சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை முற்று முழுவதுமாக எம்மால் நிராகரித்துவிட முடியாது.

இருப்பினும் இந்த காணொளியை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என கூறவும் முடியாது. எனினும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே சிறந்தது. விசாரணை நடத்துமாறும், உண்மையை வெளிக்கொண்டுவருமாறும் இங்குள்ளவர்களுக்கு கூறினாலும் அது சரிவராது.

மேலும் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை.

இதனை என்னால் அடித்துக் கூறலாம். விசாரணைகள் வெற்றியடையவில்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் சனல் 4 காணொளி தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு கூறியுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை கூறுவது போன்று சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டால் சிறந்தது என நான் நினைக்கிறேன் என்றார்.

Channel 4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் குழு நியமனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் காணப்படும் அனைத்து தகவல்கள் குறித்தும் முழுமையாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Channel 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சட்ட மா அதிபர் ஒருவர் வௌியிட்டுள்ள கருத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டுவதற்குமான சாதகமான நடவடிக்கையாக ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாசகார ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் ஒருவர் இதேபோன்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளமையானது, எரியும் நெருப்பில் வைக்கோல் சேர்ப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அவற்றை விரைவாகத் தீர்ப்பதற்காக, இந்த குழப்பநிலையை ஏற்படுத்தும் விதமான கருத்துகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தற்போதைய நிலைமையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான தெளிவான புரிதலை சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதன் ஊடாக, சரியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு வழிசமைப்பதே இந்த விரிவான செயன்முறையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தின் பாதகமான விளைவுகளுடன் முழு நாடும் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது உண்மையை வெளிப்படுத்தவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கையாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வலியுறுத்தியுள்ளது.

உண்மையைக் கண்டறிவதற்காக இந்த முக்கியமான விசாரணைகள் நடத்தப்படும் அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்து அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும். -ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

தமிழ் இன படுகொலை தொடர்பாக குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வவுனியா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக சனல் 04 வெளியிட்ட தகவலானது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. இன்று தென்னிலங்கையில் உள்ளவர்களும், கர்தினால் இவ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினை வைக்கின்றனர்.

நாங்களும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு இதனை கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், விரைவாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

மேலும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தியே இவ்விடயமானது தற்போது பேசுபவருளாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி காலத்திலே தமிழ் மக்களினை படுகொலை செய்ததுடன் மனித உரிமை மீறல்கள்ளையும் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஐநா சபை கண்டனம் தெரிவித்ததுடன் இது தொடர்பான பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கையினையும் முன்வைத்திருந்தனர்.

மேலும் இவ் விடயம் தொடர்பாக கடந்த காலங்களிலே சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் அல்லது சர்வதேச நீதித்துறையை சார்ந்தவர்கள், சர்வதேச வழக்கறிஞர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். ஆனால் இச்சந்தர்ப்பத்தில் குரல்கொடுக்காத எதிர்க்கட்சித்தலைவர், கர்தினால் மற்றும் ஏனையவர்கள் உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துவது உண்மையிலே கேவலமான விடயமாகும்.

கர்தினால் உட்பட அனைவரும் மனச்சாட்சியுடன் இந்நாட்டில் புரையோடிப்போய்யுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என எண்ணி இருந்திருந்தால், கடந்த காலங்களிலே மகிந்த ராஜபக்சவின் குடும்பம் மேற்கொண்ட அட்டூழியங்கள், மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல்கொடுத்திருந்திருக்கலாம் என தெரிவித்தார்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்தியிருந்தால் ஈஸ்டர் படுகொலை தடுக்கப்படிருக்கும்: சபா குகதாஸ்

2009 முள்ளிவாய்க்காலில் மிகக் கோரமாக நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற சந்தர்ப்பம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (09.09.2023) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச விசாரணை

ஈஸ்டர் படுகொலைக்கான ஆதாரம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியாகிய பின்னர் நாடாளுமன்றத்தில் பல குரல்கள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மேலேழுந்தன.

இது ஒருவகையில் சிலரது அரசியல் உள் நோக்கமாக இருந்தாலும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு தமிழர்களிடம் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் தென்னிலங்கையில் கர்தினால் உட்பட தற்போது கதறும் தரப்புக்கள் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கின்றனர்.

அன்று முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய அதே தரப்பினர் தான் ஈஸ்டர் படுகொலையை அரங்கேற்றினார்கள் என்பது தற்போது நிரூபணமாகி விட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

ஆகவே அன்று முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச விசாரணை மேற் கொண்டு நீதி வழங்கியிருந்தால் உயிர்த்த ஞாயிறு படுகொலை நடந்திருக்க மாட்டாது.

எதிர்வரும் காலத்திலும் வேறு வடிவங்களில் ஆட்சிக் கதிரையைப் பிடிக்க இப்படியான நிகழ்வுகள் அரங்கேற்றப்படலாம்.

அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாக இருந்தால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

கர்தினால் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இன்று கூவும் தென்னிலங்கைத் தரப்புக்கள் முதலில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை கோருங்கள் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு தானாகவே நீதி கிடைக்கும் அத்துடன் தங்கள் சுயலாபத்திற்காக மக்களை கொன்றெழிக்கும் கலாசாரத்திற்கு அதனை மேற் கொள்ளும் சூத்திரதாரிகளின் செயற்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை போன்றே இதுவும் அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டங்களை கருத்தில் கொண்டு, வரலாற்று மாற்றத்தின் சவால்களை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நீதி, நியாயம், உண்மை என்பன நிறைவேற்றப்படாமல் வேதனையுடன் வாழ்ந்து வருவதாக உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்று அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறைக்காக உண்மையான பின்னணியை தயார் செய்ய வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சுதந்திர தின எதிர்ப்பு வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ரெலோ தலைவர் செல்வம் எம்.பிக்கு பிணை

சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிசாரினால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன் எம்.பி புதன்கிழமை (06.09.2023) மதியம் யாழ்ப்பாணம் நீதாவன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான பேரணியில் பங்களித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ் வழக்கு கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட போது நீதிமன்றில் பிரசன்னமாகாமைக்காக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிரேஷ்ட சட்டத்தரணி என். சிறிகாந்த ஊடாக மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட மன்று ஆட்பிணையில் செல்வதற்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு அனுமதித்திருந்தது. இவ்வழக்கில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் பிணை ஒப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

‘சனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்ட ஆவணத்தொகுப்பையடுத்து பேராயர் விடுத்துள்ள வலியுறுத்தல்

பிரித்தானியாவின் ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இந்த விசாரணை சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட‍ வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள ‘செனல் 4 ‘ செய்திச் சேவை ஆவணத் தொகுப்பில் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்துமாறும் பேராயர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின் ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பொன்று நேற்றைய தினம் கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போதே கர்தினால் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் திட்டமிட்ட அனைத்து தரப்புக்களையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று இதுதொடர்பாக உரையாற்றிய அவர், புகலிடம் கோரி வெளிநாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அஸாத் மௌலானா, புகலிடக் கோரிக்கைக்காகவே இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள், மதகுருமார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சஹ்ரானுக்கு நெறுக்கமான தரப்பினர் சிறையிலும், பிணையில் வெளியிலும் இருக்கும் நிலையில், இவர்கள் அனைவரையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா முற்படுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றில் இதுதொடர்பாக பேசும் அரசியல்வாதிகள், மீண்டும் அச்சமானதொரு சூழலை நாட்டில் ஏற்படுத்தவே முற்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே இவ்விடயம் சபையில் விவாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து தனது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை இல்லாது செய்யும் முயற்சியாகவே, தன்மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் சாடினார்.

அத்தோடு, சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படுமாக இருந்தால், அஸாத் மௌலானாவையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

செனல் 4 தொலைக்காட்சியின் சர்ச்சைக்குரிய வீடியோ வௌியானது!

பிரித்தானியாவின் சேனல் 4 நேற்று (05) இரவு இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான 50 நிமிடங்கள் நிகழ்ச்சியில், பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா பிரதானமாகத் தகவல்களை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் அசாத் மௌலானா.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனத்தை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளன.

காணொளியில் பெரும்பாலான பகுதிகள் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.

பிள்ளையான் குழுவுடன் இணைந்து ட்ரிபொலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை அன்றைய அரசாங்கம் உருவாக்கி, ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை மௌனமாக்குவதற்கும் பயன்படுத்தியதாக அசாத் மௌலானா இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது, ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களுக்காக கானியா பிரான்சிஸ் , வௌ்ளை வேன் குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி நிஷாந்த சில்வா, வௌ்ளை கொடி வழக்கின் சாட்சியாளராக இருந்த ஊடகவியலாளர் பிரட்ரிக்கா ஜேன்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த காணொளியில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும் இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் இதில் சஹ்ரான் உள்ளிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் 6 பேர் கலந்து கொண்டதாக அசாத் மௌலானா தெரிவித்தார்.

அந்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஷ் சலே, ராஜபக்ச ஆட்சிக்கு வர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சேனல் 4 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிமிஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயார்’, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில், சேனல் 4 காணொளியில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் கூறப்படும் சந்திப்பின் போது தாம் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலின் போது இந்தியாவில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தொடர்புடைய அறிக்கை நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பென் டி பியரிடம் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே குற்றச்சாட்டை நிராகரித்தார் – செனல் 4

பிரித்தானியாவின் செனல் 4 இன்று (05) ஒளிபரப்பவுள்ள இந்நாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லர் வௌியிடப்பட்டுள்ளது.

இதன் முழு காணொளி இங்கிலாந்து நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஔிபரப்பப்படவுள்ளது.

குறித்த ஆவணப்பட நிகழ்ச்சி தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஈஸ்டர் தாக்குதலின் குண்டுதாரிகளுக்கும் இடையில் 2018ஆம் ஆண்டு சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தி டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆதாரம் அமைந்துள்ளது.

இன்று வெளியான ட்ரெய்லரில், தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கேட்டதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் சைனி மௌலவியை சந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரானின் சகோதரர் என்பதை பின்னர் தான் கண்டுபிடித்ததாக அசாத் மௌலானா கூறினார்.

கூட்டத்தின் முடிவில் சுரேஷ் சலே தன்னிடம் வந்து ராஜபக்சக்கள் நாட்டில் பாதுகாப்பின்மையை உருவாக்க விரும்புவதாகவும் அதன் மூலம் தான் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வர முடியும் என்றும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவோ அல்லது சிவனேஷ்துரை சந்திரகாந்தனோ பதிலளிக்கவில்லை என்றும் சுரேஷ் சலே இது தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என்றும் செனல் 4 கூறுகிறது.

சஹ்ரான் உள்ளிட்ட குழுவுடன் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் தான் மலேசியாவில் இருந்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்தபோது இந்தியாவில் தங்கியிருந்ததாகவும் சலே கூறியதாக செனல் 4 தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized