இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் – கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் இலங்கை தொடர்பான தீர்மானத்தை உருவாக்குவதில் கனடா முக்கிய பங்கை வகிக்கின்றது என கனடா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் கனடாவை சேர்ந்த குழுக்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வு குறித்தும் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளிற்கு பொறுப்புக்கூறுவதில் தொடர்ச்சியாக தோல்வியேற்படுவது குறிpத்த எங்கள் கரிசனையை தெரியப்படுத்துவதற்காக உங்களிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்,என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன

கனடா பிரதமருக்கான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தரப்பினரும் இலங்கையை ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டிய அவசர நிலைமை தொடர்பில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளை தொடர்புகொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த அமர்வில் ஐநா தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து மதிப்பிடப்படும். 2021 ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தபடி மனித உரிமைகளிற்கான ஐக்கியநாடுகளின் நான்கு முன்னாள் ஆணையாளர்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்ட 9 அறிக்கையாளர்களும் இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரைத்தபடி இலங்கயை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் வலுவான தீர்மானத்தை 13 வருடங்களி;;ற்கு முன்னர் குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக சமர்ப்பிக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கை எதுவும் எங்கள் மக்கள் எதிர்கொண்ட பாரிய அநீதிக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிடும் என கனேடியர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கைகள் இலங்கை அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் எந்த தயக்கமும் இன்றி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக பாரிய அநீதிகளில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்தும்.

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர் சற்று முன்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்ணம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதோடு குறித்த கருத்துக்கு கடும் கண்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை குறித்து இந்தியா கடும் அதிருப்தி13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய இந்தியா, மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

அதன்படி அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்களவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனையை வெளிப்படுத்தினார்.

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்ட இந்தியப்பிரதிநிதி, அதன்மூலம் அனைத்து இலங்கையர்களாலும் சுபீட்சமான எதிர்காலத்தை முன்னிறுத்திய தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்றும், எனவே இவ்விடயத்தில் இலங்கை உடனடியானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம் தொடர்பில் கடும் அதிருப்தி : இலங்கைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சீனா, ரஷ்யா, மாலைதீவுகள்

பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம், அமைதிப்போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளடங்கலாக மிகமோசமடைந்துசெல்லும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய உறுப்புநாடுகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிசெய்வதிலும் மிகச்சொற்பளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டின.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று (12) திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் வாசிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

நெதர்லாந்து

அதன்படி பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் இலங்கை அடைந்துள்ள தோல்வி மற்றும் சிவில் அரச செயற்பாடுகளில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ அல்லது புதிய அரசாங்கத்தின் மூலமோ இன்னுமும் தீர்வு காணப்படாமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்திய நெதர்லாந்து நாட்டின் பிரதிநிதி, தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களுக்குத் தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதும் ஊழலை இல்லாதொழிப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பின்லாந்து

அதேவேளை அண்மையில் மாணவ செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதற்குப் பயங்கரவாத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய பின்லாந்து நாட்டின் பிரதிநிதி, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வதற்குப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தினார். மேலும் தற்போது இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதை ஏற்பதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் இந்நெருக்கடிகள் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் மற்றும் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக முடிவிற்குக்கொண்டுவரப்படுவதுடன் அச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுவிஸ்லாந்து

இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் விளைவாகப் பெருமளவானோர் அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கும் முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் சுவிஸ்லாந்து கரிசனையை வெளிப்படுத்தியது.

அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மக்கள் மிகநீண்டகாலமாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்திவருகின்ற போதிலும், இவ்விடயத்தில் இன்னமும் மிகச்சொற்பளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய சுவிஸ்லாந்து பிரதிநிதி, அதுகுறித்தும் அமைதிப்போராட்டக்காரர்கள்மீதான தாக்குதல்கள் குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பிரான்ஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றும், குறிப்பாக நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன் சிவில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி வலியுறுத்தினார்.

ஜப்பான்

பயங்கரவாத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்ட திருத்தங்களை வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான் பிரதிநிதி, இருப்பினும் நாட்டில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு மேலும் பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

ரஷ்யா

நல்லிணக்கத்தை உறுதிசெய்வதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்திருப்பதாகவும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் பேரவையில் ரஷ்யா சுட்டிக்காட்டியது.

சீனா

மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்ப்பதிலும் இலங்கை முன்னேற்றகரமான வகையில் செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய சீனப்பிரதிநிதி, இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றைத் தாம் வலுவாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் அதற்கேற்றவாறு அமையவில்லை என்றும், இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை எந்தவொரு தரப்பினரும் தமக்குச் சாதமான முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு முயற்சிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அமெரிக்கா

சட்டத்தின் ஆட்சி, நீதியை நாடுவதில் அனைவருக்கும் சமத்துவமான வாய்ப்பு, முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை என்பன ஜனநாயகக்கட்டமைப்பின் முக்கிய தூண்களாகும் என்றும், எனவே இலங்கையானது முதலாவது நடவடிக்கையாக நாட்டில் நீண்டகாலமாக நிலவும் ஊழலையும் தண்டனைகளிலிருந்து விலக்கீடுபெறும் போக்கையும் முடிவிற்குக்கொண்டுவரவேண்டும் என்று அமெரிக்காவின் பிரதிநிதி வலியுறுத்தினார்.

பிரிட்டன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஃ1 தீர்மானத்திற்கு அமைவாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகச்சொற்பளவிலான முன்னேற்றங்களே அடையப்பட்டிருப்பதாகக் கரிசனை வெளியிட்ட பிரிட்டன், கடந்த 2020 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டவாறு உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று உருவாக்கப்படாத நிலையில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தியது.

கனடா

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மோசமடையச்செய்யும் என கனடா அதன் கரிசனையை வெளிப்படுத்தியது.

Posted in Uncategorized

ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி!-ரெலோ பேச்சளா் சுரேந்திரன் செவ்வி

இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.

புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து முக்கியமாகச் செயற்பட்டுவரும் ரெலோ அமைப்பின் பேச்சாளா் சுரேந்திரன் குருசுவாமி உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு முக்கிய தகவல்களைத் தருகின்றாா்.

கேள்வி – இலங்கை தொடா்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது. இந்த அறிக்கை தொடா்பான உங்களுடைய கருத்து என்ன? இதன் முக்கிய அம்சங்களாக நீங்கள் எதனைக் கருதுகின்றீா்கள்?

பதில் – இம்முறை மிக விபரமான ஒரு அறிக்கையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த மாா்ச் மாதம் கூட 11 பக்க அறிக்கை ஒன்றை அவா் வெளியிட்டிருந்தாா். கடந்த செப்டம்பா் மாதத்திலிருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய நிலையில் ஐந்து கட்சிகளின் சாா்பில் அறிக்கையிட்டிருந்தோம். அதற்குப் பின்னா் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளா் அலுவலகத்தின் உத்தியோகஸ்த்தா்களோடும் நாம் தொடா்ச்சியாக கலந்துரையாடியிருந்தோம். அதன் பிரதிபலனாக மாா்ச் மாத அறிக்கையில் பல விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த முறை உயா் ஸ்தானிகா் உத்தியோகபுா்வமாக அறிக்கையாக வெளியிட்டுள்ளாா்.

குறிப்பாக இன ரீதியான வேலைத் திட்டங்கள் வடக்கு கிழக்கில் நடைபெறுவது. மதம் சாா்ந்து மொழிசாா்ந்து மேலாதிக்கத்துடன் நடந்துகொள்வது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்துாா் மலை விவகாரம் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அங்கு மக்கள் எதிா்கொள்கின்ற இராணுவ ஒடுக்குமுறைகள், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்படுவோரின் பிரச்சினைகள் என்பவை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவா்கள் எதிா்கொள்ளும் பிரச்சினைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விளைவுகள் என நாம் அறிக்கையிட்ட பல உள்ளடக்கப்பட்டிருப்பதை காணமுடிகின்றது.

அதேபோல பொறுப்புக்கூறலுக்கான உள்ளக பொறிமுறை தோல்வியடைந்திருக்கின்றது என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஜனாதிபதியை சந்தித்தபோதும் இதனை நாம் கூறியிருந்தோம். சா்வதேச பொறிமுறை ஒன்றுக்கு அரசாங்கம் இணங்காவிட்டால் இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணமுடியாது என்பதை நாம் வலியுறுத்தியிருந்தோம். இதனைவிட இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களையும் ஆணையாளரின் அறிக்கை குறிப்பிடுகின்றது. மாா்ச் 21 ஆம் திகதிய அறிக்கைக்கு மேலதிகமாக இவற்றை அவா் சுட்டிக்காட்டியிருக்கின்றாா்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை இதில் அவா் ஒட்டுமொத்தமாக அறிக்கையிட்டிருப்பதும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதில் சம்பந்தப்பட்டவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை அவா் முதல் தடவையாக குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது. இதனை ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகவே நாம் பாா்க்கிறோம்.

கேள்வி – இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் இலங்கை தொடா்பாக நிறைவேற்றப்படவிருக்கும் தீா்மானத்திலும் பிரதிபலிக்கும் என எதிா்பாா்க்கின்றீா்களா?

பதில் – கடந்த முறை ஆணையாளா் தனது அறிக்கையில் சா்வதேச நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பொறிமுறையின் அடிப்படையில் நாடுகள் குற்றவாழிகளைக் கைது செய்ய வேண்டும் அவா்கள் மீது வழக்குத தொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். அந்த விடயம் பின்னா் பேரவையின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டது. இதேபோல ஆணையாளா் குறிப்பிட்ட சாட்சியங்களைத் திரட்டுதல் என்ற விடயமும் பின்னா் பேரவையின் தீா்மானத்தில் உள்வாங்கப்பட்டது. சா்வதேச குற்றவியல் நீதின்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற அவரது பரிந்துரை பேரவையின் தீா்மானத்தில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், இம்முறை அவா் தெரிவித்திருக்கும் பல விடயங்கள் பேரவையின் பிரேரணையில் உள்வாங்கப்படும் என எதிா்பாா்க்கிறோம். அதற்கான கோரிக்கையை மனித உரிமைகள் பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து முதல் தடவையாக அனுப்பிவைத்துள்ளோம். தமிழ்த் தரப்பினா் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பதால், அது பிரேரணையில் உள்வாங்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்பு இருக்கிறது.

கேள்வி – அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஜெனீவாவுக்கு சென்றுவிட்டாா்கள். முக்கிய சந்திப்புக்களை அவா்கள் அங்கு முன்னெடுக்கின்றாா்கள். தமிழா் தரப்பின் நகா்வுகள் எவ்வாறுள்ளன?

பதில் – அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனீவாவுக்குச் செல்வதற்கு முன்னரே மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அங்கத்துவ நாடுகளுக்கும் ஓகஸ்ட் மாத முற்பகுதியிலேயே எங்களுடைய கோரிக்கைகளை நாங்கள் அனுப்பிவைத்திருக்கின்றோம். அதில் மனித உரிமைகள் பேரவை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையை பாரப்படுத்த வேண்டும் என்பதை நாம் தெளிவாகக்குறிப்பிட்டிருக்கின்றோம். அங்கு சென்றால் வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படும் என அவா்கள் தெரிவித்தமைக்கு, வடகொரியாவையும், சூடானையும் நாம் உதாரணம் காட்டி இவை அனைத்தும் பாதுகாப்புச் சபையின் ஊடாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் – நீங்கள் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற அழுத்தத்தை நாம் பிரயோகித்திருக்கின்றோம். இப்போது வீட்டோ அதிகாரம் பயன்படுததப்படும் எனப் பேசுவதை பிரதான நாடுகள் நிறுத்திவிட்டன. இதனை ஒரு பெரிய வெற்றியாக நாம் கருதுகின்றோம்.

இதனைத்தாண்டி வெளிநாடுகளில் அந்தத்ந நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுக்களுடனும், இங்கிருக்கும் அவா்களுடைய பிரதிநிதிகளுடனும் நாம் நேரடியாக சந்திக்கின்றோம். அத்துடன் மெய்நிகா் சந்திப்புக்கள் சிலவற்றையும் மேற்கொள்கின்றோம். பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள லிஸ் அம்மையாருடனும் இணைய வழியில் நாம் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றோம். நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பற்றில் அவா் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளாா். இதனைவிட புலம்பெயா்ந்த உறவுகளும் இது போன்ற ஆக்கபுா்வமான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனா். அந்த வகையில் அரச தரப்பினா் ஜெனீவா செல்வதற்கு முன்னதாகவே எமது தரப்பு முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன.

கேள்வி – சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்வதுதான் உங்கள் இலக்கு எனக் கூறுகின்றீா்கள். இதற்காக உங்களிடமுள்ள உபாயம் என்ன?

பதில் – இலங்கை குறித்த பிரதான நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் அங்கத்துவ நாடுகளாக இருக்கின்றன. அதாவது அமெரிக்கா, பிரித்தானியா, ஜோ்மனி ஆகிய நாடுகள் பிரதான நாடுகளாக தொடா்ந்தும் இருக்கின்றன. இவை பாதுகாப்புச் சபையிலும் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. அதனால், இந்த நாடுகளால் பேரவையில் முன்னெடுக்கப்படும் தீா்மானங்கள் பாதுகாப்புச் சபையினாலும் முன்னெடுக்கப்படும்.

புலம்பெயா் அமைப்புக்களின் ஊடாக அந்த நாடுகளில் இருக்கக்கூடிய அரசாங்கங்கள் மற்றும் கட்டமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமாக இந்தக் கோரிக்கைகளை நகா்த்த முடியும். தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இவ்வாறு அழுத்தம் கொடுத்தால் அது தாக்கத்தை ஏற்படுத்தும். தாயகத்தில் இருக்கக்கூடிய கட்சிகள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கைகளை முன்வைப்பதும், புலம்பெயா்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புக்கள் அங்குள்ள அரசுகளிடம் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதன் மூலமாக இந்த விடயத்தை நகா்த்துகின்ற பொறிமுறையைத்தான் நாம் கையாள்கின்றோம்.

கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவாா்த்தை ஒன்றை கடந்த வாரம் நடத்தியிருந்தீர்கள். ஜெனீவா கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரணிலை காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சி இது என்ற குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் – இது ஆதாரமற்ற – நியாயமற்ற ஒரு குற்றச்சாட்டு. சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டும் என்பதில் கடுமையாக உழைத்தது எமது கட்சிதான். சா்வதேச ரீதியிலும் அதற்கான ஆதரவை நாம் திரட்டியிருந்தோம். இந்த விடயத்தில் அதிகளவுக்குத் தீவிரமாகச் செயற்பட்டவா்கள் நாங்கள். ரணிலைச் சந்தித்தது அவரைக் காப்பாற்றுவதற்கான சந்திப்பல்ல என்பதை நீங்கள் அவதானித்திருப்பீா்கள்.

இந்தச் சந்திப்பின் போது பல விடயங்களை நாங்கள் கோரியிருந்தோம். அரசியல் கைதிகள் விடயத்தைப் பொறுத்தவரையில் அது தொடா்பான ஆதாரபுா்வமான ஆவணத்தை நாம் கையளித்தோம். இதேவிடயத்தை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கயிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்தைப் பொறுத்தவரையில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலமாக இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காண முடியாது என்பதை நாம் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். அதனை ஆணையாளா் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றாா். மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலும் அது நிச்சயமாக இடம்பெறும்.

இவற்றைவிட காணி அபகரிப்பு, இராணுவப் பிரசன்னம் போன்ற விடயங்களையும் நாம் அவரிடம் பிரஸ்தாபித்திருந்தோம். அந்த விடயங்கள் கூட ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

ஆக, ரணிலைப் பாதுகாப்பதற்காக அல்ல. அவரை ஐ.நா.வில் மேலும் மாட்டிவிடுவதற்கான ஒரு தந்திரோபாய நகா்வாகத்தான் நாம் அவரைச் சந்தித்திருந்தோமே தவிர, அவரைப் பாதுகாப்பதற்கல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

Posted in Uncategorized

46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித பேரவையின் 51 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் தேசிய நேரத்திற்கு அமைய 12.30 அளவில் அமர்வு ஆரம்பமாகியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி ஆணையாளர் நடா அல் நஷீப் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது சபையில் கருத்துரைக்கையிலேயே 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறுவதாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள 46/1 பிரேரணை கடந்த வருடம் மார்ச் மாதம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்ததோடு 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில், இலங்கை தொடர்பிலான ஐ.நாவின் 46/1 தீர்மானத்தை தாம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த சபையில், இனியும் தாமதிக்காது இலங்கையை பொறுப்புக்கூற வைக்க ஐ.நா பாகாப்பு சபைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடுகடந்த அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற பெண்களை மிகவும் மோசமாக சோதனையிட்ட அதிகாரிகள் :ரெலோ தலைவர் செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களான பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்து அவர்களை அசிங்கப்படுத்தியதுடன், இனவாதமாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கைதிகள் தினத்தை முன்னிட்டு தங்களது உறவுகளை சிறைச்சாலைகளில் பார்வையிடச் சென்ற சொந்தங்கள் மிக மோசமான முறையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள் மிகவும் வன்மையபான முறையில் சோதிக்கப்பட்டுள்ளார்கள்.

அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்கள். சிறைச்சாலையில் உள்ள தேவாதாசன் என்பரை பார்க்கச் சென்ற அவரது மகளை மிக மோசமாக பரிசோதனை செய்த நிலையில் அந்த சகோதரி அதற்கு எதிர்ப்பை காட்டிய போது அவர்கள் சிங்களத்தில் இது எங்களது சிங்கள நாடு எனக் கூறியுள்ளார்கள். மிகவும் இனவாதத்தோடு மோசமாக சிறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளார்கள்.

சிறைச்சாலை தினம் என்பது எல்லோரும் வந்து பார்வையிடும் ஒரு தினம். நவீன முறையில் பல சிறைச்சாலைகளில் பரிசோதனை முறைகள் உள்ளன. அதைவிடுத்து இனதுவசத்தோடு மிகவும் மோசமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளோம்.

இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய தீர்வினையும், அவர்களது உணர்வுகளையும், சரி செய்வது என்பது கேள்விக் குறிசியாகவே உள்ளது. ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேணட்டும் எனக் கூறுகின்றார். ஆனால் அதற்கு நேருக்கு மாறாக பல விடயங்கள் நடந்து வருகின்றது.

நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகள் விடுதலை கேள்விக்குறியாகவுள்ளது. அவர்கள் தற்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது ஆதரவு உண்டு. அவர்களது விடுதலைக்காக நாங்கள் முயற்சிப்போம். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது.

சிறைகைதிகளின் விடுதலை நடைபெறவில்லை. பார்வையிடச் செல்பவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலங்களை அபகரிக்கும் நிலை தொடர்கிறது. பத்திரிகையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேசத்திற்காக குரல் கொடுத்தவர்கள் என பலரை ரிஐடி அழைத்து விசாரணை செய்கிறது. வடக்கு, கிழக்கில் 15 பேருக்கு மேல் அழைக்கப்பட்டுள்ளார்கள். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் உரையாற்றியுள்ளோம். எதற்காக இந்த விசாரணை. இது தேவையற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்ய புலம்பெயர் உறவுகளை முதலீடு செய்ய அழைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வரும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் நொண்டி சாட்டுக்களை சொல்லி அதனை பறிக்கப் பார்க்கிறார்கள். இதனை தமிழ் தரப்பு தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

தமிழ் மக்களை நசுக்கிக் கொண்டிருந்தால் இந்த நாடு பொருளாதாரத்தில் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. எனவே எமது மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மனித உரிமை உயர்ஸ்தானிகரின் உறுதியான அறிக்கைக்கு தமிழ் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடே முக்கிய காரணம்- சுரேந்திரன் ரெலோ

இன்று 12 செப்டம்பர் மாதம் 2022 ஆரம்பித்துள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின் இலங்கை மீதான உத்தியோக பூர்வ வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது.

இவ்வறிக்கையில் கூட்டாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த செப்டெம்பர் 2021ல் இருந்து முன்வைத்து வந்த அநேக விடயங்கள் உள்வாங்கப் பட்டிருந்தன.

உதாரணமாக முக்கிய பிரச்சினைகளாக நாங்கள் சுட்டிக் காட்டி வந்த

– அரச நிறுவனங்கள் திணைக்களங்கள் உட்பட நிர்வாகங்களை இராணுவ மயப்படுத்தல் குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் அரச நிர்வாகம், சட்ட ஒழுங்கு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகமாக ராணுவமே ஈடுபடுவது

– கட்டுமீறிய இராணுவச் செலவீனங்கள், நிதி ஒதுக்கீடுகள்

– குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கும் அதீீத ராணுவப் பிரசன்னத்தை குறைத்தல்

– காணி அபகரிப்பை நிறுத்தி இராணுவ வசமுள்ள காணிகளை விடுவித்தல்

– மொழி மதரீதியான பெரும்பான்மை சிந்தனையோடு செயல் ஆற்றுதல், ஆதிக்க சிந்தனையோடு எழுப்பப்படும் மத சின்னங்கள்

– குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், புனர் வாழ்வழிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரை, புலனாய்வுப் பிரிவுகள், இராணுவம் மற்றும் பொலிஸ் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் பற்றிய
விடயங்களுடன் மேலும் பல விடயங்களை நாம் அறிக்கையிட்டு இருந்ததை உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் உள் வாங்கியுள்ளார். மிக விபரமான உறுதியான அறிக்கையாக அமைந்துள்ளமை வரவேற்கத் தக்கது.

ஒருமித்த நிலையில் தமிழ் தரப்பினர் அறிக்கை சமர்ப்பித்ததை ஐ நா கவனத்தில் கொண்டுள்ளதை நாங்கள் அவதானிக்க வேண்டும். நாம் எழுதிய கடிதங்கள் ஐநா வினால் கரிசனை கொள்ளப்பட மாட்டாது என்றும் ஒரு சிலருடைய கையெழுத்துக்களை மாத்திரம் ஐநா கரிசனை கொள்ளும் என்றும் சிலர் சொல்லிவந்த கருத்தினை இவ்வறிக்கை பொய்ப்பித்துக் காட்டியுள்ளது.

ஐநா என்பது ஒருசிலருக்கோ, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல. அது பாதிக்கப்பட்டவர்கள் உடைய குரலுக்கே செவிசாய்க்கும் என்பதை இவ்வறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.

இப்போது மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் சர்வதேச நீதிமன்றத்திற்கு குற்றவாளிகளைப் பாரப்படுத்த வேண்டும் என்று அனைத்து தமிழ் தரப்பினரும் ஒருமித்த ஒன்றிணைந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை, மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகள் கொண்டுவர இருக்கும் பிரேரணையில், உள் வாங்க வைக்கும் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஒருமித்த நிலையில் தொடர்ந்தும் செயல்படுவது வலுச் சேர்க்கும்.

உயர்ஸ்தானிகரின் அறிக்கை மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட இருக்கும் பிரேரணையில் பெரும் செல்வாக்கு செலுத்தும்.

நாம் கோரி நிற்கும் நீதியை பெற்றுக் கொள்ள, கோரிக்கை முன்வைத்த அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் ஒருமித்து செயலாற்றுவது அவசியம்.

திருக்கோணேஸ்வரத்துக்கு ஆபத்து? Elanadu Editorial

தட்சண கைலாசம் என்று அழைக்கப்படும் இந்துக்களின் வரலாற்றுத் தொன்மைமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உல்லாசத் துறை அபிவிருத்தி என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் தங்களின் ஆக்கிரமிப்பு வேலைத் திட்டங்களை கச்சிதமாக முன்னெடுத்துவரும் தொல்பொருள் திணைக்களமானது தற்போது திருக்கோணேஸ்வரத்தின்மீதும் கண்வைத்துவிட்டது.

இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையோடு தொடர்புகொண்டு ‘ஈழநாடு’ விடயங்களை ஆராய்ந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த விடயத்தை தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவருகின்றது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது, ‘மொட்டு’ அணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அட்மிரல் சரத்வீரசேகரவின் ஆவேச உரை தொடர்பான செய்தியொன்று கண்ணில்பட்டது.

அதாவது, இது சிங்கள- பௌத்த நாடு.

இங்கு தூபிகளை பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெறவேண்டியதில்லை.
அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறானதோர் அச்சுறுத்தும் தொனியில்தான் திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரியும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையிடம் தெரிவித்திருக்கின்றார்.

எங்களுடைய திட்டங்களை அமுல்படுத்த உங்களின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை.
ஒரு தகவலுக்காவே இதனை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

ஒரு காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகரமென்று அழைக்கப்பட்ட திருகோணமலையோ இன்று நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன், கடந்த இரண்டு வருடங்களாகத் திருகோணமலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் சிங்கள தரப்புக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முடிவுகளையும் எவ்வித தடையுமின்றி எடுக்கக் கூடிய நிலையிலிருக்கின்றனர்.

இதற்கப்பால், ஆளுநரின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரிகின்றது.
ஆலய பரிபாலன சபை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, திருகோணமலை அழகான நகரம்.

ஆனால் இன்றோ, இலங்கையிலேயே மிகவும் மோசமான அழகற்ற இடமாக திருகோணமலையே காணப்படுகின்றது என்றவாறு ஆளுநர் தெரிவித்திருக்கின்றார்.
இதன் மூலம் தொல்பொருள் திணைக்களத்தின் திட்டத்தை ஆளுநர் ஆசீர்வதிக்கின்றார் என்பது தெளிவு.
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை மிகவும் உறுதியாக இந்த விடயத்தை எதிர்க்கின்றது.
அதாவது, அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் ஆலயத்துக்கு சொந்தமான 18 ஏக்கர் காணிக்குள் எவ்வித திட்டங்களையும் அனுமதிக்க முடியாது. இது ஒரு புனித இந்து ஆலயம்.

உல்லாசப்பயணம் என்னும் பெயரில் இதன் புனித தன்மையை சீரழிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாதென்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் அரசியல் பலமில்லாத நிலையில், ஆலய பரிபாலன சபை அச்சமடைந்திருக்கின்றது.
இது வெறுமனே திருகோணமலை இந்து மக்களின் பிரச்னை மட்டுமல்ல.

உலகம் தழுவிவாழும் அனைத்து இந்து மக்களின் பிரச்னையாகும்.

எனவே, இந்த விடயத்தில் அனைவரும் உடனடி கவனத்தை செலுத்து வேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு வரலாற்று இந்து ஆலயம் திட்டமிட்டு சிதைக்கப்படுவதற்கு நாம் அனைவருமே உடந்தையாக இருக்கின்றோம் என்னும் வரலாற்று பழியே மிஞ்சும்.

வழமையாக தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல் என்னும் அடிப்படையில் தலையீடுகளை மேற்கொண்டுவந்தவர்கள், இப்போது, நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உல்லாசத்துறை அபிவிருத்தி என்னும் பெயரில் திருக்கோணேஸ்வர ஆலய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

தேர்தலை ஒத்திவைக்க தயாராகிறது அரசாங்கம்

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக பஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தலை ஒத்திவைப்பதற்கு தாம் ஆதரவாக இல்லை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்களின் இறைமைக்கு பாரிய சேதம் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்புவதாகவும் 20ஆம் திகதிக்குப் பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized