‘இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது’ – மறவன்புலவு க. சச்சிதானந்தன் – பிபிசி தமிழ்

பாரதிய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் பாஜக கிளையை தொடங்க இங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்கிறார் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர்.

பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து தொடர்பான தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யாவாலி ட்விட்டர் பயனர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ள நேபாள தூதரகமும் இந்திய அதிகாரிகளிடம் தங்கள் எதிர் கருத்தைத் தெரிவித்துள்ளாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள், இந்திய வம்சாவளித் தமிழ் மக்களுக்கான உதவிகள், 5 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றை இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் நோக்குடனேயே பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசு செய்தது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

‘தமிழர் பகுதிகளில் தேவையற்ற அழுத்தம்’

இலங்கை தமிழர் பகுதிகளில் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களை உண்டாக்குவதற்காக இவ்வாறான கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாக ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு உட்படுத்தி, இந்தியாவிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளா மேற்கொள்ளப்படுகின்றது எனவும் கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வழங்க மறுப்பு தெரிவித்த சந்தர்ப்பத்தில் இருந்தா, இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் ராஜாங்க அமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் உள்ளக நோக்கம் என்னவென்பது தொடர்பில் முதலில் ஆராய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவிக்கின்றார்.

திடீரென வெளியிடப்பட்ட கருத்தின் ஊடாக, இதனை புரிந்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

‘நோக்கம் உள்ளது’ – இலங்கை சிவ சேனை

இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான நோக்கம் உள்ளதாக இலங்கை சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள இந்துத்துவவாதிகளுக்கே இவ்வாறான நோக்கம் ஒன்று உள்ளதாகவும் தான் உறுதிபட கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கி கட்சி தொடங்குவது புதிய செய்தி அல்ல என அவர் நினைவூட்டியுள்ளார்.

இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமாக செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கை தேசிய காங்கிரஸ் என அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாறு இந்தியப் பண்பாட்டை தழுவியதாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் என்ன சொல்கிறது?

பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா கருத்தொன்றை வெளியிட்டதாக உறுதியான தகவல்கள் எதுவும் கிடையாது இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்தொன்றை அமித் ஷா கூறியதாக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சரே தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக அமித் ஷா, இவ்வாறான கருத்தை வெளியிடும் வகையிலான காணொளி அல்லது அறிக்கை இதுவரை ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, தனது அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, இலங்கை வாழ் தேச பற்றாளர்கள், வெளிநாட்டு கட்சியொன்றுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தான் நம்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கட்சி இலங்கையில் போட்டியிட முடியுமா?

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய, வெளிநாட்டு கட்சியொன்றை இலங்கையில் பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள கட்சிகளுக்கு வெளிநாட்டு கட்சிகளுடன் தொடர்புகளை பேண முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு கட்சியொன்று நாட்டிற்குள் பதிவு செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.

இலங்கை குடியுரிமை பெறாத ஒருவரால், இலங்கையில் கட்சியொன்றை ஆரம்பிக்கவோ வாக்களிக்கவோ முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Posted in Uncategorized

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் விரைவில் எமது வசமாகும் – உதய கம்மன்பில

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகள் மிக விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும் கொலன்னாவையில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் புறந்தள்ளி, தாம் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு இந்த பேச்சுவாரத்தையின் போது இணக்கம் காணப்பட்டதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

அலி சப்ரியை பதவி நீக்காவிடின் அரசாங்கம் பலவீனமடையும் – ஞானசார தேரர்

நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டு தலைவர் அல்ல இவர் வரையறைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமை சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய பெரும்பான்மை மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு.

நீதியமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது நீதியமைச்சர் பதவியில் இருந்து இவரை நீக்க வேண்டும். இல்லாவிடின் இவராலேயே இந்த அரசாங்கம் பலவீனமடையும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த மத கல்வி எவ்விடத்திலும் அடிப்படைவாதத்தையும்,பிற மதங்களை அழிக்க வேண்டும் என்றும் போதிக்கவில்லை.பௌத்த மத கொள்கையினை கொண்டுள்ள நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்கவில்லை. இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் கிடையாது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதம் உள்ளது.

மத்ரஸா பாடசாலை, காதி நீதிமன்றம், ஷரியா சட்டம் ஆகியவை நாட்டுக்கு பொறுத்தமற்றது என்பதை பல முறை குறிப்பிட்டுள்ளோம். மத்ரஷா பாடசாலை,ஷரியா சட்டம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதித்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்த வேண்டுமாயின் மேலைத்தேய சட்டம், தேசவழமை சட்டம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரியின் வாதம் தேவையற்றதாகும்.பௌத்த மத உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்களில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பௌத்த மத சட்டங்களும், பௌத்த கல்வியும் நாட்டில் பௌத்த அடிப்படைவாதத்தையும், வன்முறைகளையும் தூண்டவில்லை. ஆனால் மத்ரஸா பாடசாலை, ஷரியா சட்டம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கிறது.அதற்கு பல ஆதாரங்கள் உண்டு. முஸ்லிம் விவாக சட்டத்தில் ஒரு தரப்பினரது உரிமை மீறப்படுகிறது. இது பொது சட்டத்திற்கு புறம்பானது.

பௌத்த மத உரிமை பாதுகாக்கும் சட்டங்களை நீக்க பெரும்பாலான மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கவே பெரும்பான்மையின மக்கள் தனி சிங்கள அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். ஆகவே நீதியமைச்சர் அலி சப்ரி நாட்டின் தலைவர் என்று நினைத்துக் கொண்டு கருத்துரைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதியமைச்சரது கருத்துக்கள் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் உள்ளது. ஆகவே இவரது செயற்பாடு குறித்து ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும். நீதியமைச்சர் பதவியில் இருந்து இவரை விலக்குவது சிறந்ததாகும். இல்லாவிடின் இவரால் வெகுவிரைவில் அரசாங்கம் பலவீனமடையும் என்றார்.

இலங்கை தற்போது முழுமையாக, சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது – சந்திரிகா

நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடற்படையினர் விலக்கப்படமாட்டார்கள் – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

சீனாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் விலக்கிக்கொள்ளப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சீன ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு டிசம்பரில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி ஹம்பாந்தோட்டை

துறைமுகத்தின் செயற்பாடுகள் சீனாவின் சர்வதேச துறைமுகக்குழுவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகச்சேவைகள் நிறுவனத்துக்கும் கையளிக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கையளித்த நிலையில் இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்

காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிஅழுகுரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பல முறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.

நாங்கள் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

தமிழ்பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.

பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டப்படுபவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னரும் இந்த தாக்குதல் இடம்பெற்றது.
காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளாது.

மருத்துவமனைகளின் மருத்துவர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

Posted in Uncategorized

இறுதி நேரத்தில் இரத்தானது பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

No description available.

இந்த விஜயமானது இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து பாக்கிஸ்தான் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் 24 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதுடன் பாராளுமன்ற விஜயம் மற்றும் விளையாட்டு மையம் திறப்பு ஆகிய நிகழ்வுகளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துக்கொள்வார் என தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் 22 ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 23 ஆம் திகதியே இடம்பெறுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர்ஸ்தாணிகராலயம் ஊடாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை இடம்பெறாது என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க வீரகேசரிக்கு தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜயம் மற்றும் அவரது பாராளுமன்ற உரை தொடர்பிலும் கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது பாராமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கு வாய்ப்பளிக்க இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இறுதி தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போதே பாக். பிரதமருக்கு 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பை அளிக்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்த போதிலும் இறுதி தீர்மானம் எடுக்கப்பட வில்லை.

மேலும் தேநீர் விருந்துபசாரம் , பன்னாட்டு இராஜதந்திரிகள் அழைப்பு மற்றும் சுகாதார விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது.

பொதுவாகவே இலங்கை வரும் பன்னாட்டு தலைவர்களும் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை.

ஆனால் விசேடமாக கோரிக்கை விடும் பட்சத்தில் இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கமைவாக உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறானதொரு இராஜதந்திர சம்பிரதாயங்களுக்கமையவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்திருந்த போது பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும் பாக். பிரதமரின் பாராளுமன்ற உரை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்றைய (15) அமைச்சரவை முடிவுகள்!

2021.02.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

01. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ‘விசேட வைப்புக் கணக்கு’ தொடர்பான விளக்கக் கட்டளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

வெளிநாட்டு நாணயத்தை நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக ‘விசேட வைப்புக் கணக்கு’ ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், குறித்த கணக்குகளைத் தொடர்ந்து பேணுவதற்காகவும், மேலதிக வட்டியை செலுத்துவதற்காகவும் இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விசேட வைப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியை 2020 ஒக்ரோபர் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்காக, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 2020-11-17 ஆம் திகதிய 2202ஃ07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. அடுக்குமாடி வீட்டு நிர்மாணிப்பு மேம்பாட்டுக்காக கொத்தணி வீட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்தல்

கொழும்பு நகரில் நிலவுகின்ற காணித் தட்டுப்பாட்டால் அதிகரித்துவரும் வீட்டு வசதிகளுக்கான கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான காணிகளை அடையாங் காண்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 12 ஏக்கர் காணித் துண்டில், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாகத்திலுள்ள கெப்பிட்டிபொல வீதி, கொழும்பு 05 இல் அமைந்துள்ள 1976 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட 176 வீட்டு அலகுகள் மற்றும் 15 பங்களா விடுதிகளுடன் கூடிய கொத்தணி வீடுகள் தற்போது அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ இல்லத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த வீடுகளில் அதிகமானவை பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன், அவை முழுமையாக திருத்தம் செய்யப்பட வேண்டுமென தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. தற்போது 700 அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த 12 ஏக்கர் காணியில் 02 ஏக்கர்களை அரச ஊழியர்களுக்கான 400 உத்தியோகபூர்வ இல்லங்களை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ் தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்தியதர வகுப்பினருக்கான வீடமைப்பு முறைமையில் 100 வீடுகள் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சுகின்ற 10 ஏக்கர் காணியை அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்படவுள்ளது. முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் மற்றும் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹோர் பொருளாதார நிறுவனத்திற்கும் (Lahore School of Economics) புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுதல்

இரு தரப்புக்கும் பயன்கள் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சிப் பொருட்கள், வெளியீடுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்தல், இரு நிறுவனங்களும் கூட்டாக மற்றும் தனிப்பட்ட ஆய்வுக் கருத்திட்டங்களை ஊக்குவித்தல், திறன்கள் மற்றும் இயலுமைகளுடன் கூடிய மாணவர் பரிமாற்று நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹோர் பொருளாதார நிறுவனத்திற்கும் (Lahore School of Economics) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கல்வியலாளர் குழு ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கையில் பொதுப் போக்குவரத்துச் சேவைக்கான முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை (Transit Card) அறிமுகம் செய்தல் மற்றும் கட்டண அறவீட்டு இலத்திரனியல் முறைமையை நடைமுறைப்படுத்தல்

இலங்கையில் பொதுப் போக்குவரத்து துறையில் நாணய அலகு கட்டண அறவீட்டு முறை நடைமுறையில் இருப்பதுடன், அதனால் ஏற்பட்டுள்ள சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் பொதுப் போக்குவரத்துப் பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பாவனைக்காக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை அறிமுகம் செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்காக 2018 ஒக்ரோபர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் அதன் கீழுள்ள 100% வீதம் உள்ளூர் கம்பனியான லங்கா க்லியர் தனியார் நிறுவனம் முன்மொழியப்பட்டுள்ள முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டை கருத்திட்ட யோசனை சமர்ப்பித்துள்ளதுடன், குறித்த கருத்திட்ட யோசனையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்கான முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை நாடளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மீள்பிறப்பாக்க எரிசக்தி மேம்பாட்டின் கீழ் விநியோக மின்மாற்றிகளுடன் (ட்ரான்ஸ்போமர்) இணைப்புச் செய்து தனியார் துறையினரின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 100kw சூரிய மின்னுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்

‘சுபீட்சத்தின் நோக்கு’ அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய செயற்பட்டு 2030 ஆண்டாகும் போது ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் அதிகளவை மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த மீள்பிறப்பாக்க எரிசக்தி கருத்திட்டம் பெரும்பாலும் தனியார் துறையினரின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கு சொந்தமான 7000 விநியோக மின்மாற்றிகளுக்காக (ட்ரான்ஸ்போமர்) நிலப்பரப்பில் இயங்கும் சூரிய மின் நிலையத்துடன் இணைப்புச் செய்து மீள்பிறப்பாக்க மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்ட ஒரு மின்மாற்றிக்கு ஒரு சூரிய மின் உற்பத்தி கருத்திட்டம் என்ற வகையில் நடைமுறைப்படுத்தவும், அதற்கு ஏற்புடைய பிரதேசத்தின் பிரதேச செயலகங்களில் வியாபாரப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையின் அடிப்படையில் விலைமனு கோரப்பட்டு முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு 12 மில்லியன்கள் முதலிடப்பட வேண்டியுள்ளதுடன், குறித்த மின்மாற்றிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள 40 பேர்ச்சஸ் காணித்துண்டில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதற்கமைய, மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 18 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சம்பிரதாய மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

பாரம்பரிய கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தங்களின் உற்பத்திகளை விரிவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விசேட பொருட்களின் சந்தைப்படுத்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரம்பு, பித்தளை, மட்பாண்டம், மரத்தளபாடங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு 2021-2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைச்சால் கீழ்க்காணும் கருத்திட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கிராமியக் கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை பயிரிடும் நிகழ்ச்சித்திட்டம்

• தேசிய மூலப்பொருள் வங்கியை தாபித்தல்

• ஒரு கிராமத்தில் ஒரு தொழில் முயற்சியாளரை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

• மரத்திலான ஆக்கங்கள் மற்றும் வடிவமைப்புக்களுக்கான நிலையத்தை தாபித்தல்

• கிராமிய மற்றும் பாரம்பரிய கைத்தொழில் கிராமங்களை ஒன்று திரட்டிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

• கிராமிய கைத்தொழிலுக்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தை ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

07. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு விமானக் கம்பனிகளைக் கவர்ந்திழுப்பதற்கான விசேட சலுகை ஏற்பாடுகள்

சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட நேர அட்டவணைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச வாடகை விமானப் பயண நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் இறக்கம் மற்றும் விமானங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலிருந்து விடுவிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சலுகைக் காலத்தை மேலும் 2021 ஆம் ஆண்டு யூலை மாதம் 19 திகதி வரை நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குச் சட்டக் கோவையை திருத்தம் செய்தல் (பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிப்பதற்கு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் வழங்கல்)

ஒரு சில நீதிமன்றப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொலிசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை கண்காணிப்பதற்காக குறித்த பொலிஸ் நிலையத்திற்கு குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் சமூகமளிப்பதற்கு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குச் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருக்கேதீஸ்வர கோவிலில் சிவராத்திரிக்கு வெளி மாவட்டத்தோருக்கு தடை

கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு, மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலில், வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களைத் தவிர்த்து, மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாடுதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில், நேற்று (15) மாலை மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நடைபெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழா தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடியையும் நிறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்கேதீஸ்வரத்துக்கு வருகின்றவர்கள், சுகாதார நடை முறைகளை உரிய வகையில் பின்பற்ற வேண்டுமெனவும், இதன்போது அறிவுறுத்தப்பட்டது.

Posted in Uncategorized

இறுதி சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தெரண 360 நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அதனை 50 ஆக மீண்டும் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.