பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த இயக்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதாக தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் பேரணி எழுச்சியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் தற்போது அது பேரெழுச்சி இயக்கமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வேலன் சுவாமிகள், லியோ பாதிரியார், மட்டக்களப்பு சிவில் அமைப்பின் சிவயோகநாதன் ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

அந்த அமைப்பின் ஊடக அறிக்கை வருமாறு-

Posted in Uncategorized

இலங்கை விவகாரத்தை ஜெனிவாவில் விரிவாக ஆராய வேண்டும்: சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்படல், வலுவிழந்துள்ள சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டிருக்கிறது.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் அவை தொடர்பில் விசாரணை செய்வதில் தோல்வியடைந்த கட்டமைப்புக்கள், தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் (வன்முறைகள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், தடுத்துவைக்கப்பட்டுள்ள போது இடம்பெறும் இறப்புக்கள்), வலிந்து காணாமலாக்கப்படல், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யாமை மாத்திரமன்றி, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றமை குறித்தும் கூறப்பட்டுள்ளது என்று மேற்படி இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மர் தமிழர்களின் கதை: ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள் – பிபிசி தமிழ்

பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த இணையமும் இல்லை.

போலிச் செய்திகள் வாட்சாப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் மட்டுந்தான் பரவுமா என்ன? மக்கள் பலரும் தங்களின் அச்சத்துடன் போலிச் செய்திகளையும் பகிர தொடங்கியதால், நாட்டில் என்ன நடக்கிறது? 2015ஆம் ஆண்டு முதல் மீண்டு வந்த நமது வாழ்க்கை ஒரே இரவில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதா? என்று மியான்மர் மக்கள் பரிதவிக்க தொடங்கினர்.

அதே நாள் மதியம் 12 மணி முதல், தொலைத்தொடர்பு சேவை படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தது. மியான்மர் மக்கள் எது நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஆம், 1962ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கைக்கே அல்லல் பட்ட மக்கள், 2015ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று அடைக்கப்பட்டது என்று தெரியவந்ததாக பதறுகிறார் மியான்மரின் யாங்கோன் (ரங்கூன் என்றும் அழைக்கப்படுகிறது) நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ்.

மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அங்கு நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தமிழர்களின் பார்வையில் அறிவதற்காக மியான்மரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சில தமிழர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

ராணுவ ஆட்சி Vs மக்களாட்சி – ஒரு ஒப்பீடு

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த சுதந்திர காற்று ஒரே இரவில் முடிவுக்கு வந்தது என்பது, கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவரை அடர்ந்த காட்டுக்குள் தனியாக அடைத்தது போன்றுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

ராணுவ ஆட்சியின்போது, ‘உங்களுடன் பேச வேண்டும்’ என்று கூறி அழைத்து செல்லப்பட்ட பெரும்பாலானோரை பத்து அல்லது இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மீண்டும் பார்க்க முடியாத சூழல் 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை நிலவி வந்ததாகவும், அது மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இயல்பு வாழ்க்கையை முடக்குவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த வேளையில் அவை மீண்டும் கனவுபோல் மாறிவிட்டதாகவும் வேதனைப்படுகிறார் சுந்தர்ராஜ்.

“எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. ஆனால் ராணுவமோ, இதுபோன்று ஒலியை எழுப்புவதாக யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது. நாங்கள் எங்களது விருப்பு, வெறுப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை கிடையாதா?” என்று கேள்வியெழுப்பும் அவர், எனினும் மக்கள் ராணுவத்துக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்புவதை தொடர்வதாக கூறுகிறார்.

கொரோனா காலத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் வழியே வர்த்தகம் மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும், கல்வி கற்கவும் என எண்ணற்ற புதுமைகளை வாழ்க்கையில் புகுத்திக்கொள்ள மக்கள் முயற்சித்து வந்த காலகட்டத்தில் தங்களது ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த முதல் நாளன்று சில மணிநேரங்களுக்கு அமலில் இருந்த தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகள், நாட்கள் செல்ல செல்ல விரிவடைந்து, ஒரு கட்டத்தில் நாடுமுழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் தடை செய்யப்பட்டன.

49 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்ப கூடாது என்று ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் சுந்தர்ராஜ்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மியான்மரில் முந்தைய ராணுவ ஆட்சியின்போதும், இப்போதும் மியான்மரில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அறிய முற்பட்டோம். அப்போது, மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும் வித்தியாசமான ஒருமித்த பார்வையை வெளிப்படுத்தினர்.

அதாவது, தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல நூறாண்டுகளுக்கு முன்னதாக மியான்மருக்கு வந்ததாகவும், இப்போது அங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களை ‘தமிழர்கள்’ என்று அழைத்துகொள்வதில் எந்தளவுக்கு பெருமிதம் கொள்கிறார்களோ, அதே அளவுக்கு தாங்கள் ‘மியான்மர் குடிமகன்’ என்றும் ‘மியான்மர் தமிழர்’ என்றும் கூறிக்கொள்வதிலும் பெருமிதமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், மியான்மர் நீண்டகாலமாக சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளிலும் தமிழர்கள் தனித்திருக்காது, நாட்டின் உரிமைக்காக மற்றனைத்து சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து போராடுவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

“1962ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம் மற்றும் அதைத்தொடர்ந்த அச்சத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கப்பல்களில் தமிழகத்துக்கு திரும்பினர். அப்போது மியான்மரையே தங்களது தாய்நாடாக கருதியவர்கள் இன்று வரை அந்த கருத்தில் உறுதியாக உள்ளனர்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

“மற்ற இனத்தை சேர்ந்தவர்களை போலவே, தமிழர்களும் மியான்மரில் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள் காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு உள்ளது. ராணுவ ஆட்சியில், வேலைவாய்ப்பு, கல்வி என எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.”

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், மியான்மரின் மீது மிகுந்த தேசப்பற்றை வெளிப்படுத்தும் அங்கு வாழும் தமிழர்கள், அந்த நாட்டின் குடிமகனாகவே பெரும்பாலான நேரங்களில், இடங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான். அதாவது, மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான தேசிய அடையாள அட்டை, 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட கொடுக்கப்படவே இல்லை என்று கூறுகிறார் சுந்தர்ராஜ்.

இதன் காரணமாக, மியான்மர் தமிழர்கள் சிறந்து கல்வியை பெற்று, நல்ல பணியில் இருப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். “மியான்மரில் தமிழர்களை மருத்துவராக, பொறியாளராக, அரசு ஊழியராக பார்ப்பதென்பது மிகவும் அரிது. தமிழர்கள் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியர்களாகவே இன்னமும் நீடிக்கின்றனர். இதற்கு தேசிய அடையாள இல்லாததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்கப்படுவது மிக முக்கிய காரணமாகும்.”

எனினும், 2015ஆம் ஆண்டு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்கள் உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மியான்மரின் ‘அம்மா’

2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எங்கு சென்றாலும், எதை செய்தாலும் “எங்களை வேற்றுமைப்படுத்துகிறார்களே” என்ற எண்ணம் மியான்மர் தமிழர்களிடத்தில் நிலவி வந்ததாகவும், அந்த உணர்வு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்ததும் முற்றிலும் மாறியுள்ளதாகவும் கூறும் சுந்தர்ராஜ், சூச்சியை மியான்மரின் ‘அம்மா’ என்று குறிப்பிடுகிறார்.

“வலுவான குடும்ப பின்னணி, வெளிநாட்டு கல்வி என்று வாழ்ந்து கொண்டிருந்த ஆங் சான் சூச்சி, மியான்மர் மக்கள் படும் துன்பத்தை பார்த்து நாட்டுக்கு திரும்பி வந்தார். ‘ராணுவ ஆட்சியே நமது வாழ்க்கை, இதுவே இயல்புநிலை’ என்று இருந்த மக்களுக்கு சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை கற்பித்தது மட்டுமின்றி, அதை அடைவதற்கு காந்தியின் அகிம்சை வழியிலேயே போராட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்து, எங்களுக்கும் நல்ல காலம் பிறகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.”

“எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆங் சாங் சூச்சியை 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். மக்களுக்காகவே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த அவர் மியான்மருக்கே ‘அம்மா’ ஆவார். அவர் வழங்கிய அறிவுரை, ஏற்படுத்தி கொடுத்த திட்டங்களை கொண்டே நாங்கள் கடந்த ஆறாண்டுகளாக, கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தி வந்தோம்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

மியான்மரில் பல மொழிகள் பேசப்பட்டாலும், பர்மிய மொழியே அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. குறிப்பாக, பர்மிய மொழியை மட்டுமே மையமாக கொண்ட மியான்மரின் திரைத்துறை, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பர்மிய திரைத்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கடைநிலை ஊழியராக தொடங்கி, இன்று 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவராக சுந்தர்ராஜ் விளங்குகிறார்.

“மியான்மர் வரலாற்றில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் சார்ந்த திரைப்படத்தை எடுத்தது நான்தான். 2019ஆம் ஆண்டு ‘சிட்டிசன்’ என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தில் ராணுவ ஆட்சியின் கோர முகத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆங் சாங் சூச்சி என்னையும், படக்குழுவினரையும் அழைத்து பாராட்டு தெரிவித்து, தானும் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறினார்” என்று ஆங் சாங் சூச்சியின் பாராட்டை பெற்ற தருணத்தை விவரிக்கிறார் சுந்தர்ராஜ்.

ஆங் சாங் சூச்சியும் ரோஹிஞ்சா முஸ்லிம்களும்

ஆங் சாங் சூச்சியால் மட்டுமே மியான்மரில் மக்களாட்சியை சிறப்பாக நடத்திட முடியும் என்பது போன்ற கருத்தை அங்கு வாழும் தமிழர்கள் முன்வைத்தாலும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் அதே ஆங் சாங் சூச்சி மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படுவதாக கூறுகிறார் அங்கு வாழும் வழக்கறிஞரான அகத்தியன். “மியான்மரில் 2015ஆம் ஆண்டு மக்களாட்சி அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டு பெரும்பாலான இடங்களில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்தும் ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்தன. எனவே, அந்த துறை சார்ந்த நடவடிக்கைகளில் சூச்சி தலைமையிலான அரசால் தலையிடவோ அல்லது தாக்கம் செலுத்தவோ இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ரக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், இங்குள்ள சூச்சி தலைமையிலான அரசு செய்ததை போன்று சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிந்தன” என்று கூறுகிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் உள்ளூர் ஊடகங்கள் ஒருவிதமான செய்தியையும், சர்வதேச ஊடகங்கள் வேறுவிதமான செய்தியையும் வெளியிட்டதாக கூறும் அகத்தியன், ஊடகங்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே இந்த விவகாரத்தில் வெளியுலகத்துக்கு தவறான புரிதல் ஏற்பட்டதற்கு காரணம் என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தன்னைப் பொறுத்தவரை, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இன அழிப்பு குற்றச்சாட்டில், ஆங் சாங் சூச்சிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தொடர்பில்லை என்றும், அவர் இனஅழிப்பை ஆதரிக்கவில்லை என்றும் நம்புவதாக கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களில் தானும் ஈடுபட்டு வருவதாக அகத்தியன் கூறுகிறார்.

 

என்னதான் தீர்வு?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது உலகமே அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. அதே காலகட்டத்தில், அதாவது நவம்பர் 8ஆம் தேதிதான் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஆங் சாங் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால். எப்படி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, அதில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதேபோன்று மியான்மரில் சூச்சியின் கட்சி மீது ராணுவம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரம் ஏதுமின்றி முன்வைத்தது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர்ராஜ், “முன்னெப்போதுமில்லாத வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு, சிறப்பான முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். ஆனால், ராணுவமோ கொரோனா வைரஸை காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணத்துடனே தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டது. ஒரு கட்டத்தில், தேர்தல் தேதி உறுதியானவுடன், பெருந்தொற்று பிரச்சனையை கருத்திற்கொண்டு, பொது கூட்டங்களுக்கு மாறாக வானொலி, காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டே சூச்சி மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இந்த தோல்வியை ஏற்க விரும்பாத ராணுவம், கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது” என்று கூறுகிறார்.

மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்கவிட்டால், கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் மியான்மர் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.

இந்த விவகாரத்தில் தீர்வு எப்படி எட்டப்படக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்ராஜ், “மக்கள் அமைதியான முறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், ராணுவத்தின் ஆட்சியை அகற்றுவதற்கு இதெல்லாம் போதாது. மியான்மரின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் தலையிட்டே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மற்றபடி, தமிழர்கள், பௌத்த மதத்தினர், முஸ்லிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் போராடுவோம்” என்று கூறுகிறார்.

“உலகம் முழுவதும் மியான்மரில் தயார் செய்யப்படும் மரப்பொருட்கள் மற்றும் உணவு தானியங்களுக்கு சிறந்த பெயர் உள்ளது. இதைத்தவிர்த்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களும் இந்த நாட்டில் உள்ளன. ஆனால், இத்தனை இருந்தும் எங்களது வாழ்க்கை வாழ்வா – சாவா என்ற நிலையிலேயே தினமும் நகர்கிறது.”

சுதந்திரமும், ராணுவ ஆட்சியின் பிடியும்

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரமாக யங்கோன் இருந்தாலும், நேபியேட்டோ தலைநகரமாக விளங்குகிறது.

1948ஆம் ஆண்டு மியான்மர் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெகுகாலம் நீடிக்கவில்லை. 1962 முதல் 2011 வரை ராணுவத்தின் ஆட்சியில் மியான்மர் இருந்தது. 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்று ஆங் சாங் சூச்சி ஆட்சியமைத்தார்.

‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேசச் செயலகம் உருவாக்குவது தொடர்பான முன் மொழிவு கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவொன்றை அமைப்பது சம்பந்தமாக எடுக்கும் தீர்மானத்தின் முன்மொழிவை தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், மற்றும் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவை அமைப்பது தீர்மானத்தின் முன்மொழிவை பெற்றுக்கொள்ளப்பட்டு தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

கனேடிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெகினோனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் கனேடிய தூதுவருடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கை எதிராக முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படும் யோசனை சம்பந்தமாகவும், இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர்- ஹக்கீம் சந்திப்பு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று (09) பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இங்கு சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை பாகிஸ்தான் நாட்டின் பிரதி உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார்.

அத்துடன், விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டது.

Posted in Uncategorized

கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 665 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் தொற்று அறியப்பட்டவர்களுடன்,

நேரடித் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்பட்டு இருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் புத்தளத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

யாழில் 3 தீவுகளை சீனாவிற்கு தாரை வார்த்துவிட்டது இலங்கை; தொடும் தூரத்தில் சீன ஆபத்து; இலங்கை தமிழர்களை பலப்படுத்துவதே இந்தியாவிற்கு பாதுகாப்பு: என்.ராமதாஸ்!

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை ஒட்டியுள்ள 3 தீவுகளை சீனாவுக்கு எழுதிக் கொடுக்காத குறையாக தாரை வார்த்திருக்கிறது இலங்கை அரசு. அந்தத் தீவுகளை சீனா தளமாக மாற்றிக் கொண்டால், எந்த நிமிடமும் தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளியை ஆதாரமாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனாவைச் சேர்ந்த சினோசர் – இடெக்வின் (Sinosar-Etechwin) நிறுவனத்திற்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது.

இத்திட்டம் ரூ.87.60 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது ஒரு புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திட்டத்தைப் போன்று தோன்றும். ஆனால், இதன் நோக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது தான்.

இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ள கலப்பு மின் திட்டத்தின் மதிப்பு வெறும் ரூ.87 கோடி மட்டும் தான். இந்தத் திட்டத்தைக் கைப்பற்றுவதற்காக இந்திய நிறுவனங்களும் போட்டியிட்டன. ஆனால், சீன நிறுவனம் தாக்கல் செய்த ஒப்பந்தப்புள்ளி தான் கவர்ச்சிகரமாக இருப்பதாகக் கூறி, அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது இலங்கை அரசு. உண்மையில் இந்தத் திட்டம் என்பது இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ அல்லது அவற்றின் நிறுவனங்களுக்கோ சுண்டைக்காய்க்கு சமமானது ஆகும்.

ஆனாலும், இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை சண்டையிட்டு சீனா கைப்பற்றியதற்கும், இந்த ஒப்பந்தம் தங்களுக்கு கிடைக்காததற்காக இலங்கை அரசிடம் இந்தியா கண்டனம் தெரிவித்ததற்கும் காரணம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற விருப்பம் தான் ஆகும்.

கலப்பு மின்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் மிகவும் பெரியது நெடுந்தீவு தான். இந்தத் தீவு தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்திலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தாரைவார்த்த கச்சத்தீவிலிருந்து இந்தத் தீவு வெறும் 23 கி.மீ தொலைவில் தான் உள்ளது. இந்தத் தீவுகளில் கலப்பு மின்திட்டத்தை செயல்படுத்தி அளவுக்கு அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதோ, கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுவதோ சாத்தியமல்ல.

மாறாக, அந்த தீவுகளுக்கு தொழில்நுட்பப் பணியாளர்களை அழைத்துச் சென்று தங்க வைப்பதற்கு ஆகும் செலவுகள், அவர்களுக்கு அளிக்கும் ஊதியத்தையும் ஒப்பிட்டால், அதைவிட குறைவான செலவில், அதைவிட அதிகமான மின்சாரத்தை அமெரிக்காவிலிருந்து கூட கொண்டு வந்து விட முடியும். இவ்வளவையும் மீறி அந்தத் தீவுகளில் மின்னுற்பத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை சீனா பெற்றிருப்பதற்கு காரணம், அத்தீவுகளை இந்தியாவுக்கு எதிரான இராணுவத் தளமாக மாற்றிக்கொள்ளலாம் என்பது தான்.

நெடுந்தீவில் மின்திட்டங்களை செயல்படுத்தும் போர்வையில் இந்தியாவை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் கொண்டு வந்து சேமித்து வைத்துக் கொண்டால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் உடனடியாக இந்தியாவைத் தாக்கி நிலைகுலைய வைக்க முடியும். இது சாதாரணமான ஆபத்து அல்ல. இந்த ஆபத்தின் தீவிரத்தை இந்தியா உடனடியாக உணர்ந்து, அதை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால், இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எந்த நேரமும் ஆபத்தின் விளிம்பில் தான் இருக்க வேண்டும். வடக்கில் லடாக் தொடங்கி வடகிழக்கில் சிக்கிம் மாநிலம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து வரும் சீனா, இலங்கை தீவுகள் வழியாக தமிழகத்திலும் தொல்லை கொடுக்கத் தொடங்கும். அத்தகைய நிலை ஏற்பட்டால், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியாமல் சீனாவை சமாளிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை இந்தியா இப்போதே தடுக்க வேண்டும்.

தென்னிந்தியாவில் சீனா தாக்குதல் நடத்த முயன்றால் அது இலங்கை வழியாகத் தான் நடைபெறக்கூடும் என்பதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அது இப்போது உண்மையாகி வருகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்றி இந்தியாவை கண்காணிக்க வேண்டும்; அச்சுறுத்த வேண்டும் என்ற உலக வல்லரசுகளின் முயற்சிகள் பலிக்கவில்லை.

திருகோணமலையில் தளம் அமைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் கூட முறியடிக்கப்பட்டன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆளுமையை அதிகரிக்க வேண்டும்; இந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இலங்கையில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி விரும்பினார். ஆனால், அவரது கொள்கைக்கு மாறாக, இலங்கையில் ஈழத் தமிழர்களை ஒழிப்பதற்கான சிங்கள அரசின் சதிகளுக்கு துணை போனதன் விளைவை இப்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

இலங்கைக்கு எவ்வளவு தான் உதவிகளைச் செய்தாலும் அது நமக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு சரக்குப்பெட்டக முனையத் திட்டத்தை அமைப்பதற்காக இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சிங்கள அரசு ரத்து செய்திருப்பது தான் இதற்கு சான்று ஆகும். இப்போதும் இலங்கையில் தமிழர்கள் வலிமையுடன் இருப்பது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது.

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும். எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை இந்தியா மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்; ஈழத்தமிழர்களை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இனப்படுகொலை என்ற வார்த்தையால் சபையில் சர்ச்சை : கஜேந்திரகுமாருடன் இராஜாங்க அமைச்சர்கள் வாக்குவாதம்

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான தமிழர் எழுர்ச்சி பேரணி இடம்பெற்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் எம்.பியுடன் வாக்குவாதப்பட்டனர்.

“இன்றும் இனப்படுகொலை” என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்ட போதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் எம்.பி வாக்குவாதப்பட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பிரதான பத்து கோரிக்கைகளை முன்வைத்து சிவில் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த பேரணியானது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் குறித்த பத்து காரணங்கள் மாத்திரமே எமது பிரதான கோரிக்கைகள் அல்ல. மேலும் நான்கு உப கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதில் வடக்கு கிழக்கு பூமி தமிழ் பேசும் மக்களின் தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். தமிழர்களுக்கான தனித்தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையின் கீழ் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமையையும் இன்னும் அது தொடர்கின்றது என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த உண்மைகள் மறைக்கப்பட முடியாது என உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா :- இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், இன்றும் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் எம்.பி கூறுகின்றார். அவர் எதனை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகின்றார் என தெளிவில்லை என கேள்வி எழுப்பினார்?

இதற்குப் பதில் தெரிவித்த கஜேந்திரகுமார் எம்.பி :- இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை கொள்வது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலை என்றே கருதப்படும்.

2009 ஆம் ஆண்டு வரையில் உயிர்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதை போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலனித்துவ கொள்கையில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தொல்பொருல் திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர், இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதும் இனப்படுகொலையாகும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா :- ஆனால் எமக்கு தெரிந்தவரையில் இனப்படுகொலை என்பது அதிகளவான மக்களை கொன்று குவிப்பதாகும் என்றார். இதன்போது ஆளும் தரப்பில் இருந்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் :- இனப்படுகொலை என்பது எமக்கு தெரிந்த வரையில் திட்டமிட்ட கொலையாகும்.

அதிகளவான மக்களை அல்லது ஒரு இனக்குழுவை கொள்வது இனப்படுகொலை என அர்த்தப்படும். ஆனால் நீங்கள் கூறும் காரணிகளுக்கு இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது முற்றிலும் தவறான ஒன்றாகும். எனவே அதனை திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.

கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொலைக்கான வரைவிலக்கணம் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. எந்த விதத்திலும் இதற்கான வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியும். ரோமானிய பிரகடனத்தின் ஐந்தாம் உறுப்புரையை வாசியுங்கள்.

ஹர்ஷ டி சில்வா :- இனப்படுகொலை என்ற வார்த்தையை நீங்கள் சரளமான விடயங்களுக்கு பயன்படுத்த முடியாது.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் ஒரு தகுதியான சட்டத்தரணி, எனக்கு எவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது தெரியும். இனப்படுகொலை நடந்தது. அதற்கான நியாயத்தை கேட்கிறோம். இதற்கான சாட்சியில் நானும் ஒருவன், அதேபோல் இன்றும் எமது அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. அதனையே நான் அவ்வாறு கூறுகின்றேன்.

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் :- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. நீங்கள் கூறும் காரணிகளுக்கு பொருத்தமான வார்த்தை இதுவல்ல.

கஜேந்திரகுமார் எம்.பி:- நான் சட்ட முறைமைக்கு அமையவே பேசுகிறேன். நீங்கள் ரோமானிய பிரகடனத்தை பாருங்கள். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டை ஏன் உங்களால் விசாரிக்க முடியாதுள்ளது. முதலில் அதனை செய்யுங்கள்.

ஹர்ஷ டி சில்வா :- நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.அது பாரதூரமான வார்த்தை கஜேந்திரகுமார் எம்.பி:- இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் மிகவும் பொறுப்புடன் இந்த இடத்தில பயன்படுத்துகிறேன். உங்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், எதிர்க்கட்சி தலைவரும் ஆளும்கட்சி தலைவரும் வாருங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவோம். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதா இல்லையா என விவாதிக்கலாம். அதற்கு ஏன் அஞ்சுகிறீர்கள்.

இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் :- இன்றைய விவாதத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத காரணிகளை பேச வேண்டாம்.

கஜேந்திரகுமார் எம்.பி:- நீங்கள் எனது உரையை தடுக்க வேண்டாம் என்றார்.

இதன்போது சபையை வழிநடத்திய அஜித் ராஜபக் ஷ எம்.பி :- நீங்கள் விடயத்திற்கு பொருத்தமாக பேசுங்கள் அப்போது இந்த குழப்பங்கள் எதுவும் எழாது. நீங்கள் பொருத்தமில்லாத விடயங்களை பேசுவதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்காக அதிக நேரத்தை வழங்க முடியாது என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சாந்த பண்டார எம்.பி :- கஜேந்திரகுமார் எம்.பியின் இனப்படுகொலை என்ற வார்த்தை பிரயோகம் பொருத்தமானதல்ல,இலங்கையில் அவ்வாறன ஒரு இனப்படுகொலை இடம்பெறவில்லை, இனியும் இடம்பெறாது. எனவே அவரது வார்த்தையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா :- பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாம் பேசும் வார்த்தைகள் என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும்.

ஒருவர் பேசியதை நீக்க வேண்டுமென இன்னொருவர் கூற முடியாது. ஆனால் இவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்துவது சரியா தவற என்பதை வார்த்தைகளை பயன்படுத்தும் உறுப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும்.

எனவே அடுத்த தடவை நீங்கள் பேசும் போது அவதானமாக பேசுங்கள் என்றார். இதனை அடுத்து ஆளும் கட்சியில் பலர் கஜெந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கருத்துடன் முடன்பட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பினை தலைமை ஏற்று நடத்த இந்தியா முன்வர வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்

இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் இலங்கையின் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் உச்சளவு அதிகாரப் பகிர்வுடன் ஆட்சி செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு முனையம் தொடர்பான விடயத்தில் அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து தௌிவுபடுத்தும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றினை தமிழ் மக்களே தெரிவு செய்யும் வகையில், சர்வதேச சமூகத்தினால்
வடக்கு, கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியா தலைமை ஏற்று செய்வதற்கு முன்வர வேண்டும் எனவும் சி.வி விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு முனையம் விடயத்தில் அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இந்தியாவை ஏமாற்றி வந்ததன் தொடர்ச்சியாகவே இம்முறையும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் இது நடைபெறும் என தாம் எதிர்ப்பார்த்தாலும் முன்கூட்டியே அது நிகழ்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுக்கு மின் திட்டங்களை ஆரம்பிக்க வழங்க இருப்பதாக வௌியாகியுள்ள செய்தி மிகவும் பாரதூரமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

கிழக்கு முனையம் விடயத்தில் நடந்ததே எதிர்காலத்தில் 13 ஆவது அரசியல் திருத்த விடயத்திலும் நடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்தத் தீர்விற்கும் இந்த நிலைமையே ஏற்படும் என்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.