்லாந்தில் கோவிட் தொற்று உச்சம் பெற்றிருக்கும் இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை – தமிழ் சிவில் சமூக அமையும் சுட்டிக்காட்டு

இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படையான கோரிக்கைகளை கூட பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி கடிதம் ஒன்று தமிழ் சிவில் சமூக அமையத்தினால் அந்த நாடுகளுக்கு இன்று (01.03.2021) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மூலத்திலான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:

1) 15.01.2021 தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளடங்கலான பொது அமைப்புக்கள் இணைந்து விடுத்த கோரிக்கையானது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலை உட்பட அனைத்து குற்றங்கள் தொடர்பில் விசாரணை ஒன்றிற்காக பாரப்படுத்துவதற்கான முனைப்புக்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலானது. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது தொடர்ந்து இலங்கை விவகாரத்தை ஜெனீவாவில் வைத்திருந்து நேரத்தை வீணடிக்கும் நேரம் கொண்டதென தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் உத்தேச வரைபில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த மீறல்கள் சம்பந்தமான ஆதாரங்களை சேர்ப்பது தொடர்பிலான பந்தியானது (உத்தேச வரைபு பந்தி 6) இவ்விடயம் தொடர்பில் தனித்துவமான பொறிமுறையை உருவாக்கத் தவறுகிறது என்றும் சிரியா மற்றும் மியான்மார் தொடர்பில் உருவாக்கப்பட்ட பொறிமுறை போன்றதொரு பொறிமுறை தானும் பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரேரணையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் 18 மாதங்களிற்குப் பின் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது நீதிக்கான தேடலை இன்னுமொரு 18 மாதங்கள் கிடப்பில் போடும் எண்ணமே அன்றி வேறில்லை என தமிழ் சிவில் சமூக அமையம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

சிரியா விவகாரத்தில் 14 தடைவைகள் சீனா மற்றும் ரஷியாவின் வீற்றோக்கள் மத்தியிலும் பிரேரணைகளை ஐ நா பாதுகாப்பு சபையில் முன்வைத்த மேற்குலக நாடுகள் இலங்கையை கொண்டு போவதற்கு கூட தயங்குவது ஏன் என தமிழ் சிவில் சமூக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.

2) காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள உத்தேச பிரேரணையின் முகவுரைப் பந்தி ஒன்பது, 2017 க்குப் பின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதையும் தொடர்ந்து தமிழ் மக்களின் காணிகள் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயத்தையும் மூடி மறைக்கின்றது எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

3) 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணையின் பந்தி தொடர்பில்: ஒருதலைப்பட்சமாக 13ஆம் திருத்தத்தை இல்லாமல் செய்யும் முயற்சியை நாம் கண்டிக்கும் அதே வேளை 13ஆம் திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஓர் ஆரம்பப் புள்ளி தானும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது. சுயநிர்ணய உரிமையின் பிரகாரம் தாம் தமக்கு உகந்த தீர்வை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

4) இலங்கையில் தொடந்து இடம்பெற்று வரும் மீறல்கள் தொடர்பில் ஐ. நா விசேட அறிக்கையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ஐ நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னம் வடக்கு கிழக்கில் அவசியம் எனவும் இவை பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் சுட்டிக் காட்டியுள்ளது.

5) காணாமல் போனோர் அலுவலகம், மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியன அவை உருவாக்கப்பட்ட போதே வழுக்கள் நிறைந்த பொறிமுறைகளாகவே இருந்தவை என்றும் அவற்றை முற்றாக தற்போதைய இலங்கை அரசாங்கம் முடக்கியுள்ள சூழலில் அவை பலப்படுத்தப்பட வேண்டும் என உத்தேச பிரேரணை கோருவது முரண் நகையானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேற்படி விடயங்களை மேற்கோள் காட்டி உங்கள் ஊடகத்தில் இக்கடிதம் தொடர்பில் செய்தி பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

கலாநிதி கு. குருபரன்
தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பில்

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள்,பேராயரிடம் கையளிப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களிடமும் , பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்டப்பணிப்பாளர் ஜெனரல் ஹரிகுப்த றோஹனதீரவினால் இன்று திங்கட்கிழமை மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடமும் , அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடமும் அறிக்கை பிரதிகள் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து இன்றைய தினம் மாலை கொழும்பு – பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் அறிக்கை கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இவ் ஆணைக்குழுவினால் 2019 டிசம்பர் 20 ஆம் திகதி முதலாவது இடைக்கால அறிக்கையும் , 2020 மார்ச் 2 ஆம் திகதி இரண்டாவது இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இவ்வாண்டு பெப்ரவரி முதலாம் திகதி முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் 6 பேர் அடங்கிய குழு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி வெவ்வேறு கருத்துக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை இதனை நிராகரித்துள்ள அதே வேளை ஆளுந்தரப்பின் பங்காளி கட்சியான சுதந்திர கட்சியும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரெலோவின் உத்தியோகபூர்வ பேச்சாளராக சுரேந்திரன் நியமனம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உத்தியோகபூர்வ பேச்சாளராக குருசாமி சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது(28-02-2021).

இதன்போது கட்சிக்கு பேச்சாளர் ஒருவர் அவசியம் என்று அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேச்சாளர் தேவை என்ற காரணத்தினால் எமது கட்சியின் பேச்சாளராகக் குருசாமி சுரேன் அவர்கள் செயற்படுவார்.

அதனை ஏகமனதாக தலைமைக்குழு தெரிவு செய்துள்ளது. அவர் அனைத்து விடயங்களையும் கையாளுகின்ற அதேநேரம், எமது கட்சி எடுக்கின்ற தீர்மானங்களையும், அரசியல் ரீதியாக இங்கிருக்கின்ற தூதரகங்களைச் சந்திக்கின்ற செயற்பாடுகளையும் அவர் ஊடாகவே இனி மேற்கொள்ளப்படும்.

Posted in Uncategorized

ஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட இந்தியாவின் ஆதரவினை நாங்கள் கோரிநிற்கிறோம்!! ரெலோ அறிவிப்பு!!

புதியகூட்டுக்கள், புதியபெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கம் கருத்துவதாக ரெலோ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது(28-02-2021).

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

ஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதற்கு அனைத்து அங்கத்துவநாடுகளின் ஆதரவினையும் குறிப்பாக இந்தியாவின் ஆதரவினையும் நாங்கள் கோரிநிற்கிறோம்.

தமிழ்மக்களின் நீண்டகால அபிலாசைகளை தீர்க்ககூடிய அதனை நிறைவுசெய்யக்கூடிய அரசியல்யாப்பு ஒன்று தயாரிக்கப்படவேண்டும். அதன் மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் பிரச்சனை தீர்விற்கு வரவேண்டும். இந்தஅரசு அதனை கருத்தில் எடுக்கவேண்டும்.

அத்துடன் 13ஆம் திருத்தசட்டத்தை முற்றுமுழுதாக அமுல்படுத்தி அதனை அடிப்படையாக வைத்து ஒரு மாகாணசபை தேர்தலை மிகவிரைவாக நடாத்தி அரசியல் தீர்விற்கான ஒரு ஆரம்ப கட்டநடவடிக்கையை இந்த முன்னெடுக்கவேண்டும்என்று அரசிடம்நாம் கோருகிறோம்.

தமிழ்கட்சிகளின் கூட்டுதொடர்பில் ஒரு உறுதியான முடிவினை எடுத்துள்ளோம். 2001ஆம் ஆண்டில் ஆயுதரிதீயாக பலப்பட்ட ஒரு இனமாக இருந்தநேரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமான ஒரு அமைப்பாக இயங்கிவந்திருக்கின்றது.

அதிலிருந்து கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற கட்சிகளைசேர்ந்தவர்கள் தான் புதிய கூட்டினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்கள்.

எனவே கூட்டமைப்பு இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதற்குள்ளே அனைவரும் மீண்டும்வந்து இணையவேண்டும்.

புதியகூட்டுக்கள், புதியபெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று எமது கட்சி கருத்துகின்றது.

தமிழ் கட்சிகள் எல்லோரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக் கூடிய வடிவமைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்ள வேண்டும். அதைச் செய்வதற்கான முழு முயற்சியையும் நாம் செய்யத் தயாராக இருக்கின்றோம்.

ஏனைய கட்சிகள் இணைகின்ற போது தனிப்பட்ட கட்சிகள் தமக்கு அதிகாரங்கள் கூட்டுகின்ற செயற்பாட்டை மேற்கொள்ளமுடியாது. தேர்தலில் தோற்றவர்களைச் சேர்க்கக் கூடாது என நாம் யோசிக்கவில்லை.

அது மக்களின் விருப்பம். ஒற்றுமையைக் கொண்டு வர வேண்டும். அதனைத் தான் மக்கள் விரும்புகிறார்கள். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி எமது ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் கிடைத்த வெற்றி.

இதில் தோற்றவர்கள்,வென்றவர்கள் என்று அல்லாமல் எமது மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.அதற்கான கடமை எமக்கு இருக்கிறது. மக்களது விடுதலைக்காக அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தோற்றவர்கள் என்று புறந்தள்ள முடியாது.

தமிழ்தேசிய பேரவை என்பதற்குமப்பால் தமிழ்மக்களிற்கான ஒரு ஐக்கியம் அவசியமாகின்றது. அதனை கருதியே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அங்கு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் தான் இந்த கட்சிகள் பிரிந்துநின்று தனித்து செயற்ப்பட்டனர்.அதேகட்சிகளை வைத்துக்கொண்டு புதிய ஒரு கூட்டை ஆரம்பிப்பதை விட கருத்து வேறுபாடுகளிற்கு காரணமான விடயங்களை சீர்செய்து கூட்டமைப்பானது மீள கட்டியமைக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு அனைத்து கட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு பயணிப்பதையே மக்கள் எதிர்பார்கின்றனர்.

அதுவே எமது மக்களின் எதிர்காலத்திற்கும் அரசியலுக்கும் பலம் சேர்க்கும் என்று எமது கட்சி கருதுகின்றது.

அனைவரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக்கூடிய வடிவமைப்பை கூட்டமைப்பு கொள்ளவேண்டும். அதனை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மக்களின் விருப்பமாகவே அதனை பார்கிறோம். என்றார்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பில் உள்ள அனைத்து அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்த பின்னரே அறிவிக்கும். அதுவே இறுதி முடிவாகவும் இருக்கும். ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம்.

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது….நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் சம்மந்தன் ஐயாவை தலைவராக நான் தெரிவுசெய்தேன். அடுத்ததாக பேச்சாளர் தெரிவு வந்தபொழுது சுமந்திரன் பதிவி விலகுவதாகவும் சிறிதரன் பெயரை முன்மொழிவதாகவும் அவர் பரிந்துரைத்தார். அதற்கு பின்னர் கட்சி தலைவர்களினால் ஏற்கனவே எடுக்க பட்ட முடிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் என்னுடைய பெயரை முன்மொழிந்ததால் சர்ச்சை ஒன்று உருவானது.இன்றுவரைக்கும் அதற்கு தீர்வை எட்டுகின்ற வாய்ப்பு கிட்டவில்லை. எந்த ஒரு கட்சியும் எல்லாவற்றையும் ஆளுமை செய்கின்ற வகையில் கூட்டமைப்பு இருக்ககூடாது. இப்படியான சிறிய விடயங்கள் பகிர்ந்தழிக்கப்படவேண்டும் என்பதை பிரதானமானவிடயமாக பார்கவேண்டும். ஜனநாயகம் என்பது அந்த மரபுகளிற்கு உட்பட்டதாகதான் இருக்கவேண்டும்.

இதனை விரைவில் தீர்ப்பதற்கு சம்பந்தன் ஐயாவிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். ஆகவே அடுத்த நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலே இந்தவிடயத்தை ஆராய இருக்கிறோம். கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு எந்த ஒரு கட்சியும் அதிகாரத்தை செலுத்தும் நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது.

மக்களது விருப்பம் முக்கியம். பிரிந்து சென்றவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இணைய வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. ஜனநாயக முறையில் எல்லோரது கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்பது தான் எல்லா கட்சிகளினதும் விருப்பமாகவுள்ளது.

மக்களது ஆணையை மீண்டும் கூடுதலாக பெறவேண்டுமாக இருந்தால் எல்லா கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையும்போது, அவை சமனாக நடத்தப்பட வேண்டும். எல்லா கட்சிகளும் மக்களுக்காகச் செயற்படுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் உளத்தூய்மையுடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கல்வியாளர்கள் சாதனையாளர்கள் உருவாகவேண்டும்!! ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகத்திற்க தெரிவாகி ஊடகத்துறையில் பட்டம் பெற்ற யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோகராதலிங்கம்,தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் பொருளாளருமான கோவிந்தன் கருணாகாரன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மாணவனின் திறமைக்கு மதிப்பளித்துள்ளார்கள்

27.02.21 அன்று முள்ளிவாய்கக்கால் பகுதியில் பிறந்து போரின் பாதிப்பிற்குள்ளாகி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி ஊடகத்துறையில் கற்கை நெறியினை முடித்து கடந்த 25 ஆம் திகதி பட்டம் பெற்ற மாணவன் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவன் என துரைராஜா விருதிற்காக தெரிவு செய்யப்பட்ட போதும் அதற்கான விருது பல்கலை நிர்வாகத்தினால் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில்குறித்த மாணவன் பட்டம் பெற்று வீடு திரும்பிய போது கிராமத்தில் மக்கள் அமோக வரவேற்பினை கொடுத்துள்ளார்கள்.

நெய்தல் கிராமிய மீனவ அமைப்புக்களாலும் மக்களாலும் வரவேற்பளிக்கப்பட்டது

இதனைதொடர்ந்து ரெலோ கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுடன்,ரெலோ பிரதேச சபை உறுப்பினர்களான க.ஜனமேஜயந்,எஸ்.கஜன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் வீட்டிற்கு சென்று சாதனை படைத்த மாணவனின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி மாணவனை மதிப்பளித்துள்ளார்கள்.

இந்த மாணவனை போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கல்வியாளர்கள் சாதனையாளர்கள் உருவாகவேண்டும் என இதன்போது நாடாளுமன்றஉறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

‘நரேந்திர மோதி போலவே எனக்கும் உலகின் உன்னதமான மூத்த தமிழில் பேச ஆசை’ – அமித் ஷா

புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், என்‌.ஆர்‌.காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் ஆனந்த் மற்றும் கல்யாணசுந்தரம், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட பலர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

“2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்ற போது இந்தியாவில் சிறிய மாநிலமான புதுச்சேரியை இந்தியாவிற்கு முன் மாதிரியான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக 115 திட்டங்களை இந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த திட்டங்களை எல்லாம் தடுக்கும் வேலையை நாராயணசாமி செய்தார். ஒரே ஒரு முறை பாஜகவை ஆட்சியில் அமரவைத்துப் பாருங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றிக் காட்டுகிறோம்,” என்று உரையாற்றினார் அமித் ஷா.

“இங்கிருக்கும் காங்கிரஸ் ஆட்சி தானாக கவிந்துவிட்டது. அதிலிருந்த காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜகவில் இணைகின்றனர். நாராயணசாமியுடன் இருப்பவர்களை அவர் புரிந்துகொள்ளாத காரணத்தினால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. அவருடைய தலைவரிடமே பொய் கூறியவர் நாராயணசாமி, அதே போன்று அவருடன் இருப்பவர்களிடமும் அதே பொய்யைக் கூறி வந்ததால், அனைவரும் பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளனர்,” என்றார் அமித் ஷா.

தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் குடும்ப ஆட்சி நடப்பதால் தான் அனைவரும் பாஜகவில் இணைகின்றனர். புதுச்சேரி மட்டுமின்றி மொத்த இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விடும்,” எனத் தெரிவித்தார்.

“மிக முக்கியமான உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார்களா? நீதிமன்றம் உத்தரவைக் கூட மதிக்காமல் பாஜகவிற்குப் பயந்து இந்த தேர்தலை நடத்தவில்லை. நாராயணசாமி அவர்களே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பாஜகதான் ஆட்சி அமைக்கப் போகிறது. உங்களால் எங்கும் தப்பிக்க முடியாது,” என்றார்.

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து பறக்கும் பாதை திட்டம் அமைக்கப்போவதாக அமித் ஷா பேசினார்.

“உலகின் உன்னதமான மூத்த தமிழில் மொழியில் பேச முடியாமல் என்பது வருத்தமாக இருக்கிறது‌. நான் தமிழ் மொழியில் பேசி இருந்தால் அதிக அளவில் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். குஜராத்தில் நரேந்திர மோதி முதல்வராக இருக்கும் போது தமிழ் பேச ஆசைப் பட்டேன், வேலை பளு காரணமாக கற்றுக்கொள்ள முடியவில்லை என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோதி கூறியிருந்தார்.”

“தற்போது பிரதமரான பிறகும் தமிழ் கற்றுக்கொள்ளும் ஆசையை விடவில்லை. விரைவில் கற்றுக்கொண்டு தமிழில் பேசுவேன்‌ என்று மோதி கூறுகிறார். அப்படிப்பட்ட உன்னதமான மொழியில் பேச நானும் விரும்புகிறேன்,” என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

Posted in Uncategorized

லண்டனில் தமிழ் பெண் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம் : ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூரில் போராட்டம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும், உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார்.

மேலும், உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ் பெண்ணொருவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

புலம்பெயர் லண்டனில் வசிக்கும் அம்பிகா செல்வகுமார் என்ற பெண்மணியே சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் பிரிட்டன் சமர்பித்துள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை அம்பிகா செல்வகுமார் ஆரம்பித்துள்ளார்.

அம்பிகா செல்வகுமார் சர்வதேச இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்காடு மையத்தின் பணிப்பாளராக பணியாற்றுகின்றார். அத்துடன் தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார்.

இந்நிலையிலேயே இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

முன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் – காணாமல் போனோரின் உறவுகள்

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோத்தாபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் . அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி அம்மாவின் அறிக்கைகள் ஆட்சி மாற்றத்தின் தேவையை உருவாக்கிறது.

ஆட்சி மாற்றம் என்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வு அல்ல. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளிற்கு இராணுவம் பொறுப்பல்ல என்று அவர் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் அவரது இப்படியான கருத்துக்கள் வருத்தமளிக்கின்றது. எமது குழந்தைகளை இராணுவம் அழைத்து சென்றதுதான் உண்மை. எனவே எமது பிள்ளைகளை அழைத்துச்சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடன் புதிய அரசியலமைப்பு பற்றி பேச வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதியிடம் கேட்க விரும்புகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் இங்கு வந்து தமிழர்களை ஒடுக்கு முறையிலிருந்து பாதுகாக்ககூடிய அரசியலமைப்பு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். என்றனர்.