யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், மாணவன், மாணவி தற்கொலை முயற்சி!

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழக துறையின் ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்போன்றிக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது.

அந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார்.

அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார்.

அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் மற்றுமொரு பல்கலை கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்.பல்கலைக்கழக பேராசியர், மாணவர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் யாழ்.பல்கலை சமூக மட்டத்தில் அதிருப்தியும் விசனமும் எழுந்துள்ளது.

Posted in Uncategorized

சீனா,இந்தியா எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்?

இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய உளவு அமைப்புகள் கவனித்து வருகின்றன.

இந்த சீன கப்பல் பற்றி சமீப வாரங்களில் மிக அதிகமாகவே சர்வதேச ஊடகங்களும், இந்திய, இலங்கை ஊடகங்களும் செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளன. உண்மையில் அந்த கப்பலில் எத்தகைய வசதிகள் உள்ளன என்பதும், அதன் அறிவியல், தொழில்நுட்ப திறன்களும் முழுமையாக அறியப்படவில்லை.

சீன கப்பலுக்கு நிகரான வசதிகளை கொண்ட கப்பல் இந்தியாவிலும் உள்ளதா என்று பலரும் சமூக ஊடகங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை பகுதியளவில் ‘ஆமாம்’ என்பதே. ஆனால், அந்த கப்பல் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக இல்லை.

சீனாவில் ‘செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ‘யுவான்வாங்-5’ கப்பல், செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறனையும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.

சீனாவின் ‘யுவான் வாங்’ கப்பல் இலங்கைக்கு வந்தது

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?

அதுபோல, இந்தியாவில் கடந்த ஆண்டு கடற்படை சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர் துருவ். இது கடல் பகுதியில் இருந்தபடி இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வடிவங்களில் யுவான்வாங் கப்பல்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள யுவான் வாங் – 5 கண்காணிப்புக் கப்பல்

யுவான்வாங் என்ற சொல்லுக்கு சீன மொழியில் “நீண்ட பார்வை” அல்லது “தூர நம்பிக்கை” என்று பொருள் கூறப்படுகிறது. யுவான்வாங் என்பதற்கு நீடித்த ஆசை என்ற பொருளும் இருக்கிறது. சீன அரசாங்கம், கடல்சார் வான்பரப்பை கண்காணிக்கும் கப்பல்களுக்கு யுவான் வாங் என்று பெயர் சூட்டியிருக்கிறது. அந்த வகையில் யுவான் வாங் ரகத்தில் நான்கு கப்பல்களை சீனா வைத்துள்ளது. ஒவ்வொரு கப்பலிலும் வெவ்வேறு டிஷ்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆன்டனாக்கள், ராடார் மற்றும் ஸ்கேனர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுவான்வாங் 3, யுவான்வாங் 5, யுவான்வாங் 6, யுவான்வாங் 7 என அந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன.

உலக அளவில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவிடம் இதுபோல 23 கப்பல்கள் உள்ளன.

சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஷென்சோ விண்வெளி திட்டத்தின் அங்கமாக அதன் விண்வெளி வீரர்களுக்கு உதவியாக யுவான்வாங் கப்பல்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவதற்காக வடிவமைத்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. அந்த வகையில், 1977ம் ஆண்டிலேயே இந்த ரக கப்பல்கள் தயாரிக்கப்பட்டாலும், அவை தமது சொந்த கடல் பரப்பைத் தாண்டி பிற கடல் பிராந்தியங்களில் இருந்து கொண்டு சர்வதேச செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்க 1986க்குப் பிறகு பயன்படுத்தப்பட்டன. அப்போது யுவான்வாங் 1, 2 ரக கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.

1995இல் யுவான்வாங் 3 ரகத்தில் இரண்டு கப்பல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதன் பிறகு 1999இல் யுவான்வாங் 4 கப்பல் சீன செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007இல் யுவான் வாங் ரகத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரிசையில் யுவான்வாங் 5 மற்றும் 6 ரக கப்பல்கள் ஷென்சோ திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பெருங்கடல்களின் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், யுவான் வாங் கண்காணிப்பு கப்பல்கள் “மூன்று பெருங்கடல்களுக்கு” செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முந்தைய பரிசோதனை முறையிலான ஆய்வுப் பணிகளுக்கு உதவ அனுப்பப்படுகின்றன.

கடல் எல்லைகளைக் கடக்கும் யுவான்வாங் கப்பல்கள்

பாக, மேற்கு பசிஃபிக் பெருங்கடல், தெற்கு பசிஃபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியாவின் மேற்கு இந்திய பெருங்கடல், தெற்கு அட்லான்டிக் பெருங்கடல் ஆகியவற்றுக்கு இந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த ரக கப்பல் முதல் முறையாக 1999ஆம் ஆண்டு நம்பரில் பெருங்கடல்களுக்கு செலுத்தப்பட்டன. அப்போது அதன் முதலாவது, இரண்டாவது வரிசைகள் பசிஃபிக் கடலுக்கு அனுப்பப்பட்டன. யுவான்வாங் 4 ரக கப்பல் இந்திய பெருங்கடலுக்கும் ஆஸ்திரேலியாவின் ஃப்ரெமான்டல் துறைமுகத்துக்கும் அனுப்பப்பட்டது. யுவான்வாங் 3 ரக கப்பல், டர்பனுக்கும் பிறகு அங்கிருந்து அட்லான்டிக் கடல் பகுதிகளுக்கும் அந்த கப்பல் செலுத்தப்பட்டது.

இதில் யுவான்வாங் 4 கப்பல், 2007ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் மீது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அது பயிற்சிக்கான இலக்கு கப்பலாக மாற்றப்பட்டது. 2010இல் நடந்த சோதனையின்போது ஜியாங்யின் துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது டிஎஃப்21 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையின் மூலம் இலக்கு கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.

முன்னதாக, 2007இல் யுவான்வாங் 5 மற்றும் யுவான்வாங் 6 ரக மூன்றாம் தலைமுறைக்கான கப்பல்களை சீன கப்பல் கட்டுமான தொழில் கழகம் உருவாக்கியது. இதில் யுவான்வாங் 5 ரக கப்பல் செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் ஏவுகணை செலுத்தும் கப்பலாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. யுவான்வாங் 6 ரக கப்பல், இன்டர்நெட் சேவைக்கு பயன்படும் கடலடி கண்ணாடி இழை வடம் அமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் அதன் கசிவுகளை தடுக்கும் திறன்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து சுமார் மூன்று லட்சம் பேர் வரை வசிக்கக் கூடிய நகருக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த வரிசையில் யுவான்வாங் 7, யுவான்வாங் 21, 22 ஆகிய கப்பல்கள் உள்ளன. அவை சீன செயற்கைக்கோள் கடல்சார் கண்காணிப்புத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. யுவான்வாங் 21, 22 போன்ற கப்பல்கள், சீனாவின் லாங்மார்ச் ராக்கெட்டுகளை சுமந்து வர பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் நடமாட்டம் மற்றும் சேவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

நோக்கம் என்ன?

இதில், சீனாவின் யுவான் வாங்-5 செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்தான் இப்போது, இலங்கையின் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டுள்ளது. அங்கு அந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பவும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு வார காலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் நீளம் 220 மீட்டர். அகலம் 25.2 மீட்டர். 25 ஆயிரம் டன் பொருட்களை கையாளும் திறன் கொண்ட இந்த கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லமுடியும். பல கப்பல்களில் இடம்பெற்ற வடிவங்களை ஒருசேர தன்னுள் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கிறது.

சீனா சமீபத்திய மாதங்களிலோ வாரங்களிலோ ஷென்ஸோ ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு செலுத்தாத நிலையில், இந்த யுவான்வாங் 5 ரக கப்பல் எந்த நோக்கத்துக்காக பெருங்கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை சீனா விளக்கவில்லை. இது அடிப்படையில் ஒரு போர் கப்பல் கிடையாது. ஆனால், போர் கப்பல்களுக்கு மூளையாகவும் தொழில்நுட்ப ஆற்றலை வழங்கக் கூடியதாகவும் திகழ்கிறது.

அந்த நாட்டைப் பொறுத்துவரை, இதுவொரு வழக்கமான பரிசோதனை அளவிலான கடல் வழி பயணம் என்றே ஆரம்பம் முதல் கூறப்படுகிறது.

இந்தியாவின் துருவ் – சிறப்பம்சங்கள் என்ன?

சீனாவிடம் யுவான்வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக ‘ஐஎன்எஸ் துருவ்’ உள்ளது.

இந்த கப்பல் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் நாட்டுடைமையாக்கப்பட்டது. இது முழுக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டியெழுப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை, என்டிஆர்ஓ, டிஆர்டிஓ ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு இயக்கி வருகிறது.

இந்த கப்பலில் டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன ரேடார் (ஏஇஎஸ்ஏ) சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஸ்கேன் செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது.

ஐஎன்எஸ் துருவ் என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும் திறனையும் துருவ் கொண்டுள்ளது.

சென்சார்கள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ ஆன்டெனாக்களின் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த கப்பலின் எடை 5,000 டன் ஆகும். முதல் முறையாக இந்த கப்பலின் திறன் 2018ஆம் ஆண்டில் விரிவாக சோதிக்கப்பட்டது.

இந்த கப்பலில் இருந்து 14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க முடியும். இது எதிரி ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும் உதவுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை கூறுகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.725 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது பற்றிய அலுவல்பூர்வ தகவல்களை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

இத்தகைய வசதிகளுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

ஒப்பீட்டளவில் சீனாவின் யுவான்வாங் தொடர் வரிசை கப்பல்களுக்கு இது நிகரில்லை என்றாலும் தற்போது இலங்கை வந்துள்ள யுவான்வாங் 5 ரக கப்பலில் உள்ள அதே நவீன செயற்கைக்கோள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளை துருவ் கப்பல் கொண்டுள்ளது. துருவ் ஒரு போர் கப்பல் கிடையாது. அது போர் கப்பல்களுக்கும் இந்திய பாதுகாப்புத்துறைக்கும் உதவும் வகையிலான தொழில்நுட்ப ஆதாரவை மட்டுமே வழங்கும்.

BBC

புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! ரெலோ சபா குகதாஸ்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு புதியவை அல்ல அத்துடன் இந்த தடை நீக்கம் நிரந்தரமானதும் அல்ல இதனை அத்தனை தமிழர் புலம்பெயர் அமைப்புக்களும் புரிந்து கொள்ள வேண்டும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் நிரந்தர தடை நீக்கம் கிடைக்கும் அதுவரை மாறி மாறி வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக தடை போடுவார்கள் தடை நீக்குவார்கள்.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் சர்வதேச அரங்கில் தங்களை நம்ப வைப்பதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ளுதல் அதன் அடிப்படையில் தான் உள் நாட்டிற்குள் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக இருக்கும் போது அவற்றுள் கரிசனை செலுத்தாது புலம்பெயர் அமைப்புக்களை தடை நீக்க முன் வந்துள்ளது.

தடை நீக்கத்தின் பின்னர் உள் நாட்டில் சிங்கள ஆட்சியாளர் பலரின் இனவாத கோரமான மன வெளிப்பாடுகள் வெளிக்கிம்பி உள்ளன அவை இனக் குரோத சிந்தனையில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்கின்றது.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை தான் பேரப்பலத்தை உறுதி செய்ய முடியும் இல்லாவிட்டால் இலங்கை ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பேரப்பலத்தை அழித்து விடுவார்கள் கடந்ந நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்ததை நல்ல பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை மறந்தால் சர்வதேச நீதிப் பொறிமுறை கால நீடிப்பு என்ற கட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு நீர்த்துப் போகும் அபாயத்தையே உருவாக்கும்.

பொருளாதார மீட்சியால் மட்டும் இலங்கையை நிரந்தர அமைதியான நாடாக மாற்றிவிட முடியாது இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை ராஐதந்திரமாக கொண்டு காய்நகர்த்த ஒற்றுமையாக முன்னெடுக்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தயாராக வேண்டும்.

இலங்கை – இந்தியா ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் : இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது – ஜனாதிபதி ரணில்

இலங்கை மற்றும் இந்தியா என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவை இரண்டும் ஒரே குணாம்சங்களைக் கொண்ட நாடுகளாகும். எனவே இவ்விரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி , அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில் ,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுவது பொதுவான குணாம்சங்களாகும். இரு தரப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். எனவே இரு நாடுகளுக்கும் தனியான பயணம் இல்லை.

வரலாறு இந்தியாவையும் இலங்கையையும் ஒன்று சேர்த்திருப்பதால் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடான இலங்கை, உலக வல்லரசாக முன்னேறி வருகின்ற இந்தியாவின் வகிபாகத்தை அவதானித்துக் கொண்டிருக்கிறது.

எனவே அவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் திறன் அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். இராமாயணத்தைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதோடு ஒரு சில சிறிய வேறுபாடுகள் மாத்திரமே உள்ளன. இந்தியா, இராமனை மாவீரனாகக் கருதும் நிலையில் , இலங்கை இராமன், இராவணன் இருவரையும் மாவீரர்களாகக் கருதுகிறது என்றார்.

கடந்த 2018 ஜனவரி 9 ஆம் திகதி, புதுடில்லியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்பு பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து இரண்டு டோனியர் ரக கடல்சார் கண்காணிப்பு விமானங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

பின்னர், இலங்கையின் கோரிக்கையை ஏற்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்றை முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டது. புதிய விமானம் தயாரிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதே இதற்குக் காரணம் ஆகும்.

இந்த முதல் இரண்டு ஆண்டுகளின் முடிவில், புதிய டோனியர் 228 கடல்சார் ரோந்து விமானத்தை இலவசமாக வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் இலங்கைக்கு மற்றொரு புதிய விமானத்தை இந்தியா வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு முக்கியஸ்தர்கள் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் ரோரி முங்கோவன் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய இயக்குனர் டேவிட் வில்லியம் மெக்லாக்லான் ஆகியோரே இலங்கை வரவுள்ளனர்

ரோரி முங்கோவன் செப்டெம்பர் மாத தொடக்கத்தில் இலங்கை வரவுள்ளார். David William McLachlan நாளை மறுதினம் செவ்வாய்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோரை ஐ.நா அதிகாரிகள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக ஜயநாத் கொலம்பகே

ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் ஒருவரை நியமிக்க உயர் பதவிகள் பற்றிய குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய இந்தோனேஷியாவுக்கான இலங்கை தூதுவராக அட்மிரல் (பேராசிரியர்)ஜயநாத் கொலம்பகேவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர் புஷ்பகுமாரவின் நியமனத்திற்கும், வனவிலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஆர்.எம்.சி.எம் ஹேரத்தின் நியமனத்திற்கும்,நிதி,பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளராக எம்.சிறிவர்தனவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளராக எஸ்.ஜே.எஸ்.சந்திரகுப்த,தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சின் செயலாளராக ஆர்.பி.ஏ. விமலவீர ஆகியோரின் நியமினத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சீன கப்பல்

சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.

இந்த கப்பல் நாளை(16) காலை 7.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது.

நாளை(16) முதல் 07 நாட்களுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் வருவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், கப்பலின் வருகையை தாமதிக்குமாறும் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பி.என்.எஸ்.தைமூர் (PNS Taimur) கப்பல் வெற்றிகரமான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

கடற்படையினரின் மரபிற்கமைய தைமூர் கப்பலுக்கான பிரியாவிடை, கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

தைமூர் கப்பல் இலங்கையிலிருந்து வெளியேறும் போது, கொழும்பு துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்கரையில் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் தேடுதல், மீட்பு பயிற்சிகள் அடங்கிய கூட்டு நட்பு கடற்படை பயிற்சியும் இடம்பெற்றது.

Posted in Uncategorized

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார்

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல், இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை. சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும், மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

75வது சுதந்திர பவள விழாவை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கு

இன்றைை ஆவணி 15 வது நாளில் இந்திய மக்கள் கொண்டாடும் 75 வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வில்உங்களுக்கும் இந்திய மக்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் எனது மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் மிகவும் உற்சாகத்துடனும் பெருமையுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது, தேசத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.

மொழி, கலாசாரம், இனம், மதம் மற்றும் பலவற்றில் பன்முகத் தன்மை கொண்டிருப்பினும் ஒரே தேசமாக ஒரு நாடு எவ்வாறு முன்னேற முடியும் என்பதற்கு இந்தியா உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியா இன்றுவரை “பெரிய ஜனநாயகம்” என்று கருதப்படுகிறது.

இந்திய மக்கள் இந்த நாளை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் கொண்டாடுகிறார்கள். இந்த மகத்தான வேளையில், ஒற்றுமை மற்றும் சிந்தனை எதிர்காலத்திலும் மேலும் தொடர தங்களுக்கும் இந்திய மக்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

அன்புடன்

செல்வம் அடைக்கலநாதன் – பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம் , தமிழ் தேசிய கூட்டமைப்பு
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள், தனிநபர் தடைகளையும் நீக்குக ரெலோ கோரிக்கை

எமது தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் அண்மையில் சில புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்கி உள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம் இன்னும் பல அமைப்புகளும் தனி நபர்கள் உடைய பெயர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலிலேயே காணப்படுகிறது. அவர்கள் மீது உள்ள தடையை நீக்குமாறு நாம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கோருகிறோம்.

நமது கோரிக்கையின் பிரதான காரணம் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு முதலீடு மிக அவசியமாகிறது. புலம்பெயர் உறவுகள் பலர் இங்கு முதலீடு செய்வதில் இருக்கக்கூடிய பிரதான சிக்கல் பாதுகாப்பின்மை ஆகும். தாங்கள் பாரிய முதலீடுகளை இங்கு ஏற்படுத்திய பின்னர் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காரணம் காட்டி தங்கள் முதலீடுகளை முடக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் முடியும் என்று அச்சம் கொள்கிறார்கள். முகநூல் இணைப்புக்களை காரணம் காட்டியே பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எனவே முதலீடு செய்யத் தயாராக இருக்கும் புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை செய்வதற்கு இந்த தடைகளை நீக்குவது அவசியம் என்று உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே இதைக் கருத்தில் கொண்டு ஏனைய புலம்பெயர் அமைப்புகளையும் தனிநபர்களின் பெயர்களையும் நீக்குமாறு கோருகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் -ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு