தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் ஏகமனதான இணக்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இன்று (21) நடைபெற்ற அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது ஏகமனதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மற்றும் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆலோசனைக் குழுவில் குறித்த இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கஜேந்திரன் எம்.பி. மீதான தாக்குதல்: முறையான விசாரணை அவசியம்! – சபையில் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை.

திருகோணமலையில் பொலிஸார் முன்னிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை அவசியம் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“சக நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார். அதேவேளை, திருகோணமலையில் சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” – என்று ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் கூறினார்.

தமிழர் பகுதியில் இனவாதத்தினை கக்கும் பௌத்த மதத்தினர்:ரெலோ தலைவர் செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

பௌத்த மதத்தினர் இன வாதத்தினை கக்குகின்ற வகையில் இன்றும் செயற்பட்டு வருகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெறும் காணி அபகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(20.09.2023) கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் கருப்பத்தான்குளம் பகுதியில் கூடுதலாக மக்கள் இன்றைக்கும் தங்கள் காணிகளை வைத்து பராமரித்து வருகின்றார்கள்.

அச்சமடைந்துள்ள மக்கள்

ஆனால் அருகில் இருக்கின்ற பெரும்பான்மையின கிராம மக்கள் அதை ஒரு மயான காணியாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மயான காணியை கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை செய்து வருகின்றார்கள்.

மேலும், அனைத்து இனத்தவர்களும் சரிசமமாக வாழக்கூடிய உரித்துடையவர்கள் என்ற முறையிலே வாழ வேண்டும்.

அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நொச்சிக்குளம் , புளியங்குளம் மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் முதலில் இரண்டு படுகொலைகளும் அதன் பின் மூன்று கொலைகளும் இடம் பெற்றுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.” தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரின் பெயரை மாற்றி அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்

சீன முதலீட்டு திட்டமான கொழும்பு துறைமுக நகரை கொழும்பு நிதி நகரமாக பெயர் மாற்றம் செய்து துபாய் மற்றும் அபுதாபி முதலீட்டாளர்களுக்காக மீள உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகின்றது.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) கொழும்பு நிதி நகரம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடலை அண்மித்து கடலை நிரப்பி உருவாக்கப்பட்ட 269.3 ஹெக்டேர் பரப்பு, கொழும்பு துறைமுக நகரம் என பெயரிடப்பட்டது.

இந்த பகுதியை பராமரிப்பதற்காக 2021 மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அமைவாக, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு எனும் பெயரில் தனியான நிர்வாகக் கட்டமைப்பானது உருவாக்கப்பட்டது.

Posted in Uncategorized

Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைப்பு

மட்டக்களப்பு – புனானையில் Batticaloa Campus என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உயர் கல்வி நிறுவனம் மீளவும் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கல்வி நிறுவனம் இன்று தன்னிடம் கையளிக்கப்பட்டதாக M.L.A.M.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவின் கண்காணிப்பின் கீழ் Batticaloa Campus உயர் கல்வி நிறுவனத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நி​லையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இந்த உயர் கல்வி நிறுவனம் தொடர்பில் சர்ச்சை உருவாகியிருந்தது.

பின்னர் குறித்த கட்டடத்தை அரசு பொறுப்பேற்றது.

இதன் பின்னர், கொரோனா காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, Batticaloa Campus உயர் கல்வி நிறுவனம் படையினரால் இன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, கல்வி நிறுவனம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

Google, Facebook, YouTube, TikTok நிறுவனங்கள் நாட்டை விட்டுச் செல்லும் அபாயம்

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம் சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும்

கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
கூகுள், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்காத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான சாத்தியமான தாக்கம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் முதலீட்டாளர்களை ஒருபோதும் ஈர்க்க முடியாது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிள்ளையானின் கொலைப்பட்டியல் மிக விரைவில்

பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் அவரின் கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.

பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ஐஎஸ்ஐஎஸ் என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.

அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் ஏன் அவர் அதனை உரிய பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

எனது அம்மாவின் தங்கையின் மகன் கோவிந்தராஜன் என்பரை கடத்திச் சென்று படுகொலை செய்த வரைக்குமான அத்துடன் மாநகரசபை உறுப்பினராக நான் கடமையாற்றிய போது எனது பத்திரிகையாளராக இருந்தவரை கடத்திச் சென்று கொலை செய்தது வரையான பல கொலைகள் அடங்கிய பட்டிலை ஆதாரத்துடன் மிக விரைவில் வெளியிடுவேன்.

இன்று பிள்ளையான் தப்புவதற்காக கொஞ்சம் மக்களை ஏற்றிவந்து உங்களது காரியாலயத்திற்குள் வைத்துக் கொண்டு நீங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டு மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவைக்கின்றீர்கள்.

நீங்கள் நல்லவர்கள், குற்றமற்றவர்கள் என்றால் வட கிழக்கில் உள்ள மக்கள் வீதியிலிறங்கி சொல்ல வேண்டும் பிள்ளையான் நல்லவன், உத்தமன் என்று.நீங்கள் பஸ்களில் ஏற்றிவந்தவர்கள் அப்பாவி மக்கள், ஏதாவது கிடைக்கும் என்ற அவாவுடன் வந்தவர்கள்.

இந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண தமிழ் மகனுக்கு பாதுகாப்பு இல்லையென்பது விளங்குகின்றது.

அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் சொல்வதை சரியென்று சொல்லவரவில்லை. திலீபன் என்பவர் உலகத்திலேயே ஒரு உன்னதமான தியாகத்தினை செய்த மாமனிதன் தமிழ் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணித்த ஒரு மனிதன்.அந்த தியாகத்தினை உங்களது அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

இன்று வீதிவீதியாக அவரை கொண்டுதிரிகின்றீர்கள்.தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.உங்கள் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இனதுவேசத்தினை கக்கி மக்களை பிரிவுபடுத்தவர வேண்டாம் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஈரானிய ஜனாதிபதியுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சற்று முன்னர் நியூயோர்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு விடுத்த அழைப்பையும் கலாநிதி இப்ராஹிம் ரைசி ஏற்றுக்கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதால் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்காக ஜெனிவா சென்றிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் முக்கிய உயர்மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டுவருகின்றார்.

அதன்படி நேற்று முன்தினம் வியாழக்கிழமை வரை வொஷிங்டனில் தங்கியிருந்த அவர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக், அமெரிக்கத் திறைசேரி அதிகாரிகள், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது, அண்மையில் சனல்-4 செய்திச்சேவையினால் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அந்த ஆவணப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத்தன்மை, உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டிருப்பதனால் இதனை சர்வதேச குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

சனல்-4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ள ஹன்ஸீர் அஸாத் மௌலானா, இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையில் ஏற்கனவே சாட்சியமளித்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதுபற்றிக் கருத்துவெளியிட்ட பெத் வான் ஸ்காக், உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் உண்டு எனவும், இதுகுறித்து தாம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பிணையங்கள் Fitch Ratings-ஆல் தரமிறக்கம்

உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தலை Fitch Ratings சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் மேலும் தரமிறக்கியுள்ளது.

இதற்கமைய, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கமைய புதிய வட்டி வீதத்தின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பிணையங்களின் தரப்படுத்தல் ‘C’ மட்டத்தில் இருந்து ‘D’ மட்டத்திற்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

குறித்த உள்நாட்டு கடனானது, வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலையிலிருந்து – செலுத்தப்படாத நிலைக்கு கீழிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இதுவரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் கீழ் விநியோகிப்பதற்கு முன்மொழியப்படாத உள்நாட்டு பிணையங்களின் தரப்படுத்தல் வரையறுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலை வரை தரமிறக்கப்பட்டுள்ளது.